Monday, December 27, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

295-

சுழற்றிய கயிறு பார்க்க
சுற்றும்
நிற்காத பம்பரம்

296-

சொற்களின் மத்தியில் அமர்ந்து
ஊதித் தள்ளுகிறேன்
அர்த்தத்தின் தூசிகளை

அனுபவ சித்தனின் குறிப்புகள்

293-

வானத்தை
தாண்டவேண்டும்

எப்படி

கீழே இருப்பவர்களிடம்
கேட்காதீர்கள்

வானத்திடமே கேளுங்கள்
சொல்லிவிடும்

294-

உதிர்ந்த பூவின்
அருகில் கிடந்தன
ஊமை வார்த்தைகளும்

நீர் வளையங்கள்

குளத்தின் நிதானத்தை
அமைதியாய் உணர்ந்தான்

கையிலிருந்த
கல்லெறிய
பேரமைதியைக் கண்டான்

நீந்தி வந்த
நீர் வளையங்களைப்
பிறகு பார்த்தான்

அமைதியாக
பேரமைதியாக

Sunday, December 26, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

290-

நீண்ட தூரம்
போய்ப் பார்த்தேன்
தென்படவில்லை
தாளில் எதுவும்

291-

தற்கொலையை மறுப்பவன்
தூக்குக் கயிறை வரைந்து
கிழித்துப் போடுகிறான்

292-

போய் வா
என்றான்

வந்தபின்
போ போ
என்றான்

போகையில்
வா வா
என்றான்

இதையே
சொன்னான்
போனபின்னும்

தன்
நிழலிடம்

Friday, December 24, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

285-

இருளில்
நீந்தி நீந்தி மேலேறுவது
பிடித்திருக்கிறது

286-

விரல் நுனியில் கண்ணீர்துளி
உதிர்ந்த காரணத்தைச் சொல்லாமல்
கரைந்து போனது காற்றில்

287-

பார்க்காமல் விட்ட பறவை
வந்தமர்ந்தது
கனவின் கிளையில்

288-

பிறக்காத மொழி ஒன்றை
பேசியது
பிறந்த குழந்தை

289-

பதிலைப் போல்
கிடைத்தது
கேள்வி

கரும்பலகை

ஓய்வு பெறப்போகும் ஆசிரியர்
கரும்பலகையில்
வாழ்த்துக்களை
எழுதும் மாணவர்கள்

கடிதம்

திசைகள் தேடி
பறந்து போனோம்

வந்து
வருஷங்களாயிற்று

ஊருக்கு
ஒரு கடிதம்
எழுதுகிறேன்

Thursday, December 23, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

282-

வார்த்தைகளுக்கு
நடுவில் நுழைந்து
வெளியேறுகிறேன்
உரையாடலிலிருந்து

283-

வசிக்க
கற்றுக்கொள்கிறேன்
கனவுக்குள்ளும்

284-

பிஞ்சுக்கரம் விளையாட
குழந்தையாகும்
மழையும்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

280-

யார் மீதும்
கோபம் வருவதில்லை
வருகிறது
என் மீது

281-

அழைக்கிறது மலை
முடிந்து போகாதே
அடிவாரப் புற்களோடு

Wednesday, December 22, 2010

பார்க்கும் மரம்

புன்னகை குறைக்காமல்
மென்று முழுங்குகிறேன்
வேப்ப இலையை
பார்க்கிறது மரம்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

277-

மரணத்தைப் போல்
சுமந்து செல்கிறீர்கள்
போட்டுவிட்டுப் போங்கள்

278-

விழாத நான்
தூக்கினேன்
விழுந்த என்னை

279-

என்னை எனக்கு
எதிரியாக
அறிமுகப்படுத்திய
நண்பரை சந்தித்தேன்

எனக்கு நான்
நண்பனானது குறித்து
சந்தோஷப்பட்டார்

Monday, December 20, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

270-

குற்றம் செய்
குற்றம் அழிக்கும்
குற்றம் செய்

271-

தற்கொலைக்கு முன்
குடிக்கும் தேநீர்
வரியில் தொங்கியது
உயிரின் கயிறு

272-

உடன் வந்தவர்கள்
ஓடிப்போனார்கள்
கத்தி எறியப்போகிறவன்
கடைசி முறை
சிறுநீர் கழித்துவிட்டு
வரச் சொல்கிறான்

273-

வாய் அதக்கி
சேர்த்து
நசுக்கி
ரத்தம் பாயந்த
வார்த்தைகளைத்
துப்பிவிட்டு நடந்தேன்
பேச எதுவுமில்லை

274-

நஞ்சு கலந்திருக்கிறது
சொற்களின் வசீகரத்தில்
மயங்கிவிடாதீர்கள்

275-

கண் மூட
சுழலும் மெளனம்
காதோரம்

276-

எண்ணும் போதெல்லாம்
கூடிப்போகின்றன
அள்ளி வந்த பொய்கள்

Sunday, December 19, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

267-

புள்ளிக்குள்
விழுந்த பாறை
எடுக்கும்போதெல்லாம்
புள்ளியாகிவிடுகிறது

268-

விடிவதற்கு
இன்னும் நேரமிருக்கிறது
என்ற வரியையே
எழுதிக்கொண்டிருந்தேன்
விடியும் வரை

269-

உடையும்போதெல்லாம்
உருவாகிறது
உடைத்தது

Wednesday, December 15, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

261-

வார்த்தைகளுக்கிடையில்
நிசப்தம்
தொட்டுப் பார்க்கும் கவிதை

262-

அன்பு
மையம்
பிரபஞ்சம்
வட்டம்

263-

எப்போதும் போல்
இப்போது சிரித்தீர்களா

ஆமாம்

எப்போதும் போல
இப்போது அழுவீர்களா

எப்போதும் போல் மனிதர்கள்
எப்போதும் இருப்பதில்லை

264-

உன் இறகை
கத்தரித்துவிட்டேனே
எப்படிப் பறப்பாய்

உன்னால்
எங்கள் இறகைதான்
கத்தரிக்கமுடியும்
சுதந்திரத்தையல்ல

265-

இன்றிரவு
தின்னப்போகிறவன் யார்
பசியோடு பார்க்கிறாள்

266-

எழுதிப் பார்த்த
கதை சொன்னது
இன்னும்
எழுதிப்பார் என்று

மாமிசப் பார்வை

மதுவின் உச்சத்திலிருந்தபோது
மதுக்கோப்பையின் மேல்
வந்தமர்ந்தது புறா

மெல்ல தடவியபடியே
பேசப் பார்த்தேன்

கண்களிலிருந்த
மாமிசப் பார்வை விரட்ட
பயந்தபடி
பறந்துபோனது

மதுக்கோப்பையின் உள்ளே
விழுந்துபோன இறகை
வெளியே எடுத்துப்போட்டு
குடித்தேன்

இறகின் துளிகளிலிருந்து
பறந்து சென்றன புறாக்கள்
மிதந்துகொண்டிருந்த என்னை
கீழே தள்ளிவிட்டு

Sunday, December 12, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

258-

எத்தனைப் பயணங்களை
குறித்து வைத்திருக்கும்
தண்டவாளம்

259-

அவனை நான்
இழக்கவில்லை
அவன் நானன்றி
வேறில்லை

260-

நீங்கள் தராவிட்டால்கூட
கேட்டுக்கொண்டிருப்பேன்
உங்களிடமிருந்து
பிறகு
பெற்றுக்கொண்டிருப்பேன்
என்னிடமிருந்து

அன்பின் மொழிகள்

1-

இது கவிதையல்ல
உன் பிரியங்களின்
பூக்கூடை

2-

பெருமிதம் கொள்கிறேன்
உன் அன்பின் முன்
அடிமையாகிப்
போவதை நினைத்து

3-

முழுக் கடலையும்
ஒற்றைத் துளியாக்கி
அன்பு என்று எழுதியபோது
கடலாகிப்போனது
அன்பு

4-

உயிர்
உடையும்போதெல்லாம்
காதல் சேர்த்துவிடுகிறது

5-

உனக்கான கவிதைகளை
எழுதிக்கொண்டிருக்கிறேன்
அதில் நீ
எனக்கான வாழ்த்துக்களைச்
சொல்லிக்கொண்டிருக்கிறாய்

Friday, December 10, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

254-

வார்த்தைகளுக்கிடையில்
உறுமும் புலி
தின்னும்
வெளியேறும்

255-

உள்ளிருக்கும்
எத்தனையோ
வெறும் மரம்
இதில் எங்கோ
ஒளிந்திருக்கும்
போதி மரம்

256-

தாண்டியவை
அரை கிணறுகள்
எல்லாவற்றிலும்
அவன் பிணம்

257-

மேலேறு

உன்
மேலேறு

உன்னைத்தூக்கி
மேலேறு

மேலேறு

வானம் பிடித்து
மேலேறு

வானம் தாண்டி
மேலேறு

மேலேறு

கீழ்

என் தலையணையின் கீழ்
உனது முத்தம்

முத்தத்தின் கீழ்
எனது முத்தம்

அதற்கும் கீழ்
தனிமையும்
இரவின் மதுவும்

Thursday, December 09, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

250-

சொல்லாத
உண்மைகளுக்குத் தெரியும்
சொன்ன பொய்களின்
கணக்கு

251-

என்னைத் தூக்கி எறிந்து
ஒதுங்குமா பிணம் எனப்
பார்த்திருந்தேன்

கடல் ஒதுங்கியது
கரையிலிருந்த
என்னைப் பார்த்தபடி

252-

எதிர்பார்த்ததுபோல்
இல்லை

எதை எதிர்பார்த்தீர்கள்

தெரியவில்லை

253-

அடைந்துவிட்டதாக
சொன்ன இடத்தை
இப்போதுதான்
அடைந்திருக்கிறேன்

அடையப்போகும்
இடத்தையும்
இப்படியே
அடைந்துவிடுவேன்

Saturday, December 04, 2010

ஒலிநாடா சுற்றிக்கொண்டிருக்கிறது

பதிவு செய்த
வரிகளில்
காகத்தின் குரலும்
ஒலித்தது

வரிகளில்
குதிக்கும் இசைபோல்
கேட்டது

கேட்கக் கேட்க
காகத்தின் குரல் நின்று
அது பாடலின் வரியை
ஒவ்வொன்றாய்
உட்கொண்டது

இறுதியில்
ஒலிநாடா சுற்றிக்கொண்டிருந்தது
எந்தவித
சத்தங்களுமற்று

அனுபவ சித்தனின் குறிப்புகள்

248-

மதம் பிடித்த கல்
யானையானது

249-

கேள்விகள்
திரும்பவும்
தேடிப் பெறுகின்றன
கேள்விகளை

பதில்களை
நிராகரித்து

தன்னிலிருந்து
எழவும்

பதில்கள் அல்லாத
ஒன்றைக்
கண்டெடுக்கவும்

Thursday, December 02, 2010

பார்த்தல்

உன் குறுஞ்செய்திகளை
அறுத்தெறிகிறேன்

பிரியங்களில்
கசியும் ரத்தத்தை
நிறமாகப்
பார்க்கப் போகிறேன்

ஒரு வரி

என்னைத் தவிர
யாராலும் உங்களைக்
கொல்ல முடியாது
என்று ஒரு வரி
எழுதி இருந்தது சுவரில்

படித்தவர்கள் எல்லோரும்
ஒரு கணம் இறந்து
மறுகணம்
பிழைத்துப் போனார்கள்

வருகை

உன் வெளிச்சத்தை
தொட வேண்டும் என்றேன்

விரலருகே வந்து
கசிந்துவிட்டுப் போனது
நட்சத்திரம்

நிரப்புதல்

ஜனனலோரம்
அமர்ந்திருந்தவரிடம்
பெயர் கேட்டேன்

பேசவில்லை

இறங்கும்போது சொன்னார்

பயணங்களை
காற்றால் நிரப்பு
பெயர்களால்
மூடி விடாதே

அனுபவ சித்தனின் குறிப்புகள்

244-

கனவிடமே
விட்டுவிடுகிறேன்
கனவின் குறிப்புகளை

245-

எதை நினைத்து
அழுகிறாய்

எதை நினைத்து
சிரித்தேனோ
அதை நினைத்து

246-

சொன்னவைகளை
அனாதையாய் விரட்டிவிட்டீர்கள்

சொல்லாதவைகளுக்கு
தண்டனை எழுதுகிறீர்கள்

247-

மழை
துளியிலமர்ந்து இறங்குகிறேன்
பூமிக்கு

Monday, November 22, 2010

எரியும் நூலகம்

எரிந்து கொண்டிருக்கிறது நூலகம்

தீவைத்த சதிகாரர்கள் தப்பிவிட்டார்கள்

காலம் தீக்கனலாகிறது

ஊற்றிய நீரை வாங்கி
தன் பசியைத் தீர்த்துக்கொள்ளப் பார்க்கிறது நெருப்பு

கொடும்பாவிகள் சிக்கவில்லை

ஏவப்பட்ட பேய்கள்
குற்றத்தை நிகழ்த்திவிட்டு
தடம் காட்டாதபடி பதுங்கிவிட்டன

கேட்கிறது
தீயில் வேகும்
கதாபாத்திரங்களின் அழுகுரல்கள்

வரலாற்றின் வலிகள்

எரிந்து கொண்டிருக்கிறது நூலகம்

உருவான முதல் நாளிலிருந்து
நூலகத்தின் வாசனையை
உணர்ந்த பெரியவர்
அழுது கொண்டிருக்கிறார்

புத்தகங்களை வெகுவேகமாய்
படிக்கிறது நெருப்பு

உதவி மறுக்கப்பட்ட நூலகம்
அனாதையைப் போல
பார்க்கிறது

புகையில்
கொஞ்சம் கொஞ்சமாய்
தொலைந்துகொண்டிருக்கிறது

மழை வந்து
மீதி பொக்கிஷங்களைக் காப்பாற்றிவிடாதா
பிரார்த்தனைகள் காற்றில் கலக்கின்றன

வானம் அசையக் காணோம்


இறந்து கிடக்கின்றன
உள் வசித்த புறாக்கள்

சூட்சியின் வியூகம்
அறிவு ராஜ்ஜியத்தை வீழ்த்தி இருக்கிறது

எரிந்து கொண்டிருக்கிறது நூலகம்

ஊடகங்கள் நூலகத்தின் இறுதிக் காட்சிகளை
பலகோணங்களில் காட்டுகின்றன
கண்ணீரும் கண்ணும்
அருகருகே இருப்பது போன்று
மிகத் துல்லியமாக
நேரடி ஒளிபரப்பாக

நூலகர் தப்பிவர விரும்பாமல்
நூலகத்தோடு தீ சமாதியானதாக
ஒரு தகவல் கசிகிறது

எரிந்து கொண்டிருக்கிறது நூலகம்

மூன்று தலைமுறை கண்ட நூலகம்
முடிந்துகொண்டிருக்கிறது

சதிகாரர்கள் பிடிக்கப்படுவார்கள்
மீண்டும் இதுபோல்
நிர்மாணிக்கப்படுமென்று
செய்திகள் உற்பத்தியாகின்றன

பலூன் வார்த்தைகள்
பஞ்சமின்றி பறக்கின்றன

எரிந்து கொண்டிருக்கிறது நூலகம்

புத்தகத்தைத் திருப்பி தரவந்த சிறுமி
அதைக் காப்பாற்றிவிட்ட பதட்டத்தில்
கைநடுங்க இறுக்கமாகப் பிடித்தபடி
பார்த்துக் கொண்டிருக்கிறாள்

புத்தகத்தின் அட்டையில்
ஒளிர்கிறது நூலகத்தின் பெயர்

Friday, November 19, 2010

பெயரற்ற பள்ளத்தாக்கு

இந்த பள்ளத்தாக்கில்
பனிமூடி இருக்கிறது

கை நீந்திப் பார்க்க
பூக்கள் சிக்குகின்றன

ஒரு பூவிலிருந்து
பட்டாம்பூச்சி பறந்தோடுகிறது
பிஞ்சு ஒளியை அசைத்தபடி

உள்ளிழுக்கும் மூச்சுக்கு
கிடைக்கின்றன
வனத்தின் வாசனைகள்

பழக்கமாகிவிட்டது
பள்ளத்தாக்கு

பள்ளத்தாக்கின் பெயரை
உரக்கச்சொல்லி
மலைகளுக்கு
அறிமுகப்படுத்த வேண்டும்

இதற்கு ஒரு
பெயர் வேண்டும்

நல்ல பெயராக

நழுவி மறைகின்றன
பெயர்கள்

கிடைக்காமலாப் போகும்
ஒரு நாள்

Thursday, November 18, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

242-

மண் பூசிய
பழத்தை எடுத்து
ஊதித் தின்றேன்

அருகில் வந்தவர்
அது நான்
எறிந்த கல்
வேண்டும் என்று
வாங்கிப்போனார்
கல் மனிதராக

ஊறும் சுவையின்
உள்ளிருந்தேன் நான்
பழத்தின் மரமாக

243-

சொல்லின்
விளிம்பில்
தொங்கும்
துளி

துளியில்
ஒளிரும்
பிரபஞ்சம்

பிரபஞ்சம்
குடிக்க
நீளும்
நாவு

விழுகிறது

துளி
சொல்

சொல்
துளி

இரண்டுமற்று
நான்

Monday, November 15, 2010

வனத்தின் புகைப்படம்

மேஜை மேலிருக்கும்
வனத்தின் புகைப்படம்
பார்த்துக்கொண்டே
வேலை செய்யலாம்
சிங்கத்தின் கர்ஜனையும்
வனத்தின் உள்ளிருந்து
வரக் கேட்கலாம்

பிறகு உன் சிறகு

அலகால்
கூண்டை உடை
கிளியே

பிறகு உன் சிறகு
காற்றில் எழுதும்
சுதந்திரத்தின் பாடலை

அனுபவ சித்தனின் குறிப்புகள்

235-

பிடிபடவே
தப்பித்தேன்
பிடிபடவும்
தப்பித்தேன்

236-

இரவின் பரணையில்
புணரும்
கனவுகள்

237--

ஓயாது குடித்தோம்
ஓய்ந்து போனோம்
ஆனாலும் பேசினர்
எனது நானும்
அவனது அவனும்

238-

நீ மெளனத்தின்
எந்த புள்ளியில்
இருக்கிறாய்

சின்னத் திருத்தம்
நான் மெளனத்தின்
புள்ளியாக இருக்கிறேன்

239-

நீ படிமமா
குறியீடா

நான் குறியீட்டின்
படிமம்

படிமத்தின்
குறியீடு

240-

வேண்டாத சொற்களைத்
தவிர்த்துப் பார்த்தேன்
சொற்களின் கடைசியில்
என்னையும் பார்த்தேன்

241-

எதுவுமில்லாதிருப்பதே
இருப்பதில் இருக்கும்
விஷேசம்

Sunday, November 14, 2010

மகளின் மெழுகுவத்தி

மெழுகுவத்தி
வரைந்து கொண்டிருந்தாள் மகள்

கண்கள் ஒளிர
வண்ணம் பூசி
அழகாய்
நேர்த்தியாய்

திரியை வரைந்தபோது
இருளானது

ஆனாலும் தொடர்ந்தாள்

மின்சாரம் வந்து
பார்க்க
மின்னியது மெழுகுவத்தி

ஆடி அழைப்பதுபோல் திரி

ஆச்சர்யத்துடன்
கேட்டேன்

சொன்னாள்

எனக்கு மட்டும்
வெளிச்சம் காட்டுச்சு
மெழுகுவத்தி
அதுலயே வரைஞ்சி
முடிச்சிட்டேன்பா

Saturday, November 13, 2010

காலம்

குவிந்து கிடந்த
புகைப்படங்களில்
கல்லெறிந்தேன்
உறைந்து போயிருந்த காலம்
அலையெழுப்பி
மறைந்து போனது

Thursday, November 11, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

232-

கிண்ணத்தின் விளிம்பிலிருந்து
ததும்பும் நீர் போல்
ததும்புகிறது மனது
மனதிலிருந்து

233-

உண்மைக்குள்
நுழைந்து கிடந்தேன்
பொய்கள்
மக்கி முடிய

வெளிவரலாம்
ஒரு நாள்

உண்மையின் துகளென
அல்லது
பொய்யின் உடலென

234-

வரியை
கவ்விப்போன
கனவை விரட்டினேன்
கனவைப் போட்டுவிட்டு
ஓடியது வரி

நட்பு

ஒதுங்கியபோது
பழைய நண்பனின்
ஞாபகம் வந்தது

பின் நிற்கும் வரை
மழை நண்பனாக இருந்தது

கடல் பார்த்தல்

இருளில்
கடல் பார்க்க
இருளெனக் கிடந்தது

பகலில்
கடல் பார்க்க
பகலெனத் தெரிந்தது

இரவுக்கும் பகலுக்கும்
நடுவில் வந்து
கால் நனைத்த அலை
கேட்டுப் போனது

கடலை நீ எப்போது
கடலாகப்
பார்க்கப் போகிறாய்

Tuesday, November 09, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

228-

நகர்ந்து
நகர்ந்து

வந்து சேர்ந்த
இடத்திலிருந்து

நகர்ந்து
நகர்ந்து

நகர்ந்து
நகர்ந்து

சென்று சேர்ந்த
இடம் நகர்த்த

நகர்ந்து
நகர்ந்து

தொடர்ந்து
தொடர்ந்து

நகர்ந்து
நகர்ந்து

229-

கவிதைக்கு
வந்து சேராத வார்த்தையை
சிலுவையில் அறைந்தேன்

கசிந்த ரத்தத்தில்
என் வன்மம் அறிந்தேன்

230-

காலத்திலிருந்து
நீ எவ்வளவு கறப்பாய்
கேட்கிறது
வைக்கோல் கன்றுக்குட்டி

231-

நான் இல்லை
என்கிற இல்லையில்
இல்லாமல் இல்லை நான்

Friday, November 05, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

226-

சுயம் பிளக்க
கிடந்தன
உடைந்த நான்கள்

227-

இருளின் கரி எடுத்து
என்ன எழுதுகிறாய்

ஒளியின் கருணையை

Thursday, November 04, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

224-

கேள்வியில்
தொங்கிய பதிலை
கேள்விக்குத் தெரியாமல்
எடுத்துக்கொண்டேன்

225-

இசை
எங்கிருக்கிறது
இசைக்கு வெளியில்

Wednesday, November 03, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

223-

தாவோவிடம்
என் சமநிலைப்பற்றிக் கேட்டேன்

உன் இரு முனைகளிலும்
நீ ஒத்த பலத்துடன் இரு
தன்நிலை பழகியவுடன்
எடை மாற்றிக்கொள்வது பற்றி
யோசிக்கலாம் என்றார்

Tuesday, November 02, 2010

அவனும் நீங்களும்

அவனை எல்லோரும்
கல்லால் அடித்துக் கொன்றார்கள்

கடைசியாக
தூக்கிப் புதைக்க
அருகில் வந்தபோது
கொஞ்சம் உயிர் இருந்தது

அவன் கண்களால் சொன்னான்
இன்னும் ஒரு
கல் தேவை

தேடல்

கடலின் மேற்பரப்பில்
அமர இடம் தேடி
பறக்கிறது
ஒரு சிறு பறவை

பாவமாக இருந்தது

பின்னொரு நாள்
ஒரு மீன்குஞ்சிடம்
பேசிக்கொண்டிருந்தபோது
கவலையுடன் சொன்னேன்
அந்த பறவைப் பற்றி

நான்தான்
அந்த பறவை
அமர இடம் கிடைக்காததால்
மீனாகி
நீந்திக்கொண்டிருக்கிறேன்
எனச் சொல்லி
நீரைப் புன்னகைக்க வைத்தபடியே
மறைந்து போனது

இப்போது பார்க்க
கடலின் மேல்
எதுவுமில்லை


நடந்த போது
மனதின் இதத்தைப் போல
தொடங்கியது
மழை

மிச்ச நேரம்

பேஸ்புக்
ட்விட்டர்
வலைப்பக்கம்
இன்னபிற
இணைய தளங்களைத்
தாண்டி
மிஞ்சும் நேரம் கைப்பற்றி
அறை சிறையிலிருந்து
விடுபட்டு
காலாற நடந்து போய்
பார்த்து வர வேண்டும்
பனி பூத்த
புற்களையும்
நேசம் கலந்த
முகங்களையும்

Sunday, October 31, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

220-

மெளனமாகி விட்டது
உணரும்போதெல்லாம்
சத்தமாகி விடுகிறது

221-

கோழை வனம்
ஒரு நாள் ஆகும்
பாலை வனம்

222-

பார்க்கத் தொடங்கினேன்
பார்த்தவைகளிலிருந்து
பார்க்காதவைகளை

தீராதது

அழுத்தி எழுதிய
பெயரில் இருந்தது
அப்பாவின் அன்பு

கடிதம் படிக்க
இன்னும் கிட்டும்
தீராத சுவை

Friday, October 29, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

218-

என் ஊனம் பெறும்
ஒரு நாள் ஞானம்
அதுவரை இது
யாத்திரை காலம்

219-

அறைக்கு வந்த குழந்தை
அள்ளிப் போகிறது
இருளை

Thursday, October 28, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

215-

உடலெங்கும்
காமத்தின் ஊழிக்கூத்து
திண்டாடுகிறான்
மனப்பாகன்

216-

கைதியிடம்
விடுதலை கேட்கிறது
சிறை

217-

அவர் வருவதற்காக
நான் காத்திருக்கிறேன்
நான் வருவதற்காக
அவர் காத்திருக்கிறார்
ஒருவரை ஒருவர்
பார்த்தபடி
காத்திருக்கிறோம்

நத்தையும் நானும்

நெடுஞ்சாலையைக்
கடக்கிறது நத்தை
பதட்டமின்றி

நெடுஞ்சாலையைக்
கடந்து முடிக்கிறது நத்தை
பதட்டமின்றி

நெடுஞ்சாலையைக்
கடந்து போகிறேன் நான்
பதட்டமின்றி

Tuesday, October 26, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

214-

உடலைத் திறந்தேன்
புழுக்கம் வெளியேறியது
புழுக்கத்தை திறந்து
நான் வெளியேறினேன்

எதிர்பார்ப்பு

தொடர்ந்து வரும்
பயணியை
எதிர்பார்த்திருந்தாள்
அவள் உடலோடு
முடிந்து போயின
பயணங்கள்

சொன்னதில்லை

பெரிதாக ஒன்றும்
சொன்னதில்லை
கவிதையில்
ஆனாலும்
கவிதைகள் எப்போதும்
என்னைப் பார்த்ததில்லை
சிறுமையாய்

Monday, October 25, 2010

வனம்

அணில் விட்டுச் சென்ற
வனம்
அறையெங்கும்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

212-

சொல்லெடுத்து
தரும் சொல்
சொல்வதில்லை
சொல்லென்று

213-

சந்திக்கும் போதெல்லாம்
முடிவுக்கு வருகிறது
பிரிவு

ஒலிக் குறிப்புகள்

என்னிடம்
வனம் தந்தனுப்பிய
ஒலிக் குறிப்புகளை
வாங்கிய மகள்
குதூகலத்துடன்
இசையாக வாசித்தபோது
அதன் உச்சியிலிருந்து
விழத்தொடங்கியது
அருவி

Friday, October 22, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

208-

கல் பறக்கிறது
எனச் சொன்ன தாளை
தூக்கிப் பார்த்தேன்
பாரமாக இருந்தது

209-

வயதின் மீதேறி
விளையாடும் நான்
குழந்தையாய்

210-

நின்றாலும்
இழுத்துப் போகும்
நடையின் நடை

211-

கையசைக்க
விடைபெறும்
ரயில்

Thursday, October 21, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

203-

உங்களின் நிறம்
என்ன என்று கேட்டார்
நிறங்களின் நிறம் என்றேன்
போய்விட்டார்

204-

மொழிகள் எதற்கு
கண் துளி
சொல்லும் அன்பு

205-

உள்ளோடும் நதி
நீச்சல் பழகும்
என்னிடம்

206-

மேடையை எதிர்பார்ப்பதில்லை
தனக்குள்
ஒத்திகை செய்பவன்

207-

ஒதுங்கி நின்றால்
ஒதுக்கப்படுவாய்
மையம் கைப்பற்று

Tuesday, October 19, 2010

நடந்து கொண்டிருப்பவன்

அவன் நடந்து கொண்டிருந்தான்

நடந்து நடந்து
நடந்து நடந்து

அவன் நடந்து கொண்டிருந்தான்

இருளில்
வெயிலில்
மழையில்
வனத்தில்
மலையில் என

அவன் நடந்து கொண்டேயிருந்தான்

நடந்து முடிக்கும்
தூரப் புள்ளிகளில்
தானே நின்று
தன்னை வரவேற்று
அனுப்பியபடி

வழித் தடங்களில்
வருபவர்களுக்கான
முகவரிகளை
விட்டுச் சென்றபடி

அவன் நடந்து கொண்டிருந்தான்

தன் கால்களுக்குள் நுழைந்து
இதயம் அடைந்து
மூளையிலிருந்து வெளியேறி
நின்று போகாத மந்திரத்தை
உச்சரித்தபடி

அவன் நடந்து கொண்டிருந்தான்

கடந்து கொண்டிருந்தான்

நீங்களும் அவனை
ஏதாவது ஒரு தருணத்தில்
பார்த்துவிட முடியும்

அல்லது

ஏதாவது ஒரு கணத்தில்
அவனாக மாறிவிட முடியும்

Sunday, October 17, 2010

கூக்குரல்கள்

வேண்டான்டா
உன் அம்மாவ நீ கெடுப்பியா

உன் அக்காவ
நீ அழிப்பியாடா

உன் தங்கிச்சிய
இப்படிச் செய்வியா

அம்மாக்களும்
அக்காக்களும்
தங்கைகளும்
கற்பழிக்கப்பட்டார்கள்

கற்பழிப்பாளர்கள்
சமூக கெளவரவங்களோடு
இன்னபிற
செல்வாக்குகளோடு
வலம் வந்தனர்

இருளில்
இருளைப்போலவே
புதைந்து போயின
கூக்குரல்கள்

Friday, October 15, 2010

வார்த்தைகளும் மீன்குஞ்சுகளும்

ஆழ்ந்த தியானத்தில்
காற்றை உள்ளிழுத்தபோது
கூடவே போய்விட்டன
சில வார்த்தைகளும்

மீன்குஞ்சுகளைப் போல
சுற்றின வார்த்தைகள்

ஒரு மீன்குஞ்சு
மெல்ல நகர்ந்து
ரத்தத்தில் ஓடிய
கெட்ட கனவுகளை
உட்கொண்டது

ஒரு மீன்குஞ்சு
இதயத்தில் தங்கிக்கிடந்த
வன்மத்தை
எடுத்துக்கொண்டது

தலைக்கு வந்த ஒன்று
அங்கு படிந்து போயிருந்த
புராதன கோபங்களைத் தின்றது

தியானத்தின் மூச்சு நீள
உள் சென்ற வார்த்தைகள்
வெளி வந்து விழுந்தன
இறந்த மீன்குஞ்சுகளாய்

ஒன்று மட்டும்
காப்பாற்றச் சொல்லி
போராடியது

இறுதியில்
என் மீது ஒட்டியிருந்தது
அது வீசிச் சென்ற
மரணத்தின் எச்சில்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

201-

வாளின் கண்களால்
போரைப் பார்க்கிறேன்

202-

நான் உதிரி
உதிர்ந்து போனாலும்
மறைந்து போகாத
மகா உதிரி

Wednesday, October 13, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

200-

மையப்புள்ளிகளை
மாற்றிக்கொண்டே இருக்கிறது
வட்டம்

வட்டங்களை
மாற்றிக்கொண்டே இருக்கிறேன்
நான்

என்னை
மாற்றிக்கொண்டே இருக்கிறது
பிரபஞ்சம்

Monday, October 11, 2010

பாவனை

கல்லெறிவதுபோல்
பாவனைச் செய்கிறது குழந்தை

வலிப்பதுபோல்
பாவனைச் செய்கிறேன் நான்

குழந்தை போனபின்
பார்த்தபடி நடந்தேன்
குவிந்து கிடந்த பாவனைகளை

பறவைகள்

1-

இல்லாதபோது
அலகால் கொத்தி
தா என
ராகம் எழுப்புகிறது
ஒரு பறவை

2-

துப்பாக்கியின் குறியை
மாற்றியபடியே பறக்கிறது
இறந்துபோக விரும்பாத
ஒரு பறவை

Thursday, October 07, 2010

குழந்தைகள்

1-

குதிக்கும் போதெல்லாம்
ஆகாயத்தைக்
கையள்ளும் குழந்தை

2-

குழந்தையின் கையில்
குழந்தை போலிருக்கும்
நாய்க்குட்டியை
குழந்தைபோல்
கொஞ்ச ஆசை

கேட்டுக் கிடைத்தது
தோல்விதான்

கையசைத்துவிட்டு
ஓடுகிறாள் குழந்தை
தன் சொர்க்கத்தைத் தராமல்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

194-

மனிதனைத்
திறக்கும் சொல் ஒன்று
காலங்காலமாய்
பூட்டியே கிடக்கிறது
தன்னைத்
திறந்து கொள்ளத் தெரியாமல்

195-

கிடைக்காது என
நினைக்கும் போதெல்லாம்
கிடைத்து விடுகிறது
ஏதோ ஒன்று

196-

எழுதாத தாளில்
விரிகிறது
வானம்

197-

உங்கள் பின்னால்தான்
வந்து கொண்டிருக்கிறேன்
ஆனாலும்
உங்கள் முன்னால்
சென்று கொண்டிருக்கிறேன்

198-

நடந்து போனவர்களின்
சுவடுகளில்
படிக்க எதுவுமே இல்லை

199-

கவிதையின் அடிவாரத்தில்
படுத்துக்கிடந்தேன்
நிம்மதியைப் போர்த்தியபடி

Wednesday, October 06, 2010

பார்வைகள்

நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் தாஜ்மஹாலை
எனக்குச் சொல்ல முடியுமா
உங்கள் வார்த்தைகளின் வழியே
அதைப் பார்த்துக் கொள்கிறேன் என்றார்
பக்கத்திலிருந்த பார்வையற்ற தோழர்

என் அறிவுக்கெட்டியபடி
அந்த அதிசயத்தைச்
சொல்ல ஆரம்பித்தேன்

இசை கேட்பது போல
அவர் தலையசைத்து
உள்வாங்கியதை
பிறகு சொல்லி
சரிபார்த்துக் கொண்டார்

அவர் வார்த்தைகளின் பார்வையில்
என்னால் தரிசிக்க முடிந்தது
இன்னொரு தாஜ்மஹாலை

Monday, October 04, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

193-

ஜன்னலோரம்
அமர்ந்த பறவையை
விரட்டிவிட்டு
எல்லோருக்கும்
இடம் வேண்டும்
என்று எழுத
எப்படி மனம் வந்தது

Friday, October 01, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

190-

போய்விட்டார்கள்
காலடித்தடங்களில்
நெளிகிறது மொழி

191-

நடந்து முடிந்த
அறுநூற்று அறுபத்தாறு
குற்றங்களையும் செய்த
குற்றவாளி நான்தான்
என்னை விட்டுவிட்டு
அறுநூற்று அறுபத்தியேழாவது
நபரை கைது செய்து
விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்
ஏதோ கிடைத்துவிடும் என்ற
அதீத நம்பிக்கையில்

192-

ஓவியம் என்று
சொல்லாதீர்கள்
ஒற்றை கோட்டை
ஒற்றைக் கோடு
என்றே சொல்லுங்கள்

Sunday, September 26, 2010

வானத்தில்

வானத்தில் படுத்திருந்தேன்
எழுந்தபோது ஒட்டியிருந்தன
ஒன்றிரண்டு நட்சத்திரங்கள்
உதறிவிட்டுத் திரும்பினேன்

Saturday, September 25, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

186-

கனவில் மின்னியது
அன்பின்
சொல் ஒன்று

187-

திரும்பிப் பார்த்தேன்
வயதுகளின் பாதையில்
ஓடிவந்தபடி ஒரு குழந்தை

188-

வானம் கூப்பிட்டும்
போகவில்லை
கனவில் விழுந்த நட்சத்திரம்

189-

நேரம் இல்லை
நினைவுகளில்
சந்திப்பவர்கள்

Thursday, September 23, 2010

சிலருக்கு...

உங்களுக்கு என்ன
வேண்டுமானாலும் கேளுங்கள்
அதைத் தருகிறேன் என்றார்
ஒன்றுமே இல்லாதிருந்தவர்

விநோதமாக
அவரைப் பார்த்து
கடந்தனர் எல்லோரும்

சிரித்தபடியே
யாருக்கும் எதுவும் தேவையில்லை
நானே வைத்துக் கொள்கிறேன் என்றார்

கடந்து போனவர்களில் சிலர்
அவர் சொன்னதைச்
சொல்லிப் பார்த்துக் கொண்டனர்

உங்களுக்கு என்ன
வேண்டுமானாலும் கேளுங்கள்
அதைத் தருகிறேன்

சிலருக்குத் தந்தது போலிருந்தது

சிலருக்குப் பெற்றது போலிருந்தது

அனுபவ சித்தனின் குறிப்புகள்

183-

என்போல்
ஒற்றைக் கிளையில்
மதிய காகம்

184-

கதை சொன்ன குருவி
பறந்து போனது
என்னையும் கதாபாத்திரமாய்
எடுத்துக் கொண்டு

185-

சுற்றிலும் நாடகங்கள்
என் வேடத்தை
பலப்படுத்த வேண்டும்

Saturday, September 18, 2010

காற்றில் தைத்த சட்டை

பறந்து கொண்டிருந்த
சிறுமி சொன்னாள்
நான் காற்றைத் தைத்து
சட்டையாகப் போட்டிருக்கிறேன்

ஒரு பறவையின் லாவகம்
பறத்தலில் தெரிந்தது

அவள் சொன்ன
காற்றுச் சட்டை
பிம்பத்திற்குள் சிக்காமல்
நழுவியது

மறுநாள்
பள்ளிக்குச் சென்ற சிறுமியை
வழியில் பார்த்துக் கேட்டேன்
காற்றுச் சட்டை
எங்கே என்று

அது காற்றிலேயே இருக்கிறது
நான் பறக்க நினைக்கும்போது
அதில் புகுந்து கொள்வேன்
சிரித்து சொல்லியபடியே
ஓடிப்போனாள்

ஓடினாளா பறந்தாளா
தெரியவில்லை

(கிருத்திகாவிற்கு)

Thursday, September 16, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

182-

வன்மம் வளர்க்கும் விலங்கு
உடலெங்கும் திரிகிறது
என் பேர் சொல்லி

Monday, September 13, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

181-

யாருமில்லாத கூண்டின்
ஜன்னலோரம் அமர்ந்து
என் பாவங்களைச்
சொல்லிக் கொண்டிருந்தேன்

மணிசத்தத்தில்
நான் சொல்வது
கேட்காமல் போய்விடுமோ
என்ற அச்சம் வேறு

குரலில்
சத்தம் கூடியது

பாவங்களை
சொல்லிக்கொண்டே வர
சேர்ந்து கொண்டன
மறைந்து போனவைகளும்

யாருமில்லாத கூண்டின்
ஜன்னலோரம் அமர்ந்திருக்க
என் பாவங்கள் என்னைச்
சொல்லிக் கொண்டே வந்தன

மூச்சுவாங்கிய நிலையில்
பாவங்கள் சொல்லி
முடிக்கப் பட்டனவா
என்று படபடத்தபோது
கூண்டு மெல்ல
சவப்பெட்டியாகி
என்னை
விழுங்கிக் கொண்டது

Sunday, September 12, 2010

ஓடியவர்கள்

ஓடி விட்டனர்
மழையை ஏமாற்றாமல்
நனைந்தது குழந்தை

இசையின் பெயர்

மெல்லிய விசிலுடன்
சென்ற இளைஞனிடம்
அது பற்றிக்
கேட்க நினைத்தேன்

அவனைத் தடை
செய்ய விரும்பாமல்
நம்பிக்கை இசை
என்று பெயர்
சூட்டிப் பார்த்தேன்
சரியாக இருந்தது

அப்போது
என் உதட்டில்
ஊர்ந்த அவன்
விசில் சத்தம்
அதை ஆமோதித்தது

அனுபவ சித்தனின் குறிப்புகள்

180-

யாரிடமும்
சொல்ல முடியாத
ரகசியத்தை
சொல்லிக் கொண்டிருந்தேன்
என்னிடம்

Saturday, September 11, 2010

குழந்தையின் ஓவியங்கள்

நான் குழந்தையின் கையிலுள்ள
பென்சிலாக மாறினேன்

குழந்தை வரைந்தது

கூர்ந்து
கவனித்து
முகத்தை
முன்கொண்டுபோய்
அதுவே
ஒரு ஓவியமாகி
வரைந்தது

குழந்தையின்
கண்களுக்கும் உதட்டுக்கும்
இடையில் பரவியது
வரைந்து முடித்த
புன்னகை

பின் பென்சிலை
முத்தமிட்டு
கீழே வைத்து
வேறு ஒன்றை எடுத்து
இன்னொரு உலகத்திற்கு
செல்லத் தயாரானது

வரைந்த தாளிலிருந்து
வெளியேறினேன் நான்
குழந்தைக்கு நன்றியை
வண்ணங்களாகத்
தூவிவிட்டு

Thursday, September 09, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

177-

என்னைத் திறந்து
வெளியேறிய கனவில்
கலந்திருந்தன
கையள்ளக்கூடிய
கவிதைகளும்

178-

அழவேண்டும்
போலிருக்கிறது
எனக்கும் தெரியாமல்

179-

ஒளி வீசும் வார்த்தைகளால்
இருளை எழுதிக்கொண்டிருந்தவனை
ஒரு இரவில் சந்தித்தேன்

நான் இரவிலிருந்தேன்
அவன் பகலில் இருந்தான்

Tuesday, September 07, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

173-

அறையிலிருந்த
ஒவ்வொருவரும்
தங்களுக்குள் ரகசியமாக
சொல்லிக் கொண்டார்கள்
என்னைத் தவிர
எல்லோரும்
இறந்து போவார்கள்

174-

உடலில் வசிக்கிறது
உயிர்
உயிரில் வசிக்கிறது
மரணம்

175-

கை அள்ளிய
இருளை இறுக்க
மூச்சற்றுப் போகும் பயம்

176-
உங்களது பாத்திரம்
நிரம்பி வழிவது குறித்து
உங்களுக்கு ஆனந்தம்

எனது பாத்திரம்
நிரம்பாமல் வழிவது குறித்து
எனக்குப் பேரானந்தம்

Monday, September 06, 2010

நானும் நானும்

தூங்கும்போது
வந்த கனவில்
தற்கொலை செய்திருந்தேன்
விடிந்தபின்
இறந்துகிடந்த கனவை
தூக்கிப் போட்டுவிட்டு
வேலையைப்
பார்க்கத் தொடங்கினேன்

கேட்டபடி

அவர்கள் கேட்டபடி
திருத்தி எழுதிய கவிதையில்
ஊனம் மறைந்திருந்தது
உண்மை ஊனமாகி இருந்தது

Tuesday, August 31, 2010

தேடுதல்

மண்புழுவைப் பற்றி
எழுதி வரச்சொன்னார் டீச்சர்
குழந்தையிடம்

மண்ணில் தொலைந்த
மண்புழுவை
‘நெட்’டில்
தேடிக்கொண்டிருந்தார் அப்பா

அனுபவ சித்தனின் குறிப்புகள்

171-

நான்கள்
மொய்த்துக் கிடக்கும் என்னை
விடுவிப்பதெப்படி

172-

கிடைக்காது எனப்போட்டுப்
பூட்டி வைத்த கேள்விகள்
பெட்டியை சவப்பெட்டியாக்கி
உடைத்து வெளியேறின
கிடைக்கும் பதில்கள் என்ற
பாய்ச்சலுடன்

Sunday, August 29, 2010

கண்ணீரில் வரைதல்

கண்ணீரை
எந்த வண்ணத்தில்
வரைந்தாலும்
ஓவியமாகவே இருந்தது

கண்ணீரில்
வரைந்தபோது
ஓவியம் வெளியேறியது

சைத்தான்

பாட்டிலில்
அடைக்கப்பட்ட சைத்தானைப்
போட்டுடைத்தேன்

உடைந்து போன சைத்தான்
ஒன்றாகிப் போனது
உடையாத பாட்டிலுக்கு
ஒரு முத்தம் வைத்துவிட்டு

Saturday, August 28, 2010

அந்த வரி

அந்த ஆங்கில வரியை
மொழிபெயர்த்தபோது
அழகாக வந்திருந்தது

துப்பாக்கியைக் கொல்லுங்கள்

சுட்டுக் கொண்டிருந்தவன்
சரியாக இல்லை என்றான்

இறந்து கொண்டிருந்தவன்
கேட்கவில்லை என்றான்

Friday, August 27, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

168-

என்னைத் தேடாதீர்கள்
எழுதும் கவிதை
வழி நுழைந்து
வெளியேறி விடுவேன்

169-

பூமியில் பறக்கவும்
வானில் நடக்கவும்
கற்றுக் கொடுக்கின்றன
குதிரையின் கால்களும்
பறவையின் சிறகுகளும்

170-

இந்த தோல்விகளை வைத்து
ஆடப்போகும் விளையாட்டில்
ஜெயித்துவிட முடியும்

Wednesday, August 25, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

164-

மை இருட்டில்
மெய் இருட்டை எழுத
போனது
பொய் இருட்டு

165-

இல்லாதது எதுவும்
இருப்பதில்லை
நுரைத்த வார்த்தைகளை
துப்பிவிட்டு நடந்தேன்
எச்சில் பொய்களுடன்

166-

காற்றை
உளியால்
செதுக்கும் போதெல்லாம்
உதிர்கிறது இசை
சிலையென

167-

மரணத்தை சிறிதளவு
ஒரு மாத்திரையைப் போல
விழுங்கிவிட்டுப் படுத்தேன்
நன்றாகத் தூக்கம் வந்தது

வெட்டி எறியும் வார்த்தைகள்

கைவீசி
நீங்கள் வெட்டி எறியும்
வார்த்தைகளுக்கிடையில்
ஒளிந்திருக்கும் பாம்பு
கூர்ந்து பார்க்கிறது
உங்கள் கைகளைக் கொத்த

Monday, August 23, 2010

வாழ்விடம்

தான் இறந்து போனது தெரியாமல்
அவன் திரும்பிக் கொண்டிருந்தான்
வாழ்விடம் நோக்கி

இழுத்தல்

கதாபாத்திரங்கள் எல்லோரும்
கதைக்குள் இழுத்து
என்னையும் ஒரு
பாத்திரமாக்கிவிட்டார்கள்

யாராவது
படிக்கும்போதுதான்
சொல்ல வேண்டும்

தயவு செய்து
என்னை வெளியில்
எடுங்கள் என்று

Sunday, August 22, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

160-

காலங்கள்
ஓடிவிட்டதை நினைத்துக்
கவலைப்படுகிறீர்களா

இல்லை காலங்களோடு
ஓடிக்கொண்டிருப்பதை நினைத்து
சந்தோஷப்படுகிறேன்

161-

என்னுடன் யாருமில்லை
இந்த வரி தந்த கலக்கம்
அவர்களுடன் நானிருக்கிறேன்
என்று மாற்றியபோது
இல்லாமல் போனது

162-

யார்கூடி நகர்த்த
தேருக்கடியில்
நசுங்கிய காலம்

163-

தூண்டிலில் சிக்கிய
மீனின் கண்களில்
விடை பெறும் நதி

Thursday, August 19, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

156-

கண்களில்
குவிந்து கிடக்கும் தைரியம்
போ எனச் சொல்லி
வெளியேற்றுகிறது
கையாலாகாத கண்ணீரை

157-

தயங்கி தயங்கி
பிரார்த்தனையைச் சொன்னேன்
போயிருந்தார் கடவுள்

158-

இந்த சிறையிலிருந்து
வெளியே
வந்தபோதுதான்
நிறைய சிறைகளுக்குள்
என்னை பூட்டி வைத்திருப்பது
தெரிய வந்தது

159-

பெருங்காட்டை
தரிசித்து
வெளிவந்தேன்
உள்ளங்கையில்
பூத்திருந்தது
மூலிகைச் செடி

Tuesday, August 17, 2010

மாமிசம்

உன் ஈர நிர்வாணம்
என் கண்களின் உடை

இந்த வரியில்
ஒட்டி இருந்த
மாமிசத்தில்
மொய்த்த ஈக்களில்
தனிப்பெரும்
ஈயாய் நான்

கடவுளுடன் உரையாடல்

கடவுளிடம்
என் டேட் ஆப் டெத்
பற்றிக் கேட்டேன்

சிரித்தார்

மீண்டும் கேட்டேன்

சிலதை ரசிக்கப் பழகு
சிலதை ஒதுக்கப் பழகு
சிலதை விரும்பப் பழகு
சிலதைப் பார்க்கப் பழகு

சொல்லிக் கொண்டே சென்றார்

மீண்டும் என்
சாவு தேதி குறித்து
சத்தமாய்க் கேட்டேன்

சொன்னார்

சிலதை
தெரிந்து கொள்ளாதிருக்கப் பழகு

அந்த அசரீரியோடு
முடிந்து போனது
கடவுளுக்கும் எனக்குமான
உரையாடல்

Monday, August 16, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

151-

என் பாத்திரத்தில்
மழை
உங்கள் பாத்திரத்தில்
உணவு
அதனாலென்ன

152-

யாரும் என்னைத் தேடாதீர்கள்
ஜென் கவிதைகளில்
என்னைத் தேடுகிறேன்

153-

அவன் கனவில்
ஒரு கத்தியை
சொருகிவிட்டுப் படுத்தான்
காலையில் இறந்து கிடந்தான்

154-

மலைப் பாம்பை
விழுங்கிய எறும்பு
எறும்பாகவே நகர்கிறது

155-

வலி விழுங்கு
கண்ணீர் குடி
யுத்தம் கையெடு

Saturday, August 14, 2010

வேர் கொண்டான்

மேடை ஏறி
பின் பக்கம் போய்
வேஷம் போட்டிருந்தவரை
உற்றுப் பார்த்து
அவர் கேட்டார்
நீங்க கந்தசாமிதானே

அவர் சொன்னார்
இந்த கதாபாத்திரத்தின் பேரு
வேர் கொண்டான்
அது மட்டும்தான்
இப்போது
எனக்குத் தெரியும்

ஆதி ஒளி

மூதாட்டியை
கொல்ல வந்தது பாம்பு

அதைப் பார்த்து சிரித்து
புரண்டு படுத்தாள் பாட்டி

அவள் கனவிலிருந்து
போகிறது பாம்பு
சிறகை விரித்து
பறவையாய் ஆகி

ஆதி ஒளியை
தரிசித்தபடி

Wednesday, August 11, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

146-

சிறைபட
உணர்கிறேன்
விடுதலை

147-

யாரும் கவனிக்காத
தப்பை செய்தேன்
நான் கவனிக்க

148-

வெற்றுப் பாத்திரத்தில்
நிரம்புகிறது இசை
மழை

149-

இமை மூடி
திற
தூக்கம் முடி

150-

என் கால்களின்
மேலே இருப்பது
நானல்ல
ஒரு உலகம்

Monday, August 09, 2010

கல் புத்தகம்

வலிக்கவில்லை
நீ எறிந்த கல்
நிறைய பக்கங்கள் கொண்டது
படித்துக் கொண்டிருக்கிறேன்

கற்றுத் தந்தவை

நகரவாசியானவன்
கிராம ஆசிரியருக்கு
விரிவாக
எழுதிய கடிதத்தை
இப்படி முடித்திருந்தான்

அய்யா
நீங்கள் கற்றுத் தந்தவை
இன்னும்
கற்றுக் கொடுக்கின்றன

குரங்குகள்

உங்கள் குரங்கு
என் மேலேறி
விளையாடுகிறது
தூக்கிப் போங்கள் என்றேன்
அவரிடம்

எதுவுமில்லையே என்றார்

பார்த்தேன்
எதுவுமில்லை

ஆனாலும்
விளையாடியது குரங்கு
அவர் பெயரை
என் பெயரை
யார் யார் பெயரையோ
சொல்லியபடி

Sunday, August 08, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

143-

நான் தேடி வந்தவன்
கூட்டத்தில் இல்லை
என்னைத் தேடி
வந்தவன் இருந்தான்

144-

யாரும் காப்பாற்றக் காணோம்
சொல்லிடுக்கில்
சிக்கிக் கொண்ட மெளனம்

145-

சில உரையாடல்களுக்கு
நடுவில்
இறந்து போகின்றன
பல உரையாடல்கள்

Friday, August 06, 2010

ஏறுதல்

மலையில்
ஏறுவது போல்
கவிதையில்
ஏறியது எறும்பு

மலை உச்சியிலிருந்து
தொங்குவது போல்
எறும்பின் காலடியில்
தொங்கியது கவிதை

Tuesday, August 03, 2010

காலம்

குளிர் சாதன பெட்டிக்குள்
வைத்திருந்த காலத்தை
எடுத்துப் பார்த்தேன்
உள்ளிருந்த மீன்கள்
தின்றது போக
மீதி இருந்தது
பிணவாடை அடிக்க

இறந்து போன காலம்
இன்னொரு முறை
இறந்து போயிருந்தது

ரத்த சிவப்புள்ள ஆப்பிள்கள்

ரத்த சிவப்புள்ள ஆப்பிளை
ரத்த சிவப்புள்ள மனிதன்
ரத்த சிவப்புள்ள காரின் மேல் சாய்ந்து
கடித்துத் தின்கிறான்
ரத்த சிவப்பில்லாத சிறுமி
பார்த்தபடி இருக்க

ரத்த சிவப்பான கண்கள் கொண்டவன்
ரத்த சிவப்பான குத்திய கத்தியை எடுக்கிறான்
ரத்த சிவப்புள்ள மனிதனின்
வயிற்றிலிருந்து
விழுந்து கொண்டிருக்கின்றன
ரத்த சிவப்புள்ள ஆப்பிள்கள்

Sunday, August 01, 2010

குட்டிகள்

மழையில் நனையும்
நாய்க்குட்டியைத்
தூக்கி வருகிறேன்
கூடவே வருகின்றன
மழைக் குட்டிகளும்

விடுதல்

மனநிலை பிசகியவன் என்று
அவனைச் சொன்னார்கள்
அவன் மழையிடம்
சொன்னான்
அவர்கள் பேசுவதை
நீ கழுவி விடு
நான் மறந்து விடுகிறேன்

Friday, July 30, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

139-

கல்லாக என்னை
எறிந்து எறிந்து
மலையானேன்

140-

புதிதாக
பிறந்து கொண்டே இருப்பதால்
அடிக்கடி
இறந்து போவது
பிடிக்கிறது

141-

வலிகளை
கொண்டாடு
கண்ணீரில்
நிறங்கள் எடு

142-

என்னால் மட்டுமே
வீழ்த்த இயலும்
என்னை

Wednesday, July 28, 2010

ஆடுதல்

தூக்கு கயிறை
ஊஞ்சலாக்கு
வரியில் ஆடியது கவிதை

Tuesday, July 27, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

136-

அவள் கண்களில்
நீளமான கதை
கண்ணீரில் கிடைத்தது
சில குறிப்புகள் மட்டுமே

137-

அமர்ந்து போன
கிளையில் அசைகிறது
பறவையின் நன்றி

138-

இருளில் கேட்கிறது
அனாதை இருட்டின்
கதைகள்

ஏணிகள்

குழந்தை ஏணி வரைய
அப்பா ஏணி
செய்து கொண்டிருந்தார்

உள்ளிருந்து சாப்பிட
அழைப்பு வர
இருவரும் போனார்கள்

அப்பாவின் ஏணி
குழந்தையின் ஏணியில் ஏறி
விளையாடிக் கொண்டிருந்தது
அவர்கள் வரும் வரை

Tuesday, July 20, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

134-

எனக்குள் இருக்கும்
கடவுளைக் காட்டும்
கடவுளைக் காண்பது எக்கணம்

135-

ஐயாயிரம் வரிகள்
எழுதிய பிறகு
அவன் சொன்னான்
என் முதல் வரியை
இப்போது
எழுதத் தொடங்குகிறேன்

Monday, July 19, 2010

எதிர்பாராதது

எதிர்பார்த்தது போல
எதிர்பார்த்த நண்பர்
எதிரே வந்தார்

எதிர்பாராத
சைகை செய்து
வேகமாகி
மறைந்து போனார்

முடிவற்ற தெருக்கள்
பார்த்துக் கொண்டிருந்தன

புதிர் நிறைந்த மனிதர்களையும்
புதிது புதிதான
விசித்திரங்களையும்

சிறகின் மேல்

உன் குரல்
ஒரு பட்டாம் பூச்சியின்
சிறகின் மேல்

பிடிக்க முயல
குரலிலிருந்து
பறந்தது பட்டாம் பூச்சி
இசையெழுப்பி

Saturday, July 17, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

130-

குமிழ் மேல்
நின்று
குமிழை
உடைக்காமல்
குமிழைப் பார்க்கிறது
மற்றொரு குமிழ்

131-

எப்படியும்
உங்களுக்குக் கிடைக்கலாம்
எனதுடல்
எனது கனவை
அடைய
பலநூறு ஆண்டுகள் ஆகும்
உங்களுக்கு

132-

நிகழாது போன
உரையாடலுக்குள்
தழைத்திருக்கிறது மொழி

133-

எல்லோரும் நசுக்க
யாரிடமும் சாகாமல்
ஊர்ந்து கொண்டே போகிறது
பல காலங்களாய்
எறும்பு

அதே பறவை

நான் வரும்போது
துடித்துக் கொண்டிருந்த பறவை
வீடு போய் சேர்வதற்குள்
இறந்து போகலாம்
உன் சாவு சிந்தனை விடு
திரும்ப போய்ப்பார்
உன்னைப் போன்றவர்களுக்கு
குருதியில்
ஏதாவது செய்தி
வைத்துவிட்டு
தொலைவாகி இருக்கலாம்
அதே பறவை
தன் அலகால்
மரணம் தின்ற
மதர்ப்புடன்

Sunday, July 11, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

126-

அன்பால் யாராவது
நகர்த்தி இருக்கலாம் என்றது
அருகில் வந்திருந்த மலை

127-

ஆகாரத்தை மறுத்த
கூண்டு பறவையின்
கண்களில் படிக்க முடிந்தது

சுதந்திரம் எனதுணவு
அதைத் தா

128-

யாரெனும்
கண்டெடுக்கக்கூடும்
என் பால்யத்தை
எனக்கேத் தெரியாமல்

129-

நம் அருகில்
இருக்கும் தூரங்களை
எப்படிக் கடப்பது

Saturday, July 03, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

123-

கதவை திறந்து பார்க்க
பூதம் நின்றது
அதன் கையில்
என் முகவரி இருந்தது
யாரென்று கேட்க
உனது பொய் என்றது

124-

எழுத எதுவும்
கிடைக்கக் காணோம்
திரும்ப சீவுகிறேன் பென்சிலை

125-


இங்கிருந்த என்னை
காணவில்லை என்றார் ஒருவர்

அதோ அங்கிருக்கிறாரே
அவரா என்றேன்

கேட்டு வருகிறேன்
என்று போனார்

நான் காணாமல் போனேன்

Thursday, June 24, 2010

கப்பல்கள்

கப்பல்கள்
வழி தெரியாமல்
இருளில் நிற்கின்றன என்றேன்

தேவதை சிரிப்புடன்
பார்த்த சிறுமி
நோட்டை எடுத்து
கலங்கரை விளக்கை
வரைந்தாள்

கப்பல்கள்
ஒளி பெற்று
வழி பார்த்துப் புறப்பட்டன

பின் ஓவிய நோட்டை மூடி
பையில் வைத்து
பள்ளிக்கூடம் போனாள்

அவளுக்குத் தெரியாமல்
அவளைத் தொடர்ந்தன
கப்பல்களும்

Tuesday, June 22, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

120-

சூன்யத்தில் சுட்டுக்கொண்ட
விரல் நுனியில்
காலத்தின் சாம்பல்

121-

எறிந்த சொற்கள்
சேர்ந்து கற்களாச்சி

கற்கள் எல்லாம்
குவிஞ்சி மலையுமாச்சி

மலையுச்சி நின்று பார்க்க
அமைதி வெளி
தெரியலாச்சி

122-

தோற்றுப் போனவன் இசைக்கிறான்
தோற்கக்கூடாது என்ற பாடலை
மேலும் சுதி சேர்த்து
தலை நிமிர்ந்து
உலகம் பார்த்து

Sunday, June 20, 2010

கனவில்

யார் கனவென்று
தெரியவில்லை
வீதியில் கிடந்து
துடிக்கிறது
விட்டுப் போனவன்
தேடக்கூடும்
இக் கனவை
வேறொரு கனவில்

(14.07.2010 ஆனந்த விகடன் இதழில்
பிரசுரமானது)

Saturday, June 19, 2010

திரும்புதல்

அடிக்கடி குழந்தை கேட்பாள்
இந்த மீன் தொட்டி மீன்களை
கடலில் விட்டுவிடலாமா என்று

கடல் மீன்களின் தாய்வீடு
மீன்களின் நீர் விளையாட்டுத் திடல்
என்று அவளுக்கு
கதை சொல்லும் போது
குறிப்பிட்டது
அப்படியே தங்கிவிட
ஒரு நாள் கேட்டாள்

மீன் தொட்டியில
நகர்ந்து போவுது
கடல்ல விட்டா
ஓடும் இல்ல

அவள் விருப்பப்படியே
முடிவு செய்து
கவனமாய் கொண்டுபோய்
மீன் தொட்டியை
கரையில் வைத்து
எல்லா மீன்களையும்
வழி அனுப்பி வைத்தோம்

ரொம்ப தூரம் போயி
விளையாடுங்க எனச்சொல்லி
குதித்தபடியே கடலுக்கு
கையசைத்தாள் குழந்தை

அலை பதிலுக்கு
தலை அசைத்தது

மீன் தொட்டியில்
நிரம்பி இருந்தது
கடலின் நன்றி

Wednesday, June 16, 2010

பூக்களின் வரிசை

குழந்தை தனக்குத் தெரிந்த
பூக்களின் பெயர்களைச்
சொல்லிக்கொண்டே வந்தது

நினைவில்
வரிசை தடுமாறியபோது
பூக்களோடு சேர்த்துக் கொண்டது
தன் பெயரையும்

சொல்லி முடித்த நிம்மதியில்
புன்னகையுடன் பார்த்தது

குழந்தையின் பெயரில்
சேர்ந்திருந்தது
எல்லா பூக்களின் வாசமும்

(கல்கி,08.08.2010 இதழில்
பிரசுரமானது)

Friday, June 11, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

116-

மேலேறிச் செல்லும்
எறும்பைப் பார்க்க
மேலேறிச் செல்லும் பார்வையும்

117-

மறந்தே போயிற்று
மறந்ததை நினைக்க
மறந்தே போயிற்று

118-

கைமாறி கைமாறி
கை சேர்ந்த கனவு
கண்ணீரைப் பேசலாச்சே
கண்ணீரைப் பேசி
கண்ணீரைப் பேசி
கை கனவு கரைஞ்சிப் போச்சே

119-

விடுபட விடுபட
விடுபடும் எல்லாம்
விடுபட்டு விடுபட்டு
சிறைபடும் எல்லாம்

கிடைத்து விட்டது

இன்னும் பெயரிடாத
என் புதிய நாயுடன்
கடற்கரையில்
நடந்து கொண்டிருந்தேன்

சிநேகமாக வந்தது
கடலைப் பார்த்தது
கை கயிற்றை
சற்றே விட
கூடுதல் சுதந்திரத்துடன்
ஓடிப்போய்
மண்ணைக்கீறி விளையாடியது
நண்டைப் பார்த்து மிரண்டது
ஒளி வாங்கி ஓடியது
பின் என்னோடு வந்து
சேர்ந்து கொண்டது

வீடு திரும்புகையில்
உனக்கு என்ன பெயர்
வைக்கலாமென்று
அதனிடம் கேட்டேன்
குரைத்தது

அந்த சத்தத்திலிருந்து
விழுந்த சொற்களில்
எதுவும் பெயர்
ஒலிக்கவில்லை

கயிற்றின் அதிர்வு
கைக்கு இதமாக இருந்தது

நாய் கதாபாத்திரங்கள் வரும்
கதைகளினூடே போய்
ஏதாவது பெயர் கிடைக்குமா என
பார்த்து திரும்பியது மனது

வைக்கப்போகும் பெயருக்கு
ஒரு விஷேசம்
தேவைப் பட்டது

நல்ல பெயர்
கிடைக்கும் வரை
காத்திருக்க வேண்டியதுதான்

அதுவரை பெயரிடப்படாமல்
கழியட்டும் நாட்கள் என்று
நினைத்தபடி பார்க்க
வேகமாக சாலை கடந்த நாயை
டேய் அன்பு
எனச் சத்தமிட்டேன்

அழகாக ஓடி வந்து
காலை நக்கியது

கிடைத்து விட்டது

எனக்குப் பெயரும்
அதற்கு நானும்

Monday, June 07, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

111-

புதிய கண்ணீர்
பழைய வலிகள்
இதற்குத் தெரியாது

112-

நான்கள்
முன்னாலும் பின்னாலும்
வரிசையில் நான்

113-

மரணம் போல்
வாழ வேண்டும்
அமைதியாக

114-

எலும்புக்கூட்டை
சுடுகிறது குழந்தை
வெளியேறுகிறது உயிர்
துப்பாக்கியிலிருந்து

115-

யாருமில்லை
கனவில் நிலவுகளை
கொட்டும் இரவு

...?

அவனை கல்லால்
அடித்துக் கொல்ல வேண்டும்
தயாராக இருக்கிறீர்களா

ஆமாம்

அவன் உங்களில்தான் இருக்கிறான்
எங்கே பார்ப்போம்

மொத்த கற்களும் பாய்ந்தன
மொத்த பேரும் வீழ்ந்தார்கள்

Monday, May 31, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

106-

மனம் கண்ட வலி
உருள்கிறது பந்தென
கால் உதைத்த பந்து
உடைகிறது பனியென

107-

பறவையோடு நண்பனானேன்
பறப்பதும்
நட்பாயிற்று

108-

இன்று நான்
எந்த எறும்பையும்
கொல்லவில்லை
இதோ என் கையில்
ஊர்ந்து செல்லும்
இந்த எறும்பு உட்பட

109-

என்ன வேண்டும் என்று
எனக்குத் தெரியவில்லை
என்பது கூட
எனக்குத் தெரியவில்லை

110-

என்னைத் தின்னத்தொடங்கிய கனவு
அதிகாலையில்
ஒப்படைத்துப் போனது முழுமையாய்

Saturday, May 29, 2010

விரல்களுக்கிடையில்...

விரல்களுக்கிடையில் பென்சிலை
சுழற்றுகிறாள் சிறுமி
பென்சிலுக்குள் இருந்து
பிளிறும் சத்தம் கேட்க
வரையத் தொடங்குகிறாள் யானையை
தும்பிக்கை பாய்ச்சலுடன்

Thursday, May 27, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

101-

எந்த கல்லறையிலும்
நான் இல்லை
திரும்புகிறேன் ஏமாற்றத்துடன்

102-

ஜென் தோட்டத்தில்
வண்ணத்துப்பூச்சி
அழைக்கிறது என்னை

103-

வழிப்போக்கன் பாடலில்
விழித்தெழுகின்றன
சாலைகள்

104-

இறந்த மீனுக்குள்
இறந்து போயிருந்தது
கொஞ்சம் கடலும்

105-

ஆழ்மனத்தில்
மிதக்கும் இலை
நான்தான்

கொண்டு வந்த மழை

ஏணி வரைந்தாள் குழந்தை
இதில் எவ்வளவு
உயரம் போகலாம் என்றேன்
வானம் வரை என்றாள்
போய் வந்ததை
உறுதி செய்வதுபோல்
கொண்டு வந்த மழையை
முகத்தில் தெளித்தபடி ஓடினாள்

Sunday, May 23, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

98-

தோன்றுவதில்
எனக்கும் சில
தோன்றுகிறது

எது சரி

தோன்றுவதா
தோன்றியதா

99-

உன் உள்ளொளி
இருளென்றது
இருள்

உன் உள்ளிருள்
ஒளியென்றது
ஒளி

100-

அன்பு மட்டுமே
என்னிடம் இருக்கிறது
எவ்வளவு தூரம் போகலாம்

நீங்கள் பாக்கியவான்
உங்கள் அன்பு முன்
உலகம் ஒரு கைக்குட்டை
நீங்கள் வெகுசுலபமாய்
சுருட்டி விடலாம்
அல்லது வெகுவேகமாய்
கடந்து விடலாம்

Thursday, May 20, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

93-

எப்போதும் பயணிப்பவன்
பார்த்துக் கொண்டிருப்பான்
திசைகளை மணிகளாக

94-

இரவு நகர்கிறது
எறும்பு போல
கனவின் மீது

95-

பசியால் திருடியவனை
அடைத்தார்கள்
தப்பித்துப் போனான்
பசியால்

96-

தந்தது எதையும்
கேட்பதில்லை உலகம்
உலகம் போல்
உள்ளம் வேண்டும்

97-

கூண்டிலிருந்த பறவை
வெளியேறி விட்டது
கூண்டிற்கு
சுதந்திரம் கிடைத்து விட்டது

மலை சொன்ன கதை

ஏறும்போது
கேட்டுக்கொண்டே சென்றேன்
மலை சொன்ன கதையை

இறங்கும்போது
திரும்ப
அதனிடம் சொல்லி
சரிபார்த்துக் கொண்டேன்

Monday, May 17, 2010

எனக்கானது

மெளனத்தின் மீது
அமர்ந்திருந்த பறவையை
விரட்டினேன்
அது போனபோது
விழுந்த சிறகில்
எழுதி இருந்தது
மெளனத்திற்கான நன்றியும்
எனக்கான தண்டனையும்

Thursday, May 13, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

90-

நிரம்பி வழிகிறது
மழை
சவப்பெட்டியில்

91-

எழுதாத கவிதை
எழுதிய பிறகும் இருந்தது
எழுதாத கவிதையாக

92-

என்னுள் போகும்போது
கதவுகளே இல்லை
திரும்பும்போது
நானே இல்லை

போதைகள்

வாகனங்கள் சாலையை
கிழித்துக் கொண்டிருந்தன


போதையில் விழுந்து கிடந்தவன்
சொல்லிக் கொண்டிருந்தான்

என் உடைந்த
காலைத் தேடுகிறேன்

அவனை முழுசாய்
பார்த்தவன் சொன்னான்

நீ முதலில்
காலை உடை
பிறகு தேடு

சாலை வாகனங்களால்
கிழிந்து கொண்டிருந்தது

Tuesday, May 11, 2010

உலகின் கரம்

எங்கள் வலிகளை
நீங்கள் எழுதினீர்கள்

எங்கள் ரத்தங்களை
நீங்கள் எழுதினீர்கள்

எங்கள் கண்ணீரை
நீங்கள் எழுதினீர்கள்

எங்கள் மரணங்களை
நீங்கள் எழுதினீர்கள்

எங்கள் துயரங்களை
நீங்கள் எழுதினீர்கள்

இன்ன பிற
தேடி எழுதினீர்கள்

உங்கள் வரிகளில் வந்த
அவை எல்லாம்
பாராட்டைப் பெற்றது

பரவலாக
வரவேற்பை பெற்றது என்று
புளகாங்கிதம் கொண்டீர்கள்

பின் போய்விட்டீர்கள்
வேறு ஒன்றுக்கு

நிகழ்ச்சி நிரலில்
மாற்றம் வேண்டும்
உங்களுக்கு

இப்போது

எங்கள் வலி
கூடுதலாகி

எங்கள் ரத்தம்
உறைந்துபோய்

எங்கள் கண்ணீர்
திசைகள் இழந்து

எங்கள் மரணம்
கணக்கைத் தொலைத்து

எங்கள் துயரம்
தனிமை சேர்த்து

உலகின் கரம் நீளமானது
என்று சொன்னவர்களே
அது எங்களை நோக்கி
எப்போது நீளும்
சொல்ல முடியுமா

Saturday, May 08, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

87-

கடக்க கடக்க
கால்களுக்கிடையில்
பிடிபடும் உலகு

88-

எந்த சத்தமும் எழுப்பாமல்
பிணத்திற்கு சமமாய்
இந்த மெளனம்

89-

என் உள் உள்
உள்
உள்
நான் காணா
உள் உள்

Thursday, May 06, 2010

இப்போது

வரைந்த சிலுவையின் மேல்
வந்தமர்ந்தது பறவை

உடல் குவித்தபோது
சில துளிகள்
சிறகுகளைப் போல
பறந்து விழுந்தன

எப்படி உன்னால்
அமர முடிந்தது

கேள்வியை அலகால்
கொத்திக் கொண்டு
பறந்து போனது

இப்போது சிலுவைமேல்
பறவை ஓவியமாய்

பறவையின் கீழ
சிலுவை உண்மையாய்

Tuesday, May 04, 2010

நடுங்கும் கை
அனுமதிக்கும் போதெல்லாம்
முதியவர் குடிக்கிறார் காப்பியை

அனுபவ சித்தனின் குறிப்புகள்

81-

என்னை அடுக்குகையில்
பலவீனமானவர்கள்
கலைந்து போனார்கள்
பலமானவர்கள்
இணைந்து போனார்கள்

82-

வெளியே வந்தவன்
மெல்ல அழிக்கிறான்
சிறை பிம்பத்தை

83-

சுவாசிக்கையில்
சிறைபடும்
சுதந்திர காற்று

84-

உள் சிந்தி
ரத்தம் கலக்கும்
ஒளித்து வைத்த கண்ணீர்

85-
உழைத்து முடித்தவன்
தன் வியர்வையை
பார்த்துச் சொன்னான்
ஏன் சோம்பேறித்தனமாக
உருள்கிறாய்
வேகமாய்ப் போ

86-

தூண்டிலில் மாட்டிய மீன்
இறந்து கொண்டிருந்தது
இறப்பது தெரியாமல்

Monday, May 03, 2010

நான்காவது முறை

நான்காவது முறையாக
தற்கொலைக்கு முயற்சித்தவன்
மனதிற்குள் சொன்னான்
இந்த முறையும்
தோற்றுப் போக வேண்டும்

Sunday, May 02, 2010

புல்லாங்குழலில் விழுந்த எறும்பு

விரல்களால் பேசுகிறார்
பியானோவுடன்
வாசிக்கும் பெரியவர்

----

என் ஆரவாரம் எறியும் பூக்கள்
வாங்கிக் கொண்டோடும் நதி
இசைலயத்துடன்

---

புல்லாங்குழலில் விழுந்த எறும்பை
எடுத்துப் போட்டேன்
இசையில் விழுந்த எறும்பை
முடியவில்லை

இரண்டு குழந்தைகள்

விழும் போதெல்லாம்
எழுந்து விடுகிறது குழந்தை
தன்னைப் பிடித்து

---

விழிக்காத அம்மா
அவள் தூக்கத்தில்
ஏறி விளையாடும் குழந்தை

அனுபவ சித்தனின் குறிப்புகள்

78-

உறங்கும் போது
தொலைத்த நேரங்களை
தேடுகிறேன் விழித்தபடி

79-

வழிப்போக்கனிடம்
முகவரி கேட்டேன்
கிழித்துப் போட்டுவிட்டு
தேடச் சொன்னான்

80-

எங்கு சுற்றினால் என்ன
வந்து சேர வேண்டும்
வாழ்க்கைக்கு

Thursday, April 29, 2010

திட்டம்

போதையின் உச்சத்திலிருந்தவன்
அங்கிருந்து குதித்து
தற்கொலை செய்து கொள்ள
முடிவு செய்தான்

பின் திட்டத்தை மாற்றி
இன்னும்
மேலேறிப் போனான்

தப்பித்தல்

அந்த முயல்குட்டி
தப்பித்து விட்டது

வீட்டிலிருந்து
வலையிலிருந்து
கசாப்புக்கடைக்காரனிடமிருந்து
கடைசியில்
கவிதையிலிருந்து

அந்த முயல்குட்டி
தப்பித்து விட்டது

அனுபவ சித்தனின் குறிப்புகள்

75-

ஜென் குகை
இருளுமற்று வெளிச்சமுமற்று
குகையுமற்று

76-

என் சொற்களால்
பேசிவிட்டுத்
திரும்புகிறீர்கள்
என்னையும் விட்டுவிட்டு

77-

புத்தரை வரைந்தேன்
வரைய வந்தது
புத்தரா தெரியவில்லை

Monday, April 26, 2010

தொடுதல்

ஊஞ்சல் மேலேறும் போதெல்லாம்
ஆடும் குழந்தையின் கால்கள்
தொட்டு வருகிறது வானை

Saturday, April 24, 2010

யாரோ

தெறித்து
வழிந்தோடும்
அந்த ரத்தம்

உங்களுடையதல்ல

என்னுடையதல்ல

நம் யாரோ
ஒருவருடையது

எறிதல்

நேரத்தின் மீது
கல்லெறிந்தேன்
சேர்ந்த மலையில்
நசுங்கிப் போனேன்

Thursday, April 22, 2010

இன்னொரு புத்தகம்

பக்கங்கள்
மாற்றிப் படித்த கதையில்
இன்னொரு புத்தகம்

------

முதியவர் வீடு
காற்றில் ஆடுகிறது
தேதி கிழிக்காத காலண்டர்

------

தொலைந்து போனதுண்டா
நீங்கள் உங்களில்
தொலைந்து போனதுண்டா

-------

அடை மழை
மூடிய கோயில்
கடவுளும் நானும்
மழைத்துளிகளை எண்ணியபடி

-------

விற்காத பொம்மை மீது
எடுத்துப் பார்த்தவர்களின்
விரல் ரேகைகள்

Monday, April 19, 2010

இருந்தது

கண்ணாடிக் குவளைக்குள்
இருந்த மீனுக்குள்
இருந்த கடலுக்குள்
இருந்தது மீன்

Saturday, April 17, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

75-

ஆழ்மனத்தில்
அமர்ந்திருந்தேன்
யாருமற்று
நானுமற்று

76-

மனதிற்குள் நடக்கையில்
நினைவுகளின் சத்தம்
கால்கள் மிதிபட

Monday, April 12, 2010

சுமை

கூடவே வரும் நிலா
பார்க்கமுடியவில்லை
தலைசுமை

நிலை

கட்டியிருந்த ஆடு
திரும்பி வந்தபோது
தொங்கிக் கொண்டிருந்தது

குரல் பிடித்து

அம்மா நான் இங்க இருக்கேன்
குழந்தையின் குரல் பிடித்து
இருளை கடக்கிறாள் தாய்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

70-

எறிந்த கல்
உள்ளிறங்குகிறது
சொல்லென

71-

கொன்ற எறும்பு
விரட்டுகிறது
மிருகமென

72-

வெறும் தாள்
இல்லை
ஜென் தோட்டம்

73-

வெளியேறக் காணோம்
உள்ளிருக்கும் மிருகம்
பழகியாக வேண்டும்

74-

நான் இறந்து கொண்டிருப்பதைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
இறந்து போகும்வரை

எப்போதும் நீங்கள்

எப்போதும் நீங்கள்
யார்மேலாவது விழுகிறீர்கள்
பயணத்தில்
உரையாடலில்
சாய்மானத்தில்
அந்தரங்கத்தில்
இப்படி பல
தருணங்களில்
ஒரு முறைகூட நீங்களாய்
எழுந்து போனதே இல்லை

Saturday, April 10, 2010

அப்பாவும் மழையும்

எப்போது பெய்தாலும்
நனைந்து விட்டு
வரச் சொல்வார் அப்பா

அப்போதெல்லாம்
அப்பாவைப் போலவே
பேசும் மழையும்

Thursday, April 08, 2010

சில பார்வைகள்

உடைத்து விட்ட பொம்மை
அழுகையை
பொறுக்கும் குழந்தை
-------
விபத்து
நசுங்காமல் கிடக்கிறது
பிறந்த நாள் கேக்
-------
இரவு நடுக்கம்
பீடி பற்ற வைக்க
வத்திப்பெட்டியோடு போராடும் காவலாளி
-------
குறுகிய சாலை
தவிர்த்தபடி போகிறார் நண்பர்
தவிர்க்கத் தெரியாமல்
-------
குளம்
சிற்றலை கற்றுத்தரும் நீச்சல்
நிலவுக்கு
-------

Wednesday, April 07, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

66-

என்னிலிருந்து
என்னைப் பிடுங்கி
என்னில் நடுகிறேன்

67-

கண் மூடி
நான் பார்த்த மெளனமும்
கண் திறந்து
என்னைப் பார்த்த மெளனமும்
வேறுவேறாகவும்
ஒன்றாகவும்

68-

ஒரு வரியை
திரும்ப திரும்ப எழுத
அந்த ஒரே வரி
மாறிக்கொண்டிருக்கிறது
புது புது
வரிகளாக

69-

நீங்கள் புன்னகைத்தபின்
காண முடிந்தது
உங்கள்
முகத்தின் கசப்பை

Sunday, April 04, 2010

காரில் ஆடும் பொம்மை

நெருங்கிவிட்ட வீடு
குடிகாரனின் கால்கள்
குழப்பத்தில்
--
கவனமாக காலடி வைக்கிறேன்
குழந்தைகளின்
மழை கப்பல்கள்
--
பட்டாம்பூச்சி பிடிக்கிறது குழந்தை
இல்லை இல்லை
பட்டாம்பூச்சி பிடிக்கிறது பட்டாம்பூச்சி
--
கனவில்
தூங்குவதை தடுக்க
எழுகிறான் போராளி
--
நள்ளிரவு
காரில் ஆடும் பொம்மை
ஓட்டுனருடன் பேசிக்கொண்டு
--
பழைய நண்பர்கள்
காலங்களைக் கோர்க்கிறார்கள்
பார்க் பெஞ்சில்
--

அனுபவ சித்தனின் குறிப்புகள்

63-

உண்மையில்
பொய்கள் நான்தான்
தனியே எதுவுமில்லை

64-

கதவை மூடுகிறீர்கள்
சுதந்திரமாய் நான்
அடைத்துகொண்டு நீங்கள்

65-

நான் இருளை தின்பவன்
என்றவனைக் கேட்டேன்
எங்கே தின்று காட்டு

சிரித்தபடி சொன்னான்

உன்னைச் சுற்றி
இருக்கும் வெளிச்சம்
நான் இருளை தின்றதால்
முளைத்திருக்கிறது

சொல்லிவிட்டு
மென்று கொண்டிருந்தான்

எதை என்று
தெரியவில்லை

Monday, March 29, 2010

வித்தை

பார்த்துக் கொண்டே
இருந்தது மொழி
தன்னை வைத்து
வித்தை காட்டுபவனிடமிருந்து
எப்படி விடுபடுவதென

Wednesday, March 24, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

61-

கணக்கு சரியாகி விட்டது
யாரும் கண்ணீர்
சிந்த வேண்டாம்

கேள்விக்குறி
தூக்குக் கயிரானது

மரணம்
விடையானது

அவ்வளவுதான்

62-

கண்மூடிப் பார்க்கிறேன்
முன்கணப் பார்வையில்
விடுபட்டுப் போனவைகளை

முன்பாகவே

பிடிவாதமாய்
என்னைப் பார்க்க
நனைந்து வந்திருந்தாய்

அறைக்குள் நீ
கொண்டு வந்த மழை
கொட்டிக் கொண்டிருந்தது
உன் பிரியங்களை
நீ சொல்வதற்கு
முன்பாகவே

Tuesday, March 23, 2010

உச்சத்தில்

உச்சத்திலிருந்த
குடிகாரன் சொன்னான்

நான் நடுக்கடலில்
கிணறு தோண்டுகிறேன்

அருகில் ஆடிய
மற்றவன் சொன்னான்

நீ மூழ்கிப்போனால்
உன்னைக் காப்பாற்ற
நீச்சல் பழகுகிறேன்

நடந்து போன பாதை

நடந்து
கடந்து
களைத்து
நடக்கப் போவது
நினைத்து
உறங்கிப்போனவனை
எழுப்பாமல்
அவனுள்
போனபடி
பாதை

Sunday, March 21, 2010

நிசப்தத்தின் கோடு

நிசப்தத்தின் கோடு
எனப் பெயரிட்டேன்

ஊர்ந்து திரும்பிப்போனது
பேனாவிற்குள்

தாளிலிருந்தது நிசப்தம்
கோட்டின் தயவின்றி

அனுபவ சித்தனின் குறிப்புகள்

56-

நான் கடவுளானது தெரியாமல்
என்னை மனிதனாகப்
பார்த்துக் கொண்டிருந்தார் கடவுள்

அவர் மனிதரானது தெரியாமல்
கடவுளாக பார்த்துக் கொண்டிருந்தேன் நான்

57-

வாருங்கள்
நம் தேடுதல் இயந்திரத்தை
கடலில் எறிந்து விட்டு
தொலைந்து போவோம்.

58-

எறும்பு வரிசையை
பார்த்தபடியே
கலைந்து போகும் எண்ணங்கள்.

59-

காற்றின் எடைக்கேற்ப
அசைகிறது
தராசுத் தட்டு

60-

இந்த சவப்பெட்டி
உங்கள் அளவுக்கு
சரியாக இருக்கிறதா

ஒரு முறை
படுத்துப் பார்த்து
தெரிந்து கொள்ளுங்கள்

அதுபோல் செய்துவிட்டு
சிரித்தபடி யோசித்தான்

சரியாக இருந்தது
மரணத்தின் ஒத்திகை

Thursday, March 18, 2010

பார்த்தல்

கரையில் அமர்ந்திருந்தனர்
இருவரும்

ஒருவன்
மீன் நீந்துவதைப்
பார்த்துக் கொண்டிருந்தான்

இன்னொருவன்
நதி நீந்துவதைப்
பார்த்துக் கொண்டிருந்தான்

Sunday, March 14, 2010

ஆப்பிள் விளையாட்டு

காருக்குள்
ஆப்பிளை தூக்கிப் போட்டு
விளையாடும்
அப்பாவும் மகளும்

சிக்னல் விழுவதற்குள்
வெளியே வந்து
விழாதா என பார்க்கிறாள்
வெயிலைத்
துடைத்தபடி சிறுமி

Monday, March 08, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

54-

கடைசியாக
என்ன சொல்ல
விரும்புகிறாய்

வலி கொல்கிறது
இன்னொரு
குண்டு பாய்ச்சி
உடனே
கொன்று விடு

55-

மணல் வெளியில்
வெயில் பாம்பு
கால் மிதிக்க
நெளியும் நழுவும்

Friday, March 05, 2010

ஜன்னல் விழியில்

அப்பா வானவில் பல
நிறத்துல இருக்கு
மழை மட்டும் ஏன் ஒரே
நிறத்துல பெய்யுது
பல கலர்ல பெய்யாதா

கேள்வியின் நிறங்கள்
அப்பாவினுள் இறங்க
பதில் தேடியபடியே
குழந்தையை சமாளிக்கிறார்

ஜன்னல் விழியில்
ரசிக்கிறது மழை
இருவரையும்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

50-

அதுவாக
போகிறது ஆமை
நாம்தான்
மெதுவாக என்று
குறியீடு செய்கிறோம்

51-

உதிர்ந்து கொண்டிருந்தது
மரம்
விழுந்து முடித்தது
இலை

52-

அவர்கள்
கண்ணீரோடு வந்தார்கள்
கடுமையான
சோதனைகளுக்குப் பிறகு
கவலை சத்து
குறைவாக இருக்கிறதென்று
திருப்பி அனுப்பபட்டார்கள்

53-

தூக்கி எறிந்த துப்பாக்கி
சொல்லிக் கொண்டே விழுகிறது
கொன்றவர்களின் பெயரை

Thursday, February 25, 2010

புத்தர்கள்

களவாடிக் கொண்டு வந்த புத்தர்
கை நழுவி விழுந்து
உடைந்து போனார்
புத்தர்களாக

பல திருடன்களாகிப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
எந்த புத்தரை
எடுப்பதென

விழு

விழுந்து கொண்டிருக்கும் நான்
விழுந்து கொண்டிருக்கும் என்னை
விழுந்து போகாமல்
பார்த்துக் கொண்டிருந்தேன்
விழுந்து போகும் வரை

அவன்

ஒரு பூவை நினைத்தபடியே
தற்கொலை
செய்து கொண்டான்

அவன் மரணத்தில்
ரோஜா பூத்திருந்தது

Tuesday, February 23, 2010

பொய்கள்

என் கைபட்டு
விழுந்து கொண்டிருந்தது
பொம்மை

கை நீட்டிப்
பிடிப்பதற்குள்
உடைந்து போயிற்று

சிதறிக் கிடக்கிறது
பொம்மையின் உயிர்

குழந்தை வருவதற்குள்
எடுத்தாக வேண்டும்
பொம்மை கேட்டு
அழுது அடம் பிடித்தால்
நிறுத்த முடியாது

அப்புறப்படுத்துவதற்குள்
வந்து சேர்ந்த
குழந்தையின் கையில்
சிக்கியது
பொம்மையின் கால்

அழவில்லை
தேடலுடன்
பார்த்தது குழந்தை

மற்ற பகுதிகளை
மறைத்தபடி சொன்னேன்

ஒற்றைக்காலுடன்
ஓடிவிட்டது பொம்மை

திரும்பி வருமா
என்பது போல்
பார்த்தது குழந்தை

வரும் வந்து
விட்டுப் போன
காலைத் தேடும்
உடையாமல் வைத்திரு
எனச்சொல்ல
கைக்குள்
இறுக்கிக் கொண்டது

விரட்டி வரும்
ஒற்றைக்கால் பொம்மையிடமிருந்து
தப்பிக்க
ஓடிக்கொண்டிருந்தன
கால் முளைத்த
என் பொய்கள்

Monday, February 22, 2010

பசி

பசியைத் தடவியபடி
அவன் சொன்னான்
கடவுள் ஏழைகளுக்கு
உதவி செய்யாமல்
யாருக்கு செய்வார்

முதலில் எனக்கு
சோறு கொடுத்து விட்டு
பிறகு உன் கடவுளைப்
பற்றி யோசி

சொன்னது பசி

Saturday, February 20, 2010

வயோதிக வாசனை

வயோதிக வாசனை
வீசியதில்லை
தாத்தாவின்
சாய்வு நாற்காலியில்

நண்பர்களும் நட்பும்

நண்பர்கள்
இறந்துபோகும்போதெல்லாம்
நட்பும்
இறந்து போகிறது
தேநீர் குடித்தபடியே
ராமசாமி சொன்னான்

போனவாரம்
எங்களோடு டீகுடித்த
முத்தையாவின் இடம்
வெறுமையாக இருந்தது

அனுபவ சித்தனின் குறிப்புகள்

47-

எனக்குத் தரப்பட்ட
இடத்தில் இருந்தன
நானே எடுத்துக்கொள்ள
ஏராளமான இடங்கள்

48-

அவனை எல்லோரும்
பைத்தியம் என்றார்கள்

அவன் எல்லோரையும்
பைத்தியம் என்றான்

விவாதம் முடிவுக்கு வந்தது

49-

கூண்டுடன்
பறந்துபோனது கிளி
கனவில்
கூண்டை பத்திரமாக்க
கிளியைப் பறக்கவிட்டான்

Monday, February 15, 2010

கனவைத் தந்து சென்றவன்

நான் திரும்ப வந்து
கேட்கும் வரை
பத்திரமாக வைத்திரு
எனச் சொல்லி
அவன் ஒரு கனவைத்
தந்து சென்றான்

அதை வைத்திருப்பது
பெரும்பாடாக இருந்தது

நீண்ட நாட்களுக்குப் பிறகு
திரும்பியவன்
கனவைக் கேட்டான்

பின் சொன்னான்

இது என் கனவில்லை
நீ மாற்றி இருக்கிறாய்
நான் தந்ததுபோல
தா என்றான்

உன் கண்ணீரும் புலம்பலும்
இதில் சேர்ந்திருக்கிறது

உன் கனவுகளை
இடையிடையே புகுத்தி
சிதைத்திருக்கிறாய்

சொல்லிக்கொண்டே போனான்

நீ சொன்னது போல்
எதுவும் நடக்கவில்லை
என்றாலும் கேட்கவில்லை

இரவல் கனவை ஏன்
வாங்கினோம்
என்றிருந்தது எனக்கு

இப்போதும்
கனவில் வரும் அவன்
குற்றம் சொல்வதை
நிறுத்தவில்லை

என்னாலும் இந்த
கனவிலிருந்து
மீள முடியவில்லை

Sunday, February 07, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

44-

கிளையில்
அமர்ந்தது பறவை
கல்லெறிய
பறந்தது சத்தம்

45-

பல்லிக்கும் பூச்சிக்கும்
இடையில்
சுற்றுகிறது பசி

46

ஓடிக்கொண்டிருப்பவனோடு
ஓடிக்கொண்டிருக்கிறது
பாதையும்

Saturday, February 06, 2010

ஒற்றன்

ஒவ்வொரு வார்த்தையாய்
அழித்துக் கொண்டே
வந்த ஒற்றன்
மொத்தமாய் கொன்று
முடித்த பிறகு சொன்னான்
மரணம் பற்றிய
உன் கவிதை
கடைசியில் இறந்துவிட்டது

Wednesday, February 03, 2010

கடல்

கடல் காட்டி
கடலில்
விளையாட்டுக் காட்டிய
அப்பாவின் அஸ்தியை
கரைத்தாயிற்று

குத்துகிறது
ஒரு துளி
கண்ணில்

பால்யம் குழைத்து
மறக்காமல் வா
விளையாட
அப்பாவும் நானும்
இருக்கிறோம்

சொல்லி அனுப்புகிறது
கடல்

(ராகவன் சித்தப்பாவின்
நினைவுக்கு)

Tuesday, February 02, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

39-

உள்ளமர்ந்து
தவம்
என்
உள்ளமர்ந்து

40-

கண்ணாடியைத் திறந்து
வெளியேறுகிறது
என் பிம்பம்

41-

தன் வெளிச்சத்தில்
பார்க்கிறது மெழுகுவர்த்தி
உருகுவதை

42-

கை குவித்த மலை
கல்லாயிற்று
கை விரித்த கல்
மலையாயிற்று

43-

கிடைத்து விட்டது
தொலைந்ததல்ல
கிடைக்க வேண்டியது

என் பெயர்

பயணத்தை
சுவையாக்கியப் பெரியவர்
இறங்கும்போது சொன்னார்

தம்பி உங்க பேரக் கேக்கலன்னு
தப்பா நெனைச்சிக்காதிங்க
மறந்து போயிடும்
இல்ல மாத்தி சொல்லிடுவேன்
அதான்...

கையசைத்தபடியே
பார்த்து நின்ற
அவர் அன்பில்
ஒட்டி இருந்தது
என் பெயர்

Saturday, January 30, 2010

கவனமாகப் படியுங்கள்

கவனமாகப் படியுங்கள்
இந்த கவிதையின் வரிகளுக்கிடையில்
நீங்கள் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறீர்கள்

கவனமாகப் படியுங்கள்
இந்த கவிதையில் எங்கோ ஒரு மூலையில்
நீங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறீர்கள்

இந்த கவிதையின் புள்ளிகள் கல்லெறிந்து
நீங்கள் காயப்பட்டிருக்கிறீர்கள்

இந்த கவிதையின் வார்த்தைகளுக்கிடையில்
நீங்கள் நசுங்கிக் கொண்டிருக்கிறீர்கள்

கவனமாகப் படியுங்கள்
இந்தக் கவிதையின் முடிவில்
நீங்கள் நாடுகடத்தப்பட்டிருக்கிறீர்கள்

இந்தக் கவிதையின் அடியில்
நீங்கள் நீச்சலை மறந்துப் போயிருக்கிறீர்கள்

இந்த கவிதையின் மயக்கத்தில்
நீங்கள் மூச்சைத் தொலைத்திருக்கிறீர்கள்

கவனமாகப் படியுங்கள்
இந்த கவிதையின் வண்ணங்களில்
உங்கள் நிறத்தை மறந்துபோயிருக்கிறீர்கள்

இந்த கவிதையின் சூதாட்டத்தில்
உங்களை இழந்திருக்கிறீர்கள்

கவனமாகப் படியுங்கள்
இந்த கவிதையின் வியூகத்தில்
நீங்கள் இதை எழுதியவனை விடுவித்துவிட்டீர்கள்

Friday, January 29, 2010

விடுதலையின் பாடல்

கொல்லப்பட்டவர்களின்
மூச்சுக் காற்று பிரபஞ்சத்தில்
அதில் ஓயாமல் ஒலிக்கிறது
விடுதலையின் பாடல்

நதியின் ஒழுங்கில்

நீரடியில் கிடந்த வயலினை
எடுத்த பின்னும்
கையள்ள முடியாமல்
ஓடிக்கொண்டிருந்தது இசை
நதியின் ஒழுங்கில்

Sunday, January 24, 2010

இல்லாத பந்து

இல்லாத பந்தை வைத்துக்கொண்டு
விளையாடிக் கொண்டிருந்தார்கள் சிறுவர்கள்

படிக்கச் சொல்லி
எல்லோர் வீட்டிலிருந்தும் சத்தம் வர
ஓடிப்போனார்கள்

இல்லாத பந்து
இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தது
எப்போது வருவார்கள் என்று

Friday, January 22, 2010

தெரியாமல்

யாருக்கும் தெரியாமல்
அழுது கொண்டிருந்தவளை
யாருக்கும் தெரியாமல்
பார்த்துக் கொண்டிருந்தேன்

அழகு

முதியவரின் ஓட்டத்தில்
அழகாயிற்று
இளங்காலை

போதல்

எல்லா ரயிலும் போயிருந்தன
குழந்தை வரைந்த
தண்டவாளத்தில்

உயரமான கவிதை

மலையிடம் சொன்னேன்
உன்னைவிட
உயரமான கவிதை
எழுத வேண்டும்

கூழாங்கல் சிரிப்புடன்
சொன்னது மலை

தூசி வார்த்தைகளை
அப்புறப்படுத்து
மறைந்திருக்கும்
மலை தெரியும்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

34-

கிடைத்துவிட்டன கேள்விகள்
கிடைக்காமலா போகும்
பதில்கள்

35-

நீளமாக நீங்கள்
வரையும் கோடும்
சிறிதாக நான்
வரையும் கோடும்
கோடுகள்தான்
கோடுகளன்றி வேறில்லை

36-

நீ தூக்கி
எறிந்து
நீயே பிடி
உன்னை

பிறர் பிடித்தால்
பின் தூக்கி
எறியப்படுவாய்
திரும்ப உனக்குள்
வந்து சேராதபடி

37-


இரண்டாவது
உதிர்ந்த இலை
துணையாயிற்று
முதலில்
விழுந்த இலைக்கு

38-

உறக்கத்திலிருந்து
வெளியேறி விட்டேன்
ஆறுதல்படுத்த வேண்டும்
இமைகளை

Monday, January 18, 2010

காற்றின் அடியில்

உன்னோடு சேர்ந்து
உரக்க நானும்
அந்த கேள்வியைச்
சொல்லிப் பார்க்கிறேன்

நம் குரல்களின்
சமவிகிதம் பரவும்
காற்றின் அடியில்
மறைந்து கிடக்கும் பதில்
மேலேழும்பி வந்து
அடையலாம் நம்மை

நீதான்

நீதான்

இந்தக் கொலையைச்
செய்தது நீதான்

பொய் சொல்லாதே
மறைக்காதே
பதுங்காதே
ஓடி விடாதே

உன் கத்தி
ரத்தம் கக்கி
எல்லாவற்றையும்
சொல்லி விட்டது

கத்தியில்
ஒட்டிக் கிடக்கும்
வெட்டுப்பட்டவனின் நாக்கு
உரக்கச் சொல்கிறது
உன் பெயரை

நீதான்

இந்தக் கொலையைச்
செய்தது நீதான்

நீயேதான்

இதே வழியில்

இந்த வழியில்
நீங்கள் போகும்போது
பசியோடு இருந்து
பசியை சொல்லியவன்
இதே வழியில்
நீங்கள் திரும்பும்போது
இன்னும் பசியுடன்
அதை சொல்ல
மொழியற்று
கண்களால் கெஞ்சியபடி

பறிக்காத பூ

நீங்கள்
பறிக்காது போன பூ
உதிர்கிறது
உங்கள் பெயரைத்
தாங்கியபடி

ஆடு

தண்டவாளத்தில்
புற்களைத் தின்னும் ஆடு
ரயிலுக்கு
விளையாட்டுக் காட்டிவிட்டு
ஓடிப்போகிறது

Friday, January 15, 2010

அவர்கள்

அவர்கள்
வெளியேறுவதற்காக
உள்ளே வந்தவர்கள்
உள்ளே வந்து
உங்களை வெளியேற்றியவர்கள்

அவர்கள்
வெட்டுவதற்கு முன்னால்
உயிரைத் தடவிக் கொடுப்பவர்கள்

அவர்கள்
இனிப்புப் புன்னகையில்
ஈக்களாய் உங்களை
மொய்க்க வைப்பவர்கள்

அவர்கள்
நீங்கள் விழித்திருக்கும்போது
தூக்கத்தைத் திருடுபவர்கள்
தூங்கும்போது
கனவுகளைக் களவாடுபவர்கள்

அவர்கள்
உங்கள் பயண திசைகளை
மாற்றி வைப்பவர்கள்
உங்கள் கால்களால்
ஓடுபவர்கள்

அவர்கள்
உங்கள் பசியை
உண்பவர்கள்

அவர்கள்
உங்களை பொம்மைகள் என்று
நம்ப வைப்பவர்கள்
விளையாடிவிட்டு பின்
உடைத்துப் போடுபவர்கள்

அவர்கள்
உங்கள் ஏமாற்றத்தின் விந்தில்
உற்பத்தியாகிறவர்கள்

அவர்கள்
உங்களில் இருப்பவர்கள்
ஆனால் நீங்கள்
அவர்களில் இருப்பதில்லை

வரிகள்

கதையின் வரி
இப்படித் தொடங்குகிறது

இது உண்மையானவர்களைப்
பற்றிய உண்மைக் கதையல்ல
பொய்யானவர்களைப் பற்றிய
உண்மைக் கதை

கவிதையின் வரி
இதோடு முடிகிறது

திருடர்கள்

எல்லோரும்
திருடிக் கொண்டிருக்க
யார் கண்டுபிடிப்பது
திருடனை

தள்ளி வைத்தல்

ஆறுதல் வார்த்தைகளைத்
தள்ளி வைக்கிறேன்

பொய் சொல்லாத
முட்கள் மீது நடப்பது
பிடித்திருக்கிறது

ஸோலோ

உன் பெயர்

ஸோலோ

என்ன பெயர்

ஸோ…லோ…

ம்..சரி
நீ ரொட்டியைத் திருடினாயா

எனக்குத் தெரியாது

சரியாக சொல்
இவர் கடையிலிருந்து
நீ ரொட்டியைத் திருடினாயா

எனக்குத் தெரியாது
என் பசியைத்தான்
கேட்க வேண்டும்

Tuesday, January 12, 2010

அப்படியேதான் இருக்கிறது

அப்படியேதான் இருக்கிறது

நான் உங்களிடம்
சொல்லாத

நீங்கள் என்னிடம்
சொல்லாத

அந்த வரி
அப்படியேதான் இருக்கிறது

ஒரு உயிர்

துடித்து புரண்டு
ரத்தம் பெருக
உதவி கேட்டு
கெஞ்சி கைநீட்டி
போராடியவரை
யாரும்
காப்பாற்றவில்லை

அவர் மரணத்தைக்
காப்பாற்றினார்கள்

(வெற்றிவேலின் நினைவுக்கு)

அனுபவ சித்தனின் குறிப்புகள்

33-

நடந்தபோது
ஏதோ இடறி
கீழே விழுந்து
பின் எழுந்து பார்க்க
என் சடலம்

சடலம்
சத்தம் போட்டது

துர்க்கனவுகளை
இரவில்
நட்டுவைக்காதே
போய் நிம்மதியாய்த்
தூங்கு

Thursday, January 07, 2010

...........

இறந்து கிடக்கிறது
வெட்டிய மரம்
கூடவே குஞ்சுகளும்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

32-

திறந்த வெளியில்
மூடிக்கிடக்கும்
நான்

குழந்தைகள் உலகம்

1-

நிலவை விவரிக்கும்
குழந்தையின் வார்த்தைகளில்
நிலவுகள் ஒளிர்கின்றன

2-

மழை கூப்பிடுகிறது சிறுமியை
விளையாட
நனைந்து விடுவாய் என்று
தடுக்கிறாள் தாய்

இருத்தல்

ஜென் தோட்டம்
உள்ளிருந்தபோதும்
வெளியில் இருந்தேன்
வெளியில் வந்தபோதும்
உள்ளிருந்தேன்

கடினம்

கடினமாக இருக்கிறது

எல்லோரும் நிறைந்த இடத்தில்
மெளனமாக அழுவதும்

யாருமற்ற இடத்தில்
சத்தமாக சிரிப்பதும்

Sunday, January 03, 2010

தேடுவோம்

இனி ஒரு விதி செய்வோம்
கூச்சலை நிறுத்துவோம்

செய்த விதிகள்
எங்கே போயின
அதை தேடுவோம்

பிளாட்பாரக் கிழவி

உள்ளிருப்பவர்களைப் பற்றி
கவலைப்படுவதில்லை
வந்து போகும்
ஒவ்வொரு ரயிலுக்கும்
கையசைக்கிறாள்
பிளாட்பாரக் கிழவி

உனக்கான நதி

அழைப்பதில்லை
எந்த நதியும்

நீ பாய்ந்து
நீந்து

உனக்கான நதியை
எடுத்துக் கொண்டு
மேலேறு

பலி

என்னை
பலி கேட்கிறார் கடவுள்
வேகமாக ஓடுகிறேன்
கடவுளிடமிருந்தும்
கனவிடமிருந்தும்

Friday, January 01, 2010

ஏழாவது முறை

ஏழாவது முறையாக
நாள் குறித்தும்
இறந்து போகவில்லை பாட்டி
ஊர் திரும்புகிறார்கள் எல்லோரும்
கொண்டு வந்த கண்ணீருடன்

உங்களிடமிருந்து

பூவின் பெயர்
கண்டறிய
அகராதி புரட்டுவதை
நிறுத்துங்கள்
மணம் ஓடிக்கொண்டிருக்கிறது
உங்களிடமிருந்து

நீள்கிறது

அப்பாவுடன் போகும் போது
சிறிதாக தெரியும் சாலை
தனியே நடக்கும் போது
பெரிதாக நீள்கிறது