Wednesday, August 29, 2018

பொய்கள்

பழைய பொய்களைச்
சொல்கிறோம்

பழைய பொய்கள்
தயாரித்துத் தரும்
புதிய பொய்களைச்
சொல்கிறோம்

   

Saturday, August 04, 2018

வாய்மையை மென்று உண்


மக்களை ஊறுகாய் போல் தொட்டுக்கொள்
விருந்து உண்பது போல் அதைச் செய்

அவர்கள் கோபத்தில் நியாயமுண்டு
கோபத்திற்குக் கைது செய்
நியாயங்கள் நீர்த்துப் போகட்டும்

கட்டளைகளுக்கு ஆடு
புனிதர் வேடம் போடு
கருணை வசனம் பேசு

பெரிதாய்ப் பெறு
சொன்னபடி காய் நகர்த்து

முளையிலேயே கிள்ளி எறி
மலையாக வளர விடாதே

பதட்டம் வடிய வேண்டாம்
கொதிநிலை குறையாமல் பார்த்துக்கொள்
வேறு எதையும் சிந்திக்க விடாதே
குழப்பம் குறையக்கூடாது

போதை தள்ளாட்டம் இருக்கட்டும்
அப்போதுதான் நாம் விழாமல் இருப்போம்

பொய்களால் வண்ணம் பூசு
நம்பிக்கை வானவில் நீங்கள்
எனச்சொல்லி நம்ப வை

பேசுவதை நிறுத்தாதே
அவர்களைப் பேச விடாதே

யார் என்ன சொன்னால் என்ன
கேட்பது போல் நடி

வழிகள் கண்டுபிடி
வரவுகள் வரட்டும்
எம் மனசு வெள்ளை மனசு என்று
இரக்க மொழி பேசு

ஊடக வெளிச்சம் பாயும் போது
உள்ளிருள் காட்டாதே
சுற்றி வளைத்துப் பேசு
புன்னகையால் கடந்து விடு

ஒப்பந்தம் செய்
பணபந்தம் சேர்
குளோசப்பில் கண்ணீர் முகங்களும்
கதறலும் வரும் போது
சேனல் மாற்று

வாய்மையை மென்று உண்
வாய்மையே வெல்லும் என்று சொல்


பழைய நண்பர்

கடந்து போகிற
யாரோ ஒருவர்
பழைய நண்பரை
ஞாபகப்படுத்துகிறார்
காலங்களைக் குடைந்து
நினைவுகள் போகின்றன
புகைமூட்டமான முகம்
சித்திரமாக விரிகிறது
சபாஷ் எனச்சொல்லி
சத்தமாகச் சிரிப்பார்
போகும் ரயிலின்
மங்கும் ஒலி போல்
அது முடிவடையும்
கண்களைத் துடைத்தபடி
அங்கிருந்து திரும்பினேன்
கடந்து போனவர்
அருகில் வந்து நின்றார்
தேநீர் அருந்தினார்
மணிக் கேட்டுப் புன்னகைத்தார்
உற்றுப் பார்த்துச் சொன்னார்
என் சிநேகிதன் மாதிரியே
உங்களுக்கு முகஜாடை
அதான் வந்து பாத்தேன்
அவரப் போயிப் பாக்க முடியாது
இறந்துட்டாரு
நன்றி சொல்லிவிட்டுப் போனார்
சபாஷ் எனச்சொல்லி
சத்தம் போட்டு
சிரிக்க வேண்டும் போல் தோன்றியது

- கல்கி(5 ஆகஸ்ட் 2018) இதழில் வெளியான கவிதை-