Wednesday, November 10, 2021

மறதியின் மணம்

யாரோ மறந்துவிட்டுப்போன பூக்கள்

பேருந்தின் ஜன்னலோரத்தில் இருந்தன

எட்டிப்பார்த்த பூவிதழ்கள்

காற்றில் அசைந்தன

அது அநாதையாகிவிட்ட

குழந்தை ஏக்கம் மனதில் ஓடியது

அடுத்த நிறுத்தத்தில்

வந்து ஏறிய பெண்

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு

அதை மடியில் எடுத்து வைத்தாள்

அதிலிருந்து ஒரு பூவை எடுத்து

தலைக்கு வைத்துக்கொண்டாள்

புன்னகை மணக்க

எங்கேயாவது எப்போதாவது

மனதை வாடவிடாமல்

யாராவது பார்த்துக்கொள்கிறார்கள்