Saturday, August 29, 2015

கருத்து

நீங்கள் முதலில்
சொன்னக் கருத்தும்
இப்போது
சொன்னக் கருத்தும்
முரண்படுகிறதே
கவனித்தீர்களா

கவலைப்படாதே
அடுத்துச் சொல்லப்போவதில்
அதைச் சரி செய்து விடலாம்

Monday, August 10, 2015

விரிந்து கிடக்கிறது கேள்வி

பறவையை விட்டு
ஏன் பிரிந்தாய்
சிறகிடம் கேட்டேன்
நீந்திப் பழக என
பதில் வந்தது
-------
கால்களின் கீழே
விரிந்து கிடக்கிறது கேள்வி
கடந்து போனால்
கண்டடையலாம்
பதிலையும் என்னையும்
--------
இந்தப் பூச்செடி
தலை அசைத்து
ஏதோ சொல்கிறது
என்ன என்றுதான்
தெரியவில்லை
-----
உன்னைப்
பார்க்க விரும்பவில்லை
உணர விரும்புகிறேன்
----
பிறந்த பூனைக்குட்டி
கண் விழிப்பதைப் போல
என் சொற்கள்
உன்னைப் பார்க்கின்றன
------
ரயில் போய்விட்டது
தண்டவாளத்தில்
ரத்தம் மின்னுகிறது
தூரத்திலிருந்து
ஆடு மேய்க்கும் சிறுமி
சத்தமிட்டபடியே
வேகமாக
ஓடி வந்துகொண்டிருக்கிறாள்
-------
வனமே
உன்னைப் பாட
ஒரு புல்லாங்குழல்
கொடு
போதும்
------
வளைந்து செல்லும்
நீண்ட கோட்டை
வரைந்து
நதி என்கிறாள் குழந்தை
இல்லை என்பது போல் பார்க்க
அதிலிருந்து நீரள்ளி
முகத்தில் தெளிக்கிறாள்
------
கிரீடம்
நசுங்கிப் போய்
துருபிடித்து விட்டது
ஆனாலும்
ராஜ ரோஷம்
குறையவில்லை
-------
கம்பியை
கிளையாக்கியது
அமர்ந்து போன பறவை
------
நான் ஓய்வெடுக்க விரும்பும்
நாற்காலியை
உங்களை யார்
இப்போதே
செய்யச் சொன்னது

-குங்குமம் இதழில் (10.8.2015) வெளியானது-