Wednesday, April 29, 2009

பயணங்களின் இசை

வழிப்போக்கன்
புல்லாங்குழலில்
பயணங்களின் இசை

பறந்த காகிதம்

எழுதிய காகிதம்
காற்றில் பறந்து
பூந்தொட்டி அருகில்
விழுந்தது
கவனித்துப் பார்க்க
பூந்தொட்டியில்
சிதறிக் கிடந்தன
வார்த்தைகள்
கவிதையில்
உதிர்ந்து இருந்தன
பூக்கள்

Saturday, April 25, 2009

ஊஞ்சல் பிம்பங்கள்

ஊஞ்சலில் ஆடியது
பனித்துளி

பிறகு ஆடியது
வானவில்

அடுத்து ஊஞ்சலை
அழகாக்கியது
மழைத்துளி

கண் இமைத்துப் பார்க்க
ஊஞ்சலில்
சிறகசைத்து
ஒரு பறவை

ஆடிய
இசை அசைவில்
மாறிக் கொண்டே வந்த
ஊஞ்சல் குழந்தை
ஆடிக்கொண்டிருந்தது
அம்மாவின்
சந்தோஷத்திலும்

கனவுகளுக்கு அப்பால்...

கனவுகளுக்கு அப்பால்
என்ன இருக்கிறது

பிசுபிசுக்கும் இரவும்
பிரிக்க முடியாத இருளும்

Wednesday, April 22, 2009

கண்மூடிக் கேட்கிறேன்
காற்று விட்டுச்
சென்ற பாடலை

Tuesday, April 21, 2009

பயணமாகிறேன்
வழிகளைத் தவிர
ஏதுமில்லை
என்னிடம்

Monday, April 20, 2009

யாருக்கும் தெரியாமல்

ஒப்பனை இல்லாமல்
நடித்து முடித்ததற்காக
கைதட்டல் பெற்றவர்
தனியே போய்
வார்த்தைகளுக்குப் பூசப்பட்டிருந்த
சாயத்தைக் கழுவிக்கொண்டிருந்தார்
யாருக்கும் தெரியாமல்

பொய்கள்

பல விதமான பொய்கள்
இருக்கின்றன
எந்த விதமான பொய்கள்
வேண்டும் உங்களுக்கு

உண்மைபோல் தெரியும்
பொய்கள் நிறையவும்
மற்ற பொய்கள்
கொஞ்சமும்

Wednesday, April 15, 2009

பேசும் மரம்

முதலில் மரம் பேசியது
பிறகு இலைகள் பேசின
கிளை விழுது வேர் என
ஒவ்வொன்றும் பேசியதை
அவன் கேட்டான்
இலைகளுக்கிடையே
இமை அசைத்த
ஒளிகற்றையின் மெளனமும்
காற்றோடு சேர்ந்து
அவனைத் தடவியது
விரிந்து கிடந்த
மரத்தின் நிழலில்
சாய்த்து வைக்கப்பட்டிருந்த
கோடாலியிடம் விசாரித்தான்
மரம் பேசியது
உனக்குக் கேட்டதா
ஊமை நாவோடு
பார்த்தது கோடாலி
தன்னை சமாதானம்
செய்து கொண்டு
கோடாலியை ஓங்கினான்
வெயிலைக் கிழித்து
பாம்பாய் சீறி
மரத்தைக் கொத்தியது
ஒவ்வொன்றாய்
உதிர்ந்து கொண்டே
வந்தன வார்த்தைகள்
கடைசி வரை
வார்த்தைகளில்
கசிந்த ரத்தத்தை அவன்
பார்க்கவே இல்லை

Tuesday, April 14, 2009

நிலவும் நிலவும்

நிலவைப் பார்த்து
கைதட்டிச் சிரித்தது
அம்மாவின் மடியில்
இருந்த நிலவு

புல்லாங்குழல் வாசிப்பவன்

பசிக்காக
காசுகள் வேண்டி
புல்லாங்குழல் வாசிப்பவன்

இடையிடையே
தன் பசிக்கும்
கொஞ்சம்
இசைப் போட்டபடி

ஓடும் பேருந்தில்...

ஓடும் பேருந்தில்
பக்கத்து இருக்கையில்
அமர்ந்திருந்தவர்
எழுதிய கவிதையைப்
படிக்கச் சொன்னார்

நன்றியோடு வாங்கிப்
படிக்கும் போது
காற்று இழுக்க
விரல்களிலிருந்து விடுபட்டு
வெளியேப் போனது

பதற்றத்துடன் பார்க்க
அமைதிப் படுத்தினார்

என்னால் பறந்து போனதே
உங்கள் கவிதை என்றபோது
பறந்து போனது
காகிதம்தான் கவிதையல்லா
எனச் சொல்லி சிரித்தார்
ஒரு கவிதையைப் போல

Saturday, April 11, 2009

குழந்தையின் மொழி

நேரம் கடந்து வந்ததற்காக
தூங்கிய குழந்தையை
மடியில் வைத்து
பார்வையிலேயே
மன்னிப்பு கேட்கிறார் அப்பா
ஏம்பா லேட்டா வந்தீங்க
தூக்கத்திலேயே
கேட்கிறது குழந்தை

Friday, April 10, 2009

மீதி வார்த்தைகள்

இருளை அசைக்கிறது
முடியாத கவிதை
கனவில் மிதக்கின்றன
மீதி வார்த்தைகள்

இரவுக் காவலாளி

யாராவது வந்தால்
எழுப்பு
தன் தூக்கத்திடம்
சொல்லிவிட்டு
உறங்கப் பார்க்கிறார்
இரவுக் காவலாளி

பயணம்

இரவுப் பயணம்
காலையில் பேருந்திலிருந்து
இறங்கியபோது
புன்னகை மாறாமல்
ஓட்டுனர் கேட்டார்
நல்லாத் தூங்கனீங்களா சார்

இடம்

ஆளறவமற்ற இடத்தில்
நானிருந்தேன்
எனக்குள்
கத்திக் கொண்டிருந்தார்கள்
எல்லோரும்
மீனின் கண்கள் வழியே
பார்க்க வேண்டும்
கடலை

Monday, April 06, 2009

தன்னைப் பிடிக்கச் சொல்லி
ஓடிய பட்டாம் பூச்சி
பறக்க வைத்துப்
பார்த்தது என்னை

Friday, April 03, 2009

குற்றவாளிகள்

குற்றவாளிகள் எல்லோரும்
தப்பி ஓடினார்கள்
வேகமாக விரட்டி வந்தும்
நம்மால் பிடிக்க
இயலவில்லை
கூடி நின்றவர்கள்
நம் முயற்சிகளுக்காக
பாராட்டி கைதட்டினார்கள்
குற்றவாளிகள்
ஓடிய திசையில்
புகை மூட்டம்
இறங்கிக் கொண்டிருந்தது
அடுத்த முறை
விட்டு விடாதீர்கள் என்று
வாழ்த்துக்களை வழங்கியபடி
பிரிந்து போனார்கள்
எனக்குள் ஒன்றும்
உனக்குள் ஒன்றுமாக
இரண்டு குற்றவாளிகள்
பதுங்கிப் போனதை
உணராத அவர்கள்
அலாதியான இரவு
மாதாகோயில் மணிசத்தம்
நனைகிறது மழையில்

குழந்தையின் கடல்

நள்ளிரவில் எழுந்து
கடல் பார்க்க வேண்டும் என்று
அடம் பிடித்த
குழந்தையை
சமாதானப்படுத்தி
நாளை போகலாம்
எனச் சொல்லி
தூங்க வைக்க
பெரும்பாடாயிற்று
பின் விடியும் வரை
அலைகள் எழுப்பி
தூங்க விடாமல்
செய்தது
குழந்தையின் கடல்