Sunday, March 30, 2014

நீங்கள் அங்கேயேதான் இருக்கிறீர்கள்

நீங்கள் அங்கேயேதான் இருக்கிறீர்கள்
உங்கள் கண்களிலிருந்து 
சைத்தான் வெளியே வந்து 
எட்டிப் பார்த்து 
வெறுப்பைத் துப்பி 
கதவடைத்துப் போகிறது 
நீங்கள் அங்கேயேதான் இருக்கிறீர்கள் 
இப்போது இன்னும் கொஞ்சம் 
சுகமாய் சாய்ந்து 
காது குடைந்தபடி

Wednesday, March 26, 2014

இடையில் இருக்கும் கதை

நான் சொன்ன கதைக்கும் 
நீங்கள் கேட்ட கதைக்கும் 
இடையில் இருக்கும் கதை 
நம் இருவருக்கும் 
தெரியாத கதை 

Tuesday, March 25, 2014

நதியில்

நதியில் 
மிதந்து போகும் நதியை 
எவ்வளவு பேர் 
பார்த்திருக்கக்கூடும் 

இறந்து கிடந்தேன்

எல்லா கனவுகளையும் 
வரிசையாய் 
நிற்க வைத்து 
ஒவ்வொன்றாய் 
சுட்டுக் கொன்றேன் 
கடைசியில் நானும் 
இறந்து கிடந்தேன் 

விளிம்பு நோக்கி

இந்த முறையும் விழவில்லை விளிம்பிலிருந்து திரும்புகிறேன் என்றாலும் மீண்டும் விளிம்பு நோக்கிப் போகிறேன்

Friday, March 21, 2014

வரும் வழியில்

வரும் வழியில்
யானையையும் பாகனையும் 
பார்த்தேன்
பாகனை என் பக்கத்தில் வந்து 
நிற்கச் சொன்னேன்
யானையைச் சுற்றி 
ஒரு காடு வரைந்தேன்
யானை தும்பிக்கை நீட்டி 
என்னைத் தொட்டு விட்டு 
காட்டில் ஓடி மறைந்தது
பாகனை ஒரு கடையில் 
வேலைக்கு சேர்த்து விட்டேன்
அங்கு அவன்சந்தோஷமாய் 
யானை பொம்மைகள் 
விற்றுக் கொண்டிருக்கிறான்

Tuesday, March 18, 2014

இரண்டும் சரி

அலைகள் குழந்தையுடன் 
விளையாடுகின்றன 
என்கிறார் அப்பா 

குழந்தை அலைகளுடன் 
விளையாடுகிறது 
என்கிறாள் அம்மா 

இரண்டும் சரி 
என்கிறது கடல்

குருதியை மட்டும்

எல்லா வண்ணங்களையும் 
உடனே எடுத்துக்கொண்டு 
தூரிகை வரைகிறது 
குருதியை மட்டும் 
கொஞ்சம் உணவாக 
உட்கொள்கிறது

ஓடுகிறீர்கள்

அழகாக வருடிக் கொடுக்கிறீர்கள் 
அந்த சுகத்தில் லயித்தபடியே 
குற்றவாளி தப்பித்து விடுகிறான் 
பிறகு பதறி அடித்துக்கொண்டு 
காவல் நிலையம் ஓடுகிறீர்கள் 
புகார் கொடுக்க

Sunday, March 16, 2014

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1089-
இப்படித்தான் 
புதைந்து போயின 
எத்தனையோ சொற்கள் 
முளைக்குமென்று 
காத்திருக்கிறேன் 
நீரூற்றி

1090-
என்னைத் தேடி 
வந்தேன் 
வருகிறேன் 
வந்துகொண்டிருப்பேன் 

1091-
கண்ணீரில் 
வழிவது 
தப்பித்த கனவா

1092-
ஆசை மறந்தால் 
நிம்மதியாக வாழலாம் 
என்றார் குரு 

நிம்மதிதான் 
என் ஆசை 
என்றான் அவன் 

1093-
குழந்தை எறிந்த பந்து 
முடிவிலி நோக்கிப் போகிறது 
எடுக்க ஓடுகிறாள் 
வளர்ந்து கொண்டே

1094-
தந்திரம் பழக
அன்பு 
வெளியேறும்



Saturday, March 15, 2014

இரண்டு குழி

இந்த கோபத்தை 
வைத்துக்கொண்டு 
ஒன்றும் செய்ய முடியாது 
ஆழக்குழி பறித்து 
அதில் போட்டு மூடு என்று 
நண்பனிடம் சொன்னேன் 

வா இரண்டு குழி 
வெட்டலாம் என்று 
என்னையும் கூப்பிட்டான் 

Friday, March 14, 2014

இருக்கிறது

இந்த குகைக்குள் பயணிப்பது 
எளிமையாக இருக்கிறது

இந்த இருளுக்குள் பயணிப்பது
கடினமாக இருக்கிறது

இந்த குகைக்குள் பயணிப்பது 
கடினமாக இருக்கிறது

இந்த இருளுக்குள் பயணிப்பது
எளிமையாக இருக்கிறது

எதுவும் செய்யாமல்

மதம் பிடித்த 
யானையானது 
என் நிழல் 
ஒன்றும் செய்யாமல் 
பார்த்துக் கொண்டிருந்தேன் 
அதுவும் எதுவும் செய்யாமல் 
நிழலாகி விட்டது

Tuesday, March 11, 2014

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1083-
சமாதியின் மீது
விழுந்த பூக்கள் 
நகர்ந்து நகர்ந்து
இடம் மாறுகின்றன

1084-
என்னை வெல்ல 
நான் 
தோற்க வேண்டும்

1085-
விரட்டிய கையில்   
இருந்தது 
பறவைக்கான சோறு

1086-
என் கதையில் 
பெரிதாக 
எதுவும் இல்லை 
சிறிதாக 
நானிருக்கிறேன்

1087-
பசித்திருப்பவர்கள் 
வயிற்றிலிருந்தே 
ஆயுதம் எடுப்பார்கள்

1088-
உறைந்து போயிருக்கிறேன்
மீண்டு வர
உத்தேசமில்லை










Sunday, March 09, 2014

இரண்டு மெழுகுவத்திகள்

இரண்டு மெழுகுவத்திகள்
தம் சுடரில் அசையும் 
அழகு பற்றி பேசின
தம் நிழல்கள் தாளலயத்துடன் 
நடனமிடுவதை ரசித்தன
உரையாடல் 
வெளிச்சம் சார்ந்தே நீண்டது
இரண்டும் 
கடைசி வரை 
தாம் உருகுவது பற்றி 
பேசிக் கொள்ளவே இல்லை

Saturday, March 08, 2014

வேறு பொருட்கள்

வேறு பொருட்கள் இல்லை 
இந்த அறையில் 
நான்தான் இருக்கிறேன் 
ஒரே ஒரு 
பொருளைப் போல

Friday, March 07, 2014

ஒற்றைத் தீக்குச்சி

1-

உரசினால் 
இழந்து விடுவேன் 
அப்படியே இருக்கட்டும் 
ஒற்றைத் தீக்குச்சி

2-

அடுக்கி வைத்த 
கேள்விகளைத் 
தள்ளி விட்டேன் 
கலைந்து கிடந்தன 
பதில்கள்

Wednesday, March 05, 2014

முடிப்பதற்குள்

சொல்லி முடிப்பதற்குள் 
மறைந்து போனது 
பனித்துளி 
மீதிச் சொற்களை 
புல்லின் அடியில் 
கொட்டிவிட்டு வந்தேன் 

Sunday, March 02, 2014

கண்ணாடிப் பெட்டி

கண்ணாடிப் பெட்டிக்குள் 
படுத்திருக்கும் அப்பாவை 
சத்தம் போட்டு 
எழுப்புகிறது குழந்தை 
அப்பாவுக்கு கேட்கிறது 
ஆனாலும் 
அப்படியே இருக்கிறார்

Saturday, March 01, 2014

அழைத்துப் போனது

அலை வந்து 
இழுத்துப் போனது
என்று சொல்கிறார்கள் 
எல்லோரும் 
அவள் இருந்திருந்தால் 
சொல்லி இருப்பாள் 
அலை வந்து 
அழைத்துப் போனது என்று

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1076-
வெகு ஆழத்தில்
தியானம் செய்யும்
கனவின் ஆழத்தில்
இருக்கிறேன் நான்

1077-
பயம் 
துரத்திக்கொண்டே இருக்கிறது 

நல்லது 
ஓடிக்கொண்டே இரு

1078-
என் பிரார்த்தனை தட்டில் 
பாவங்கள்
ஆனாலும் 
கடவுள் முன் நிற்கிறேன்

1079-
நாளை நான் 
கிடைக்கக் கூடும் 
அதற்கு இன்று 
தொலைய வேண்டும்

1080-
இந்த வாக்கியம் 
உண்மையாக எளிமையாக 
இருந்தது
அழகாக்கியபோதுதான் 
பொய்யும் பூதமும் 
சேர்ந்து விட்டது

1081-
தட்டி எழுப்புகிறது 
கேள்வி
நானே பதிலாகிறேன்

1082-
நிராயுதபாணி 
நெஞ்சில் ஒலிக்கிறது 
நானே ஆயுதம்