Saturday, August 23, 2008

பென்சில் நதி

நதி பற்றிய கவிதையை
நான் எழுதியபோது
அருகில் வந்த மகள்
வரைந்த நதியைக் காட்டினாள்
தாளில் ஓடியது
பென்சில் நதி
என் கவிதையை
அதில் கரைத்துவிட்டு
மறுபடி பார்க்க
இன்னும் முடியவில்லை
எனச் சொல்லியபடியே
ஓடிய அவள்
கண்களில் மீதி நதி

(26.10.08 கல்கி
இதழில் பிரசுரமானது)
----------------------

யாரும் படித்து
முடிக்கவில்லை
மழைபுத்தகம்
-----------------

Thursday, August 21, 2008

பெருவழி

அருகில் போய்
மிக ரகசியமாய்
பனித்துளியிடம்
சின்ன கவிதையை
சொன்னேன்
கேட்டு
புன்னகைத்தது
கவிதையில்
பனித்துளி பூத்தது
----------------
கையிருக்கும்
முகவரியிலிருந்து
நீள்கிறது பெருவழி
கால்கள் கடக்க
வழி நெடுகிலும்
சிறுசிறு முகவரிகள்
-----------------

Tuesday, August 12, 2008

வழிக்குறிப்புகள்

வந்து பார்க்காத
கடிதம் போடாத
மகனுக்கு
தந்தை எழுதினார்
ஊர் பக்கத்தில்
இருக்கிறது
நீதான் தொலைவாக
இருக்கிறாய்

(26.10.08 கல்கி
இதழில் பிரசுரமானது)

------------------

பார்த்த வானவில்
அடுப்புக் கறியில்
வரையும் சிறுமி

(26.10.08 கல்கி
இதழில் பிரசுரமானது)

------------------
தவறவிட்ட ரயில்
வழி அனுப்புகிறேன்
கையசைத்து
------------------
வெயிலில் நனைந்து செல்கிறேன்
என்று கதை மனோபாவத்துடன்
யோசித்தபடி
வெயிலில் காய்ந்து சொல்வது
கடினமாக இருக்கிறது
-------------------

Saturday, August 09, 2008

இரு வார்த்தைகள்

சற்று வயது கூடிய
வேலைக்காரன்
தன் நுட்பம் கலையா
விரல் பாவங்களுடன்
மிக மெதுவாய்
மரம் அறுத்து
சரி பார்த்து
தக்கபடி பொறுத்தி
வடிவம் அளந்து
ஆணிகள் அடித்து
வருடிக் கொடுத்து
தன்னையே
ஒரு முறை பெயர்த்து
கிடத்தி
பின் எடுத்து
கண்ணோரம் வந்த
ஒரு சொட்டை
போட்டுபோல் வைத்து
துக்க வண்ணம் பூசி
மரத்துகள்களை
அப்புறப்படுத்தி
மஞ்சள் வெயில் பட
உருவாக்கிய சவப்பெட்டியை
பார்த்தபடி
இருக்கும்போது
அவன் உதடு
சத்தமின்றி சொல்கிற
இரு வார்த்தைகள்
உயிர் வந்திடுச்சி

Monday, August 04, 2008

மழையின் கணங்கள்

மழையைப் பற்றி
எவ்வளவோ பேசினாய்
மழை விட்டப் பிறகும்
ஒரு மழையைப்போல

இப்போதெல்லாம்
பெய்யும்
ஒவ்வொரு மழையும்
பேசுகிறது
உன்னைப் பற்றி