Monday, June 26, 2023

பந்து

அநாதையான பந்து

பேருந்துக்குள்

உருண்டோடுகிறது


பெரியவர் காலடியைத் தொடுகிறது

 

அந்த மஞ்சள் நிறப் பந்தை எடுத்து

வேட்டியால் துடைத்து

பின்னால் அமர்ந்திருக்கும் குழந்தையிடம் தருகிறார்

 

வாங்கிக்கொண்டு

அழுகையை நிறுத்துகிறது

 

பிறகு வேகமாக எறிகிறது

 

ஜன்னல்தாண்டி பந்து

வெளியே போய்விடுகிறது

 

பேருந்து ஒரு வளைவில் திரும்பி மறைகிறது

 

சாலை விளிம்பில்

ஆடு மேய்க்கும் சிறுமியிடம்

கிடைக்கிறது பந்து

 

பந்தை முத்தமிட்டுத்

தூக்கிப்போட்டு

விளையாடுகிறாள்

அவள் சிரிப்பில்

புற்கள் அசைகின்றன

ஆடுகள் திரும்புகின்றன

 

வானிலிருந்து

சொர்க்கம் வருவதுபோல்

அவள் கைக்குத் திரும்புகிறது பந்து

 

இந்தக் காட்சி

சூரிய ஒளியில்

திரைச்சீலையில்

அசைந்தாடும்

சித்திரம்போல் தெரிகிறது

Thursday, March 23, 2023

மெளத் ஆர்கன் வாசிக்கும் பெரியவர்

 கைகள் நடுங்க

மெளத் ஆர்கன் வாசித்துக்கொண்டிருந்த

முதியவரின் அருகில் போய்

அமர்ந்தேன்

 

இலைகள்

மிதந்து மிதந்து

அவர் இசை

கேட்டபடி

அருகில் வந்து விழுந்தன

 

மெளத் ஆர்கன்

ஒரு சிறு வாக்கியம் போல்

முன்பின் போய் வந்தது

 

தியானம் போல்

அவர் முடித்து

மெல்ல கண் மூடியபோது

சொன்னேன்

 

உங்கள் இசை

இளமையாக இருக்கிறது

 

கண் திறந்து

புன்னகைத்துச்

சொன்னார்

 

முதுமை இளமை

இசைக்குக் கிடையாது

பிரித்துப்பார்ப்பதெல்லாம்

நாம்தான்

 


 

Sunday, March 19, 2023

இயற்கையே...

இயற்கையே

என்னை

உதிரவை

 

அன்பின் மீது

நட்பின் மீது

அழகின் மீது

செயலின் மீது

சிந்தனை மீது

என ஒவ்வொன்றின் மீதும்

ஒவ்வொரு நாளும்

இயற்கையே

என்னை

உதிரவை

 

இலக்கின் மீது

இயக்கம் மீது

பயணம் மீது

பாதை மீது

தேடல் மீது

என ஒவ்வொன்றின் மீதும்

ஒவ்வொரு நாளும்

இயற்கையே

என்னை

உதிரவை


எழுத்தின் மீது

படைப்பின் மீது

இசையின் மீது

இசைவின் மீது

மீட்சி மீது

என ஒவ்வொன்றின் மீதும்

ஒவ்வொரு நாளும்

இயற்கையே

என்னை

உதிரவை

 

புன்னகை மீது

கண்ணீர் மீது

மானுடம் மீது

மனிதம் மீது

என ஒவ்வொன்றின் மீதும்

ஒவ்வொரு நாளும்

இயற்கையே

என்னை

உதிரவை

    


 

 

Friday, February 24, 2023

சுவரில்…

சுவரில்

ஒரு ஆணி அடித்து

அதில் என்னைத்

தொங்கவிட்டேன்

 

ஒருவர்

மேலும் கீழுமாகப்

பார்த்துச் சென்றார்

 

ஒருவர்

ஆணி மனிதர் என்றார்

 

ஒருவர்

தொங்கும் விசித்திரம் என்றார்

 

ஒருவர்

பாவம் தொங்குகிறது என்றார்

 

ஒருவர்

இது இவன் தண்டனைக் காலம் என்றார்

 

ஒருவர்

இவன் நேராகத் தொங்கும் வவ்வால் என்றார்

 

 

ஒருவர்

ஆணியைப் பிடுங்க

முயற்சித்துத் தோற்றுப்போனார்

 

ஒருவர்

இது ஒருவிதமான பைத்தியக்காரத்தனம் என்றார்

 

ஒருவர்

ஐஸ்கிரீம் சாப்பிட்டு

மீதியை மேலே

தடவிவிட்டுச் சிரித்தார்

 

இப்படி

ஓவ்வொருவராகப்

பார்த்தும் கடந்தும் கலைந்தனர்

 

ஒருவர் கூட

வலிக்கிறதா என்று

கேட்கவில்லை

Wednesday, February 08, 2023

உன் பேரென்ன?

 உன் பேரென்ன?

மறந்துடுச்சு.

எவ்வளவு நேரமா உட்கார்ந்திருக்க?

அதுவும் மறந்துடுச்சு.

உனக்கு என்ன வேணும்?

தெரியல. மறந்துடுச்சு.

உண்மையச் சொல்லு?

சொல்றது உண்மை. மறந்துடுச்சு.

விளையாட்றயா?

இல்ல. எல்லா விளையாட்டும் மறந்துடுச்சு.

நீ யாரு?

மறந்துடுச்சு.

உன் ஞாபகத்துல எதுவும் இல்ல?

இல்ல. எல்லாம் மறந்துடுச்சு.

பட்டாம்பூச்சிய ஏன் பச்சக்குத்தி இருக்க?

ஏன். தெரியல. மறந்துடுச்சு.

அம்மா…

இப்ப நான் உன்ன அடிச்சேன். அம்மான்னு கத்தன. அது மட்டும் எப்படி

மறந்து போவாம இருந்துது?

அது உங்க அடியால வந்த அம்மா இல்ல. 

விபத்துல அம்மா இறந்தப்ப உயிர கிழிச்சிட்டு ஓடிவந்த அம்மா. 

பட்டாம்பூச்சி போல அம்மா பறந்து போயிட்டாங்க.


 

 

Monday, January 30, 2023

முறிந்த காதல்

முறிந்த காதலை
எழுதிப் பார்க்கிறான்
கூடிவரவில்லை
சொற்கள்
உடைந்து போகிறான்
குடிக்க வேண்டாம்
முடிவோடு
நடை மறந்து
நடந்து போகிறான்
சாலையோர பூவிலிருந்து
தேனெடுத்த பட்டாம்பூச்சி
அவனை ஒரு வட்டமடித்துவிட்டுப் போகிறது
புன்னகை சுரக்க
சொற்கள் ஓடி வர
மனதில் எழுதுகிறான்
முறிந்த காதலில்
கசியும் அன்பைப்
பருகுவது
மகாபோதை

Tuesday, December 13, 2022

சாவிகள்

சையத் அலி

அவர் பெயர்

 

அவர் இன்ஷா அல்லா

சொல்லும்போது

இசைகேட்பது போலிருக்கும்

 

டூப்ளிகேட் சாவி

செய்வதில் நிபுணர்

 

அவர் விரல்களில்

சாவி சிற்பமாகும்

 

குழந்தைபோல்

சொன்னதைக் கேட்கும்

 

வலியின்றிப் பூட்டுகள்

வாய் திறக்கும்

 

அடிக்கடி சுருட்டுப் பிடிப்பார்

சுருட்டின் புகை வளையங்கள்

காற்றில் சித்திரங்களாகிப் பறக்கும்

அப்போது ஏதாவது சொல்லுவார்

 

அவர் எளிய வார்த்தைகள்

சாவிபோல் எண்ணங்களைத் திறக்கும்

 

நான் எதுவும்

அவரிடம் சாவி போட்டதில்லை

ஆனாலும் பழக்கம்

அடிக்கடி பேசுவதுண்டு

 

ஒரு தேநீர் சந்திப்பில்

அவரிடம் கேட்டேன்

 

மனதின் மர்மத்தைத் திறக்க

ஏதேனும் சாவி இருக்கிறதா

 

சுருட்டின் புகை

அதிர்ந்து பறக்கச் சிரித்தார்

பிறகு சொன்னார்

 

மனது திறந்தேதான் இருக்கிறது

மர்மம்தான்

நம் கண்களுக்குப் புலப்படாமல்

மாறிக்கொண்டே இருக்கிறது