Tuesday, January 27, 2015

சாலை ஓவியக்காரன்

நேரங்களும் 
வண்ணமாய் கரைய 
சாலை ஓவியக்காரன் 
வரைந்து முடித்தான் 
அவன் முடித்த கணம் 
மழை பெய்தது 
எல்லோரும் ஓடிப்போய் 
ஒதுங்கி நின்றார்கள் 
ஓவியத்தை 
எடுத்துச் செல்ல முடியாமல் 
நனைந்தபடியே 
அவன் பார்த்துக் கொண்டிருந்தான்

Thursday, January 15, 2015

சந்திக்கும் புள்ளியில்

அறியாமையும் அறிவும் 
சந்திக்கும் புள்ளியில் 
நீங்கள் என்னையும் சந்திக்கலாம் 
உங்களையும் சந்திக்கலாம்

ஒற்றைச் செருப்பு

ஒற்றைச் செருப்பை
கையில் மாட்டியபடி
சிரித்துப் போகும் அவனை
பைத்தியக்காரன் என்றார்கள்
நான் இன்னொரு செருப்பைத்
தேடிப்போகும்
மனிதன் என்றேன்

Tuesday, January 13, 2015

மலைப் பிரசங்கம்

1-
உன் மலைப் பிரசங்கம் கேட்க 
ஓடி வரும் நான் 
மந்தையிலிருந்து 
பிரிந்த ஆடு

2-
மேஜையின் மேல் 
நீ வைத்துவிட்டுப் போன 
கண்ணீர்த்துளி 
இன்னும் காயாமல் 
என் பதிலுக்காக 
காத்திருக்கிறது

3-
என் கையிலிருந்த 
சுடரை 
அணைத்து விட்டீர்கள் 
என்னை அணைக்கப் 
போராடுகிறீர்கள்

4-
ஆண்டாண்டு காலமாய் 
முரசை அறைகிறீர்கள் 
ஆனாலும் உங்களுக்கு 
சத்தம் எழுப்பத் தெரியவில்லை

5-
நீங்கள் திருத்திய கதை 
நான் யோசித்த 
கதை அல்ல

6-
வரிசையில் 
காத்திருக்கிறேன் 
வரிசையும் 
காத்திருக்கிறது 

Tuesday, January 06, 2015

மூன்று கவிதைகள்

1-
முடிந்த மழை 
தூறலில் 
முகம் காட்டும்

2-
நகர்ந்து நகர்ந்து 
ஓவியமாகப் பார்க்கிறது புகை 
ஓவியமாகப் பார்க்கிறேன் நான்

3-
இருளில் 
என்னைக் கண்டெடுத்தேன் 
வெளிச்சத்தில் 
தொலைத்து விட்டேன்

Monday, January 05, 2015

அழைத்துப் போகிறேன்

சொற்கள் உன்னை 
அழைத்துப் போகிறதா 
வாக்கியங்கள் உன்னை 
அழைத்துப் போகிறதா 
எதுவுமில்லை 
நான்தான் என்னை 
அழைத்துப் போகிறேன்

Sunday, January 04, 2015

உறங்கும் வட்டம்

உடல் குவித்து
மையத்தில்
உறங்கிக் கொண்டிருந்தது வட்டம்
மறுபடி வந்து
பார்த்துக் கொள்ளலாம் என்று
எழுப்பாமல் வந்து விட்டேன்

Thursday, January 01, 2015

நிசப்த தவம்

சொற்களை கற்பூரமாக்கி 
நாவின் மேல் வைத்து 
ஏற்றுகிறேன் 
அசைந்து முடிகிறது 
சுடர் 
இனி நான் 
போகலாம் 

சரியாக கேட்கவில்லை

நன்றாக காற்று வரும்படி
மின்விசிறி உள்ள அறை
வேண்டும் என்று
அவன் சொன்னதை
அவர்கள் அப்போது
சரியாக கேட்கவில்லை
காலையில்தான்
புரிந்து கொண்டார்கள்