Thursday, January 29, 2009

உங்கள் பெயர்

அருகில் வர
அச்சப்படுகிறது
பறவையின் தானியங்களில்
உங்கள் பெயரை
எழுதி வைத்திருக்கிறீர்கள்

குழந்தையின் வரிகள்

முதல் வரியிலிருந்து
ஒரு பட்டாம் பூச்சி பறந்தது

இரண்டாம் வரியில்
ஒளிர்ந்தது வானவில்

மூன்றாம் நான்காம் வரிகளில்
ஒரு மூங்கில் சாதுர்யத்துடன்
புல்லாங்குழல் இசைத்தது

ஐந்தாம் வரியின் மேல்
தூறல் நடனமிட்டது
இசையின் லயத்திற்கேற்ப

ஆறு ஏழு மற்றும் எட்டாம் வரிகளில்
மான்களின் ஓட்டமும்
மயில்களின் ஆட்டமும்
வனத்தின் பேச்சும்
காண கேட்கக் கிடைத்தன

ஒன்பதாம் வரியை
துடைத்து விட்டுப் போனது
ஒரு மேகம்

பத்தாம் வரியில்
ஒரு பெரியவர் சிதையூட்டப்பட்டு
எரிந்து கொண்டிருந்தார்

வரி பதினொன்றில்
பிறந்த குழந்தை
தான் எழுதிய இந்த கவிதையை
முதல் வரியிலிருந்து
வாசித்துப் பார்க்க
குழந்தைக்குப் பெயர் வைத்த
பட்டாம் பூச்சி
சுற்றிக் கொண்டிருந்தது
பெயரை சொல்லியபடி

Tuesday, January 27, 2009

அனுபவ சித்தன்

அனுபவ சித்தன் நான்
கவிதையில் கனிந்து
உருகும் உலகு

உண்மை திசை

பொய் கலப்புகள் நிறைந்த
இந்த கவிதையை
படித்து முடித்தவுடன்
எரித்து விடுங்கள்
மிஞ்சிய சாம்பலை
கடலில் கரைத்து விடுங்கள்
பின் திரும்பிப் பார்க்காமல்
செல்லுங்கள்
எழுதப்படாத கவிதையின்
உண்மை திசை நோக்கி

மின்மினி பூச்சி

என்னைப் பிடிக்க முடியாமல்
தவ்வி தவ்வி
காற்றில் அலைகிறது
இந்த மின்மினி பூச்சி

Monday, January 26, 2009

பதினேழு முறை...

இதுவரை
பதினேழு முறை நான்
இறந்து விட்டேன்

உன் வலி இறக்கிய வார்த்தைகளில்
இரண்டு முறை

நண்பனின் ஏளன மெளனத்தில்
ஓரிரு முறை

தன் துரோகத்திற்கு
என் பெயர் சூட்டி மகிழ்ந்த
உறவினரின் செயலுக்கு
ஒரு முறை

தம் செளகர்யங்களுக்குத் தக்கபடி
என்னை பிடுங்கி
பின் நட்டு வைக்கும்
கரங்களில் பலமுறை

இப்படி இதுவரை
பதினேழு முறை நான்
இறந்து விட்டேன்
(சில விடுபட்டிருக்கலாம்)

வேண்டுமானால்
நீங்களும் என்னை
சாகடித்துக் கொள்ளலாம்

என் நிஜ மரணத்தில்
சேர்த்து வைப்பேன்
எல்லா இந்த
மிச்ச மரணங்களையும்

Sunday, January 25, 2009

விரல் நுனியில்

உடல் திமிர
கை நீட்டி உங்களை
குற்றம் சொல்லும்
என் விரல் நுனியில்
தொங்கிக் கொண்டிருக்கிறேன் நான்
உங்களுக்குத் தெரியாத
ஒரு குற்றமாக
அல்லது
குற்றவாளியாக

கல் மழை

நீ முகத்தில் எறிந்த
முதல் கல்லும்
பிறகு எறிந்த கற்களும்
விதவிதமான காயங்களை
உருவாக்கி இருந்தன

உன் கையில்
கல் மழை

கடைசியாக
நீ எறிந்த கல்
என் உதட்டைப் பார்த்து

குருதி சிந்திய கணத்தில்
திரும்பிப் போனாய்

உனக்குத் தெரியாது
நீ வீசிய
இறுதிக் கல்
என் புன்னகையின் மேல் என்று

ஏதாவது ஒரு நான்

பெரும் பாடுபட்டு
என்னை
ஒன்று திரட்டும் போதெல்லாம்
வெளியேறி விடுகிறது
ஏதாவது ஒரு நான்

பூமியின் கருணை

கண் நெகிழ
வணங்கி
மண்டியிட்டு
முத்தமிட்ட மண்
உதடெங்கும் ஓடி
உள் எங்கும்
பெய்தது
பூமியின் கருணையை

பார்வை குறிப்புகள்

உன் பார்வை குறிப்பில்
நானொரு
உயிரற்ற தாவரம்
ஆனாலும்
உனக்குத் தெரியாமல்
காலடியில்
பனி சூழப் பூத்திருக்கும்
புல்

இரு நூறு ஆண்டுகள்

இரு நூறு ஆண்டுகளுக்கு
முன்பிருந்து
நான் செதுக்கிய பாறைக்கு
இன்று உயிர் வந்து விட்டது
என் உளியைத் தின்று
என்னைத் தள்ளிவிட்டு
ஓடிக்கொண்டிருக்கிறது
இரு நூறு ஆண்டுகள்
முன் நோக்கி

நட்பின் ரகசியங்கள்

நட்பின் ரகசியங்களை
மிக நுட்பமாய்
சொல்லியபடி
மலை உச்சி வரை
என்னை அழைத்து வந்த நீ
தள்ளி விட்டாய்
பின் தற்கொலை
கொடூரமானது
எனச் சொல்லியபடியே
இறங்கிப்போனாய்
எந்த வித
பதற்றங்களும் அற்று