Tuesday, July 15, 2008

கல் நதி

வார்த்தைகளை
மாற்றிப்பாடுகிறது குழந்தை
குழந்தையின் பாடலில்
தன்னைப் புதிது
செய்து கொள்கிறது கவிதை
----------

பிரசாதம் வாங்கிய
சிறுவனிடம்
கும்பிட்ட சாமியின்
பெயர் தெரியுமா கேட்டேன்
எனக்கு பசிக்குது சாமி
சொல்லியபடியே ஓடினான்

(26.10.08 கல்கி
இதழில் பிரசுரமானது)

-----------

உள் உளி
பாய
நகர்கிறது
கல் நதி
------------
தான் வரைந்த கடலில்
நேற்றுப் பார்த்த கடல்
இருக்கிறதா
கேட்டாள் சிறுமி
அவள் நீலக் கோடுகளிலிருந்து
எம்பிக் குதித்த வண்ணமீன்
ஆம் என்று
சொல்லச்சொல்லி
உள் ஓடி
மறைந்து போனது
--------------