Monday, March 07, 2016

பொம்மையும் குழந்தையும்

குழந்தைக் கேட்ட
பொம்மை வாங்க
காசு இல்லை

பொம்மை மறக்க
வழி நெடுக
கதை சொல்லிக்கொண்டே
வருகிறார் அப்பா

உம் கொட்டுகிறது குழந்தை

கதை முடிந்து
நிம்மதி பெருமூச்சு விட்டு
அப்பா கேட்கிறார்

எப்பிடிம்மா கதை இருந்துது

குழந்தை சொல்கிறது

அப்பா இந்த கதைய
அந்த பொம்மைக்குச் சொல்ல்லாமா
போய் வாங்கிட்டு வரலாமா

Saturday, March 05, 2016

பாக்கியவான்கள்

தாளமிட்டு
வானம் பார்த்து
கை குவித்து
ஆடியபடியே
பெரு மழையில் நனையும்
பைத்தியக்காரன்
தன்னை நிறுத்தி
மூச்சிறைக்க
வேடிக்கைப் பார்ப்பவர்களைப்
பார்த்துச் சொன்னான்
என் கண்ணீரைப் பார்ப்பவர்கள்
பாக்கியவான்கள்