Monday, December 22, 2008

புன்னகையோடு முடிந்துபோவதை
பாழும் மனம்
போர்களமாய்ப் பார்க்கிறது

என்ன சொல்கிறீர்கள்

என்ன சொல்கிறீர்கள்

உங்கள் வண்ணங்கள் புரிகிறது
ஓவியம் புரியவில்லை
இரவிலிருந்து
கவிதையில் குதிக்கிறது
கனவில் வரும் டால்பின்

Wednesday, December 17, 2008

வாருங்கள்

இளைப்பாறுகையில்
ஓடச்சொல்கிறீர்கள்
வாருங்கள்
ஓடிக்கொண்டே
இளைப்பாறலாம்

Sunday, December 14, 2008

புது வண்ணம்

கட்டிடத்திற்கு
நிறங்கள் பூசிவிட்டு
இறங்கியவன் உடலெங்கும்
புது வண்ணம்

சிறுவன்

வாங்காத சைக்கிள்
நனைகிறது மழையில்
கனவைத் திட்டும் சிறுவன்

அப்பாவின் கடிதம்

கண்ணீர் துளிகளை
தவிர்த்திருக்கிறார் அப்பா
கடிதத்தில்
அவருக்குத் தெரியாது
எழுத்துக்களில்
நீர் கோர்த்திருப்பது

Thursday, November 27, 2008

குழந்தை ஓட்டும் கார்

காரில் அமர்ந்து
ஸ்டீயரிங் அசைத்து
ஹாரன் எழுப்பி
வேகமாக
ஓட்டுகிறது குழந்தை
குழந்தையின்
ஓட்டும் பாவனையில்
பயணமாகும்
தந்தையின் சந்தோஷம்

சிரிக்கிறது உயிர்

தமிழீழ மண்ணில்
சுதந்திரமாய்
சுற்றித் திரிந்த காகிதத்தில்
கலைந்து போகாமல்
ஒளிர்ந்த வரிகள்

நீங்கள்
எம் மரணத்தை
ஒரு பெட்டியில்
அடைக்கப் பார்க்கிறீர்கள்
மீறிப் பிதுங்கி
சிரிக்கிறது உயிர்

(கவிஞர் அறிவுமதி தொகுத்த
'அரைக்கம்பத்தில் தொப்புள் கொடி'
புத்தகத்தில் வெளியானது)

Sunday, November 23, 2008

பெயரற்று இருக்கும் கவிதை

என் பெயரற்று இருக்கும்
இந்த கவிதையை
நீங்கள் படிக்கும் போது
எங்கேயாவது
நான் தென்படலாம்
ஒரு புன்னகையுடன்
அப்போது நீங்களும்
புன்னகைப்பீர்கள்
என் பெயர்
கேட்க மறந்து

Thursday, November 20, 2008

மீன்கள்

ஓடி வருகின்றன மீன்கள்
நேற்று பொறி போட்ட கையில்
இன்று தூண்டில்

வனத்தின் புன்னகை

சிறுமி அள்ளிய மணலோடு
சேர்ந்து வந்த விதை
மெல்ல முளைத்து
அவள் கைபடர்ந்து
செடியாகி சிரித்தது
செடியின் பிரியத்தை
சொல்லிவிட்டுப் போனது
ஒரு பறவை
குதித்துப் போன
குழந்தை மனதில்
வனத்தின் புன்னகை

Sunday, November 09, 2008

விளையாட்டு

பேரனின் பால்யத்தை
தாத்தாவும்
தாத்தாவின் முதுமையை
பேரனும்
வீசி வீசி
விளையாடுகின்றனர்

...முடிப்பதற்குள்

பறப்பேன் என்று
அடம் பிடிக்கிறது
வரைந்து முடிப்பதற்குள்
இந்த பட்டாம்பூச்சி

பறந்தோடும் நதி

கனவில் வந்த ஒட்டகம்
அழைத்துப் போய் காட்டியது
பாலைவனத்தில்
பறந்தோடும் நதியை

Monday, October 27, 2008

கண் அள்ளிய மழை

கண் அள்ளிய
மழையை எதற்கு
கவிதையில் கொட்ட
அதுவாய்
வழிந்தோடுகிறது
உள் எங்கும்
ஒரு ரீங்காரத்துடன்

Sunday, October 26, 2008

குவியும் காட்சிகள்

ஒருவர்
பலர் கடக்க
சாலை சுவரில்
சிறுநீர் போகிறார்
ஒருவர்
இலவசமாக படித்த
தினசரியை
தன்னிச்சையாக
எடுத்துப் போகிறார்
ஒருவர்
துயரம் மிகுந்த
மருத்துவமனை வராண்டாவில்
தான் பார்த்த
சினிமா கதையை
சொல்லி மகிழ்கிறார்
ஒருவர்
பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல்
ஏறி இறங்கியதாக
மார் தட்டுகிறார்
ஒருவர்
சாலை நிறுத்தத்தில்
விலகிய புடவையை
பார்த்த கண் எடுக்காமல்
சிக்னல் விழ கிளம்புகிறார்
ஒருவர்
நேற்றோடு நிறுத்தியதாக
சொன்ன குடியை
நண்பனின்
இலவச விஸ்கிக்காக
தளர்த்திக் கொள்கிறார்
ஒருவர்
காசு கொடுத்தால்தான்
காரியம் நடக்கும் என்று
லஞ்சத்தை
தன் வார்த்தைகளால்
அழிக்கப் பார்க்கிறார்
இப்படி
ஒருவர் ஒருவராய்
குவியும் காட்சிகள்
சில நேரங்களில்
இந்த ஒருவர் குறிப்பேட்டில்
நானும் வந்து விடுவது
சங்கடமாக இருக்கிறது
முற்றுப்புள்ளிகளை
உடைக்கிறது
குழந்தையின் மொழி

Thursday, October 23, 2008

என்றோ விதைத்த சொல்

புல் ஒற்றி எடுக்க
விரல் வந்த பனித்துளி
மாற்றிக்கொண்டிருந்தது
என்னை ஒரு
தாவரமாய்
--------------------
என்றோ விதைத்த சொல்
பெருக்கெடுத்தோடும்
அன்பாய் இன்று
--------------------
விடுபட்ட
ஒரு கண்ணீர் துளி
குதிக்கிறது
புன்னகையில்
----------------

Monday, October 13, 2008

காடும் மரமும்

ஒரு மரத்திடம் கேட்டேன்
இந்த காட்டைப்பற்றி
உன் மொழியில் சொல்
சிரித்தது மரம்
சில பூக்கள் விழ
காடு அகராதி
நான் சிறுசொல்
எனச்சொல்லி
முடித்துக் கொண்டது

பயண வழியில்

பேருந்தில் குழந்தை
எல்லோரையும் பார்த்து
சிரிக்கிறது
பேருந்தும் சிரிக்கிறது

Saturday, August 23, 2008

பென்சில் நதி

நதி பற்றிய கவிதையை
நான் எழுதியபோது
அருகில் வந்த மகள்
வரைந்த நதியைக் காட்டினாள்
தாளில் ஓடியது
பென்சில் நதி
என் கவிதையை
அதில் கரைத்துவிட்டு
மறுபடி பார்க்க
இன்னும் முடியவில்லை
எனச் சொல்லியபடியே
ஓடிய அவள்
கண்களில் மீதி நதி

(26.10.08 கல்கி
இதழில் பிரசுரமானது)
----------------------

யாரும் படித்து
முடிக்கவில்லை
மழைபுத்தகம்
-----------------

Thursday, August 21, 2008

பெருவழி

அருகில் போய்
மிக ரகசியமாய்
பனித்துளியிடம்
சின்ன கவிதையை
சொன்னேன்
கேட்டு
புன்னகைத்தது
கவிதையில்
பனித்துளி பூத்தது
----------------
கையிருக்கும்
முகவரியிலிருந்து
நீள்கிறது பெருவழி
கால்கள் கடக்க
வழி நெடுகிலும்
சிறுசிறு முகவரிகள்
-----------------

Tuesday, August 12, 2008

வழிக்குறிப்புகள்

வந்து பார்க்காத
கடிதம் போடாத
மகனுக்கு
தந்தை எழுதினார்
ஊர் பக்கத்தில்
இருக்கிறது
நீதான் தொலைவாக
இருக்கிறாய்

(26.10.08 கல்கி
இதழில் பிரசுரமானது)

------------------

பார்த்த வானவில்
அடுப்புக் கறியில்
வரையும் சிறுமி

(26.10.08 கல்கி
இதழில் பிரசுரமானது)

------------------
தவறவிட்ட ரயில்
வழி அனுப்புகிறேன்
கையசைத்து
------------------
வெயிலில் நனைந்து செல்கிறேன்
என்று கதை மனோபாவத்துடன்
யோசித்தபடி
வெயிலில் காய்ந்து சொல்வது
கடினமாக இருக்கிறது
-------------------

Saturday, August 09, 2008

இரு வார்த்தைகள்

சற்று வயது கூடிய
வேலைக்காரன்
தன் நுட்பம் கலையா
விரல் பாவங்களுடன்
மிக மெதுவாய்
மரம் அறுத்து
சரி பார்த்து
தக்கபடி பொறுத்தி
வடிவம் அளந்து
ஆணிகள் அடித்து
வருடிக் கொடுத்து
தன்னையே
ஒரு முறை பெயர்த்து
கிடத்தி
பின் எடுத்து
கண்ணோரம் வந்த
ஒரு சொட்டை
போட்டுபோல் வைத்து
துக்க வண்ணம் பூசி
மரத்துகள்களை
அப்புறப்படுத்தி
மஞ்சள் வெயில் பட
உருவாக்கிய சவப்பெட்டியை
பார்த்தபடி
இருக்கும்போது
அவன் உதடு
சத்தமின்றி சொல்கிற
இரு வார்த்தைகள்
உயிர் வந்திடுச்சி

Monday, August 04, 2008

மழையின் கணங்கள்

மழையைப் பற்றி
எவ்வளவோ பேசினாய்
மழை விட்டப் பிறகும்
ஒரு மழையைப்போல

இப்போதெல்லாம்
பெய்யும்
ஒவ்வொரு மழையும்
பேசுகிறது
உன்னைப் பற்றி

Tuesday, July 15, 2008

கல் நதி

வார்த்தைகளை
மாற்றிப்பாடுகிறது குழந்தை
குழந்தையின் பாடலில்
தன்னைப் புதிது
செய்து கொள்கிறது கவிதை
----------

பிரசாதம் வாங்கிய
சிறுவனிடம்
கும்பிட்ட சாமியின்
பெயர் தெரியுமா கேட்டேன்
எனக்கு பசிக்குது சாமி
சொல்லியபடியே ஓடினான்

(26.10.08 கல்கி
இதழில் பிரசுரமானது)

-----------

உள் உளி
பாய
நகர்கிறது
கல் நதி
------------
தான் வரைந்த கடலில்
நேற்றுப் பார்த்த கடல்
இருக்கிறதா
கேட்டாள் சிறுமி
அவள் நீலக் கோடுகளிலிருந்து
எம்பிக் குதித்த வண்ணமீன்
ஆம் என்று
சொல்லச்சொல்லி
உள் ஓடி
மறைந்து போனது
--------------

Sunday, June 29, 2008

அன்பின் கையெழுத்து

ஒரு மழை நாளில்
ஓர் குடைகீழ்
நாம் நிற்க
என் கையெழுத்திட்டு
நான் உனக்கு
வழங்கிய புத்தகம்
இதோ இத்தனை
வருடங்கள் கழித்து
ஒரு பழைய
புத்தகக் கடையில்

வாங்கிச் செல்கிறேன்

புத்தகத்தில் அழிந்திருக்கிறது
என் பெயரும்
நம் அன்பும்

(1.10.08 ஆனந்த விகடன்
இதழில் பிரசுரமானது)

Wednesday, June 25, 2008

நீங்களும் ஒரு பறவையும்

நீங்கள் ஒரு பறவையை
சுடும்போது
கவனத்துடன் குறிவைக்க வேண்டும்

தோட்டா பட்டதும்
செத்து விழ வேண்டும் பறவை

மீதி உயிர் இருந்து
மண்ணில் புரண்டு
மெதுவாய் போகும்படி ஆகக்கூடாது

சுடப்பட்ட பறவை
விழுந்த பிறகு
சில நொடிகள் முடிந்தால்
அஞ்சலி செய்யலாம்

பறவையின் இன்ன பிற
உறவுகளுக்காக
ஒரு வருத்தச்சொட்டு சிந்தலாம்

பின் பறவையை
எப்படி சமைப்பது
என்னென்ன செய்வது
என்பது பற்றி பேசலாம்

மதுக் கோப்பைகளின் நடுவே
மேசை மீது
நிரப்பப்பட்டிருக்கும் கறி

நீங்கள் சுவைக்கிறீர்கள்
பற்களில் நசுங்கும்
பறவையின் சத்தம் கேட்டபடி

அப்போது உங்கள்
கண்களை கலைத்துப்
போகிறது ஒரு பறவை

உங்கள் துப்பாக்கியை
முகம் திருப்பி வைத்து
காற்றில் நீந்தி
வானத்தில் அதன் சிறகுகள்
நடனமிடுவதைப் பாருங்கள்
முடிந்தால் ரசித்து

Thursday, June 19, 2008

பார்த்தபடி படிக்கட்டுகள்

லிப்ட் வாய்க்கப் பெறாத
மூன்றாவது மாடி

மூச்சு இறைப்பதைப்
பார்த்தபடி படிக்கட்டுகள்

காலெடுத்து வைக்க
முடியும் அப்பார்ட்மெண்ட்

இருந்து பார்த்து
ஊருக்குப் போய்விட்டார் அப்பா

அவர் விட்டுச் சென்ற
வார்த்தைகளில்
விதிக்கப்பட்ட இந்த வீடெங்கும்
பரவிக் கிடக்கும்
எங்கள் கிராமம்

Wednesday, June 18, 2008

பொம்மைகள்

குழந்தை உடைத்த
பொம்மையிலிருந்து
குழந்தைக்கு கிடைத்தன
மூன்று பொம்மைகள்

கூண்டிலிருந்து...

தொழில் மாற்ற
உத்தேசித்து
கூண்டைத் திறந்து
போகச் சொல்கிறான்
ஜோஸ்யக்காரன்

அவன் காலை
சுற்றி சுற்றி வருகிறது
சுதந்திரம் மறந்த கிளி

கூர்காவின் கடிதம்

ஒருவன் கடிதம் படிக்க
மற்றவன் கேட்க
இசைக் கச்சேரி போலிருந்தது
கூர்காக்களின் மொழி

கேட்டுக் கொண்டே வந்தவன்
குழந்தையை கைகளில்
கொஞ்சுவது போல்
பாவனை செய்து
ஆட ஆரம்பித்து சிரித்தான்

தான் அப்பா ஆனதாக
மார் தட்டி
சத்தம் போட்டான்

ஓடிப்போய்
மிட்டாய் வாங்கி வந்து
எனக்கும் தந்ததில்
நினைத்தது சரி என்று
தெரிந்தது

தூர உணர்வுகளை
கொட்டிக் கொண்டிருந்தது
கடிதம்

என் நடை முடிந்து
வருகையில்
போயிருந்தான்
கடிதம் படித்தவன்

கடிதத்தின் எழுத்துக்களில்
விளையாடியபடியே இருந்தன
அமர்ந்திருந்த
கூர்காவின் கணகள்

(1.10.08 ஆனந்த விகடன்
இதழில் பிரசுரமானது)

Tuesday, May 06, 2008

பாதையின் கருணை

கை நீட்டிக் கேட்பவனை
ஏற்றிச் செல்ல
நிற்கவில்லை
எந்த வாகனமும்

வேகமாய்க் கடக்கின்றன

நடப்பவன் ஏற்றிச் செல்கிறான்
நிலவின் புன்னகையை
மழைத் தூறல்களை
நிற்காமல் போகச் சொல்லும்
பாதையின் கருணையை

பாட்டியின் கதை

கதைச் சொல்லிக்கொண்டே
வந்த பாட்டி
தூங்கிப்போனாள்

விழித்திருக்கிறது குழந்தை
கதாபாத்திரங்களுடன்

Sunday, April 20, 2008

மான்யா

காலையை அழகுபடுத்தி
சென்றுகொண்டிருந்தன
பள்ளிக்குழந்தைகள்

என்னை கவர்ந்த
ஒரு குழந்தைக்குப்
பெயரிட்டேன்

மான்யா

பள்ளிக் கடக்கும்போதெல்லாம்
என் மான்யாவைப் பார்ப்பது
வழக்கமாயிற்று

அவள் நடைஅசைவும்
கண்களிலிருந்து
கொட்டும் கனவுகளும்
சுகமானவை

பள்ளிவிடுமுறை நாட்களில்
பார்க்க முடியாமல் போகும்
மான்யாவை

சந்திக்க வாய்ப்புக்கிடைத்த
ஒரு தருணத்தில்
அவளிடம் கேட்டேன்

உன் பெயரென்ன

சிரித்தபடி பார்த்தவள்
பேசினாள்

உங்களுக்கு என்ன
பிடிச்சிருந்தா
உங்களுக்கு பிடிச்ச பேர்ல
கூப்பிடுங்க

மான்யா

கேட்டு
நாக்கில் சுவையூறும்படி
சொல்லிப்பார்த்தாள்

பள்ளிமணி அழைக்க
கை அசைத்தபடி ஓடி
தன் தோழியோடு
சேர்ந்துகொண்டு சொன்னாள்

என்னோட
இன்னோரு பேரு
மான்யா

Thursday, April 17, 2008

...என்றொரு மருத்துவர்

என் நோய்கள் குறித்து
அக்கறையோடு விசாரித்தார்
மருத்துவர்

தெரியாத பலவும்
தெரிவித்தார்

மருந்துகளின் வரிசை
நீண்டது

மதுக்கடைப்பக்கம்
போகக்கூடாது
கட்டளையிட்டார்

வயது கூட
அது நோய்களுக்குக்
கதவுகளைத் திறந்து விடுகிறது
மறக்காதே என்றார்

கடைசியாய்க் கேட்டார்

என்ன தொழில்
செய்கிறீர்கள்

எழுத்தாளன்
கதை கவிதை
எனது தொழில்

புன்னகைத்தார்

உங்கள் எழுத்து
வாழ்க்கையை நகர்த்துகிறதா

அறை மின்விசிறி
நின்று போக
வெளிக் காற்றில்
தாள்கள் படபடக்க
முகம் துடைத்தபடிப்
பார்த்தேன்

வயது கூட
அது நோய்களுக்குக்
கதவுகளைத் திறந்து விடுகிறது
ஆரம்பித்திருந்த
என் கதையின் வரி
அங்கேயே நின்றிருந்தது

Tuesday, April 15, 2008

அணைந்தது விளக்கு
தெரிந்தது
இருளின் ஒளி

Friday, April 11, 2008

வெளவால் மண்டபம்

இருளில்
பசியில்
ஏதுமில்லாமல்
கிடந்த
பிச்சைக்காரியைப்
புணர்ந்தவர்கள்
விலகிப்போனார்கள்
வேகமாய்

அவள் அழுகை
அங்குமிங்குமாய் அலைந்து
வழி அறியாமல்
திரும்புகிறது
அவளிடமே

நடுங்கும்
வெளவால் மண்டபம்
அவளோடு சேர்ந்து

உதவிக்கு வர இயலாமல்
புரண்டு படுக்கிறான்
கல்லறைக்குள் இருப்பவன்

அவள் ரத்தம் கலைக்கப்
பெய்கிறது மழை

துன்பம் பார்த்து
நகர்கிறது பெளர்ணமி

மண் அள்ளி வீசி
உலகை சபிக்கிறது
ஒரு பைத்தியத்தின் குரல்

(புதிய பார்வை ஏப்ரல்16-30,08இதழில்
பிரசுரமானது)

சொற்களில் பெய்த மழை

நின்றவுடன் போகலாம்
இருக்கச் சொன்னேன்
வேலை இருப்பதாகப்
புன்னகைத்தபடியே
போனார் நண்பர்

அடுத்த முறை
வந்தபோது
அவர் சொற்களில்
பெய்து கொண்டிருந்தது
நனைந்து சென்ற மழை

(புதிய பார்வை ஏப்ரல்16-30,08இதழில்
பிரசுரமானது)

Saturday, March 08, 2008

ஒவ்வொரு முறையும்

ஒரு தேநீர் நேரத்தில்
கசாப்புக் கடைக்கார நண்பர்
மௌனமாய் சொன்னார்
ஒவ்வொரு முறை
வெட்டும் போதும்
என் மரணத்தையும்
பார்க்கிறேன்

மொழியற்ற மொழியில்

சிறுமியும் பறவையும்
பேசிக்கொண்டிருக்கிறார்கள்
மொழியற்ற மொழியில்
--------
பள்ளி விடுமுறை
சிலேட்டை மழையில்
நீட்டும் சிறுமி
----------

என் மரணத்தை கொண்டாடுங்கள்

என் மரணத்தை கொண்டாடுங்கள்
உங்கள் சிரிப்பில்

இந்த வரிகளை
யோசித்தபோது
ஒரு மரணம் நிகழ்ந்தது

எழுதியபோது
ஒரு மரணம் எரியூட்டப்பட்டது
ஒன்று புதைக்கப்பட்டது

வெளியானபோது
சில மரணங்கள் நெருங்கிக்கொண்டிருந்தன

படித்து புன்னகைத்தவர்
புறப்பட்டுப்போனார்
ஒரு மரணசேதி கேட்டு

பழைய காகித கடையில்
அதைப் பார்த்த சிறுவன்
தாத்தாவை நினைத்து கொண்டான்

என் மரணத்தை கொண்டாடுங்கள்
உங்கள் சிரிப்பில்

சத்தம் போட்டுச் சென்றவனை
எல்லோரும் பார்த்தார்கள்

எப்போதும் பார்க்கும்
ஒரு பைத்தியத்தைப் போல

Friday, March 07, 2008

காசோலையின் கண்கள்

சற்றுத் தள்ளி
தேதி இடப்பட்டிருக்கும்
இந்த காசோலையை
உடனே வங்கியில்
போட முடியாது

சத்தம் குறைத்துள்ளேன்
கோரிக்கைகளை

எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
என் நாள் பதற்றத்தைப்
பார்த்தபடி
கண் சிமிட்டுகின்றன
காசோலையின் கண்கள்

Saturday, March 01, 2008

வழி அறியாக் குளிர்

முட்டும் காற்றில்
அசையும்
மழைக்கயிறுகள்

கண்ணாடியில் மொய்க்கும்
துளிகள்கூட்டம்

வழி அறியாக் குளிர்

கைகள் அணைத்த
தேநீர் கோப்பை

இறங்கும் சூடு

துன்பம் தராத தனிமை

பழகிய காத்திருப்பு

கூப்பிட்டாய்
கைபேசியில்
உன் பெயர்
ஒரு புதிரைப்போல

அழகான பொய்களோடு
சில உண்மைகளும்

வராதது குறித்து
வருத்தம் தெரிவித்தாய்
இந்த முறையும்

என் மௌனம் உன்னை
ஒன்றும் செய்யவில்லை

பிறகு பேசுவதாகத்
துண்டித்தாய்

உன் குரல் மறைய
கேட்கத் தொடங்கினேன்
மழையின் பேச்சை

Monday, February 18, 2008

அவனைப் பற்றிய குறிப்புகள்

இரவு மூடுமுன்
மதுபானக் கடையில்
கடைசி பாட்டிலும்
திறக்கும் சமயம்
முதல் பாட்டிலும் வாங்குபவன்
சபிக்கப்பட்டவனாக
தன்னைப் பற்றித் தோன்றும்
உணர்வை வெளித்தள்ள
விடுவிடுவென
போதைக்குள் இறங்குகிறான்

முந்தைய போதைகளின்
மிச்சங்களும் சேர
தன்னைப் பெயர்த்து
எதிரில் உட்காரவைத்து
இன்னொருவருடன் பருகுவது போன்ற
தோற்றத்தைப் பெற்று
அமைதியின் ஆசிர்வாதம் கிடைத்ததாகச்
சொல்லிக்கொள்கிறான்

தன்னைக் கிளறும்
அழைப்பு மணிகளை
ஒவ்வொன்றாக
நிறுத்திக்கொண்டே வருகிறான்

கால்களின் நடனத்தில்
சிக்கி விழாமல்
கவனமாய் நடந்து
வெளியே வருபவன்
மழையைத்திட்டியபடி
நனைந்து
எதிரே போய்
ஒதுங்கி நின்று
பார்த்தபடியே இருக்கிறான்
மழைத் திரையிட்ட
மதுபானக்கடையை

Friday, February 15, 2008

கோடுகளின் இசை

வெள்ளைத் தாளைப்
பருகுவதுபோல் பூனை

பிரியம் கூடி
பூனையிடம் கேட்டேன்
உன்னை வரைந்தவரைப்
பார்க்க வேண்டும்

சின்ன சத்தங்கள் செய்தபடி
அழைத்துப்போய்
வரைந்தவரைக் காட்டியது

சூரியன் இறங்கிய
ஒளிவெளியில்
அமர்ந்திருந்தார்

கண்கள் புன்னகைக்க
வரைவதைப் பார்க்கச் சொன்னார்

பியானோவும் ஏழைச்சிறுவனும்

பார்த்தபடியே
மெல்ல இமைமூட
கேட்டது
கோடுகளின் இசை

கண்டெடுத்த
குழந்தை மனநிலையில்
கண் திறக்க
பூனை இல்லை
பியானோ காணோம்
வாசித்த சிறுவனும் இல்லை
வரைந்தவரும்

கேட்டபடி இருந்தது
நின்று போகாத
பூனையின் சத்தம்

(ஓவியர் ஆதிமூலம் நினைவிற்கு)

Tuesday, January 29, 2008

சிதையும் சொற்கள்

மறையும் சூரியன்
கவிதையில் உதிப்பது
அழகாய் இருக்கிறது

ஆனாலும்
சொற்களைச் சிதைக்கிறது
சுள்ளிப் பொறுக்கும் கிழவி
வீடு சேர வேண்டும்
என்ற யோசனை

கிழவியைப் பின்தள்ளிப்
போகிறது ரயில்
சத்தலயம் பிசகாமல்

Monday, January 21, 2008

மணக்கும் இசை

நிரம்பி வழியும்
அரங்கிலிருந்து
மணக்கிறது இசை

என் அளவுக்கு
சுவாசிக்கத் துவங்குகையில்
பூக்கும் சில பூக்கள்
ஆடுகின்றன
ஒலி லயத்திற்கு ஏற்ப

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியான கவிதை)
மலைகளை வரைபவன்
ஏறிக்கொண்டிருக்கிறான்
கோடுகள் வழியே

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியான கவிதை)

Sunday, January 20, 2008

நூற்று எழுபத்து எட்டாம் பக்கத்தில்...

எனது கதையில்
வரும் கிழவி
உங்கள் ஊருக்கு வந்தால்
ஏதாவது கொடுங்கள்

சர்க்கரை குறைவான காப்பி
வேகவைத்த கடலை
ஒரு குவளை கஞ்சி
ரசம் சாதம்
முடியாவிட்டால் வெந்நீர்

அவள் சொல்வதைக்
கேட்க முடியாதபோது
ஒரு புன்னகைக் கொடுத்து
அனுப்பி விடுங்கள்

சிறு வயதில் இறந்த பேரன்
வெளிநாடு போய்
திரும்பாத மகன்
நிலங்களைத் தொலைத்தக் குடும்பம்
என உண்டு அவளிடம்
கண்ணீர் உடைக்கும் கதைகள்

நதி பார்த்தால்
நின்று விடுவாள் கிழவி
அவளை இறக்கி விடாதீர்கள்
நீச்சல் தெரியாது

கிழவிக்கு
எந்த சேதாரமும் நேராமல்
உடனே அனுப்பி வையுங்கள்

கதையின் நூற்று எழுபத்து எட்டாம் பக்கத்தில்
கிழவிக்கு மரணம் நிகழ்ந்தாக வேண்டும்
நீரில் மூழ்கி

Thursday, January 10, 2008

சிறுமியின் மரம்

தாத்தாவுடன்
வாக்கிங் போய்விட்டு
வந்த பேத்தி
அவர் கால் கழுவி வருவதற்குள்
வரைந்ததைக் காட்டினாள்

பேத்தியின் பிஞ்சு கிறுக்கலில்
நிமிர்ந்து நின்றது
ஒரு மரம்

கன்னத்தைத் தட்டி
பாராட்டு சொன்ன
தாத்தாவைக் கேட்டாள் சிறுமி

இது எந்த மரம் சொல்லுங்க

விழித்து நின்ற தாத்தாவுக்கு
விடை சொன்னாள்

நடந்து போனப்ப
நாம பாத்தமே
நீங்க கூட சொன்னீங்களே
இது புயல்ல சாஞ்ச மரம்னு

அதுதான் தாத்தா இது
நான் நிக்க வச்சிருக்கேன்