Saturday, November 28, 2009

தேடிப்பார்

கவிதையை முத்தமிட்ட
நட்சத்திரத்தின்
பெயர் கேட்டேன்
உன் கவிதையில்
தேடிப்பார்
எனச் சொல்லிவிட்டு
மறைந்து போனது

பாவத்தின் நூலகம்

தவறுதலாக நுழைந்து விட்டேன்
பாவத்தின் நூலகம்
என்று எழுதி இருந்தது
எனக்கான புத்தகம்
இங்கில்லை என
திரும்பியபோது
எனது பாவங்கள் பற்றிய
புத்தகத்தை ஒருவர்
எடுத்துக் கொண்டிருந்தார்

Tuesday, November 24, 2009

ஒளித்து வைத்தல்

என் நாளைப் பறித்து
தன் சிரிப்பில்
ஒளித்து வைக்கிறது குழந்தை

Saturday, November 21, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

20

இன்னும் கொஞ்சம்
இருள் கொடுங்கள்
என்னிடம்
ஒளி இருக்கிறது

இன்னும் கொஞ்சம்
வலி கொடுங்கள்
என்னிடம்
கண்ணீர் இருக்கிறது

21

கையிலிருக்கும்
முட்டை
முட்டைக்குள்ளிருக்கும்
குஞ்சு
குஞ்சுக்குள்ளிருக்கும்
உலகம்
உலகத்திற்குள்ளிருக்கும்
நான்

22

நேற்றை
தன் கோப்பையில்
நிரப்பி
குடிப்பவனுக்கு
என்றும்
தீராது தாகம்

காலம்

காலண்டரில்
சிதறிய மழைத்துளி
துளியிலிருந்து
பெய்கிறது காலம்

உருவாதல்

கவிதையில் உருவான
பட்டாம் பூச்சி
பூக்களுக்குப் போகாமல்
வார்த்தைகளையே
மொய்க்கிறது

அன்பைக் கொடுங்கள்

எதையும்
மறைக்கத் தெரியாமல்
பேசும் நண்பர்
பார்க்க வந்தபோது
களைப்புடன் இருந்தார்

அவர் புறப்பட்டபோது
ஏதாவது வேண்டுமா என்றேன்

கொஞ்சம் அன்பைக் கொடுங்கள்
தின்றுகொண்டே
போகிறேன் என்றார்
சிரித்தபடியே

நானும் புன்னகைத்துத் தர
வாங்கிக் கொண்டார்
அன்பையும் பணத்தையும்

கரையோரம்

கரையோரம்
நடந்து போகும்
தந்தையும் மகனும்

அப்பா சொல்வதை
அலைகளைப் போல வாங்கி
கடலாகிக் கொண்டிருக்கிறான்
மகன்

(ஆனந்த விகடன்,30.12.09
இதழில் வெளியானது)

ராகத்தின் பெயர்

ரயிலில்
புல்லாங்குழல் வாசித்த
பெரியவரிடம்
அது என்ன ராகம் என்றேன்

தெரியாது என்றார்

பெயரைக் கேட்டேன்
சொன்னார்

துணையாக வந்தது
அவர் இசை

இறங்கியபோது
அவரிடம் சொன்னேன்
அந்த ராகத்தின் பெயர்
தெரியுமென்று

வியப்புடன் பார்த்தார்

அவருக்குத் தெரியாது
அவர் பெயரை
அந்த ராகத்திற்கு
நான் வைத்திருப்பது

Wednesday, November 18, 2009

பெயர் வைக்கும் சிறுமி

நாய்க்குட்டிகளுக்கு
பெயர் வைக்கும் சிறுமி
நாய்க்குட்டிகளிடம்
கேட்கிறாள்
தனக்கு பெயர்
வைக்கச் சொல்லி

படி

படி படி என்று
சொன்ன அப்பாவை
படிக்கத் தொடங்கியது
குழந்தை

கனவின் வரைபடம்

சொட்டு சொட்டாய்
விழும் இரவு
கலைந்து கொண்டிருக்கும்
கனவின் வரைபடம்

அழைத்து வருகிறது

வானவில்லை
அழைத்து வருகிறது
வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சியை
அழைத்து வருகிறது
வானவில்

ஆனாலும்

எதிர்ப்பை மறந்து
கைகுலுக்கிக் கொண்டோம்
ஆனாலும்
உள்ளோடிப் போயிருந்தது
விரோதத்தின் விஷம்

Saturday, November 14, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

15

ஏற்று
காற்றுத் திரியை
காற்றில்
அணையாமல் எரிய

16

சூன்யம் தின்னும் குரங்கு
கிளை தாவும்
தாவும்
தாவும்
தா
வும்
மரணம் தாவும்

17

இறந்துபோனவர்கள்
விழித்துக் கொண்டார்கள்
தூங்கியவர்கள்
எழவில்லை

18

என் அரசவையில்
மக்களென்று
யாருமில்லை
எல்லோரும்
ராஜாக்கள்தான்

19

எல்லா முடிந்த
கவிதையிலும்
ஒரு முடியாத
கவிதை

Friday, November 13, 2009

மன்னிப்புத் தோட்டம்

என் தவறுகள்
கொட்டிக் கிடக்கின்றன
மன்னிப்புத் தோட்டத்தில்
மன்னிப்புகள்
தீர்ந்து போகும் முன்
நிறுத்தியாக வேண்டும்
கொட்டுவதை

Monday, November 09, 2009

அவனும் நானும்

அவன் பைத்தியக்காரனைப்போல
காகிதத்தைத்
தின்று கொண்டிருந்தான்

அருகில் போய்
ஏன் அப்படிச் செய்கிறாய்
எனக் கேட்டேன்

எனக்கு பசித்தது
காகிதத்தில்
ஒரு ஆப்பிளை வரைந்தேன்
சாப்பிட்டு விட்டேன்
எதற்கு பைத்தியக்காரனைப்போல
பார்க்கிறாய்
போ என்றான்

Sunday, November 08, 2009

பறவையின் உயிரில்

அந்தப் பறவையைக்
கொன்றவர்களுக்குத்
தெரியவில்லை

அதன் உதட்டில்
குஞ்சின் பெயர்
ஒட்டி இருந்ததும்
வாயில்
குஞ்சுக்கான
உணவிருந்ததும்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

12

எதுவும் செய்யவில்லை
நான்

எதையாவது செய்யாமலில்லை
இன்னொரு நான்

13

எல்லோருக்குமாக
தற்கொலை
செய்து கொண்டேன்
எழுபது முறை

எனக்காக
வாழ வேண்டும்
ஒரு முறை

14

காட்டுக்கு
மிருகங்கள்
தேவை என்பதால்
காட்டை
அழிக்கவில்லை

மிருகங்களுக்கு
காடு
வேண்டும் என்பதால்
மிருகங்களை
அழிக்கவில்லை

எனக்குள் இருக்கிறது
காடும் மிருகங்களும்

Saturday, November 07, 2009

துறவி அவன் மற்றும் பூ

நீங்கள் வரைந்த
பூவிலிருந்து
துர்நாற்றம் வீசுகிறது

சொல்லியவனைப் பார்த்து
சிரித்தபடியே
துறவி கேட்கிறார்

எப்படி சொல்கிறாய்
உன் கையில்
பூ இருக்கிறது
என் கையில்
தூரிகை இருக்கிறது
நமக்கிடையே
வெள்ளைத்தாள்
படபடக்கிறது

கண் மூடி
அவர் கேள்வியை
முகர்ந்த அவன்
அதில் சுகந்தம் வீசுகிறது
எனச்சொல்லி
பூவை
துறவியிடம் தர
அவர் வாங்கி
வெள்ளைத் தாளில்
நடுகிறார்

வளர்ந்து விரியும்
பூவை பார்த்து
வியக்கும் அவன்
எட்டிப் பிடிக்க
நினைக்கும் வாசம்
இடம் மாறிக்கொண்டே
இருக்கிறது

Monday, November 02, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

11

தெய்வம் நின்று கொல்லும்
நான் தெய்வமாக
விரும்பவில்லை

பெயர் தேவையில்லை

அந்தக் குழந்தையிடம்
பெயர் கேட்கத்
தோன்றவில்லை
தேவதைக்குப் பெயர்
தேவையில்லை

கடவுள் சொன்ன கவிதை

கடவுள் சொன்ன கவிதையை
நினைத்துப் பார்த்தபோது
இருந்தது
எழுதிப் பார்த்தபோது
மறைந்தது

Sunday, November 01, 2009

தேடிய மழை

வானத்தை வெட்டி
தொலைந்த
மழையைத் தேடினேன்

சிரித்தபடியே
மேகம் சொன்னது
அது பூமிக்கு போய்
நீண்ட நாளாகிறது
போய்ப் பார்

வித்தை காட்டிய சிறுமி

வித்தை காட்டிய சிறுமியை
பிடித்துப் போனது
இறங்கி வந்து
அம்மாவின்
மடியில் அமர்ந்து
ஆசையாய் எதையோ
சாப்பிட்டபோது