Wednesday, November 26, 2014

வனம்

தன் வனத்திற்கு 
வரச் சொல்கிறது 
வரைந்த பட்டாம்பூச்சி 
தன் அறைக்கு 
வரச் சொல்கிறாள் 
வரைந்த குழந்தை

Sunday, November 23, 2014

தண்டவாளம் பக்கத்தில்

அவளே கேள்விக் கேட்டு
அவளே பதிலும் சொன்னாள்

பட்டாம்பூச்சியின் மேல்
ரயில் மோதினால்
என்னாகும்

உயிர் பறந்துப் போகும்

மறுநாள் காலை
தண்டவாளம் பக்கத்தில்
அவள் சடலம் கிடந்தது

அவளைச் சுற்றி
பறந்துக் கொண்டிருந்தன
பட்டாம்பூச்சிகள்

Saturday, November 15, 2014

குட்டிப் பூனை

குட்டிப் பூனை 
உன்னைப் பார்க்க வந்துது 
நீ சத்தம் போட்டதால் 
ஓடிப் போனது 
கீழ்வீட்டுக் குழந்தையிடம் 
விளையாட்டாகச் சொன்னேன் 
பூனைக்காகக் காத்திருக்கிறாள் 
அமைதியாக

Thursday, November 13, 2014

ஒளி வட்டம்

தலைக்குப் பின்னால்
அடிக்கடித் திரும்பிப்
பார்த்துக் கொண்டார்
அவருக்குத் தெரிந்த
ஒளி வட்டம்
மற்றவர்களுக்குத் தெரியவில்லை

Wednesday, November 12, 2014

சொல்/வாக்கியம்

நிற்கும் போது நான் 
சொல் 
சொல்லிப் பாருங்கள் 
நடக்கும் போது நான் 
வாக்கியம் 
படித்துப் பாருங்கள்

மறந்துப் போய் விட்டது

காத்திருப்பது மட்டுமே
மனதில் உள்ளது
எதற்கு
காத்திருக்கிறேன் என்பது
மறந்துப் போய் விட்டது

கதையில் எரிந்த மெழுகுவத்தி

கதையில் எரிந்த 
மெழுகுவத்தியை 
ஊதி அணைத்தேன் 
வார்த்தைகளில் வழிந்து 
பக்கங்களைப் 
படிக்க முடியாமல் 
செய்து விட்டது

Thursday, November 06, 2014

காயத்தின் நிழலில்

காயத்தின் நிழலில் 
வலி இளைப்பாறும் 
என்று எழுதிய வரியை 
மருந்தாக்கப் பார்க்கிறேன் 
ஆனாலும் 
வலிக்கவே செய்கிறது 

பைத்தியக்காரனின் பிரியம்

மழையில்
ஒரு தேநீர் கேட்டு
என்னைத் தொட்டு
முத்தமிட்ட
பைத்தியக்காரனின் பிரியம்
நெகிழச் செய்தது
ஆனாலும்
எல்லோரும் அவனை
விரட்டிய போது
பேசாமல்
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்

Saturday, November 01, 2014

யாரேனும் சொல்லுங்கள்

தற்கொலைக்கு ஓடுபவனை
எதற்குக் கொலை செய்ய
ஓடுகிறீர்கள்
என்ற வரியில் இருப்பவன்
என்ன ஆவான்
யாரேனும் சொல்லுங்கள்