Saturday, August 20, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

619-

இயலாமையை மறைக்க
திரைகள் இடுகிறோம்
திரைகளின்
ஓட்டைகள் வழியே
இயலாமையைப் பார்க்கிறோம்

620-

கடிகாரத்தின் பெண்டுலத்தில்
ஆடுகிறது
காலம்

621-

சிரித்து விடுங்கள்
அழுகையின் பக்கத்தில்
நமக்கென்ன வேலை

622-

அசைவற்று இருப்பதிலும்
இருக்கிறது
அசைவு

623-

யாரும் சொல்லாததை
நான் சொல்லவில்லை

எல்லோரும் சொல்லி விட்டதால்
நான் சொல்லாமலில்லை

624-

நட
கால்கள் செய்யும்
வழி

625-

உள்ளிருக்கும் மிருகங்களை
எழுப்பி விடுகிறது
காமம்

626-

நான்
தேநீர்
இந்தத் தருணம்
வேறென்ன வேண்டும்

627-

மொழியில் தொலைந்தேன்
கண்டெடுத்துத் திரும்புவேன்
எனக்கான வார்த்தைகளோடு

628-

வேறு வழியில்லை
வென்றாக வேண்டும்





Thursday, August 18, 2011

பார்த்தேன்

முதல் மின்னலில்
உன்னைப் பார்த்தேன்

இரண்டாம் மின்னலில்
உன் கண்களைப் பார்த்தேன்

மூன்றாம் மின்னலில்
உன் கண்ணீரைப் பார்த்தேன்

நான்காம் மின்னலில்
உன்னைக் காணவில்லை

ஐந்தாம் மின்னலில்
இருளைப் பார்த்தேன்

வெறும் இருளையேப் பார்த்தேன்

வெளியேற்றுதல்

தள்ளித் தள்ளி
உங்களுக்குள்ளிருக்கும்
குழந்தையை
வெளியேற்றுகிறீர்கள்

பின் அது
சைத்தானுக்குரிய
இடமாகி விடுகிறது

வளர்தல்

சொல்லிடம் அனுமதி கேட்டு
தங்க வந்த முள்
நாளாக நாளாக
சொல்லைக் குத்த ஆரம்பித்தது

நன்றி இழந்த முள்
ஒரு நாள்
முனையையும் இழந்தது

பின் இறந்தது

முள்ளை
அடக்கம் செய்துவிட்டு
அதன் மேல்
பூவை வைத்த சொல்
வானம் பார்த்தது

அப்போது பெய்த
மழையின் துளி
வசிக்கிறது சொல்லில்

வளர்கிறது சொல்
கவிதையில்

Tuesday, August 16, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

614-

முறிந்து போன `
புன்னகை
ஒட்டப் பார்க்கிறது
கண்ணீர்

615-

இருளில்
நெய்த வழியில் நடந்தேன்
இருளின்
துணைகொண்டு

616-

என்ன செய்ய
அபத்தமான வரிகளுக்கிடையில்
அகப்பட்டுக் கொள்கிறோம்
சில நேரம்

617-

போதும் என்று
சொல்லக் கற்றுக்கொள்
வானம் சொன்னது

சொல்லிப் பார்த்தேன்

வானத்தின் விசாலம்
போதும் என்ற வார்த்தைக்குள்
வந்திருந்தது

618-

இரண்டாவது நாக்காலும்
பேசுவேன்
சில நேரம்
அது தெரியாது
உங்களுக்கும்
முதல் நாக்குக்கும்



Wednesday, August 10, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

613-

நைந்து கிழிந்து போயிருந்தது துணி

இதை அணியவும் முடியாது
இது எதற்கும் பயன்படாது என்றேன்

எதுவும் எதற்கும் பயன்படும்
எனச் சொல்லியபடியே
வந்த அனுபவ சித்தன்
அதை மேலும் கிழித்து
ஒரு மெல்லிய திரியாக்கி
விளக்கேற்றிக் காட்டினான்

அசைந்த சுடரில்
காணமல் போயிருந்தன
நைந்து கிழிந்த இருள்கள்

நழுவுதல்

வண்ணங்களிலிருந்து
நழுவி விடும் ஓவியத்தை
யார் வரையப் போகிறார்கள்

Tuesday, August 09, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

609-

சொல் திறக்கும்
மொழி

610-

இரவை
மடித்தபடி நடந்தேன்
பகல் வந்தது

பகலை
விரித்தபடி நடந்தேன்
இரவு வந்தது

611-

கடைசி வரை
அழவில்லை
செய்த உறுதியின்
அடியிலிருந்தது
மறைக்கப்பட்ட கண்ணீர்

612-

மரணம் போதும்
எனக்கு
வாழ்வதற்கு

என்று

அரை நிர்வாணமாகி
காந்தியானேன்

என்று மனம் நிர்வாணமாக
முழு காந்தியாவேன்

நீந்தும் வார்த்தைகள்

படுக்கை அறை
மீன் தொட்டியானது

மீன்களோடு
நீந்தத் தொடங்கினேன்
உறக்கம் கலையாமல்

கடித்து எழுப்பின மீன்கள்
காதருகே வந்த ஒன்று சொன்னது

நீந்தியபடியே தூங்கு
தூங்கியபடியே நீந்தாதே

உடன் எழ
மீன் தொட்டி மறைய

காதில் நீந்தியபடி
இருந்தன வார்த்தைகள்

இன்னும் சொல்லியபடி

Sunday, August 07, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

600-

பாய்வது போல்
பாவனை செய்யுங்கள்
பாயாதீர்கள்

601-

எல்லாவற்றிற்கும்
நேரம் இருக்கிறது
என்பவர்களுக்கு
எல்லாவற்றிற்கும்
நேரம் இருக்கிறது

602-

தூங்குவது நொடிகள்தான்
ஆனாலும்
மணிகளாக
பாவிக்க முடியும்

603-

நல்ல நாள்
கடவுள் கையொப்பம்
இட்ட தாள்

604-

அழகாய் தெரிவதில்லை
நின்றிருக்கும்
குதிரைகள்

605-

மிதக்கும்போதெல்லாம்
விழுந்து போகின்றன
பாரங்கள்

606-

எந்த வெளிச்சமும்
வெளிச்சத்திற்கு வராமல்
இருப்பதில்லை

607-

நின்று போயிற்று வலி
நின்றபாடில்லை
வலியின் அதிர்வுகள்

608-

இலையின் ஓரத்தில்
இருக்கட்டும்
கொஞ்சம் பசி

Saturday, August 06, 2011

அடையாளம்

உங்கள் வார்த்தைகள்
உங்களை அடையாளம் காட்டின

பிறகு
அதை தவறு எனச் சொல்லி
உங்கள் மொழியால்
அழிக்கப் பார்க்கிறீர்கள்

Friday, August 05, 2011

தெரியும்

அடுத்த அத்தியாயத்தில்
உன்னைக் கொல்லப் போகிறேன்
கதாபாத்திரத்திடம் சொன்னேன்

கோபம் ஏறி
கத்தியது

எனக்குத் தெரியும்
ஒரு பிணம்
என் கதையை
எழுதிக்கொண்டிருக்கிறது என்று

வசித்தல்

ஒரு சிறு வரிக்குள்
அகப்பட்டுக்கொண்டேன்
வெளிவரத் தெரியாமல்

பிறகு வசிக்கப்
பழகிக் கொண்டேன்
புத்தகத்தில்

வலிகள்

ஒரு பெரிய வலியை
ஒரு சிறிய வலியிடம்
சொன்னேன்

சிறிய வலி
காணமல் போயிருந்தது

பெரிய வலி
குறைந்திருந்தது

Wednesday, August 03, 2011

உடைத்தல்

சிறையில்
முன்பின்
நடந்து நடந்து
தன் பயணத்தை
தூரமாக்கி விடுபவன்
சிறை வடிவங்களை
உடைத்து விடுகிறான்

Tuesday, August 02, 2011

விசாரித்தல்

நீண்ட வருடங்களுக்குப் பிறகு
ஊருக்குப் போய்
எல்லோரையும்
விசாரித்துவிட்டு வந்தேன்
ஊரை விசாரிக்காமல்
வந்து விட்டேன்

Saturday, July 30, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

590-

என்னுள் நகர
கண்டேன் வானம்

என்வெளி விரிய
கொண்டேன் ஞானம்

591-

பிறகு
இரவு
அதன் பிறகு
பகல்
அவ்வளவுதான்
வேறொன்றுமில்லை

592-

மொழிக்குள் நுழைந்து
வார்த்தைகளில்
வெளியேறிவிடுவதை
எப்படி எழுத

593-

படிகளில்
இறங்கியது மழை

மழையில்
இறங்கின படிகள்

594-

சதுரத்திற்குள்
இருக்கும் சதுரங்கள்
சதுரத்திற்குத் தெரியாது

595-

பதில் கண்டெடுக்காத
கேள்விகள்
கேள்விகளே அல்ல

596-

எழுது
என்ற கட்டளையை
எழுத்தே
பிறப்பித்து விடுகிறது

597-

கண்ணீரும் மழையும்
பேசும்
புன்னகை
தள்ளி நின்று
பார்க்கும்

598-

துளிக்குள்
பதுங்கும் கடல்போல
மெளனத்திற்குள்
பதுங்குகிறது மொழி

599-

நிசப்தத்தின் கோடரி
இரவின்
மேல் விழும்
வழியும் கனவுகள்
ஒன்றிரண்டு
என் கரை வரும்

Thursday, July 28, 2011

நிகழ்தல்

மொழியில்லை
வரிகள் இல்லை
வார்த்தைகள் இல்லை
ஒரு நெல்மணி அளவு கூட
எழுத்தில்லை
ஆனாலும்
நிகழ்கிறது உரையாடல்

மலை

தன் நாவில்
மொழி அழுந்திக்கிடக்க
யார் யார் குரலையோ
எதிரொலித்துக்கொண்டே
இருக்கிறது மலை

Tuesday, July 26, 2011

கதை

உள்ளங்கை
சொற்களைக் குலுக்க
கேட்டது
புராதன கதையின்
சத்தம்

கையசைப்பு

கையசைத்து
கையசைத்து
கடைசி கையசைப்பு
ரயிலுக்கு
என்றாச்சு

Friday, July 22, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

584-

பிறகுதான் சொல்லப்பட்டது
பசியாறிய இறைச்சி
சமாதானப் புறாவின்
உயிர் என்று

585-

எல்லாம்
இறக்கி வைத்தாயிற்று
இனி எதுவும்
சுமையில்லையே

இந்த கேள்வியை
இறக்கி வைத்தால் போதும்

586-

எழுத்தின் பசி
எழுப்பும்
உறங்கும் வார்த்தைகளை

587-

முதுகை நோக்கி
எறியப்படும் ஈட்டிகள்
துரோகத்தின்
விஷம் தோய்ந்தவை

588-

ஏதோ ஒன்று
நம்மை விரட்டுகிறது

ஏதோ ஒன்றை
நாம் விரட்டுகிறோம்

589-

எப்படி சொல்வதென்று
தெரியவில்லை

என்னிடமும்
சொற்கள் இருக்கின்றன

Thursday, July 21, 2011

மழை

மழை நம்மை
குழந்தையாக்கிவிடுகிறது
சரிதானே

ஆமாம் என்கிறார் அப்பா

நனையும் மழை
இன்னும்
குழந்தையாக்கி விடுகிறது
இதுவும் சரிதானே

சொல்லி ஓடுகிறாள் குழந்தை
கூப்பிடும் மழையிடம்

Wednesday, July 20, 2011

வழியில்

உன் தடங்கள் இல்லை
ஆனாலும் நீ வந்து போன
குறிப்புகள் வழியில்

யார்

இசைக்கத் தெரியாத
இந்த மூங்கிலுக்கு
யார் இத்தனை
துளை இட்டது

Monday, July 18, 2011

தானானது

என் மேல்
பூக்கும் பனித்துளி
பிரபஞ்சம்போல்
என்னை
பெரிதாக்கி விடுகிறது

சொல்லி சிரிக்க
துளி மறைய
மீண்டும் தானானது
புல்

அறைகள்

அறை முழுதும்
அறைகள்
என எழுதியபின்
வத்திப்பெட்டி அளவு இடம்
வானமாக விரிவு கொண்டது

Saturday, July 16, 2011

நகரத்தில் சந்தித்தவன்

நகரத்தில் சந்தித்தவன்
சொன்னான்

நான் மனிதர்களை
வேட்டையாடும்
மனிதன்

கால்களில்
ஓட்டத்தை குவித்தபடி
கேட்டேன்

இப்போது
நீ என்னை
வேட்டையாடப் போகிறாயா

அது உன் மேல் கமழும்
இறைச்சி வாசனையைப்
பொறுத்தது

மூக்கை விரித்தபடி
சொன்னான்

அவனிடமிருந்து தப்பிக்க
வேகமாக ஓடுகையில்
அவனைப் போலவே
எதிர்பட்டனர்
நிறைய பேர்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

577-

கை குவித்த
சொற்களுக்குள்
நான் குவிந்து

578-

இப்போது நான்

கிடைக்காதா என்ற
படபடப்புடனும்

கிடைத்துவிடும் என்ற
நம்பிக்கையுடனும்

579-

சொல் கொண்ட
சூல் உடைத்து
பாய்ந்தது வரி

580-

என் மீது
சொருகப்பட்ட வாளை
எடுக்கிறேன்
என் யுத்தம்
பதில் சொல்லும்

581-

எல்லா வழிகளும்
அடைக்கப்பட்டிருக்கின்றன
என்ன செய்யப் போகிறீர்கள்

பறக்கப் போகிறேன்

582-

என் நாவால்
பேசும்
சபை

583-

நகரும் கதையில்
ஓடுகிறது குதிரை
எழுத்துக்களைப்
பின்னுக்குத் தள்ளி

மறைதல்

காமமாய்
மாற்ற நினைத்த
காதலொன்று
கைகுழந்தைபோல்
அழுதது

மெல்ல கீழிறக்கிவிட்டுப்
போகச் சொல்ல
பூப்படைந்த
புதுப்பெண் போல்
ஓடி மறைந்தது

Wednesday, July 13, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

572-

அழுவதைத் தவிர
வழி இல்லை
அழுதாயிற்று
இனி அழுகைக்கு
வழி இல்லை

573-

வெள்ளைத் தாளை படிப்பதற்கு
எழுத்துக்கள்
தேவையில்லை

574-

வானத்தில் விழிகள்
சதுரங்களில்
தூங்கி விடுகிறேன்

575-

பறிக்க நீளும் கரம்
பூவின் புன்னகைப் பார்த்து
தடவிவிட்டுத் திரும்புகிறது

576-

அன்பு மட்டுமே இருக்கிறது
உன்னிடம்

இதை வைத்துக்கொண்டு
என்ன செய்யப் போகிறாய்

அன்பு செய்யப் போகிறேன்

Sunday, July 10, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

568-

கதைப் புத்தகத்தில்
கலைந்து போயிருந்தது
இன்னொரு கதை

569-

நான்
கொன்று
நான் பிறந்தேன்

570-

பொருளற்ற நான்
பொருள் உள்ளவன்
சொல்லிப் பார்த்தேன்
பொருள் இருந்தது

571-

ஏதோ ஒரு விட்டில் பூச்சி
அணைத்து விடுகிறது
சுடரை

Saturday, July 09, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

560-

நானும் நீங்களும்
நானும் அவர்களும்
என்பது போலத்தான்
நானும் நானும்

561-

முறிந்து போன வார்த்தைகளை
குணப்படுத்த வேண்டும்
முதலில்

562-

யுத்தம் பழகியவன்
சத்தமில்லாமல்
கொல்வான்

563-

காற்றைத் திரித்து
கண்டேன் ஒரு வரி
அது கானம் இசைத்து
போனது பல வழி

564-

விரட்டாத பறவை
விட்டுச் சென்றது
வானத்தை

565-

இருளில்
படிக்கிறேன்
இருளை

566-

தூக்கம் கேட்கின்றன
இமைகள்

காட்சிகள் கேட்கின்றன
விழிகள்

567-

இரவும்

மதுவில் இறங்கிய
இரவும்

ஒரு இரவில்
தூங்கினேன்

ஒரு இரவில்
விழித்திருந்தேன்

Tuesday, July 05, 2011

மகளின் வரிகள்

மரங்களே
விதையிலேயே இருங்கள்
நீங்கள் வளர்ந்தால்
வெட்டித் தள்ளிவிடுவார்கள்

தான் எழுதிய வரிகளை
எடுத்து வந்து காட்டினாள் மகள்

படித்து
அவள் தலை தடவ
வெட்டப்படாத
மரங்களின் காற்று
என் மேல் வீசிச் சென்றது

Saturday, July 02, 2011

காத்திருத்தல்

என்னைப் போலவே காத்திருப்பவர்
யாருக்காக காத்திருக்கிறார்
என்று தெரியாது

என்னைப் போலவே காத்திருப்பவர்கள்
எதற்காக காத்திருக்கிறார்கள்
என்று தெரியாது

காத்திருக்கிறேன்

காத்திருக்கிறார்

காத்திருக்கிறோம்

Friday, July 01, 2011

செய்தியில்...

காலை செய்தியில்
வாகனம் ஏறி
இறந்த குழந்தை

அன்று முழுதும்
அந்த குழந்தையைக் காப்பாற்ற
மருத்துவமனைகளுக்கு
ஓடிக்கொண்டிருந்தேன் நான்

இதற்கு மேல்

இதற்கு மேல்
எழுத எதுவுமில்லை என்று
முடித்திருக்கிறாய்

உனக்குத் தெரியாது
அதற்கு மேல்
தொடர்ந்துகொண்டிருந்ததை
நான் படித்துக்கொண்டிருந்தது

Wednesday, June 29, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

555-

எழுத வைக்கும்
வரியை
எப்படி எழுத

556-

தனிமை கிழித்த
உடலைத் தைக்கிறேன்
தனிமை கொன்று

557-

தேதிகளைக் கிழிக்கும் குழந்தை
காலத்தின் மறுமுனை போய்
திரும்பி வருகிறது

558-

எனது தற்கொலை
வெளியேற்றும் மரணம்
ஒருபோதும் வழங்கப்போவதில்லை
எனக்கு மன்னிப்பை

559-

பல்லாயிரம்
சொற்களைக் கொன்றேன்
எனினும் அடங்கவில்லை
என் பசி

Tuesday, June 21, 2011

ரொட்டி

உங்களில்
அதிக பசி உள்ளவர்கள்
இந்த ரொட்டியை
எடுத்துக்கொள்ளலாம்

ரொட்டி அப்படியே இருக்க
பசித்தவர்கள்
இறந்து கிடந்தார்கள்

Sunday, June 19, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

544-

பதுங்கிக்கொள்ள
பழகுகிறேன்
பாய்வது
தானாய் வரும்

545-

உங்கள் மந்திரத்தில்
சிலை உயிர் பெற்றது
மந்திரம் பொய் என்று
உங்களை அழித்தது

546-

நான் எண்களால்
கட்டப்பட்ட மாளிகை
என் பெயர் பூஜ்யம்

547-

இங்கு என்னைப் பற்றிய
எந்த குறிப்புகளும் இல்லை

நீங்கள் எதிர்பார்த்து வந்து
ஏமாந்து போகாதீர்கள்

அல்லது

எதிர்பார்த்து வந்ததை
குறிப்புகளாக
எழுதி வைத்துவிட்டுப்
போய்விடாதீர்கள்

548-

எறும்பு இளைப்பாறும்
இந்த தாளில்
எதுவும் எழுத
விரும்பவில்லை

549-

கேள்வியில்
நுழை
பதிலில்
வெளியேறு

550-

சுமக்க எதுவுமில்லை
என்பதே கனக்கிறது
சுமையாய்

551-

கனவின் குறிப்புகளை
காட்டியவர்களுக்கு
அனுமதி வழங்கப்பட்டது

கனவாகவே இருந்தவர்களுக்கு
அனுமதி மறுக்கப்பட்டது

552-

குழந்தையின் கையால்
தொடுகிறேன்
பஞ்சுபோல்
அசைகிறது மலை

553-

ஒற்றனைப்போல் வந்து
நண்பனைப்போல்
வெளியேறுகிறீர்கள்

நண்பனைப் போல் வரவேற்று
ஒற்றனைபோல்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்

554-

தியானத்தில்
எறிந்த கல்
போகிறது
ஆழம் நோக்கி
தியானிக்க

Friday, June 17, 2011

சொல்

சிறகை போல்
பறந்தது இலை

இலையைப்போல்
பறந்தது சிறகு

இரண்டையும் போல்
பறந்தது சொல்

Thursday, June 16, 2011

நீ...நான்...

உன் கத்தியின் வசீகரத்தில்
நான் மயங்கிவிடும்போது
நீ குத்திவிட நினைக்கிறாய்

உன் குரூரத்தின் கண்கள்
மூடிவிடும்போது
நான் தப்பிவிட நினைக்கிறேன்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

536-

நான் பலநூறு ஆண்டு
பழமையான மரம்
வெட்டவா போகிறாய்

பதிலில்லை

விழுந்துகொண்டிருந்தது
பல நூறு ஆண்டுகளோடு
இப்போதைய கணங்களும்

537-

மூச்சு முட்டி
இறந்துபோனது
ஜன்னலற்ற வீடு

538-

எப்போதும் போல்
இந்த கண்ணீர் சுடவில்லை
எரித்தது

539-

பசி
கனவள்ளித் தின்னும்
இரவு

540-

கண்ணீரால் பேசிக்கொண்டோம்
புன்னகை ஒளிந்தபடி
பார்த்திருக்க

541-

துள்ளி மேலெழும்பி வந்து
சொல்லிவிட்டுப்போனது
நான் கடலைத் திறக்கும் மீன்

542-

மையமற்ற நிலைக்கு
போவாயா என்றேன்

எனக்கு வடிவச் சிக்கலை ஏற்படுத்தி
நீ உட்கார்ந்து
வேடிக்கைப் பார்க்க போகிறாயா என்று
கேட்டபடியே
ஓடியது வட்டம்

543-

கண நேர
கண் மூடல்
பெரும் தூக்கம்

Tuesday, June 14, 2011

மலை உச்சியில்

இந்த மலை உச்சியில் இருக்கும்
என்னை நீங்கள்
தற்கொலை செய்துகொள்ளப்போகிறவனாகப்
பார்க்கிறீர்கள்

நான்
தற்கொலை செய்துகொள்ளப்போகிறவனைத்
தடுக்க வந்தவனாகப்
பார்க்கிறேன்

அந்த பறவை
விரைவில் மேலெழும்பி
பறக்கப்போகும் பறவையாக
என்னைப் பார்த்துச் செல்கிறது

Monday, June 13, 2011

தாலாட்டுதல்

எல்லோரும் தூங்கிவிட
விழித்திருக்கும் குழந்தையை
தாலாட்டியபடியே
ஓடுகிறது ரயில்

வெறும் காகிதம்

இதில் விலாசமில்லை
வெறும் காகிதம்

இதை வைத்துக்கொண்டு
எப்படி போவது

காகிதத்தில்
கோடுகளை வரையுங்கள்
பாதைகள் கிடைக்கும்

பாதைகளில்
காதுகளை வையுங்கள்
விலாசங்கள் கிடைக்கும்

Sunday, June 12, 2011

விடைபெறும்போது

விடைபெறும்போது
ஒரு சின்ன புன்னகையை
விட்டுச் செல்லுங்கள்

கை குலுக்குங்கள்

தங்கிப்போன தருணங்களைப்
பகிர்ந்துகொள்ளுங்கள்

விடைபெறும்போது
பால்கனிச் செடி பிடித்திருக்கிறது
என்று சொல்லுங்கள்

குழந்தையின் கிறுக்கல்களை
ஓவியமாகக் கண்டெடுங்கள்

குறைவான சர்க்கரை இருந்தும்
காப்பி குறித்த சுவையை
சுவையாக சொல்லுங்கள்

விடைபெறும்போது

பிறந்த நாளை குறிப்பிட்டு
என் வாழ்த்துக்கள் வரும் என்று
உற்சாகப்படுத்துங்கள்

டீவியின் மேலிருக்கும்
பொம்மையை ரசியுங்கள்

அதன் கண்கள் வழியே
உங்களைப் பாருங்கள்

முதியவர்கள் இருப்பார்கள் எனில்
அவர்கள் வயதுக்குள்
போய் வாருங்கள்

விடைபெறும்போது
நாய்க்குட்டியைத்
தடவிக்கொடுக்க
மறக்காதீர்கள்

அது குரைக்குமெனில்
வீட்டின் பாதுகாப்பு கவசம்
எனப் பாராட்டுங்கள்

நகை இல்லாத
கழுத்தைப் பார்த்து
துயரப்படுவதை தவிருங்கள்

மீன் தொட்டி மீன்களிடம்
கடல் விசாரித்ததாய் சொல்லுங்கள்

வாங்கிச் செல்லும் பொருளில்
உங்கள் பிரியத்தை
குறித்துவையுங்கள்

விடை பெறும்போது
தூசி படிந்த கணங்களை
அசைபோடுங்கள்

ஒன்றிரண்டு சுவாராஸ்யவங்களை
பொதுவான அலைவரிசையில்
பேசுங்கள்

முக்கியமாக
விடைபெறும்போது
நீங்கள் முழுதாய்
விடைபெற்றுவிடாமல்
நினைவுகளின் நீட்சியாய்
லயமாய்
அங்கு சுற்றிவரும்படி
இருக்கப் பாருங்கள்

(19.06.2011,கல்கி இதழில் வெளியானது)

Wednesday, June 08, 2011

பூவிடம்

பறித்துக்கொள்ளலாமா என்று
செடியிடம்
அனுமதி கேட்டேன்

பறிக்கலாமா என்று
பூவிடம்
கேட்க மறந்துவிட்டேன்

Sunday, June 05, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

531-

எழுப்பிவிட்டு
நள்ளிரவின் மேல்
தாவிப்போகிறது கனவு

532-

பிடிபடாமல்
பிடிக்க முடியாமல்
வந்து வந்து
போகின்றன வரிகள்

533-

பெய்துமுடித்துவிட்டது மழை
வடிந்துகொண்டிருக்கும் மழைதான்
முடியக்காணோம்

534-

தாளில் ஏறிய எறும்பு
இழுத்துப் போகிறது
எழுத்துக்களை

535-

நாக்கின் நுனியில்
பெளர்ணமி மரம்
வார்த்தைகளுக்கு
ஒளி பாய்ச்சும்

Wednesday, June 01, 2011

கண்களில் ஆடிய ஜூவாலை

மெழுகுவத்தி வெளிச்சத்தில்
எப்போதும் குடிக்கும் பழக்கம்
நண்பனுக்கு

அவன்
நான்
மெழுகுவத்தி

அல்லது

அவன்
மெழுகுவத்தி

இந்த அட்டவணையில்
நிகழ்வு இருக்கும்

உட்கொள்ளும் துளிகளுக்கேற்ப
சொற்களை நடனமிடச் செய்வான்

அப்போது
நானும் மெழுகுவத்தியும்
கேட்கும் காதுகளாவோம்

அவன் பேச்சிலிருந்து
குதிக்கும் தவளைகள்
சத்தமிட்டு தாண்டிப்போகும்
இருளில் மறையும்

பேசும்போது
அவனை அறியாமல்
வரும் கண்ணீர்த்துளி

அதை மெழுகுவத்தியின்
உருகும் துளியோடு
கலந்து பார்ப்பான்

எந்த வாளினால்
உலகை அறுத்தாலும்
அது மீண்டும்
ஒன்று சேரும்
அன்பை வழங்கும் என்று
அபூர்வமாக ஏதாவது சொல்வான்

ஒவ்வொரு காயத்திலும்
தத்துவத்தை தடவினால்
வலிக்கவே வலிக்காது என்பான்

போதை அவனை
செல்லமாகத் தாலாட்டும்

அந்த ஊஞ்சலின்
அசைவுக்கேற்ப ஆடுவான்

சில நேரங்களில்
எல்லாம் துண்டிக்கப்பட்ட
அமைதி நிலவும்

அது பயத்தைத் தரும்

அப்போது மெழுகுவத்தி
சொட்டுவது மட்டும் கேட்கும்
பார் இது பேசுகிறது என்பான்

மெழுகுவத்தி
கோப்பையில் நிலவைப்போல
அசைந்தாடுகையில்
குடிக்காமல் கவனிப்பான்

எல்லாவற்றிலும்
நம்மை நட்டுவைத்து
சுயநலத் தோப்பாகிப்போனோம்

இந்த அவனது வாசகம்
எனக்கு மிகவும்
பிடித்த ஒன்று

ஒரு நாள் கேட்டேன்
மெழுகுவத்தி அணைந்துபோனால்
என்ன செய்வாய்

சிரித்தான்
சத்தமிட்டான்
அமைதியானான்
சொன்னான்

நான் ஏற்றும் மெழுகுவத்திகள்
அணைவதே இல்லை
எல்லாம் எனக்குள்
எரிந்துகொண்டிருக்கின்றன

அப்போது
அவன் கண்களில்
ஆடிய ஜூவாலை
என்னை கவனிக்கவைத்தது

அனுபவ சித்தனின் குறிப்புகள்

525-

குழந்தையின் மழலைக்குள்
குதிக்கிறது
அருவியின் பேரிசையும்
அமைதியின் கருணையும்

526-

கிடைக்கும்
ஏதாவது கிடைக்கும்
இரண்டிற்குமிடையில்
கிடைக்கப்போவதை
நினைத்தபடி

527-

நான் தருணங்களில்
தொலைபவன்
காலம் கண்டெடுக்கும்

528-

குத்திக் கிழித்து
ரத்தம் வரவழித்தது
எது என்று பார்த்தேன்

முனை முறிந்த
கனவு

529-

புவியீர்ப்பு விசைக்குள்
வராமல் மிதந்தபடி
எறிந்த பந்து

530-

எங்கிருந்து
தொடங்குவது
கேள்வியிலிருந்து

Saturday, May 28, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

522-

உரையாடல்
முடியும்முன்
உதிர்ந்தது இலை

இறங்கிக்கொண்டிருக்கும்
இலையின் மீது
விழுகின்றன
மரத்தின்
மீதிச்சொற்கள்

523-

கையள்ளிப்போனது
கடலானது
இறைத்தபோது

524-

எனக்கான மன்னிப்புகளை
எனக்கான தவறுகள்
வழங்கிக்கொண்டிருக்கின்றன

Friday, May 27, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

518-

நரை வீதிகளில்
ஞாபகம் மறந்து திரியும்
நினைவுகள்

519-

புள்ளிகளில் நெரிசல்
தாளில் தடம் தேடும்
வார்த்தைகள்

520-

கேட்டவனுக்குத்
தர எதுவுமில்லை
பிரபஞ்சத்தைப்
போட்டுவிட்டு நடந்தேன்

521-

ஏதோ ஒரு
இருளும்
வழி காட்டும்

தூறல் மேகங்கள்

மழை வர
பிரார்த்திக்கும்
குழந்தையின் கண்களில்
தூறல் மேகங்கள்

கண்ணீரின் புன்னகை

கண்ணீரின் புன்னகை
என்று எழுதிய பின்
துடைத்துக்கொண்டேன்
அதுவாய் வந்த கண்ணீரை
அதுவாய் வந்த புன்னகையுடன்

திரும்புதல்கள்

ஊர் திரும்ப வேண்டும்
நகரத்தை
எடுத்துக்கொண்டு

நகரம் திரும்ப வேண்டும்
ஊரை
எடுத்துக்கொண்டு

Wednesday, May 25, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

511-

ஊசிக்குள்
நான் நுழைந்து
பின் வரச்சொன்னேன்
தயங்கிய நூலை

512-

இருளில்
ஒரு தவறு செய்தேன்

தவறுக்கு
இருளையும் உடந்தையாக்கியது
இன்னொரு
தவறாகிப்போனது

513-

நுனிப்புல் மேய்பவர்களிடம்
கேட்காதீர்கள்
வேரின் ருசி பற்றி

514-

அறையை
பந்தயமைதானமாக்கிய
தனிமை
தூக்கி எறிந்து விளையாடியது
என்னை

515-

போகக்காணோம்
நான்கள் துப்பி
ஏறிய கறைகள்

516-

எதுவுமற்று
முடிந்த கவிதை
அனாதையாகிவிட்டது
எதுவுமற்று

517-

காற்றே
இசைதான்

Tuesday, May 24, 2011

குறிப்பு

தற்கொலை செய்துகொண்டவன்
அருகில் இருந்த
ஒற்றை வரி குறிப்பு

சற்று நேரத்தில்
மழை வரலாம்

மீண்டும் மீண்டும்

நீங்கள் பொம்மையை
உடைத்துவிட்டதற்காக
குழந்தை அழவில்லை
தன்னை உடைத்துவிட்டதால்
அழுகிறது
அது தெரியாமல்
புதிதுபுதிதாய்
பொம்மைகளைத் தயாரிக்கிறீர்கள்
மீண்டும் மீண்டும்
குழந்தைகளை உடைக்கிறீர்கள்

Monday, May 23, 2011

மிதத்தல்

குழந்தையின் மழலையில்
மிதக்கிறது
பெளர்ணமி

தடங்கள்

மூன்று குதிரைகள்
ஓடின

இரண்டு குதிரைகள்
ஓடின

ஒரு குதிரை
ஓடியது

எந்த குதிரையும்
இல்லை

ஓடிக்கொண்டிருக்கிறேன்
குதிரையின்
காலடித் தடங்களுடன்

இப்போது

இந்த அழுகையை
இந்த காயத்திற்கு
பொறுத்திக்கொள்ள முடியாது

ஆனாலும்
இந்த அழுகை இப்போது
தேவையாக இருக்கிறது

Saturday, May 21, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

501-

யார் போட்டார்
தெரியவில்லை
உட்செவியில்
குவிந்த பொய்கள்

502-

உயிர்விடாது
நீர் துளியில்
நீந்தும் மீன்

503-

நடக்கும்போதெல்லாம்
போதிக்கும்
சாலைகள்

5O4-

இடைவெளியில்
மறைந்துகிடக்கும்
இடைவெளிகள்

505-

பிய்த்தெறியும்போது
குத்தியதைவிடவும்
வலி

506-

வழியும் கண்ணீரில்
முடிந்துபோகிறது
ஏதோ ஒரு கனவு

507-

ஊர்ந்துபோகிறது
அமைதி
அமைதியாக

508-

எடுத்துக்கொள்கிறேன்
தேவையுள்ளதில் இருந்து
மிகத் தேவையானதை

509-

துண்டு துண்டாக
உறங்கிவிடுகிறேன்
உள்சதுரங்களில்

510-

சிலர் பேச்சில்
குரைக்கும்
நாய் சத்தம்

வானத்திலிருந்து

மழை நூல் பிடித்து
ஏறிய குழந்தை
கையசைத்தது
வானத்திலிருந்து

வரச்சொன்னது
மேலேறி

என் அறியாமை கண்டு
சிரித்து
பின் இறங்கியது
மழைத்துளியாய்

நட்புடன்

குறுகிய அறையை
கண்டுபிடித்து
ஜன்னல் திறக்கும்போதெல்லாம்
வந்துவிடுகிறது குருவி

நானாய் விரட்டியதில்லை
அதுவாயும் போனதில்லை

அது இருந்துபோகும்
தருணங்களில்
விசாலமாகிவிடுகிறது
அறையும்

கைவிடப்பட்ட குழந்தை

கைவிடப்பட்ட குழந்தை
ஒரு கனவிலிருந்து துண்டிக்கப்படுகிறது
ஒரு கதையில் இடம் தேடுகிறது
வாகனங்களை பொம்மைகளைப்போல ரசிக்கிறது
அதன் சத்தங்களை தன் வாயால் எழுப்ப முயற்சிக்கிறது
விரட்டுபவரின் நிழலை மிதித்துச் செல்கிறது

கைவிடப்பட்ட குழந்தை
ஒரு பட்டத்தை நோக்கி ஓடுகிறது
கொஞ்சம் அழுகையை நிறுத்துகிறது
சுண்டல் விற்பவனிடம் கை நீட்டுகிறது
அம்மாவின் இடுப்பில் ஆடும் குழந்தையைத் தொடுகிறது

கைவிடப்பட்ட குழந்தை
மணல் அள்ளிப் போடுகிறது
தன் பெயரைத் தேடுகிறது
பொம்மையைப்போல் கிடக்கிறது
கால் பரவும் சிறுநீரைத் துடைத்துவிடுகிறது

கைவிடப்பட்ட குழந்தை
தன் மழலை வழியே மேலேறுகிறது
கைகளால் வானவில்லை அசைக்கிறது
விழும் நிறங்களை அள்ளுகிறது
கடலில் தூக்கி எறிகிறது

கைவிடப்பட்ட குழந்தை
காணமல் போனவரின் போஸ்டர் அருகில் நிற்கிறது
அதிலிருக்கும் முகத்தைத் தடவுகிறது
மேல் ஊரும் எறும்பை மெல்ல எடுத்து விடுகிறது

கைவிடப்பட்ட குழந்தை
தாய்களைப் பார்க்கிறது
தந்தைகளைப் பார்க்கிறது
மனிதர்களைப் பார்க்கிறது
யாரும் தன்னைப் பார்க்கவில்லை எனினும்
ஆழ்ந்து உற்று அருகில்போய்
அதிகமாகப் பார்க்கிறது

கைவிடப்பட்ட குழந்தை
தான் கைவிடப்பட்டது தெரியாமல்
தேடிச்செல்கிறது இன்னொரு குழந்தையை
தன் கைபிடித்து அழைத்துச் செல்ல


நன்றி- ஆனந்த விகடன்

*ஆனந்த விகடன் இதழில்(25.5.11)
வெளியான கவிதை.

Friday, May 20, 2011

கேட்கிறான்

நீ தின்னும் ரொட்டியில்
இறைவன் இருக்கிறான்

போதாதவன் சொன்னான்

என் பசியில்
இருக்கும் இறைவன்
இன்னும் கேட்கிறான்

Wednesday, May 18, 2011

கரித்துண்டு

குழந்தை கையில்
கரித்துண்டு
வானவில்லைப்போல
சிரிக்கிறது

அனுபவ சித்தனின் குறிப்புகள்

495-

நடந்தவர் சொன்னார்
நான் வழிகளில்
பயணம் செய்யும் போதே
வரிகளிலும் பயணிப்பவன்

496-

தூர்ந்து போன கிணறாய்
சிலர் மனம்
இறைக்க முடியாமல்
தாகம் தீர்க்க முடியாமல்

497-

திட்டம் மாற்றப்பட்டது
இன்று பயணம்
எனக்குள்தான்

498-

என்ன வேண்டும்
எடுத்துக்கொள்ளுங்கள்

எதுவுமில்லையே

உங்களுக்கு
எடுக்கத் தெரியவில்லை

அடுத்தவர் வாருங்கள்

499-

நீர் வற்றிப்போனாலும்
மணல் மிதந்து போகிறது
சொப்பனப் படகு

500-

திறக்க
உள்ளிருக்கும்
பிரபஞ்சம்

Tuesday, May 17, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

488-

கிளையாக
நீண்டுபோனதை
முறித்துப் போடலாம் என
முடிவு செய்தபோதுதான்
தெரிந்தது
ஆழமாக
வேர்விட்டிருப்பது

489-

உங்களிடம்
நெருப்பு இருக்கிறது
அணையாமல்
பார்த்துக்கொள்ளுங்கள்

நான் அணைக்காமல்
பார்க்க வேண்டும்
என்பதில்லை

அதுவே அணையாமல்
பார்த்துக்கொள்ளும்

490-

முதுகு சொறிந்துவிடுபவரைப்
பார்த்தேன்

முகமே இல்லாமல்
பேசிக்கொண்டிருந்தார்


491-

அந்தரத்தில்
மிதந்துகொண்டிருந்தேன்
தள்ளிவிடுவார்களோ என்று
யோசித்தபோது
விழுந்துபோனேன்

492-

கையளவே
வார்த்தைகள்

கடலில்
எறிகிறேன்

மூழ்கி
மீன்களோடு
விளையாடிவிட்டுப்
போகட்டும்

493-

அல்லது இது
அல்லது அது
அல்லது எதுஎனினும்
என அல்லதுகளில்
கழியுது காலம்

494-

அசையும் கிளை
சொல்லெடுத்துத் தர
உரையாடுகிறேன்
வனத்துடன

Monday, May 16, 2011

கடைசி வார்த்தை

கொல்லப்பட்ட பறவையின்
கடைசி வார்த்தை
துடிக்கிறது
காற்றில் போய்
தன் குஞ்சுக்கு
எதையோ
சொல்லி விட

Sunday, May 15, 2011

ஞாபக வட்டம்

உடையும்
நீள்சதுரமாகும்
சதுரமாகும்
கூம்பாகும்
தூளாகும்
துகள்களாகும்
புள்ளிகளாகும்
வடிவம் மாறி
திரும்ப
தானாகும்
ஞாபக வட்டம்

தெய்வங்கள்

குழந்தைகள்
சிறு தெய்வங்கள்
குழந்தையிடம் சொன்னேன்
சிரித்துச் சொன்னது
தெய்வங்கள்
பெரிய குழந்தைகள் என்று

Saturday, May 14, 2011

நட்பு

மலையுச்சி தாண்டி
வரும் பறவை
நட்பாயிற்று
பல பிரயத்தனங்களுக்குப் பிறகு

அடிவாரம் தாண்டா
என்னருகில்
ஒரு நாள் அமர்ந்து
தன் கண்ணுக்குள் இருந்த
மலையுச்சியைக்
காட்டி சென்றது

Friday, May 13, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

477-

சுழலும் பம்பரம்
விழப்போகும் தருணம்
துயரமானது
தவிர்க்க வேண்டும்

478-

வெளவால் போல்
தலைகீழாய் நீ

வெளவால் போல்
தலைகீழாய் நீதான்

மனமும் நானும்
ஒருவருக்கொருவர்
புகார் சொல்லிக்கொண்டு

479-

முடிவோடு வந்து
தாழ்பாளிட்டவனிடம்
கோரிக்கை வைத்தது

நான் வெறும் கயிராகவே
இருக்கிறேனே

அந்தக் குரல் அவனுக்கு
கேட்கவில்லை

480-

தண்டவாளத்தில் கோழிக்குஞ்சு
வருகிறது ரயில்
உடைந்தது கனவு

481-

எதுவுமில்லை

கிடைத்துவிட்டது
என்ற வார்த்தையோடு
விளையாடுகிறேன்

482-

தனியே வந்தவன்
பேசிச்செல்கிறான்
போதையுடன்

483-

நுழைவாயிலில்
பரிசோதனைகளுக்குப் பிறகு
இந்த வார்த்தைகளோடு
செல்லக்கூடாது என்றார்கள்
ஆயுதமற்ற போராளியாய்
போக விரும்பவில்லை
திரும்பிவிட்டேன்
என்னை வளர்க்கும்
வார்த்தைகளுடன்

484-

தன் வன்மம்
உதிர்த்த பாறை ஆனது
தொன்மம் மாறா
சிலையாய்

485-

பறந்து வந்து
அமர்ந்தது இருள்
பட்டாம் பூச்சியைப்போல
வரைந்துகொண்டிருந்த
பட்டாம் பூச்சி மேல்

486-

எனக்கு முன்
ஊர்போய் சேர்ந்த
எறும்பிடம் கேட்டேன்

எப்படி உன்னால் முடிந்தது

நீ கேள்வியின்
அந்த முனையில் இருக்கிறாய்

நான் பதிலின்
இந்த முனையில் இருக்கிறேன்

குரல் வந்தது

487-

மரத்திடம் சொன்னேன்

நீ இலைகளை
கொன்றுபோடுகிறாய்

உதிர்தல்
மரணம் என்று
சொல்வாய் எனில்
பூத்தலும் மரணம்தான்

சொல்லி சிரித்தது
என் மேல்
இலைகள் விழ

Tuesday, May 10, 2011

வேறு வேறு

தங்கச் சுரங்கத்தை
இழந்துவிட்டேன்
மோதிரம்
தவறிப்போனது குறித்து
வருத்தமில்லை

வேறு வேறு
இருவர்களுக்கிடையில்
இந்த வரி
வேறு வேறு
வடிவம் கொள்கிறது

Monday, May 09, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

472-

கடைசி ஆசையையும்
புதைத்தேன்
சவப்பெட்டியில்
பூத்திருக்கும் மலர்கள்
உதிர நாளாகும்

473-

இல்லை என்பவர்களிடம்
இருக்காது
பெரிதாக எதுவும்

474-

முதல் வார்த்தைக்கு
தவமிருந்தேன்
மற்றவை
வார்த்தைகளின் தவங்கள்

475-

வழிகளில்
தொலைபவன் நான்

வழிகளை
தொலைப்பவன் அல்ல

476-

ஒரு நூல்கண்டால்
என்னைக் கட்டிப்போட்டேன்
பின் நூல்கண்டு
அறுபடாமல் வெளியேறினேன்
அறுபட்ட காயங்களில் நான்
அங்குமிங்குமாய்
கொஞ்சம்
சிதறி இருக்கலாம்

அவன்

சூயிங்கம் மெல்கிறவன்
காட்சிகளையும் மெல்கிறான்
அதில் நசுங்கி வெளியேறுகிறாள்
ஒரு பெண்

Friday, May 06, 2011

ரயில்

அழுதது குழந்தை

நீ அழுதால்
மெதுவாக போகும் ரயில்
சிரித்தால்
வேகமாகும்
என்றேன்

அழுகை நிறுத்தி
சிரித்தது

பார் ரயில்
வேகமாகிறது


இல்லை
அப்படியேதான் போகிறது
சொல்லியபடியே அழுதது

குழந்தை பிடித்த தும்பியாய்
நெளிந்தபடி
நான்

குழந்தையின்
அழுகைக்கும் சிரிப்புக்கும் இடையில்
எந்த வேகத்தில்
செல்வது என்று தெரியாமல்
ரயில்

Thursday, May 05, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

467-

வேட்டைக்கு பின்
இறந்து கிடந்தோம்
மிருகமும் நானும்

வேட்டைக்கு முன்
தப்பி பிழைத்தோம்
நானும் மிருகமும்

468-

வயதானால் என்ன
அந்தரங்கத்தில்
குழந்தை நான்

469-

வேகமாக
வெளியேறி விடுகிறோம்
அதைவிட வேகமாக
சிக்கியும் விடுகிறோம்

470-

காற்றில் செய்த சாவி
கையிலுண்டு

அது வானின்
எந்த கதவையும்
திறக்கும் நன்று

471-

வார்த்தை இல்லாதபோது
வெறுமனே பார்க்கிறேன்
வேறு ஒன்றும்
செய்வதில்லை

Wednesday, May 04, 2011

கவிதைக்குள்

கவிதைக்குள்
நுழைவது என்பது
ஒரு வனத்திற்குள்
நுழைவதைப் போல

கவிதையிலிருந்து
திரும்புவது என்பது
விலங்குகள் எதையும்
வேட்டையாடாமல்
ஒரு பூவைப்
பறித்துக்கொண்டு
வருவதைப் போல

Sunday, May 01, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

460-

தன் தலையில்
ரத்தம் சூடி இருக்கும்
முள்ளுக்குத் தெரியாது
துடித்து அடங்கிய வலி

461-

துரோகங்களை
நீங்கள் மறந்துவிடலாம்
துரோகங்கள்
ஒருபோதும் உங்களை
மறப்பதில்லை

462-

நாகரீகம் கருதி
அழவில்லை
ஆனாலும் ஒரு துளி
கசியாமலில்லை

463-

பிரார்தனைகளை
மறந்துவிட்டேன்
இறைவன் ஞாபகத்தில்
வைத்திருப்பார் என்பதால்

464-

குவளை நீரை
குடித்தன பறவைகள்
தீர்ந்தது என் தாகம்

465-

என்னைத்
தின்னக் கேட்கிறது
வன்மம்
வன்மத்தை
தின்கிறேன்
நான்

466-

வாக்கியங்களின்
வார்த்தைகளுக்கிடையில்
பார்வைகள்
புத்தகம் முழுதும்
கண்கள்

நாவு

வீட்டின் நாவு
கதவு
பூட்டி
ஊர் செல்லும்போதெல்லாம்
அது சீக்கிரம்
வரச்சொல்லிக்
கேட்டிருக்கிறேன்

தெரிவதில்லை

ஒரு பூச்சியை
நசுக்கி கொல்வதைப் போல
என் பிரியத்தைக் கொல்கிறாய்
இறந்த பின்னும்
வலி தரும்
இந்த மரணம் பற்றி
உனக்குத் தெரியவாப் போகிறது

Saturday, April 30, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

456-

நான் எனும் சொல்
நான் சொல்ல
மொழியாயிற்று

457-

முன் கனவை நோக்கி
நான் சென்றேன்
பிற கனவுகள் வந்தன
எனை நோக்கி

458-

நான் வரைந்த பறவை
தான் அமர
வரைந்தது கிளையை

459-

இறந்த கால பிழையை
நிகழ்கால ரப்பரால்
அழிக்கப்பார்த்தேன்
முடியவில்லை
தேய்கிறது எதிர்காலம்

Thursday, April 28, 2011

விட்டு வந்த வார்த்தை

வனத்தில்
விட்டு வந்த வார்த்தை
அடுத்த முறை
சென்றபோது சொன்னது

நான் இங்குதான்
முளைத்திருக்கிறேன்
கண்டுபிடி என்று

திரும்பும் வரை
தெரிந்துகொள்ள முடியவில்லை

வெளியேறியபோது
சிரிப்பு சத்தம் வந்தது

அது வனத்திடமிருந்தா
வார்த்தையிடமிருந்தா
தெரியவில்லை

தெரியாது

நீங்கள் நல்லவர்தான்
உங்களுக்கு எதுவும் தெரியாது

நாங்கள் கெட்டவர்தான்
எங்களுக்கு எதுவும் தெரியாது

மக்கள் அப்பாவிகள்தான்
அவர்களுக்கு எதுவும் தெரியாது

ஒரு பூ

எப்போதும் போகும்
சாலை ஓரத்தில்
இப்போது புதிதாய்
பூத்திருக்கிறது
பெயர் தெரியாமல்
ஒரு பூ

Monday, April 25, 2011

இன்னொரு குழந்தை

பால்கனியிலிருந்து
நடந்துபோகும்
என்னைப் பார்த்தபடி
கை அசைக்கிறது
ஒரு குழந்தை
கண் மலர

விழுந்து இறந்துபோன
நீச்சல் குளத்திலிருந்து
மேலெழும்பி வந்து
கை அசைத்துப் போகிறது
இன்னொரு குழந்தை
கண்ணீர் உதிர

(நந்தனாவின் நினைவிற்கு)

Sunday, April 24, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

453-

வான்வெளியில்
பறந்தடங்கும்
சுட்டு வீழ்ந்த
பறவையின் சத்தம்

454-

பொறுமையின்
ஆழ்வெளியில்
படைப்பின் வெளிச்சம்

455-

கண் மூடிப் பார்த்தேன்
கண் திறந்து
என்னை பார்த்த
உறக்கத்தை

தாகம் உடையும்

காணோம் மழையை
வானம் அனுப்பிய
ஒற்றைத் துளி மட்டும்
வந்து கொண்டிருக்கிறது
தாகம் உடைக்க

வெள்ளை சுவர்

இந்த வெள்ளை சுவரில்
யாரும் எதுவும்
வரைய வேண்டாம்
இதுவே
ஓவியம் போலிருக்கிறது

Friday, April 22, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

450-

பிடிபடும்
நழுவும்
மாயமீன்
என் நீச்சல்
அழித்து

451-

நகம் வெட்ட
உடைந்து விழுந்தது
ஒளிந்து கிடந்த இருள்

452-

கண்ணாடி முன்
நிற்கிறேன்

சிறு பொய்யாய்
பிம்பத்தில்
ஊர்ந்து செல்வதைப்
பார்த்தபடி

Wednesday, April 20, 2011

ஒரு மழை நாளில்

ஒரு மழை நாளில்
பிரிந்தோம்

மழை நாட்கள்
நம்மை விட்டுப்
பிரியவே இல்லை

Tuesday, April 19, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

446-

இல்லாத எல்லையில்
இருப்பது
எல்லை இல்லாதது

447-

யாரோ விட்டுப்போன வியர்வை
மைல்கல் மேல்
உறைந்து போயிருந்தது
அதிலிருந்தன திசைகள்
கடலளவு கைகளுடன்
வழிகாட்ட

448-

போதையில்
வழி தொலைத்தவன்
தன் கால்களிடம் கெஞ்சுகிறான்
வழி பார்த்து
போகச் சொல்லி

449-

ஒரு துளியே
கடலாச்சு

Friday, April 15, 2011

இரண்டு வரிகளுக்கிடையில்

இரண்டு வரிகளுக்கிடையில்
ஓடுகிறது ஒரு நதி
எரிகிறது ஒரு காடு
சாம்பலாகிறது ஒரு கடிதம்
பேசுகிறது ஒரு பொம்மை
சிரிக்கிறது ஒரு குழந்தை
இறக்கின்றன சில வார்த்தைகள்

இரண்டு வரிகளுக்கிடையில்
தெரிகிறது ஒரு சிற்றூர்
கேட்கிறது யாழிசை
பறக்கிறது ஒரு பட்டாம்பூச்சி
நகர்கிறது ஒற்றை மண் புழு
தெறிக்கிறது ஒரு ஊற்று
அழைக்கிறது ஒரு வனம்

இரண்டு வரிகளுக்கிடையில்
ஒளிர்கிறது ஒரு கலங்கரை விளக்கு
வழி அடைகிறது ஒரு கப்பல்
கையசைக்கின்றனர் சில பயணிகள்
விழுகிறது ஒரு அருவி
பெருமூச்சு விடுகிறாள் ஒரு மூதாட்டி
உதிர்கின்றன சில கண்ணீர்த் துளிகள்
கண் திறக்கிறது ஒரு சவப்பெட்டி

இரண்டு வரிகளுக்கிடையில்
மின்னஞ்சலுக்கு பழக்கப்பட்ட விரல்கள்
நாளுக்குத் தயாரான புன்னகை
பதுங்கியுள்ளனர் சில தீவிரவாதிகள்
புதைந்துகிடக்கின்றன சில துப்பாக்கிகள்
மறைந்திருக்கின்றன சில மர்மங்கள்

இரண்டு வரிகளுக்கிடையில்
காதலை மீட்டெடுக்கிறான் ஒருவன்
குழந்தைக்கு பெயர் யோசிக்கிறாள் ஒருத்தி
தினசரியில் தன் மரண அறிவிப்பை பார்க்கிறான் பயந்தவன்
துரோகத்தின் வலிகளை விழுங்குகிறான் இழந்தவன்

இரண்டு வரிகளுக்கிடையில்
தற்கொலையைத் தள்ளிவைக்கிறான் யோசிப்பவன்
மீன்களை வரைபவள் பொறி போடுகிறாள்
தூசிமுட்டித் திணறுகிறது திருமண ஆல்பம்

இரண்டு வரிகளுக்கிடையில்
தப்பித்தவன் முகமூடியை மாற்றிக்கொள்கிறான்
கிளம்புகிறது ஒரு மலைப்பாதை ரயில்
கனவைத் திறக்கிறாள் ஒரு சிறுமி
குளிரில் நடுங்குகிறது இரவு
வார்த்தைகளை நனைக்கிறது மழை

இரண்டு வரிகளுக்கிடையில்
தனிமையை உடைக்கிறது கனவு
போதையில் ஏறுகிறான் வழி மறந்தவன்
நேரம் கொறித்தபடி பார்வையாளன்
தனக்குள் நடந்து போகிறது நெடுஞ்சாலை

இரண்டு வரிகளுக்கிடையில்
எதுஎதுவோ நிகழ்கிறது
எதுஎதுவோ மாறுகிறது
எதுஎதுவோ தொடர்கிறது
எதுஎதுவோ பிரிகிறது
எதுஎதுவோ அழிகிறது

இரண்டு வரிகளுக்கிடையில்
முடிவைத் தேடுகிறது இந்தக் கவிதை

Wednesday, April 13, 2011

வலிகள்

இரவு தன் வலியை
கனவிடம் சொன்னது

கனவு தன் வலியை
கண்ணீரிடம் சொன்னது

கண்ணீர் தன் வலியை
பூமியிடம் சொன்னது

பூமி தன் வலியை
வேரிடம் சொன்னது

வேர் தன் வலியை
பூவிடம் சொன்னது

பூ தன் வலியைச் சொல்லாமல்
உதிர்ந்து போனது

Tuesday, April 12, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

445-

நான் விழுந்ததைப் பார்த்தவர்
சிரித்துக்கொண்டே போனார்

எழுந்ததைப் பார்த்தவர்
முறைத்துக்கொண்டே போனார்

விழுந்ததற்கும் எழுந்ததற்கும்
இடையில்
நடந்து சென்றதைப் பார்த்தவர்
கைதட்டிக்கொண்டே போனார்

Saturday, April 02, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

437-

வெட்டியவன் சொன்னான்
உன் பாவங்களை
உன் ரத்தத்தால் கழுவுகிறேன்

அதிர்ச்சியுடன் எழுந்தேன்
கனவுகள்
உண்மை பேசுமா என்ன

438-

தீரா நான்
தீரா என்னில்
தீரா வேட்கையுடன்

439-

அலைந்து திரிந்து
திரிந்து அலைந்து
வந்து சேர்ந்தேன்
அலைந்து திரிய
திரிந்து அலைய

440-

கனவு அறுத்த தூக்கங்கள்
உதிர்ந்து கிடக்கின்றன
கண்ணுக்குள்

441-

மூழ்கியவர்கள் பட்டியலில்
என்னையும் சேர்க்க
முயற்சிக்கிறீர்கள்

கரை சேர்ந்த
என்னைப் பார்த்தபடியே

442-

விளக்கணைகிறேன்
இருளுடன்
பேச வேண்டும்

443-

மின்னல் ஒளி போதும்
கடக்க

மழைத்துளி போதும்
குடிக்க

444-

என் ஆழம் அறிந்தால்
உயரம் உணர்வாய்
சொன்னது மலை