Thursday, June 16, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

536-

நான் பலநூறு ஆண்டு
பழமையான மரம்
வெட்டவா போகிறாய்

பதிலில்லை

விழுந்துகொண்டிருந்தது
பல நூறு ஆண்டுகளோடு
இப்போதைய கணங்களும்

537-

மூச்சு முட்டி
இறந்துபோனது
ஜன்னலற்ற வீடு

538-

எப்போதும் போல்
இந்த கண்ணீர் சுடவில்லை
எரித்தது

539-

பசி
கனவள்ளித் தின்னும்
இரவு

540-

கண்ணீரால் பேசிக்கொண்டோம்
புன்னகை ஒளிந்தபடி
பார்த்திருக்க

541-

துள்ளி மேலெழும்பி வந்து
சொல்லிவிட்டுப்போனது
நான் கடலைத் திறக்கும் மீன்

542-

மையமற்ற நிலைக்கு
போவாயா என்றேன்

எனக்கு வடிவச் சிக்கலை ஏற்படுத்தி
நீ உட்கார்ந்து
வேடிக்கைப் பார்க்க போகிறாயா என்று
கேட்டபடியே
ஓடியது வட்டம்

543-

கண நேர
கண் மூடல்
பெரும் தூக்கம்

1 comment: