Saturday, October 17, 2009

பார்க்கும் பொம்மை

தன் குழந்தைக்கு
பொம்மை
வாங்க முடியாது
எனத் தெரிந்து
பேரம் பேசி
வெளியேறப் பார்க்கிறார்
அப்பா

பாசம் உணர்ந்து
கட்டுபடியாகும் பேரத்துக்கு
படிய வைத்து
விற்கப் பார்க்கிறார்
கடைக்காரர்

பொம்மைப் பார்க்க
போராடுகின்றனர்
இருவரும்

Thursday, October 15, 2009

தெரிதல்

பசித்தவன்
கண்களில் தெரிந்தது
இல்லாத வயிறு

வரைதல்

வண்ணங்களிலிருந்து
இசை எடுத்து
வரைகிறேன்
ஒரு புல்லாங்குழல்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

04

கைபிடித்த காற்றை
திறந்து பார்த்தேன்
பத்திரமாயிருந்தது
பிரபஞ்சத்தில்

05

முற்றுப்புள்ளிக்கு
முன்னால் இருக்கிறது
நான் படித்த கதை

முற்றுப்புள்ளிக்கு
பின்னால் இருக்கிறது
நீங்கள் படிக்க வேண்டிய கதை

06

நீங்கள் விரலாக
பார்ப்பதற்கு முன்
ஒரு வேண்டுகோள்

இந்த ஆறாவது விரலை
நான் வாளாகவும்
பயன்படுத்துவேன்

Wednesday, October 14, 2009

மையப்புள்ளி

வட்டத்தின் உள்ளே
சுற்றும் எறும்பு
மாற்றிக் கொண்டே இருக்கிறது
மையப்புள்ளியை

வியூகம்

நாவின் மேலே
வியூகம் அமைக்கும்
வார்த்தைகள்

நாவின் அடியில்
பதுங்கிய கோபம்

ஒற்றைச் சலங்கை

மேடையில் கிடக்கும்
ஒற்றைச் சலங்கை
ஆடியாடித் தேடுகிறது
அனாதையாய்
விட்டுப் போனவளை

ஊஞ்சல்

ஊஞ்சலில்
ஆடிய குழந்தை
தூங்கிப் போனது

தாலாட்டிய ஊஞ்சலும்
தூங்குகிறது
அசைவைக் கேட்டபடி

Friday, October 09, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

01

எனக்குள் நேராய்
தொங்கும் வெளவால்கள்
நான் தலைகீழாய்
இருப்பதாய்
பரிகசித்துப் பறக்கின்றன

02

நான் இறந்த செய்தி கேட்டு
பார்க்க வந்த
முதல் நண்பர்
சிந்திக் கொண்டிருந்தார்
என் கண்ணீரை

03

…65…64…63
என எண்களைச்
சுருக்கிக் கொண்டே வருகிறது
வெடிகுண்டு

சீக்கிரம் ஓடிப்போய்
தொலைக்காட்சி பெட்டிமுன்
அமர்ந்து கொள்ளுங்கள்

சேதாரங்கள் சோகங்கள்
உங்களுக்கு
'லைவ்' வாக வரும்

Wednesday, October 07, 2009

எலக்ட்ரானிக் விலங்கு

கதை தட்டுப்பாடு
தடைகளைத் தாண்டி
மூன்று வருடங்களாக
எங்கள் பழைய டீவியில்
ஓடிக்கொண்டிருக்கிறது
அந்த மெகா சீரியல்

நாங்கள் டீவி மாற்ற போட்ட
திட்டம் எல்லாம்
கை நழுவிப் போனது

அது ஒரு
இறந்து போன
எலக்ட்ரானிக் விலங்கு
என்றான் விஞ்ஞானம்
படிக்கும் மகன்

ஒரு நாள்
மெகா சீரியலில்
பேசிக்கொண்டிருந்தார்கள்
எல்லோரும்

இந்த மங்கிப் போன டீவிய
இவுங்க எப்ப மாத்தப் போறாங்க

என் மேல்

நான் தூக்கி எறிந்த
ஒவ்வொரு கணமும்
இறந்த பழமாக
விழுந்தது என் மேல்

நிகழ்வின் முடிவில்

நிகழ்வின் முடிவில்
எப்போதும் பேசிக் கொள்கிறோம்

இந்த விபத்தை
தவிர்த்திருக்கலாம்

Tuesday, October 06, 2009

காத்திருத்தல்

காத்திருந்து
காத்திருந்து
பழகிப் போச்சி
காத்திருக்க

Monday, October 05, 2009

இல்லாதது

இல்லாத ஒரு கவிதையை
இல்லாத ஒருவன் எழுத
இல்லாத மற்றொருவன் படிக்கிறான்
இல்லாத வேறொரு இடத்திலிருந்து

அனுமதி

எனது தற்கொலைக்கு
அனுமதி கிடைத்து விட்டது
என்னிடமிருந்து

Friday, October 02, 2009

வானவில்

உதட்டில் ஊர்ந்து
போகிறது வானவில்
மெளத் ஆர்கன்
வாசிக்கும் சிறுவன்

அரங்கில் அவன்

அரங்கில் நடித்து முடித்து
பார்வையாளர் இருக்கையில் அமர்ந்து
மீண்டும் பார்த்து
சரி செய்கிறான்
மறுபடி பழுதின்றி தயாராக

வெறும் மேடையை
ஏன் வேடிக்கைப் பார்க்கிறாய்
என்று அவனைப் போகச் சொல்கிறான்
கதவை மூடும் காவலாளி

பூவிலிருந்து...

பூவிலிருந்து
பூக்களைக்
கிள்ளி எறிகிறது
குழந்தை

வார்த்தைகளின் தூரத்தில்

இன்னும் சில நொடிகளில்
இந்த பல்லி
அந்த பூச்சியைத்
தின்றுவிடக் கூடும்
என தட்டச்சு செய்யும் மனம்

வார்த்தைகளின் தூரத்தில்
அப்படியே இரண்டும்
பல்லி பசியற்று
பூச்சி மரண பயமற்று

நீரில் சதுரங்கம்

நீரில் சதுரங்கம் ஆடுகின்றன
சிறுவன் எறியும் கற்கள்

தோல்வியை
ஒத்துக் கொள்கிறது குளம்
வட்ட புன்னகை செய்து

ஞாபகத்திற்காக

வியந்து பார்த்து
ஏறிய மலை
திரும்பி இறங்குகையில்
கையில் சில
கற்களைத் தந்திருந்தது
ஞாபகத்திற்காக

Tuesday, September 29, 2009

தலைப்பு

நள்ளிரவில் எழுதிய கவிதைக்கு
பெயர் தேடிக் கொண்டிருந்தேன்
வெளிச்சத்தை தலைப்பாக
விட்டுச் சென்றது விடியல்

Sunday, September 27, 2009

மைக்கேலின் ஓவியம்

வரைந்தபடி சொல்கிறான் மைக்கேல்
தாளில் சிலுவையை
அறைந்து கொண்டிருக்கிறேன்

குழந்தையின் கடல்

கடலை வீட்டுக்கு கூப்பிட்டுப் போகலாம்
என அழுது அடம் பிடித்தக் குழந்தை
தூங்கிப் போனது
அலைகளின் தாலாட்டுக் கேட்டு

நாங்கள் திரும்பி வந்தோம்
கடலை விட்டு விட்டு

...இருக்கிறது

திரும்பாமல் போகலாம்
நம்பிக்கை இருக்கிறது

திரும்பிப் போகலாம்
பாதை இருக்கிறது

Tuesday, September 22, 2009

பிரிட்ஜின் மீது ஒட்டப்பட்டிருக்கும் கவிதை

பிரிட்ஜின் மீது
ஒட்டப்பட்டிருக்கிறது
ஒரு கவிதை

திறந்து மூடும் நேரத்தில்
சின்ன வரிகளைப்
படித்துவிட முடிகிறது

ஒட்டப்பட்டிருக்கும் கோணத்தில்
கவிதையால் வாசிக்க முடிகிறது
முழு வீட்டையும்

பிரிட்ஜ்க்குள் இருக்கும் பழம் போல
எழுத்து கெடாமல் இருக்குமா
சிரித்தபடிக் கேட்கிறாள் பாட்டி

அந்தக் காகிதம்
குளிர்ச் சாதனப் பெட்டியின்
அழகைக் குறைக்கிறது
என்கிறாள் மருமகள்

வேலைக்காரியின் மகள்
சத்தம் போட்டு
எழுத்துக் கூட்டிப் படிக்கிறாள்

ஒரு விருந்தினர்
யார் எழுதியது எனக்கேட்டு
காப்பியைக் குடித்து முடித்து
பாராட்டிச் செல்கிறார்

இதனால்
கிழிக்கப்பட இருந்த கவிதையின்
ஆயுள் நீள்கிறது

தூக்கம் வராத அப்பா
ஒரு நள்ளிரவில்
அருகில் போய் படித்து
கையால் வருடிக் கொடுக்கிறார்

சிலிர்த்துப் போகின்றன எழுத்துக்கள்

கவிதையின் பக்கத்தில்
ஆப்பிள் ஓவியத்தை ஒட்டி வைத்து
எப்படி இருக்கிறது
கேட்கிறாள் மகள்

கைதட்டி ரசித்து
அவளைப் பாராட்டிய அப்பா
படித்துப் பார்க்கிறார்

கூடி இருக்கிறது
கவிதையின் சுவை

Monday, September 21, 2009

சே குவாராவின் கனவில்

சே குவாராவின் கனவில்
நான் வருவது போல்
கண்ட கனவு
சொல்லிக்கொண்டே இருக்கிறது

விழித்திரு எப்போதும்

Friday, September 18, 2009

உண்மை

என் வயதைவிட
என் பொய்களுக்கு
வயது அதிகம்

என் மரணத்தைவிட
என் பொய்களுக்கு
உயிர் அதிகம்

Thursday, September 17, 2009

நீந்தும் வரிகள்

மீனாக நீந்து
இல்லை பிணமாக
கரை ஒதுங்கு

அப்பாவின் இந்த வரிகளை
நான் நினைக்க மறந்தாலும்
அவை நீந்த மறப்பதில்லை
என் செயல்களில்

காற்றின் பெருவெளி

காற்றின் பெருவெளியில்
அப்பாவின் இசை

அவர் விரல்கள் ஒற்றி எடுக்க
பரவுகிறது நாதம்
புல்லாங்குழலிலிருந்து

அருகே வரும் குழந்தை
நாய்க்குட்டி பொம்மையை
வைத்துவிட்டுப் பார்க்கிறது

வாசிப்பின் இடையே அப்பா
மெல்ல கண் திறக்கும்போது
புல்லாங்குழலைக் கேட்கிறது

வாங்கிப் போய் அதை
ஒரு பொம்மையாக்கி விளையாடுகிறது

புல்லாங்குழலைத் தூக்கி எறிகிறது

பின் ஓடிப்போய் எடுக்கிறது

பிரியமான நாய்க்குட்டியைத்
தட்டுகிறது

தன் வாயில் வைத்து
ஊதிப் பார்க்கிறது

ததும்பும் ஆனந்தத்துடன்
இரு வேறு அனுபவங்களில்
திளைக்கிறார் அப்பா

குழந்தையின் கையில்
இசை விளையாடுவது போன்றும்

தனக்குத் தெரியாத இசையை
குழந்தை கற்பிப்பது போன்றும்

Tuesday, September 15, 2009

தேவதைகளின் கணக்கு

விண்ணிலும் மண்ணிலும் உள்ள
தேவதைகளின் கணக்கு
என்னிடமில்லை

என்றாலும்
தேவதைகள் எல்லோரையும்
அடக்கிவிட முடியும்
இந்தக் குழந்தையின்
ஒற்றைப் புன்னகைக்குள்

சவப்பெட்டியின் அடியில்

சவப்பெட்டியின் அடியில்
பாதி நசுங்கிய மண்புழு
மீதி உயிரோடு போராடுகிறது
வெளியே வர

ஒரு புராதன சொல்

ஒரு புராதன சொல்
கவிதையில் புகுந்து கொண்டு
மொத்த கட்டுமானத்தையும்
கலைத்துப் போட்டது

ஒரு அகராதியின் குணம்
தன்னிடம் இருப்பதாக
சொல்லியபடி
எழுதிய காகிதங்களைத்
தின்று முடித்தது

பின் ஓடிப் போனது
புராதன வெளிக்குள்

சொல் சென்ற
வழி எங்கும்
இறைந்து கிடந்ததன
காலத்தின் தூசிகளும்
கவிதையின் சில்லுகளும்

Saturday, September 12, 2009

சாவி

திரும்பி வருகையில்
சாவியைத் தொலைத்தவர்கள்
தேடிக் கொண்டிருந்தார்கள்

தன் சின்ன நோட்டில்
சாவியை வரைந்த சிறுமி
அதை எடுத்து
பூட்டைத் திறந்து
உள்ளே செல்லும்போது
சொல்லிவிட்டுப் போனாள்

உங்கள் சாவி கிடைத்தவுடன்
திறந்து கொண்டு
வாருங்கள்

முனுசாமி தாத்தா

காலில் சக்கரம் மாட்டியது போல்
சுற்றி வருவார் முனுசாமி தாத்தா

எது கேட்டாலும்
அதுக்கெல்லாம் நமக்கு எங்கப்பா
நேரம் இருக்கு என்று
சொல்லிவிட்டு பறப்பார்
இளமை சாரல் அடிக்க

பாட்டி ஒரு நாள் கோபத்தில்
கத்தினாள்

சிரித்தபடியே தாத்தா
சொல்லிவிட்டுப் போனார்

அட சாவறதுக்கெல்லாம்
நமக்கு எங்க நேரம் இருக்கு

வழிகாட்டி பலகை

வழிகாட்டி பலகை
சுழல்கிறது
காற்றின் குரலுக்கேற்ப

பயணம் விரிகிறது
எல்லா திசைகளிலும்

எதுவுமற்று எல்லாம்

நானற்று கவிதை
கவிதையற்று நான்
எதுவுமற்று எல்லாம்

Friday, September 11, 2009

குட்டிச் சித்திரங்கள்

என் ஒவ்வொரு கேள்விக்கும்
பதிலை படமாக
வரைந்து காட்டினாள் குழந்தை

அவள் பிஞ்சு விரல் பிடித்து
வெளியே வந்தன
குட்டிச் சித்திரங்கள்

வண்ணங்களில் நுரைத்து
மிதந்து போனது
குழந்தையின் மொழி

முற்றிலுமாக
என் கேள்விகள் வடிந்து விட
கடைசியாக
அவள் பெயர் கேட்டேன்

எல்லா வண்ணங்களையும் குழைத்து
என் மேல் பூசி விட்டு
வீட்டுக்குள் ஓடிப்போய்
கதவைச் சாற்றிக் கொணடாள்

இந்த வண்ணங்களில்
தேடிக் கொண்டிருக்கிறேன்
குழந்தையின் பெயரை

Wednesday, September 09, 2009

மின்னல் குட்டி

அணில் சொன்ன கதையில்
மரம் இருந்தது

மரத்தில் விளையாடிய போது
கதை மறைந்தது

ஒரு கிளையில் அணிலும்
மறு கிளையில் நானும்

எனது வார்த்தைகளை
பழங்களாகத் திருப்பித் தந்தது

ஒவ்வொரு பழமும்
ஒவ்வொரு ருசியில்

கிளை அசைத்து
ஒளியை ஆடவிட்டது

குதித்து உச்சி ஏறி
கை தட்டி சிரித்தது

பயத்தைப் போட்டு விட்டு
மேலே வா என்றது

நகராத என் மேல் இரக்கப்பட்டு
கீழிறங்கியது

ஒரு பொம்மை போல்
என்னை வைத்து
விளையாடிய அணிலுக்கு
மின்னல் குட்டி
என்று பெயர் வைத்தேன்

தன் சகாக்களுக்கு என்னை
அறிமுகம் செய்தது

நீ மாமிசம் புசிப்பவனா
வேகமாய் கேட்டது
சற்று வயதான அணில்

எனது ஆமாம்
கோபத்தை உண்டாக்கியது
அந்த மையத்தில்

விருந்தினரை நாகரீகமாக நடத்த வேண்டும்
எனக்காக வாதாடிய மின்னல் குட்டி
மறைந்தது போனது
கதையில் என்னை விட்டு விட்டு

Sunday, September 06, 2009

வரியின் அடியில்

என் அழுகையில்
கண்ணீர் ஞானமடைகிறது
இதை எழுதிய போது
வரியின் அடியில்
ஓடியது புன்னகை

வனம்

உள்ளங்கையில்
மரம் முளைத்தது

தலையில் பறவைகள்
கூடு கட்டின

வியர்வையில் மிதந்தன
உதிர்ந்த இலைகள்

மரங்கொத்தி கையில்
ஓட்டைகள் போட்டு
புல்லாங்குழலாக்கி இசைத்தது

மூச்சுக்குள் ஓடி
வெளி வந்து விளையாடின
பனித்துளிகள்

மயிர்கால்கள் புற்களாயின

கால்களின் ஈரத்தில் மன்புழுக்கள்
நெளிந்தன

புன்னகையைத் தடவிப்பார்த்த
குருவி நன்றி சொல்லி
சுற்றி வந்தது

காட்டின் மொழியை
பேசத் தொடங்கியது நாக்கு

விரிந்த சத்தத்தை
நனைத்தது மழை

மெல்ல நடமாடும்
வனமாகியது உயிர்

வனத்திலிருந்து
வெளியேறிக் கொண்டிருந்தது
உடல்

தூங்காத நெடுஞ்சாலை

முன்னிரவில்
ரகசியமாய்
விசும்பி அழும் பெண்ணுக்குள்
என்ன ஓடுகிறது என்று
தெரியவில்லை

முகம் துடைத்து
நிதானித்து
மீண்டும் மெளனமாய்
அழுகிறாள்

அவள் பக்கத்து இருக்கை
காலியாக உள்ளது
பின்னால் இருக்கும் எனக்கு
எல்லாம் கேட்கிறது

என் தூக்கத்தை
களவாடி இருக்கிறது
தெரியாத ஒரு அழுகுரல்

காற்று வேண்டி
கண்ணாடியைத் திறந்து வைக்கிறேன்

வாகன ஓட்டிகளுக்கு
நட்பான
தூங்காத நெடுஞ்சாலை

இலேசாக கண் மூட
உறக்கத்தின் மீது விழுகிறது
அவள் கண்ணீர் துளி

பேருந்தில் சுற்றி வருகிறது
வயிறு பெருத்த கனவானின்
குறட்டை சத்தம்

என் யோசனை சிலுவையில்
ஆணிகள் அறைந்திருந்த
அவள் அழுகை
நின்றிருப்பது போல்
தெரிகிறது

அதிகாலை நிறுத்ததில்
இறங்கிப் போனாள்
இரவின் எந்த சுவடும் அற்று
வேறொரு பெண்ணாய்
இன்னொரு நாளுக்குள்

Friday, September 04, 2009

மூவர் மற்றும் கடல்

அப்பா மீன்கள் விற்கிறார்

மகன் மீன்களைத் தூக்கி
கடலில் எறிகிறான்

அப்பா மீன்கள் விற்ற பணத்தை
எண்ணியபடி நடக்கிறார்

மகன் எறிந்த மீன்களின் கணக்கை
போட்டபடி நடக்கிறான்

சிரிக்கிறது கடல்
தந்தை மகன் மற்றும்
என்னைப் பார்த்து

நள்ளிரவில்

நள்ளிரவில் விழித்துக் கொண்டோம்

முற்பகல் நடந்த
சண்டையை நினைத்துப் பார்த்தோம்

பின் உறங்கப் போனோம்

உன் தலையணை அடியில்
கத்தி இருந்தது

என் தலையணை அடியில்
கத்திக்கான ரத்தம் இருந்தது

Tuesday, September 01, 2009

கண்ணாடி கோப்பை

ஏறக்குறைய
விழுந்து விடுவதுபோல்
மேஜை மீது
ஓரமாய் வைக்கப்பட்டிருக்கும்
கண்ணாடி கோப்பை
விழத்தொடங்கியது
எதிர்பார்த்தது போலவே
எவரின் கையோ தீண்டி
உடைந்து நொறுங்கிய
சில்லுகளின் சத்தம்
கேட்ட கவிதை
தன் வரிகளுக்குள்
பத்திரமாய்
தள்ளி வைத்துக் கொண்டது
அதே கண்ணாடி கோப்பையை

Sunday, August 30, 2009

ஓடு…ஓடு…

ஓடு
ஓடுவதிலிருந்தும்
ஓடியதிலிருந்தும்
ஓடு…ஓடு…

Wednesday, August 26, 2009

வீடு

எல்லோரும் உள்ளிருக்க
நனைந்து ரசிக்கிறது வீடு
மழையை

கூலி

பேரம் பேசிய பின்
கூலி தரப்பட்டது
நிமிர்ந்து வாங்கிப் போனான் அவன்
குனிந்து உள்ளேப் போனார்கள் அவர்கள்

மீசை

பிறகு வீரமாய்
கவிதை எழுதலாம்
முதலில்
பாரதியார் மீசையை
வரைந்து பார்

யாருக்கும் தெரியாமல்

தற்கொலை செய்து கொள்வதற்காக
கவிதையில் ஒருவனை
மலை உச்சி வரை கொண்டு வந்தேன்
வார்த்தைகள் அவனைத் தள்ளிய வேளை
விழுந்து போகாமல் பறந்து போனான்
கவிதைக்கும் எனக்கும் தெரியாமல்

Monday, August 24, 2009

மதுக்கோப்பை

காலியாகி விட்டது
என் மதுக்கோப்பை
பிரபஞ்சத்தை ஊற்றுங்கள்
குடிக்க வேண்டும்

மந்தை

தனது ஆட்டை
மந்தையிலிருந்து
பிரிக்கத் தெரியாதவன்
இன்னொரு மந்தையில்
சுற்றிக் கொண்டிருக்கிறான்
ஆடாக

Friday, August 21, 2009

குழந்தை

நடந்து நடந்து
கால் வலித்த குழந்தை
நடந்து நடந்து ஏறுகிறது
அம்மாவின் இடுப்புக்கு

கதைகள்

பாட்டியின் கையில்
தாத்தாவின் மோதிரம்
காலம் அணிந்து பார்த்த
கதைகளைச் சொல்கிறது

இசையின் வலி

மிருகங்கள் ஆடித் திரியும்
கனவில்
மிதிபடுகிறது
ஒரு புல்லாங்குழல்
நசுங்க நசுங்க
இசையின் வலி
பரவுகிறது காற்றில்

Monday, August 17, 2009

பொம்மைகள்

பேருந்தும் பயணிகளும்
பொம்மைகளாயின
உள்ளிருந்த குழந்தைக்கு

தீராத பக்கங்கள்

நிசப்தம் தாழ்ப்பாள் போட்ட
வெள்ளைக் காகிதம்
திறந்து போக
படிக்க உண்டு
தீராத பக்கங்கள்

Thursday, August 13, 2009

அப்பாவின் கடிதம்

இந்த முறை
அப்பா எழுதியக் கடிதத்தில்
ஒரு வரியை
ரசிக்க முடிந்தது
தனிமைக்கும் எனக்கும் இடையே
நீ நடந்து போகிறாய்

இன்னும்

திசைகளைத் தின்ற பறவை
வானத்தைக் குடிக்கிறது
இன்னும் பறக்க

Tuesday, August 11, 2009

ஒரு மூதாட்டி

As a woman I have no country.
As a woman my country is the whole world.
-Virginia Woolf

வெளியேற்றப்பட்ட ஒரு மூதாட்டி
நகரத்தின் வீதிகளில்
நடந்து கொண்டிருக்கிறாள்

அவள் பையில் இருக்கிறது
கிழிந்த புடவைகளும் மீதிக் கனவுகளும்

புறக்கணிப்பின் துயரம்
அவள் கண்களில் பெருகுகிறது

ரத்த உறவுகளின் முகவரிகளை
கிழித்துப் போட்டபடிச் செல்கிறாள்

யாரும் வாய் திறந்து சொல்லவில்லை
அவள் வெளியேற்றப்பட்டிருக்கிறாள்

சிறு தூறல் அவள் புழுக்கங்களை நனைத்து
ஒத்தடம் கொடுக்கிறது

சாலையோரத் தேநீர் ஒரு சில நிமிடங்களுக்கு
சூடான நட்பாகிறது

சீக்கிரம் போய்ச் சேர்ந்துவிட்ட
தன் கிழவனைத் திட்டியபடி நடக்கிறாள்

இந்த ஒத்தைச் சுமை
அவள் முதுமையை இன்னும்
பாரமாக்குகிறது

நிராகரிப்பின் கசப்பை
உணர்ந்தபடி நடக்கிறாள்

அவளுக்கான இடம் இல்லையெனினும்
உலகத்தை நிரப்பியபடி
நடந்து கொண்டிருக்கிறாள் அந்த மூதாட்டி

அன்பின் அடியில்

அன்பின் அடியில்
ஒட்டிக் கிடக்கும்
மண்புழுக்கள் கேட்கும்
பிரியங்களின் மொழி

Sunday, August 09, 2009

ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கி

இந்த கவிதையில்
ஒரு துப்பாக்கி ஒளித்து
வைக்கப்பட்டிருக்கிறது

நீங்கள் படித்து முடிப்பதற்குள்
தென்படலாம்

அல்லது உங்கள்
கண்களுக்குப் படாமலேயே
கவிதை முடிந்திருக்கலாம்

பார்ப்பீர்கள் எனில்
துப்பாக்கியை எடுத்து
பரிசோதிக்கும் முயற்சியாய்
வரிகளுக்கிடையே
ஓய்வெடுக்கும் பறவையை
சுட்டு விடாதீர்கள்

துப்பாக்கியின் கனம்
மற்றும் அதன் உலோகத்தன்மை
எதுவும் இந்த
கவிதைக்குத் தெரியாது
அது குடித்திருக்கும் ரத்தம் பற்றிய
குறிப்புகளும் இல்லை

உங்கள் கம்பீரத்தை
காட்டும் பொருட்டு
வேண்டுமானால் துப்பாக்கியோடு
ஒரு புகைப்படம்
எடுத்துக் கொள்ளுங்கள்

வேட்டையாடிய பெருமிதம்
முகத்தில் இருக்கட்டும்

துப்பாக்கியை பயன்படுத்தியே
தீர வேண்டும் என்ற வெறி
பரவும் பட்சத்தில்
ஒவ்வொரு வார்த்தையாய்
சுடுங்கள் குறி வைத்து

செத்து விழட்டும் கவிதை
உங்கள் சிரிப்பைக்
கேட்டபடி

Thursday, August 06, 2009

கவிதையின் ஏழாம் வரி

கவிதையின் ஏழாம் வரியை
பிடுங்கிக் கொண்டு
ஓடுகிறது குழந்தை

குழந்தை கலைத்துப் போட்ட
சொற்களுக்கிடையே
கண்டெடுக்கிறேன்
குழந்தை விட்டுச் சென்ற
கிளி பொம்மையை

கேட்டுத் தெரிந்து கொண்ட பின்
திரும்ப திரும்பச் சொல்லி
வீடு முழுதும்
தானியம் போல்
இறைத்துக் கொண்டிருந்தது கிளி
என் பெயரை

புல்லாங்குழல் கலைஞன்

நாடோடி போல் தெரியும்
புல்லாங்குழல் கலைஞன்
அறிமுகம் செய்து செல்கிறான்
இசையோடு ஒரு
வனத்தையும்

Monday, August 03, 2009

இரவு நதி

உறங்காத என்
விழிகளின் அடியில்
மெல்லிய வெப்பத்துடன்
ஓடிக்கொண்டிருக்கிறது
இரவு நதி

Friday, July 31, 2009

கால்பந்து ஆடிய தேவதை

நீருக்குள்
கால்பந்து ஆடிய தேவதை
விளையாட வரச் சொன்னாள்

நீச்சல் தெரியாது என்றேன்
வருத்தத்துடன்

ஆடத் தெரியுமா என்றாள்
இல்லை என்றேன்

ஒன்றைக் கற்றுக் கொள்
அது இன்னொன்றை
சொல்லித் தரும் என்றபடி
பந்தை உதைத்து
மறைந்து போனாள்

நதிக்கரை சிலையாய் அமர்ந்திருந்த
என்னை கலைத்தது
குளித்துக் கரையேறிய
சிறுமியின் சிரிப்பு

அவள் கண்களில்
தேவதையின் புன்னகை

Thursday, July 30, 2009

பிறகு பேசுவோம்

பயன்பாடு பற்றி
பிறகு பேசுவோம்
துப்பாக்கியின்
விசை மீதும்
திசை மீதும்
இருக்கட்டும் கவனம்

இரண்டு எறும்புகள்

நான் இளைப்பாறிய
நிழலின் அருகில்
கவலையுடன் பேசிக்கொண்டிருந்தன
இரண்டு எறும்புகள்
நாளை வெட்டப்போகும்
இந்த மரம் பற்றி

சொற்கள்

அருகில் உள்ள சொற்கள்
உற்றுப் பார்க்கின்றன
எனக்குத் தெரியாத கவிதையை

Tuesday, July 28, 2009

குதிரை

கனவில் அமர்ந்து
குதிரை வரைந்து கொண்டிருந்தேன்
முடியும் வரை காத்திருந்து
ஓடிப்போனது குதிரை
கனவை எடுத்துக்கொண்டு
என்னைப் போட்டுவிட்டு

(ஆனந்த விகடன்,2.09.09 இதழில்
பிரசுரமானது)

Sunday, July 26, 2009

மழை வாசம்

செல்லமாய் கோபித்து
குழந்தை மேல்
படிந்துள்ள மழையை
துடைத்தெடுத்து
வேறு உடை எடுக்கப்
போகிறாள் அம்மா
ஈர துணி முகர்ந்து
மழை வாசம்
பிடிக்கிறது குழந்தை

Thursday, July 23, 2009

ஒரு வரி

யாரும் பக்கத்தில் இல்லை
வண்ணதாசனின் இந்த வரியை
நான் பார்த்துக் கொண்டிருந்தபோது
அவரும் பார்த்துக்கொண்டிருந்தார் என்னை

தனிமை நட்பாகிறது

தனிமை நட்பாகிறது என்ற
இந்த கவிதையை
நீங்கள் வாசிக்கும்போது
நட்பாகி விடுகிறீர்கள்
கவிதைக்கும் எனக்கும்

ஒன்றுதான்

உங்கள் புன்னகையில்
இருக்கும் ஒப்பனையும்
என் ஒப்பனையில்
இருக்கும் பொய்யும்
ஒன்றுதான்

Tuesday, July 21, 2009

வெற்றிடத்தில் ஒரு குறிப்பு

அந்தக் கதையில்
நிறைய அறைகள் இருந்தன
ஒவ்வொருவராகப் புகுந்து
வெளியேறிக் கொண்டிருந்தனர்

அந்தக் கதையில்
நிறைய ஜன்னல்கள் இருந்தன
காற்றும் இசையும்
உள் நிறைந்து
வெளி வந்தது

அந்தக் கதையில்
நிறைய மரங்கள் இருந்தன
அணிலும் பறவைகளும் விளையாடின

அந்தக் கதையில்
விதைகள் நடப்பட்டிருந்தது
படிக்கப் படிக்க
பூத்துக் குலுங்கியது

அந்தக் கதையில்
மழை பெய்தது
வானவில் தென்பட்டது
கடவுள் குழந்தைகளோடு
பேசிக்கொண்டிருந்தார்

அந்தக் கதையில்
வாசிப்புத் தன்மை
கடைசி பக்கத்திலிருந்தும்
படிப்பதுபோல் அமைந்திருந்தது

முன்னிருந்தும் பின்னிருந்தும்
படித்துக் கொண்டே வந்தவர்கள்
சந்தித்துக் கொண்டார்கள்

வெற்றிடமான பக்கங்களில்
அமைதியாக உங்களைப் படியுங்கள்
என்ற குறிப்பு மட்டும்
காணப்பட்டது

Saturday, July 11, 2009

பெய்யும் கணங்களில்...

ஜன்னலோரம்
கவனிப்பாரற்று ஹார்மோனியம்

பெய்யும் கணங்களில்
ஹார்மோனியம் கேட்கிறது
மழையின் ஓசை

மழை கேட்கிறது
ஹார்மோனியத்தின் இசை

Tuesday, July 07, 2009

குழந்தை அருவி

தான் வரைந்ததைக் காட்டி
கேட்கிறாள் சிறுமி

அருவி என்கிறார் அப்பா

ஓவியத்தை மேல்கீழாக்கி
என்ன என்கிறாள்

இது தப்பு என்கிறார்

தலைகீழாய் யோகா
செய்யும் அருவி என்கிறாள்
சிரித்தபடி

தூக்கி கொஞ்சுகிறார் தந்தை
குழந்தை அருவியை

(ஜெஸிக்காவுக்கு)

*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது

நட்பும் வரிகளும்

அவசரமாய்ப் போகிறேன்
அப்புறம் பேசுவோம்
என்றார் ஒரு நண்பர்
இம்முறையும்

பிறகு பார்க்கலாம் என
அலைபேசியை அணைத்தாள்
ஒரு தோழி

கடிதப் போக்குவரத்தை
நிறுத்திவிட்ட நண்பர்
ஈமெயிலில் தென்படுவதும்
குறைந்து போயிற்று

கோயிலில் பழக்கமான புது நண்பர்
பக்தி பரவசத்தில்
சில வார்த்தைகளோடு
சென்று விடுகிறார்

தொலைகாட்சியில் செய்தி வாசிக்கும்
நண்பனின் புன்னகையை
செய்தி முடியும் நேரத்தில்
அரிதாகப் பார்க்க முடிகிறது

குவிந்து கிடக்கின்றன மனதில்
நட்பும் வரிகளும்

தனிமையோடு நடக்கிறது
கபடி விளையாட்டு

யார் மீதும்
வருத்தம் வைக்க
விரும்பவில்லை

எப்போதும் போல்
நிதானமாய்ப் பார்த்து
தலை அசைத்து
நலம் விசாரிக்கிறது
பால்கனி செடி

இப்போது அதில்
புதிதாய்
ஒற்றைப்பூ

Saturday, July 04, 2009

நா...ம்

நாம் பிரிந்ததற்கு
பெரிய காரணம்
எதுவுமில்லை

சேரலாம் எனும்போது
அதிகமாகி இருந்தது
காரணங்களின் கூட்டுத்தொகை

கதை சொல்லி

பாட்டியை எல்லோருக்கும்
கதை சொல்லியாகத்தான் தெரியும்

வாயைத் திறந்தால்
கதைகளாகக் கொட்டும்

ஒவ்வொரு முறையும்
விடுபடும் புதுக்கதை

ஊரில் பெரியவர் முதல்
சிறியவர் வரை
பாட்டி கதைக்குள் அடக்கம்

படிப்பறிவில்லாத பாட்டியிடமிருந்து
எப்படி வருகின்றன கதைகள்
என்ற பிரமிப்பு ஊருக்குள் உண்டு

திரும்ப நினைக்கையில்
பாட்டி சொன்ன கதை
அட்சரம் பிசகாமல் கண்முன் விரியும்

பாட்டியின் கதைகளில்
மழை பெய்யும்

கதையில் வந்த விலங்குகள்
குழந்தைகளுக்கு நட்பாயின்

ஒரு மழைநாளில்
கதை சொல்லி பாட்டி
படுத்த படுக்கையானாள்

ஊரை நிசப்தமாக்கிவிட்டு
முடங்கிப்போனாள்

பாட்டியின் கண்களில்
தேங்கி நின்றது
சொல்ல முடியாத கதை

ஊர்ப் பெரியவரை
அருகே வரச் சொல்லி
பாட்டி முணுமுணுத்ததை
பிறகு அவர்
எல்லோரிடமும் சொன்னார்

எனக்கு எமன்
கதை சொல்லிக்கிட்டிருக்கான்
போங்க பிறகு பாப்போம்

Friday, July 03, 2009

ஒரே தூரம்

நீங்கள் அதிகப்படுத்திக் கொண்டாலும்
நான் குறைத்துக் கொண்டாலும்
உங்களுக்கும் எனக்கும்
இடையில் இருப்பது
ஒரே தூரம்தான்

கதவு

மூடித்திறக்கும்
போதெல்லாம்
காற்றைக் குடிக்கிறது கதவு

கூடு

கால் தட்டிவிட்டுப் போன
குச்சியை எடுத்து
பறவை செய்தது கூடு

தனிமைக் குளம்

நடந்து நடந்து வந்து
என்னைச் சேர்ந்தாயிற்று
காலடியில்
அலை எழுப்புகிறது
தனிமைக் குளம்

Tuesday, June 30, 2009

இடம்

இடம் தெரியாத இடத்தில்
இறங்கிவிட்டேன்
தெரிந்துகொள்ள
எவ்வளவோ
வைத்திருந்தது இடம்

நடுநிசியில்

நடுநிசியில்
பறந்து வந்து
தேன் குடிக்கிறது
பட்டாம்பூச்சி
கனவில்
முளைத்த பூவில்

Friday, June 26, 2009

வழி மாற்றிய ஒற்றன்

என்னை
வழி மாற்றி அனுப்பிய
ஒற்றனைப்
பார்க்க நேர்ந்தது
அவன் இருந்தான்
ஏறக்குறைய என்
முக சாயலில்

Thursday, June 25, 2009

மீண்டும் பிறக்கிறது...

உதிரமாகிக்
கொட்டுகிறது கனவு
உக்கிரமாகி
சுடுகிறது இரவு
தன்னை புணர்ந்து
தன்னில் இறந்து
மீண்டும் பிறக்கிறது காமம்
விலங்கின் பற்களுடன்

Wednesday, June 24, 2009

ஒரு நடை பயணத்தில்...

ஒரு நடை பயணத்தில்
பேசிக்கொண்டு போனார்கள்
தந்தையும் மகனும்

வானத்தில் சிறகடிக்கும் பறவை
உனக்குத் தெரிகிறதா

இல்லை எனக்கு
வானம் ஒரு
பறவையின் சிறகாகத்
தெரிகிறது

*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது

ஊர்ந்து போகும் ரயில்

படிக்கும் புத்தகத்தின்
வரிகளுக்கிடையே
ஊர்ந்து போகிறது
வேகமாகச் செல்லும்
இந்த ரயில்

அப்பாவின் ரெயின்கோட்

தந்தையின் ரெயின்கோட்டில்
போகும் மகன் உணர்கிறான்
அப்பா நனைவது போன்று

*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது

Sunday, June 21, 2009

மலையின் கருணை

தற்கொலை உச்சிக்கு வந்தவனை
இறங்கிப் போகச் செய்கிறது
மலையின் கருணை

*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது

Thursday, June 18, 2009

கடந்து போன வரிகள்

வெட்டப்பட்ட மரம்
துளிர்த்தது
இறந்துபோன முதியவர்
உயிர் பெற்றார்
ஒரு நட்சத்திரம்
அருகில் வந்து
முத்தமிட்டுச் சென்றது
மணல் அடியில்
கிடந்த வளையல் துண்டுகள்
கண்ணீரைக் காட்டின
கடல் மீன்
கரைக்கு வந்து
வார்த்தைகளைக்
கொட்டிவிட்டுப் போனது
இயற்கையின் பரிசுத்தத்தை
வீணாக்கியவர்கள்
தூக்கு தண்டனைப் பெற்றனர்
உதிர்ந்த இலை
உள்ளங்கையில்
விழும்போது
பூவாகி இருந்தது
சேமித்து வைக்கப்பட்ட கோடுகள்
ஓவியங்களாக
மாறிக்கொண்டே வந்தன
ஆண்துணை
தேடிய ஒருவன்
நகரத்து வீதிகளில்
அலைந்து கொண்டிருந்தான்
கடந்து போன
வரிகளைப் பார்த்தபடி
நடந்து கொண்டிருந்தேன் நான்

கிளி பொம்மை விற்கும் சிறுமி

கிளி பொம்மை
விற்கிறாள் சிறுமி

வெயிலின் கடுமை
அவள் கால்களை
நிற்க விடாமல் செய்கிறது

ஒவ்வொரு வாகனமாய் ஓடி
கிளி பொம்மையை நீட்டி
வாங்கிக் கொள்ளும்படி
வேண்டுகிறாள்

சிக்னல் விழுவதற்குள்
ஓரிரு பொம்மைகளை
விற்க வேண்டும் என்ற
ஏக்கம் தெரிகிறது
அவள் கண்களில்

தூரத்திலிருந்து
விரட்டுகிறாள் அம்மா

ஒரு காரின்
கண்ணாடி இறங்குகிறது

ஒரு கை நீண்டு
பொம்மையை வாங்குகிறது

பணத்தை வாங்கிக் கொண்டு
சிறுமி சிரிக்க
சிக்னல் விழுகிறது

காரில் ஆடிக்கொண்டே செல்கிறது
கிளி பொம்மை
சிறுமியின் பெயரை
சொல்லியபடி

Saturday, June 13, 2009

கை அள்ளும் சூரியன்
உள் எங்கும்
ஒளி நதி

Sunday, June 07, 2009

பிடுங்கப்பட்ட உயிர்

நீ எந்த மரத்திலிருந்து
பிடுங்கப்பட்ட உயிர்
தன் பென்சிலிடம் கேட்டபடி
இந்த வரிகளை
எழுதிப் பார்க்கிறாள்
ஒரு சிறுமி

அழகான கூண்டு

பார்க்க அழகாக இருக்கிறது
எப்படி இந்த
குற்றவாளி கூண்டை செய்தீர்கள்
நண்பருக்குச் சொன்னேன்
இது குற்றங்களால்
செய்யப்பட்ட கூண்டு

ஒளிந்திருக்கும் கடவுள்

நன்றி சொல்லலாம் என
கடவுளைப் பார்க்கப் போனேன்
நன்றிக்குள்
கடவுள் ஒளிந்திருந்தார்

Monday, June 01, 2009

வெற்றுக்கோப்பை

வெற்றுக்கோப்பை போதும்
என் தாகம் தீர்க்க

நீர் நிரம்பிய பாத்திரங்கள்
அதிகரிக்கவே செய்யும்
தாகத்தை