Sunday, July 01, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

923-

வறண்ட நிலம் 
காத்திருக்க 
கடலில் 
பெய்கிறது மழை


924-


உணர்வுகள் 
எழுதும்போது
பேனா பார்த்துக்
கொண்டிருக்கிறது


925-


குருவே 
நான் மிதக்க 
என்ன செய்ய வேண்டும் 

பறவையாக வேண்டும் 

பறவையாக 
என்ன செய்ய வேண்டும் 

மிதக்க வேண்டும்


926-


ஒரு போதும்
என் பசிக்கு என்னை
இரையாக்கியதில்லை


927-


தயக்கம் 
வழிகளை 
மூடிவிடுகிறது

928-

பிறந்ததே பெருந்தவறு
இதில் பிழை திருத்தி 
என்ன பண்ண

929-

வழிகளைக் கிழித்து விடாதீர்கள்
வழிப்போக்கன் சொன்னான்
பார்க்கத் தொடங்கினேன்
வழிகளைப் புத்தகங்களின்
பக்கங்களைப் போல






Thursday, June 28, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

915-

பல வருடங்களாக
இந்த கல் மேல்
உட்கார்ந்திருக்கிறேன்
நான் சோம்பேறியா?

இல்லை
இன்னொரு கல்

916-

அப்படியே 
நிற்க வைத்திருக்கிறேன் 
கண்ணீர்த் துளிகளை 

கல்லாக்கி 
எறியலாம் 

விழவும் 
வைக்கலாம்

917-

என்னிடம் ஒன்றுமில்லை 
என்பதில் கூட 
ஏதோ இருக்கிறது
ஒன்றுமே இல்லை 
என்பதில்தான் 
எதுவுமே 
இல்லாமல் இருக்கிறது

918-

கடல்மனம் கொண்ட
மீன் நீந்தும்
மீன் தொட்டிக்கு
வெளியிலும்

919-

உன் பிரமிப்பைக் கண்டு
வியக்கச் சொல்கிறாய்
புள்ளி அளவு கூட
உண்மை இல்லாத
உன் வரி 
உதிர்ந்து போனது
தெரியாமல்

920-

எப்போதும் எனக்குத் 
தோல்வி தேவைப்படுகிறது
எப்போதாவது 
வெற்றியும் தேவைப்படுகிறது

921-

தராசில் வைத்துப் 
பார்க்கப்படும் மனிதம் 
எடைக்கல்லாகி விடுகிறது

922-

உறைந்து போன
கேள்விகளை
உடைக்கிறேன்
பதில்கள் சிதற


உதிர்ந்து போனது


உன் பிரமிப்பைக் கண்டு 
வியக்கச் சொல்கிறாய்
புள்ளி அளவு கூட 
உண்மை இல்லாத 
உன் வரி 
உதிர்ந்து போனது 
தெரியாமல்

Wednesday, June 20, 2012

அனுவப சித்தனின் குறிப்புகள்

 906-

பின்னிரவை
நிரப்புகிறேன்
முற்பகல்
நினைவுகளால்

907-

வரிகளில்
இறக்கி வைத்த பின்னும்
கனக்கிறது சுமை

908-

உயிரின்
மேலேறி நின்று
மரணத்தைத்
தள்ளி விட்டேன்

909-

எல்லோருக்குமான கனவு 
பிரபஞ்சத்திடம் 
இருக்கிறது

910-

ஒளித்து வைத்தக் 
கண்ணீரை
ஒருபோதும்
சிந்தியதே இல்லை

911-

கரை ஒதுங்கும் நினைவுகள் 
கால் நனைக்கும்
வழிப்போக்கன்
பயணம் அதைக் கடக்கும்

912-

தூங்கும் இறைவனை
எழுப்பவில்லை
அவர் கனவில் போய்
கோரிக்கை வைத்து விட்டு
வந்து விட்டேன் 

913-

உறங்கப் போகும் 
போதெல்லாம் 
விடிந்து விடிகிறது

914-

என்னிடம் சொல்வதற்கு 
ஒன்றுமில்லை
என் மெளனத்தின் மீது 
கிரீடம் 
வைத்து விடாதீர்கள்.


Saturday, June 09, 2012

899-

எதற்கு 
இறந்த காலத்தை 
மென்று கொண்டிருக்கிறீர்கள்
துப்பிவிட்டு 
நிகழ் காலத்தை 
சுவைக்கப் பாருங்கள்


900-


நான் என்னத் 
தெரிந்து கொள்ளவில்லை 
என்பதிலும் 
அடங்கி இருக்கிறது 
நான் என்னத் 
தெரிந்துகொண்டேன் என்பது


901-


புரியவைப்பது 
என் வேலையல்ல
புரிந்து கொள்ளாதது 
உங்கள் குற்றமுமல்ல


902-


புள்ளியில் 
பூக்கும் சொல் 
புள்ளியை 
பூமியாக்கி


903-


என் மேல் 
ஏறி நின்று பார்த்தேன்
எல்லாம் தெரிந்தது


904-


யார் உன்னை
கண்ணீரைப் 
பூசிக் கொள்ளச் சொன்னது 
போய் 
முகம் கழுவி வா


905-


மேஜை மேல்
வைத்திருந்த பூஜ்யம்
உருண்டோடிப் போய் 
விழுந்து உடைய
உள்ளிருந்து
சிதறிக் கொண்டிருந்தன
எண்கள்




Saturday, June 02, 2012

கையெட்டும் தூரத்தில்

மறதியாய் 
தொலைதூரத்தில் 
வைத்துவிட்டு 
வந்த கனவை 
எடுக்கத் திரும்பினேன் 
அதுவாய் வந்து 
நின்றிருந்தது 
கையெட்டும் தூரத்தில்

Sunday, May 20, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

886-
தொடாத வானம்
தொடச் சொல்லும்
ஞானம்
887-
மனது
கலப்படமானது.
கலப்படம் 
பழகிப் போனது
888-
உதிர்ந்த இலையின் 
ஞாபகத்தில் மரத்தின் 
ஒன்றிரண்டு சொற்கள்
889-
குருவே நான் அமைதியாக 
யோசித்துக் கொண்டிருக்கிறேன் 
நீங்கள் 

அமைதியை 
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
890-
நன்றியால் 
நெய்த அன்பில் 
நானும் 
ஓர் இழை
891-
இருள் வனத்தில்
ஒளிக்கோலம்
மின்மினிப்பூச்சி
892-
வழி அடைக்கப்பட்டிருக்கிறது 
என்றவன் 
நின்று கொண்டிருந்தான்

பிரபஞ்சம் திறந்திருக்கிறது 
என்றவன் 
நடந்து கொண்டிருந்தான்
893-
நாடக கண்ணீர
புரிஞ்சிக்கிட்டேன்
அது வேஷம்
கலைச்சப்ப
விழிச்சிக்கிட்டேன்
894-
எதற்கு நின்றுகொண்டிருக்கிறாய் 

ஓடி வந்ததை 
அசை போடுகிறேன் 

அதை ஓடியபடியே செய் 
ஓடு
895-
பசியை இலையாய் 
விரித்து வைத்திருக்கிறேன் 
நீங்கள் என்ன 
பரிமாறினாலும் 
எனக்கு சம்மதம்
896-
என் மீதி நான்கள் 
உங்களுக்குள் 
இருக்கிறார்கள்
897-
தவமிருந்தவன் 
தூங்கிப்போனான் 
அவன் வரத்தை 
யாரோ ஒருவன் 
வாங்கிப்போனான்
898-
நினைவின்
பெரும் குகை
உள்ளிருள்
அழகு




மீனின் பொய்கள்


நீரில் தற்கொலை 
செய்து கொண்டேன் 
என்று சொன்ன 
மீனை எடுத்துக்
கரையில் போட்டேன்
இறந்து போயிருந்தது
மீனின் பொய்யும்

Friday, May 18, 2012

காகிதப் புலி

நான் எழுத்தில்
சிக்கிக்கொண்ட 
காகிதப் புலி 

என்னைக் கொண்டுபோய் 
வனத்தில் விடுவாயா

செய்வதறியாது 
திகைத்து 
ஒரு நாள் வனம் 
போய் நின்று 
தூக்கி எறிந்தேன் 
புத்தகத்தை 

எழுத்திலிருந்து 
தானே விடுதலைப் பெற்று 
புலிப்போகக்கூடும் 
கானகத்திற்கு 

திரும்ப எனக்கு 
புத்தகம் கிடைக்கக்கூடும் 
படிப்பதற்கு

Wednesday, May 16, 2012

அன்புள்ள கடவுளுக்கு

அன்புள்ள கடவுளுக்கு
என்று நான் 
எழுதத் தொடங்கிய கடிதத்தை
என்னுடன் சேர்ந்து
கடவுளும்
எழுதிக் கொண்டிருந்தார்

Friday, April 27, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

881-

நகராத மனிதர்களைப் பார்த்து 
சொன்னது தேர் 
இந்த ஊரில் 
என்னையும் சேர்த்து 
எத்தனைத் தேர்கள்

882-

நான் மீனானது 
தெரியாமல் 
என்னைத் தூக்கி 
கடலில் எறிகிறீர்கள்
கரை ஒதுங்கி 
மிதப்பது 
உங்கள் ஏமாற்றம்தான்

883-

நீங்கள் துப்பிய 
எச்சியைத் துடைக்கிறேன் 
உங்கள் மேலிருந்து

884-

என் நான் 
தொலைந்து போயிற்று
இனி நான் 
நானின்றி இருக்கலாம்

885-

எதைஎதையோ 
செய்து கொண்டிருக்கிறேன்
எதை செய்ய வந்தேன் என்று 
மறந்து போயிற்று




Sunday, April 22, 2012

காலத்தின் பாசி

அழவைத்து 
துடைக்க 
கை நீட்டுகிறீர்கள் 

உங்கள் 
விரல் நுனியில் 
ஒட்டிக்கிடக்கிறது 
காலத்தின் 
சாபம் பெற்ற 
பாசி

Thursday, April 19, 2012

குரல்


கேட்க முடிகிறது
சைகையில்
உதிரும் குரல்

நான்


நான் சுமந்து
நான் சுமந்து
நான் சுமந்து
பாரமானேன்
நான் இறக்கி
நான் இறக்கி
நான் இழந்து
இலேசானேன்

Monday, April 09, 2012

எதோ ஒரு கணத்தில்

எதோ ஒரு கணத்தில் 
பூனையின் கண்களில் 
கருணையை 
அறியும் எலி
அந்தக் கணத்தைத் 
தன் தப்பித்தலுக்குரிய 
தருணமாக்கி விடுகிறது

Sunday, April 08, 2012

பெயர்கள் வழியே

என் புனைப்பெயர்கள் வழியே 
நீங்கள் என்னை 
வந்தடைய முடியாது 
திசை சிக்கலாகும் 
என் பெயர் வழியே 
நீங்கள் வந்தடைந்தால் 
திரும்பிப் போக முடியாது 
வழி மறந்து போகும்

வனம்

வனம் கட்டிப் போடும்
புல்லாங்குழலை
என்னிடம்
விட்டுச் சென்றான் வழிபோக்கன்
வாசிக்க
கட்டவிழ்ந்தது என்னுள்
இருந்த வனம்


Tuesday, April 03, 2012

நீங்கள் யார்


நீங்கள் யார் 
நான் 
உங்கள் கேள்வியில் 
முடியும் பதில் 

உங்கள் பதிலில் 
தொடங்கும் கேள்வி

Friday, March 30, 2012

மாயப்பல் சக்கரம்


மாயப்பல் சக்கரம் 
நசுக்கும்
புகுந்து மீள 
வாழ்க்கைக் 
கொஞ்சம் இருக்கும்

Thursday, March 22, 2012

பிகாஸோவுடன் உணவருந்துதல்

பிகாஸோவுடன்
உணவருந்திக் கொண்டிருந்தேன்

உனக்கு வரையத் தெரியுமா என்றார்

பதட்டத்துடன்
தெரியாது ஆனாலும்
நான் உங்கள் ரசிகன் என்றேன்

பரவாயில்லை
ஏதாவது வரைந்து காட்டு என்றார்

நீரை
நடுங்கிய விரலால் தொட்டு
சமனற்ற ஒரு கோடு
வரைந்து சொன்னேன்
என் சக்தி இவ்வளவுதான் என்று

சிரித்தார்

கோடு மறைந்து போயிருந்தது

அவர் மறைந்து போனார்

நானும் மறைந்து கொண்டிருந்தேன்
நினைவில் படிந்து போயிருந்த
அவர் ஓவியத்திற்குள்

Wednesday, March 21, 2012

ஒரு பாடல்

உனக்காக ஒரு பாடலை
சுமந்து வந்தேன்
நீ இறக்கி வைத்துவிட்டுச் சொன்னாய்

நீ ஊதி என் மேல் செலுத்தும்
காற்றுப் போதும்
என் உயிரில் கலந்த
இசையாய் மாறும்

Tuesday, March 13, 2012

புல்

வனம் முழுதும்
துணை வந்து
வழிகாட்டி
அனுப்பி வைத்தது புல்
தொலைதூரம்
வந்த பிறகு தோன்றியது
பெயர் கேட்க மறந்தது

Monday, March 12, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

876-

மையப்படுத்தும்
மையத்தில்
இருக்க வேண்டும்
என்பதே
மெய்மையின் கோட்பாடு

877-

பயணத்தை
சிறகில் வைத்திருக்கும் பறவை
தூரத்தைக்
கண்களில் வைத்திருக்கும்

878-

இறந்து போனவனை
எழுப்பினேன்
என்னை சாகடித்துவிட்டு
நடந்து போனான்

879-

கிளை வழிகளிலும்
பெரு வழிகளிலும்
பயணித்து
அடைந்தேன்
என் வழியை

880-

துயரத்தைப் பாடிய பறவை
பறந்துவிட்டது
கிளையில் வழிகிறது மழை

Sunday, March 11, 2012

இந்த வரி

நான் மரணத்தைத் தின்று
தனிமையைக்
குடித்துக் கொண்டிருக்கிறேன்

இந்த வரி
அந்தப் பெரியவரைப்
பார்க்கத் தோன்றியது

பொருத்திப் பார்க்கத்
தோன்றவில்லை

Saturday, March 10, 2012

சிறு செடி

பாறையென நினைத்து
அகற்றிக் கொண்டிருக்கிறீர்கள்
என்னை

அதன் கீழ்
சிறு செடியென
நான்
பூத்திருப்பது
தெரியாமல்

இரவின் தூரிகை

இரவின் தூரிகை
இருளில் வரைகிறது
இருள் மட்டுமே
பார்க்கும் ஓவியத்தை

Thursday, March 08, 2012

விழிப்புகள்

அறுந்து போன தூக்கத்தைப்
பிறகு சந்திக்கவில்லை
வந்தது எல்லாமே
வேறு வேறு விழிப்புகள்

Wednesday, March 07, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

871-

எறும்பின்
நிழல்
யானை போல்

872-

ஊஞ்சல் போல்
அசைகிறது
ஒற்றை வரி

873-

கை மணலில்
ஓடும்
சிறு நதி

874-

இருக்கும் இடத்திலேயே
இருக்கிறது
தேடிக்கொண்டிருப்பது

875-

நகர்ந்து போகும் வாழ்க்கை
நம்மை ஓடவிட்டுப்
பிடிக்கச் சொல்கிறது

Tuesday, March 06, 2012

விளிம்பிலிருந்து

அழகு வழிகிறது
வாழ்க்கையின்
விளிம்பிலிருந்து
பருகி சுவைக்கலாம்
பார்த்து ரசிக்கலாம்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

869-

வரைந்த கல்லறையில்
உயிரோடு வசிப்பது
சுகமாக இருக்கிறது

870-

கனவை கனவில்
குறித்து வைத்தேன்
குறிப்புகள் முழுதும்
மறந்து விட்டேன்

Saturday, March 03, 2012

கவிதையில் தைப்பவன்

மரணம் கிழித்துப் போட்டவனை
கவிதையில் தைத்துக்கொண்டிருக்கிறேன்
என்றவனை
மழை பெய்யும் இரவில்
சந்தித்தேன்

காப்பாற்றி விடுவாயா என்றேன்

முகநீரைத் தள்ளியபடி சொன்னான்

முயன்று பார்ப்பேன்
இல்லையெனில்
என் கவிதையும்
அவனோடு சேர்ந்து
இறந்து போகும்

மீண்டு வந்த நான்

போரில்
நீ இறந்துவிட்டாய்
இந்த வசனம்
நீ பேசக்கூடாது

மீண்டு வந்த நான்
எம் மண்ணின் நாவால்
பேசித்தான் ஆகவேண்டும்

நகர்ந்து போங்கள்
இல்லை
துண்டாகிப் போவீர்கள்

காகித கப்பும் பெரியவரும்

பேருந்துக்காக
காத்திருக்கும் அவனை
நெருங்கி அமரும்
பெரியவர் சொல்கிறார்
உங்கள எங்கயோ
பாத்திருக்கேன் தம்பி
உங்கள எங்கயோ பாத்திருக்கேன்

பேச்சை தவிர்க்க விரும்பி
அவன் வேகமாகச் சென்று
ஒரு தேநீர் வாங்கி வந்து
அவர் கையில் தருகிறான்

தண்ணீர் போல
சில நொடிகளில்
குடித்து முடிக்கிறார்

தம்பி உங்கள்
இங்கதான் பாத்திருக்கேன்
ஆனா எங்கயோ
பாத்த மாதிரி இருக்கு
எனச்சொல்லிவிட்டு
நன்றியுடன் கும்பிட்டபடி நடக்கிறார்

அவர் கை இறுக்கத்தில்
அந்த காகித கப்
அவன் அவருக்குத் தந்த
நினைவுப் பரிசைப் போல

Thursday, March 01, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

863-

இல்லாதவன்
அள்ளிக் கொடுக்கிறான்
இல்லாததை

864-

புள்ளி மேல்
வழியும் நதி
வாக்கியம் போல

865-

என் விழுதலின்
கணக்கு
உங்களிடம்

எழுதலின்
குறிப்பு
என்னிடம்

866-

தயங்காமல் உதவ
நீளும் கரங்கள்
தாய்மையின் கிளைகள்

867-

என்ன
விற்கிறாய்

என்னை

868-

கால் நீட்டி
படுக்கச் சொல்கிறது
பிரபஞ்சம்
உடல் சுருக்கிப்
படுக்கச் சொல்கிறது
அறை

பூனை எலி மற்றும் கவிதை

கவிதையை
இழுத்துப் போன பூனை
எலியிடம்
போட்டு விட்டுச் சென்றது

எங்கு போடலாம் என
யோசித்த எலி
அங்கேயே
விட்டு விட்டுச் சென்றது

Monday, February 27, 2012

கண்டெடுத்தோம்

உரையாடலின் நடுவில்
ஓடியது அமைதி
நதி போல
அதில் கண்டெடுத்தோம்
புதிய பேச்சுக்கான
வார்த்தைகளை

மழலைக்கிளை

குழந்தை அசைக்கும்
மழலைக்கிளை
உதிர்கின்றன
என் வயதுகள்

Sunday, February 26, 2012

தந்தது குழந்தை

நான் விட்டுப் போன
வரியை
வளைத்து நெளித்து
திரும்ப வந்தபோது
தந்தது குழந்தை

வரியின் வடிவம்
ஓவியமாகவும்
படிக்க கூடிய
கவிதையாகவும்
மாறி இருந்தது

ஏன்

தொலைந்து போனவைகளையே
உங்கள் கவிதையில்
அடுக்கி வைக்கிறீர்கள்
இழந்துபோனவைகளையே
எடுத்துச் செல்கிறீர்கள்
ஏன்

நீங்கள்
தொலைந்து போகாமல் இருக்க
இழந்து போகாமல் கடக்க

அனுபவ சித்தனின் குறிப்புகள்

859-

மறந்து போகாமலிருக்க
பிரபஞ்சத்திடம்
சொல்லிவைத்திருக்கிறேன்

860-

மனதில் இருந்த வரிக்கும்
தாளில் வந்த வரிக்கும்
இடையில் தேடினேன்
தொலைந்த வரியை

861-


இருள் வழி
நடக்க
இருள் ஒளியாச்சு

862-

தள்ளி வைத்த தூக்கம்
சொல்லாமல் வந்து
தட்டுகிறது
இமைகளின் கதவை

பொங்கும் கடல்

இந்தக் கனவு
நேற்றிரவு நீந்தியது
அழகான மீன் தொட்டி
அழகழகான மீனகள்
மேஜையிலிருந்து
விழுந்து கொண்டிருக்கிறது
மேஜையின் அடியில்
நுரைத்துப் பொங்கும் கடல்

Tuesday, February 21, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

849-

இது என்
இன்றைய முகம்
இதுவே என்
முகமல்ல

850-

வசதியாக
கால் நீட்டி நடக்கிறான்
வழிப்போக்கன்

851-

இந்த பூக்களில்
நீங்கள்
எந்த பூவின்
வாசம்

852-

தெரியாமல்
நடந்த வழி
திரும்பி நடக்க
நட்பாச்சு

853-

அன்பின்
கரம் நீளும்
பிரபஞ்ச
விளிம்பைத் தொடும்

854-

நாய் வாலை
நிமிர்த்திய வரியில்
பொய் சுருண்டிருந்தது

855-

முந்திச்
சென்றவனின் பிணம்
பிந்திச் சென்றது

856-

நான் இல்லாது
போனபின்
என் நிழல்
என்ன செய்யும்

857-

உங்கள்
எந்த முகமூடியும்
அந்த வரிக்கு
பொருந்தவில்லை
விட்டுவிட்டுப் போய்
வேறு வேலை
பாருங்கள்

858-

இருள்
மகுடியென

சுடர் அசையும்
பாம்பென

குழந்தையின் வானவில்

வண்ணம் கத்தரித்து
ஒட்டி ஒட்டி வானவில்
உருவாக்குகிறாள் குழந்தை

அதில் மெதுவாய்
பின்னால் வந்து
நிறைகிறது வானம்

அலை ஒளி

அலை ஒளியாய்
ஓடி வந்து
காலை முத்தமிடும்
நீரில் தள்ளிய நிலா

Sunday, February 19, 2012

வரிசை மாற்றம்

நீங்கள்
அவர்கள்
மற்றும்
நான்

இதில்
நான்
விரும்புவதெல்லாம்
வரிசை மாற்றமே

நீங்கள்
நான்
மற்றும்
அவர்கள்

அவர்கள்
நான்
மற்றும்
நீங்கள்

என

Wednesday, February 15, 2012

பார்க்கிறேன்

இறந்துபோன நான்
என்னைப் படுக்க வைத்திருக்கும்
கோணத்திலிருந்து பார்க்கிறேன்
யார் யார் வந்திருக்கிறார்கள் என்று

எவ்வளவோ பேர்
விடுபட்டுப் போயிருக்கின்றனர்

எப்போதும்
என் கால் நக்கி
சுற்றிவரும் நாய்க்குட்டி
நான் மூடிவைக்கப்பட்டிருக்கும்
கண்ணாடிப் பெட்டியை
முட்டி முட்டித் தள்ளி
என் கால்கள் தொடப்
போராடிக்கொண்டிருக்கிறது

மிதத்தல்

குளிர்ந்த திரவத்தை
விஷமாகப் பார்த்தபோது
என் மரணம்
மிதந்துகொண்டிருந்தது
பனிக்கட்டியைப் போல

Tuesday, February 14, 2012

யாரென்று

உங்கள்
துப்பாக்கிக் குறியை
மாற்றிவைத்திருக்கிறேன்
செத்து விழும்போது தெரியும்
யாரென்று

அனுபவ சித்தனின் குறிப்புகள்

842-

பாறை இருள்
தள்ளிப் பார்த்து
முடியாமல்
நின்றுவிட்டேன்

843-

காணமல் போய்
கிடைத்தேன்
வேறு நானாய்

844-

புகையாகவே சுழலும்
வரி வடிவம்
விரும்பா வார்த்தைகள்

845-

கல்லறையில் மழை
புரண்டு
படுக்கிறேன்

846-

கண்ணீரே
கோபித்துக்கொள்ளாதே
அழுவதற்கு
எனக்கு காரணங்கள்
கிடைக்கவில்லை

847-

என் உயரத்திலிருந்த
மிருகத்தை சந்தித்தேன்
பெயர் கேட்டேன்
சொன்னது
என் பெயரை

848-

எழுது என்ற கட்டளை
தூக்கிப்போட்டது
மொழி வனத்திற்குள்

Saturday, February 11, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

839-

ஒரு மரம்
கல்லெறியப்
பறந்தது வனம்

840-

என் உடலில்
எங்கிருந்தும்
நீ என்னைத்
தோண்டி எடுக்கலாம்

841-

வெட்டி எறிந்த
வன்மத்தை
ஒரு நாள் பார்த்தேன்
காயம் ஆறா
மிருகமென

ஒன்றுமில்லை

மழை பெய்கிறது
என்னிடம்
சொல்வதற்கு
ஒன்றுமில்லை

Tuesday, February 07, 2012

பதில்

கவிதையில் ஊர்ந்து சென்ற
எறும்பிடம் சொன்னேன்
ஏதாவது ஒரு எழுத்தை
இழுத்துச் செல்லேன்
உனக்கு உணவாகும் என்று
கவிதையின்
மொத்த அர்த்தத்தையும்
எடுத்துச் செல்கிறேன்
தெரியவில்லையா உனக்கு
எனச் சொல்லிப் போனது

நட்பு

எலியுடன் நட்புகொள்ளாதீர்
எத்தனையோ நாள்
சொல்லியும்
கேட்காத நண்பர்
சிக்கிப் போனார்
ஒருநாள்
எலிப்பொறிக்குள்