Monday, May 13, 2013

கடைசிச் சொல்

1-

இந்த வரியை 
எப்படி நெய்தீர்கள் 

என் 
நிர்வாணத்தால்

2-

ஒவ்வொரு சொல்லும் 
உதிர்ந்து கொண்டே வர
கடைசிச் சொல் 
பறந்துவிட்டது

3-

வெறுமையை 
கையேந்தி நிற்கிறேன்
நீ அன்பை 
நிரப்பும் போது 
அது பாத்திரமாகி விடுகிறது

4-

பொய் சொல்கிறாள் 
கண்ணீர்த்துளியை 
வரைந்து விட்டு 
மழைத்துளி என்று



எழுதிக் கொண்டிருந்தேன்


நள்ளிரவில் 
மழை பெய்யும் போது 
என்ன செய்து கொண்டிருந்தீர்கள் 

எழுதிக் கொண்டிருந்தேன் 

அது மழைக்குத் தெரியுமா 

ஒன்றைப் பற்றி எழுதுவது 
ஒன்றுக்கு எப்படித் 
தெரியாமல் இருக்கும்

Sunday, May 12, 2013

எனக்குப் பசிக்கிறது


எனக்குப் பசிக்கிறது 
ரொட்டித்துண்டைத் 
தருகிறீர்களா

எனக்கும் பசிக்கிறது

அப்படியா வாருங்கள் 
நம் பசியை 
பகிர்ந்து சாப்பிடுவோம் 

வேட்டையாடும் எழுத்து


பாய்ந்து கவ்வி 
வேட்டையாடும் எழுத்து 
கவனிக்க 
மறந்து விடுகிறது 
பூவின் விரிதலையும் 
அதன் உள் மனச் 
சொற்களையும்

Saturday, May 11, 2013

ஒரே நேரம்


ஒரே நேரம் 
நம் இருவர் கண்ணிலும் 
கண்ணீர் 
பார்த்தபடியே 
புன்னகைக்கிறோம் 
இந்த உரையாடலை 
இதை விட நாம் 
சிறப்பாக 
முடித்திருக்க முடியாது 

Monday, May 06, 2013

விளிம்புக்குப் போகும் வரை

1-

பல்லக்கை 
பல காலமாக 
சுமந்து செல்கிறோம் 
உள்ளே இருப்பது 
சாத்தான் என்று 
உணராமல்

2-

ஒன்றும் தெரியாத என்னை 
மைதானத்தின் விளிம்பில் 
நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் 
விளிம்புக்குப் 
போகும் வரை  
விளையாடித்தான் 
ஆக வேண்டும்

Saturday, May 04, 2013

முகச்சாயல்

கடந்து போன நபர் 
இறந்து போன நண்பனின் 
முகச்சாயலில் இருந்தார்

ஒரு கணம் கலங்கி 
கண் துடைத்து 
அவரைப் பார்த்து 
புன்னகைக்க 
புன்னகைத்தார்

அதுவும் அச்சு அசலாய் 
நண்பனைப் போலிருந்தது

மாதவா என்று 
மனதிற்குள் 
ஒரு சத்தம் 
துள்ளி எழுந்து 
அடங்கியது

நண்பன் போய்விட்டான் 
அவர் போய்விட்டார் 
நான் போய்க் கொண்டிருக்கிறேன்

Friday, May 03, 2013

சீட்டு விளையாட்டு

சாத்தானுடன் 
சீட்டு விளையாடியது 
தப்பாய் போயிற்று 
அது என் 
தோல்விகளை வைத்து 
விளையாடிக் கொண்டிருந்தது

பதில் இல்லை

சவப்பெட்டிக்கு
வண்ணம் பூசினேன்
மரணம் அழகானதா
சவப்பெட்டிக் கேட்டது
பதில் இல்லை
கண்ணீர்த் துளி
சவப்பெட்டியின் மேல்
விழுந்தது

Thursday, May 02, 2013

நமக்குள் சுழலும் இசை

இசை நாற்காலி விளையாட்டில் 
இறுதிச் சுற்றில் 
நாம் இருவர் மட்டுமே 
ஓடிக் கொண்டிருக்கிறோம் 
எல்லோரும் வெளியேறி விட்டனர் 
இசைத்தட்டு சுழல்வதை நிறுத்தி 
நீண்ட காலமாகிறது 
நீ அமர்ந்துவிட வேண்டும் 
என்று நானும் 
நான் அமர்ந்து விட நீயும் 
ஓடிக்கொண்டிருக்கிறோம்
நமக்குள் சுழலும் இசை 
நிற்கவே இல்லை 

Monday, April 29, 2013

ஒரு பறவை

என் விரலை 
கிளை என நினைத்து 
வந்தமர்ந்து 
உள்ளங்கை நீரைக் 
குடித்துப் போகிறது 
ஒரு பறவை 
பறந்து போகையில் 
மரமாகவும் 
நினைத்திருக்கக் கூடும் 

உங்களுக்குத் தெரியாது

கடைசிக் காட்சியை மட்டும் 
பார்க்க அனுமதிக்கிறீர்கள் 
இதுவரை நான் 
உங்கள் கதாபாத்திரங்களோடு 
பேசிக்கொண்டிருந்தது 
உங்களுக்குத் தெரியாது

Wednesday, April 24, 2013

நினைவின் அடுக்குகளில்


நினைவின் அடுக்குகளில் 
எந்த அடுக்கில் 
இருக்கிறாய் என்று 
தேடித் தேடி 
களைத்துப் போய் 
உறங்கி விட்டேன் 
உறக்கத்தின் அடுக்குகளில் 
விளையாடத் தொடங்குகிறாய்

ஓடுபவர்கள்


எனது கனவில் 
ஓடும் குதிரையும் 
குதிரையின் கனவில் 
ஓடும் நானும் 
வேகத்தில் 
வித்தியாசப்படலாம் 
ஆனால் ஓடுபவர்கள்

Tuesday, April 16, 2013

கல் சுவர்

கல் சுவரில் மோதி 
கண்ணாடிப் பட்டாம்பூச்சி 
உடைந்து போனது 
சில சில்லுகள் கிடந்தன 
பல சில்லுகள் பறந்தன

Friday, April 12, 2013

என்ன யோசனை


சட்டென நிறுத்திய நண்பர்
என்ன யோசனை என்றார்

தெரியவில்லை 
என்றேன்

யோசனையா
என்னையா
கேட்டார்

சிரித்தேன்

சிரிப்பின் காரணம் கேட்டார்

தெரியவில்லை 
என்றேன்

வேகமாகப் போய்விட்டார்

நடந்தேன்

என் கவலை எல்லாம்
திடீரென்று
இன்னொரு நண்பரை
இது போல்
சந்தித்து விடக்கூடாது
என்பதுதான்

தடுத்தது குரல்

கேசவா
என்ன யோசனை


Thursday, April 11, 2013

அழிந்து கொண்டே வரும் வரி


முயலைப் பார்த்தபோது 
குழந்தை இல்லை 
குழந்தையைப் பார்த்தபோது 
முயல் இல்லை 
முயல்குட்டியைப் போல் 
ஓடுகிறாள் குழந்தை 
என்ற வரி 
அழிந்து கொண்டே வந்தது 

மான்யாவின் கடல்


கடல் பாத்து முடிச்சாச்சா 
போகலாமா 
கேட்கிறேன் மான்யாவிடம்
சிரித்துச் சொல்கிறாள்
அய்யோ அப்பா 
கடலப் பாத்துக்கிட்டே இருக்கணும் 
அது முடியவே முடியாது

Tuesday, April 09, 2013

கண்ணில்

யுத்தம் பற்றி 
எழுதிய கவிதையை 
சமாதானப் புறாவிடம் 
படித்துக் காட்டினேன் 
குருதியின் வலியை 
குறைத்திருக்கலாமே என்றது 
அப்போது 
அதன் கண்ணில் 
நீர் வடிந்தது 

Monday, April 08, 2013

காணவில்லை


நீல நிறப் பூனை
பக்கத்தில் 
பச்சை நிற எலி 
வரைந்தாள் மான்யா
நிறங்கள் சிதறிக் கிடக்க 
இரண்டையும் காணவில்லை

திரை


திரை விழுந்து விட்டது 
நாடகம் முடிந்து விட்டது 
எல்லோரும் 
வெளியேறி விட்டனர் 
நான் இன்னும் 
கதாபாத்திரத்தை விட்டு 
வெளியேறவில்லை

Wednesday, April 03, 2013

விளையாடு

இப்படித்தான் காய் 
நகர்த்துவார்கள் 
வியூகம் குறித்து 
விவாதிக்காதே 
விளையாடு 

Saturday, March 30, 2013

ஒரு பூ

சிதறிக் கிடந்த 
உதிரிப்பூக்களை 
மிதிக்காமல் 
கடந்து போனதில் 
பூத்துப் போனது 
மனதில் 
ஒரு பூ

Friday, March 29, 2013

கடிதத்தின் வரிகள்

பெரியவர் சொல்ல சொல்ல 
கடிதம் எழுதுகிறேன் 

நன்றி சொல்லி 
வாங்கிப் போகிறார் 
போட

கடிதத்தின் வரிகள் 
மையாகி 
என் விரலில் 
பிசுபிசுத்துக் கொண்டே 
இருக்கிறது

Tuesday, March 26, 2013

நாவின் அடுக்கில்


நாவின் மேலடுக்கில் 
பொய்களும் 
கீழடுக்கில் 
உண்மைகளும்
நாவின் அடுக்கில் 
இரண்டும்

Monday, March 25, 2013

எழுத்து


உங்கள் எழுத்தில் 
தூசி ஒட்டிக் கிடக்கிறது 
துடைக்கப் போகிறீர்களா 
அழிக்கப் போகிறீர்களா

Sunday, March 24, 2013

இல்லாத ஒன்று


இல்லாத ஒன்றில் 
இல்லாத ஒன்றை 
நிரம்பும் 
இல்லாத நான்

தெரியும்

இந்த வரி 
உங்களை 
நகர்த்தி விடாது 
தெரியும் 
ஆனால் என்னை
அசைத்தது 

Saturday, March 23, 2013

இருந்தும்

கண்ணீரைக் 
கடந்துதான் 
வந்தேன் 
துடைக்க நீளும் 
கையிருந்தும் 
கேட்கக்
காதுகள் இருந்தும் 

Friday, March 22, 2013

தெரியவில்லை

குடித்துவிட்டு 
போதையில் 
என்னைப் போட்டு 
உடைத்து விட்டேன்
எப்படிச் சேர்ப்பதென்று 
தெரியவில்லை

Thursday, March 21, 2013

மழையை வரைதல்

மேகத்தை 
வரைகிறாள் குழந்தை 

மழை பெய்யுமா 
என்கிறேன் 

மழை போல சிரித்து 
வரைகிறாள் மழையை

Tuesday, March 19, 2013

விளிப்பில்

தியானத்தின் விளிப்பில் 
அசைகிறது ஒரு சொல் 
மெளனம் பார்க்க 
மெளனமாய் 
நானும் பார்க்க

Sunday, March 17, 2013

நாடோடி


நான் நாடோடி 
என் கிளைகளிலும் 
பறவைகள் வந்தமர்ந்து 
போவதுண்டு

Saturday, March 16, 2013

எழுதும் போது

குருதி வழிகிறது 
அருவி போல என்று 
எழுதும் போது 
பதட்டப்படும் மனம் 
அருவி வழிகிறது 
குருதி போல என்று 
எழுதும் போது 
அச்சப்படுகிறது

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1003-

அடர்ந்த மெளனத்தைக் 
கடந்து வருவதும் 
கடினமான ஒன்றுதான்

1004-


கால்களைக் 
குத்தாத இருள் 
நடக்கத் துணையாய் 
நட்சத்திரம்

1005-

எதுவுமில்லாத போது 
மெளனம் 
எனதாகிறது

1006-

அள்ளிய எல்லாம் 
வழிந்து போனது 
வெறுங்கையே 
உன் தலைக்கனம் 
முடிந்து போனதா

1007-

பிரபஞ்சம் சொன்னது
உனக்கான செய்தி 
நான்தான்

1008-

நினைவுகள் துரத்த 
ஓடுகிறேன் 
நினைவுகள் நோக்கி




நான் வானம்

அவ்வளவு எளிதில் 
என்னை உங்களால் 
மடித்து வைத்துவிட்டுப் 
போய் விட முடியாது.
நான் வானம்

Thursday, March 14, 2013

போகிற போக்கில்

போகிற போக்கில் 
பார்த்த 
வானவில்லின் 
ஓரிரு வண்ணத்துளி 
கண்ணில் இருக்கிறது

அனுபவ சித்தனின் குறிப்புகள்

996-

பறவையே 
சொல் 
நான் உன் 
வானமா 
கூண்டா

997-

உடைந்த 
கனவொன்றை 
இரண்டாக 
வளர்க்கிறேன்

998-

நான் 
பஞ்சுதான்
கனமான பஞ்சு

999-
பிடிக்கும் இருள்
ஒளிரவும்
செய்கிறது

1000-
இதற்கெல்லாம் 
உங்களுக்கு
எங்கே 
நேரமிருக்கிறது

நேரத்தில்தான் 
இருக்கிறது

1001-

மனதிலிருப்பதை 
மனதால் படிப்பது 
மகத்தானது


1002-

என்னிடம் பேச
உங்களிடம் ஏதாவது
இருக்கிறதா

எதுவுமில்லை
வார்த்தைகள் 
இருக்கின்றன


Tuesday, March 12, 2013

அழுத்தம்

அழுத்தம் தரும் 
இரவிடம் சொல்கிறேன் 
இதை விட உன்னால் 
இன்னும்
தந்து விட முடியாது 
அது குறைத்துக் கொள்ளப் 
பார்க்கிறது
நான் வெளியேறப் 
பார்க்கிறேன்

Sunday, March 10, 2013

போர்

மனதில்  போர்
நடக்கிறது

போரை நடத்துவது
யார் 

மனதா 

நானா 

போரேவா






Saturday, March 09, 2013

புத்தன் மெளனம்

புத்தன் மெளனம்
முறிந்தது
அவன் சொற்களில்
வழிகிறது ரத்தம்

Friday, March 08, 2013

என் பெயர்

காட்சி முடிந்தது 

உருண்டு மேலோடிய 
பெயர்களில்
தேடினேன் 
என் பெயரை 

மற்றும் பலரில் 
இருந்தது 
என் பெயர்

Thursday, March 07, 2013

அனுபவ சித்தனின் குறிப்புகள்

991-
நினைவின் திரியில் 
அசையும் 
சுடர் நீ

992-

பகலில் 
வெயில் இறைக்கும் சொற்கள் 
தனிமைக்குப் 
போதுமானதாக இல்லை

993-

உங்கள் அருகிலேயே 
இருக்கிறீர்கள் 
எதற்குத் தேடுகிறீர்கள்

994-

நீரில் தெரிகிறது 
எளிய பிம்பம் 
கல்லெறிந்து 
கலைத்துவிட்டு 
வரையப் பார்க்கிறேன்

995-

ஊர்ந்து போகும் தடத்தை 
ஒற்றைக் கோடாக பார்க்கிறேன் 
பாதையாகப் 
பார்க்கச் சொல்கிறது எறும்பு



Tuesday, March 05, 2013

வெற்றுக் கோப்பை

வெற்றுக் கோப்பையில் 
ஏதோ இருப்பதாக நினைத்து 
அருந்துகிறேன் 

அது விஷம் என்று உணர 
இறந்து போகிறேன்

Sunday, March 03, 2013

அறியுமா

கண்ணீரில் 
தேங்கிபோன குருதியைக் 
கண்ணீர் அறியுமா

நீண்ட தூரம்


சுவையுடன் சொன்னார் பெரியவர் 

யார் சொன்னது 
என் உலகம் 
சுருங்கிப் போனதென்று 

நான் நினைவுகளில் 
உங்களை விட 
நீண்ட தூரம் நடக்கிறேன்

(அப்பாவுக்கு)

Saturday, March 02, 2013

துயரத்தின் பாடல்

உதிரும் இலைகளைப்
பார்க்கும் புல்லாங்குழலில்
துயரத்தின் பாடல்

Thursday, February 28, 2013

சொல்

என் தனிமைக்கு 
வண்ணம் பூசுகிறாய் 
எப்போது வந்தாய் 
சொல்

சிறு முத்தம்

அன்பின் சொல்லெடுத்து 
வீசும் உன் கண்களுக்குத் 
தர வேண்டும் 
சிறு முத்தம்

Wednesday, February 20, 2013

நாம் சந்திக்கும் போது

ஒரே கவிதையை 
அந்த முனையிலிருந்து நீயும் 
இந்த முனையிலிருந்து நானும் 
எழுதி வருகிறோம் 
நாம் சந்திக்கும் போது 
கவிதை முடிந்து விடும்

Tuesday, February 19, 2013

அனுபவ சித்தனின் குறிப்புகள்


982-

எனக்குள்ளிருந்து 
என்னை 
விரட்டுபவனிடமிருந்து 
தப்பிப்பதெப்படி

983-

ஞானக்காட்டில்  
தொலைந்திட வேண்டும் 
மௌனக்கூட்டில் 
அடைந்திட வேண்டும்

984-

மெளனம் தியானிக்கும்.
நான் அமைதியாய் 
பார்த்தபடி

985-

உங்கள் மன்னிப்பின் மீது 
என் குற்றங்கள் 
முளைத்துக் கிடக்கின்றன

986-.

எழுதிய வரியும் 
எழுத நினைத்த வரியும் 
வேறு வேறா 
ஒன்றா

987-

சிறை 
அழகான சிறை 
எனும் போது 
விரிவு கொள்கிறது

988-

குகைக்குள் பயணிக்கும் 
இருள் 
பயமற்று

989-

காட்சி முடிகிறது
கடைசியில் வரும் 
மற்றும் பலரில் 
என் பெயரும் 
இருப்பது புரிகிறது

990-

யாரது
இரவை உலுக்குவது 
என் மீதும் 
கனவுகள் கொட்டுகிறது




Sunday, February 17, 2013

தலையனை அடியில்


அவள் தன் தலையனை அடியில்
 அவனுக்குத் தெரியாமல் 
ஒரு கனவைப் பதுக்கி வைத்தாள்

அவன் தன் தலையனை அடியில்
அவளுக்குத் தெரியாமல் 
ஒரு காதலை ஒளித்து வைத்தான்

அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த 
அவர்களுக்குக் கேட்காமல் 
பேசிக் கொண்டிருந்தன 
கனவும் காதலும் 
ரகசியமாய்

இருந்தது

என் குரல்
பதிவு செய்யப்பட்ட 
ஒலி நாடாவில் 
இடைஇடையே 
அருகில் வசிக்கும் 
புறாக்களின் சத்தம் 
கேட்டபடி இருந்தது

திரும்பத் திரும்பக் கேட்க 
வரிகளுக்கிடையே
புறாக்கள் வந்து 
வசிப்பது போலவும் இருந்தது

Friday, February 15, 2013

மீன்-நான்

மீன் போல 
நீந்தும் என்னை 
மீன் என்று 
சொல்கிறது மீன் 
நான் என்று 
சொல்கிறேன் நான் 

Sunday, January 27, 2013

பறவையின் கண்கள்

பறவையின் கோணத்திலிருந்து பார்க்க 
மலை கீழே இருக்கிறது 
என் கோணத்திலிருந்து பார்க்க 
மலை மேலே இருக்கிறது
என்றாலும் எனக்குண்டு
பறவையின் கண்கள் 

Saturday, January 26, 2013

எங்கிருந்து

எங்கிருந்து
கேள்விகளை எடுக்கிறீர்கள்
பதில்களிலிருந்து

எங்கிருந்து
பதில்களை  எடுக்கிறீர்கள்
கேள்விகளிலிருந்து

Sunday, January 20, 2013

கடலின் காது

   அலையிடம் கேட்டேன் 
நான் பேசுவதை
   கடலிடம் சொல்வாயா 

என் அறியாமையை 
நனைத்த அலை 
சொன்னது

நான் கடலின் காது 
நீ பேசுவது 
கேட்டுக் கொண்டுதான் இருக்கும்

ஒரே வரி

ஒரே வரியைப் 
படித்துக் கொண்டிருக்கிறேன்
அது வேறு வேறு வரிகளாக 
நீண்டு கொண்டிருக்க 
படிப்பது முடிந்தபாடில்லை 

Saturday, January 19, 2013

குழந்தையின் பூந்தோட்டம்


குழந்தை வரைந்தாள் 
பூந்தோட்டம் 

அசலாய் 
அப்படியே 

பட்டாம்பூச்சி வந்து 
ஏமார்ந்து போகும்படி 

உற்று கவனித்தால் 
வாசனை நாசி தட்டும்

வண்ணம் விதைத்து 
வளர்ந்த தோட்டம்

அவளிடம் மெல்லக் கேட்டேன்

உன் தோட்டத்திற்கு 
இரவு காவலிருக்கலாமா

கண்கள் மலரச் சொன்னாள் 

உங்களை வரைந்து வேண்டுமானல் 
காவலுக்கு வைக்கலாம் 
அப்படியே முடியாது




பெருமிதத்தில்


குளிரைப் போர்த்திக்கொண்டு
உறங்கும் பாட்டி 
அதிகாலையில் 
இறந்திருக்கக்கூடும் என்ற 
வரியோடு 
நடுக்கத்துடன் 
தெரு முனை அடைகிறேன் 
கைகளுக்குள் 
குழந்தையைப் போல 
தேநீரைப் பற்றிக் கொண்டு
ஊதி ஊதி குடிக்கிறாள் பாட்டி
என் வரிகளையும் எமனையும் 
எட்டி உதைத்த பெருமிதத்தில்


Monday, January 14, 2013

கனவில் பெய்த மழை

கனவில் பெய்த மழை 
கல்லறையை நனைத்தது 
கல்லறையில் 
உறங்கிய நான் 
புரண்டு படுத்தேன்

மீன்

தூண்டிலைத் தூக்கி 
எறிகிறேன்
நடந்து வந்து 
நன்றி சொல்லிவிட்டுப் 
போகிறது ஒரு மீன்

Thursday, January 10, 2013

மரக்குதிரை

மேஜை மேலிருக்கும் 
மரக்குதிரை 
நாளும் தன் இடங்களை 
மாற்றிக் கொண்டே இருக்கிறது

ஓட்டத்தின் 
குளம்படிச் சத்தம் 
வீடு முழுதும் 
எதிரொலித்து 
வெளியேயும் பறக்கிறது

மறுபடியும் 
அது மேஜை வந்து 
சேரும் போது 
மரமாக 
மாற்றி விட வேண்டும்

Tuesday, January 08, 2013

அசைவு

பால்கனியில் 
கம்பிகளுக்கிடையே
சிறைப்பட்டச் சித்திரம் போல்
அமர்ந்திருக்கும் பெரியவர் 
தன் கையசைவின் வழியே 
என்னோடு நடந்து வருகிறார் 
அசைவு மறையும் வரை 
அதை உணர முடிகிறது

Sunday, January 06, 2013

ரகசியம்

என் ரகசியம் 
அறிந்த நீ 

வேறு யாரிடமும் 
சொல்லி விடுவாயா 

உன்னை நான் 
கொன்று விடுவேனா 

பயமாக இருக்கிறது 
எனக்கு

மழை


எல்லா மழையும்
என் மழைதான் என்கிறான்
குட்டிப்பையன்
சத்தமாக

பெய்யாத மழையும்
என் மழைதான் என்கிறாள்
குட்டிப்பெண்
சந்தோஷமாக

Saturday, January 05, 2013

கடல்

நேற்று விட்டு வந்த என்னைத் 
தாலாட்டிக் கொண்டிருந்தது 
இன்று பார்த்த கடல்

அசைவு

வானத்தின் கீழே 
சிறு பறவையாகி மறைகிறது 
உன் கைக்குட்டை அசைவு

Saturday, December 22, 2012

சேர்த்து

நாவில் ஊறிய 
பொய்களைத் துப்பினேன் 
எச்சிலோடு சேர்த்து

Sunday, December 16, 2012

வரைதல்

என்னை வரைய 
வண்ணம் தேவையில்லை 
கண்ணீர் போதும் 

நான் பார்த்தது

குழந்தைக் கேட்டாள் 

நீங்கள் பார்த்த 
வானவில் போல் 
இருந்ததா 
நான் வரைந்தது

புன்னகைத்து 
அவள் கன்னம் தடவிச் 
சொன்னேன் 

நீ வரைந்த 
வானவில் போன்றிருந்தது 
நான் பார்த்தது

Tuesday, December 04, 2012

பொம்மை சிங்கம்

மேஜை மேல் 
பொம்மை சிங்கம் 
வனத்தின் வனப்புடன் 

அசைவற்று 
இருக்கும் என்னை 
கூர்ந்து பார்க்கிறது 

என் இந்தக்
கல் நிலை 
தொடருமானால் 
பெருங்கோபம் கொண்டு 
பாய்ந்து வந்து 
என்னைத் தின்று விடலாம் 
ஒரு நாள்

Sunday, December 02, 2012

அவ்வளவுதான்

யாருக்கு இதை 
சொல்ல நினைக்கிறீர்கள் 

யாருக்குமில்லை 
எனக்குமில்லை 
சொல்ல நினைக்கிறேன் 
அவ்வளவுதான்

சுடர் போல

விளக்கை 
ஊதி அணைத்த குழந்தை 
இருளில் நடக்கிறது 
சுடர் போல

Tuesday, November 27, 2012

மலர்ந்தும் உதிர்ந்தும்

மலர்தல் உண்மை 
உதிர்தல் உன்னதம்

இந்த வரிகளைத் 
தந்து விட்டுப் போனவரைத் 
தேடிக் கொண்டிருக்கிறேன் 

மலர்ந்தும்
உதிர்ந்தும்

Friday, November 23, 2012

வரியின்அடியில்

இந்த வரியின்அடியில் 
ஓடுகிறது நதி 

இந்த வரியின் மேல் 
விரிகிறது மலை 

மலை உச்சியிலிருந்து 
நதியின் ஆழத்தில் 
குதிக்கிறேன் 

வேறு வரிகளோடு 
வெளி வர

Thursday, November 22, 2012

இடதும் வலதும்


என் வலது பக்கம்
பயமும்
இடது பக்கம்
தைரியமும்

என் இடது பக்கம்
பயமும்
வலது பக்கம்
தைரியமும்

என் இடது பக்கம்
பயமும்
வலது பக்கம்
பயமும்

என் இடது பக்கம்
தைரியமும்
வலது பக்கம்
தைரியமும்

என் வலது பக்கம்
வலதும்
இடது பக்கம்
இடதும்

Wednesday, November 14, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

973-

இவ்வளவு 
கடுமையானதா 
எழுதுவது 
இவ்வளவு 
எளிமையானதா 
எழுதியது 

974-

வளைவின் 
முனைகளில் நாம் 
வளைவையும் 
நம்மையும் 
நேராக்கும் முயற்சியில்

975-

உங்கள் முதுகில் 
பாய்ந்திருக்கிறது 
என் கத்தி 
வீரத்திற்கான பரிசு 
என் கைகளில்

976-

சுவாரஸ்யமான போட்டி 
முந்திக்கொண்டிருக்கும் என்னை 
முந்த விரும்பும் நான்

977-

ரயில் பெட்டிகளை 
வரைகிறாள் குழந்தை 
அவள் பென்சில் வழியே 
ஓடிக்கொண்டிருக்கிறது ரயில்

978-

பழகிய பறவையின் 
சிறகை வருடினேன்.
வானத்தின் வாசம் வீசியது

979-

இருள் மழை 
கண்கள் மூடி 
நனைகிறேன் 

980-


எங்கிருக்கிறது 
இல்லாதது 

981-

மௌனத்தின் 
ஆழத்தில் 
ஆழத்தின் 
மௌனம் 





Tuesday, November 13, 2012

வரியில்

புல் விரிந்து 
வனமாகும் 
என்று எழுதிய வரியில் 
நானே 
புல்லாய் 
வானமாய்

Sunday, November 11, 2012

பொய்கள்

உண்மைக்குள் 
நுழையவே விருப்பம் 
கால்களைச் சுற்றி 
பாறாங்கற்களாய் 
அழுத்துகின்றன பொய்கள்

மிதக்கும் நிலவு

இந்த ஓடையில்
மிதக்கும் நிலவோடு
எனக்கொன்றும்
இல்லை பேச
பார்ப்பதைத் தவிர

Saturday, November 10, 2012

ஆப்பிள் மரம்

நான் ஆப்பிள் மரம் 
உங்களுக்கு எத்தனை 
ஆப்பிள் வேண்டும் 
கேளுங்கள் தருகிறேன் 
சொன்னாள் குழந்தை 

ஆப்பிள் மரம்தான் வேண்டும் 
எனச் சொல்லி 
அவளைத் தூக்கி கொஞ்ச 
விடாமல் சிரித்தாள் 

அவள் சிரிப்பில் 
உதிர்ந்து கொண்டே இருந்தன 
ஆப்பிள்கள்

Friday, November 09, 2012

கூலி

அய்யா என் வியர்வை 
கேட்கும் கூலியை 
உங்களால் 
கொடுக்க முடியாது 
நான் கேட்கும் 
கூலியையாவது கொடுங்கள் 

கொடுக்காவிட்டால் 

வியர்வை கேட்கும் 
கூலியைத் தர 
வேண்டி வரும் 

Monday, November 05, 2012

சித்திரம்

என்னால் 
புரிந்து கொள்ள முடியாத 
ஒரு சித்திரத்தை 
வரைந்து வைத்திருக்கிறாய் 
ஆனாலும் 
உன் கோடுகள் வழியே 
முழுதாய்ப் பயணித்து 
திரும்பி விட்டேன் 

Friday, November 02, 2012

மன்னிக்கவும்

உன் தலைக்கு வெளியே 
உன் எண்ணம் 
எட்டிப் பார்க்கிறது 
அது ஆபத்து 
உள்ளே அனுப்பு 

அது ஏணியும் கூட
 நான் உயரம் 
ஏறிச் செல்ல 
நீங்கள் சித்தரிக்கும் கருத்தில் 
உங்கள் பிம்பம் 
பலமற்றதாகத் தெரிகிறது 
மன்னிக்கவும் 

திரும்பிச் செல்கிறேன்

மலை உச்சியில் 
தற்கொலையைத் தள்ளிவிட்டு 
திரும்பிச் செல்கிறேன் 
கடந்து போகும் 
காற்றில் இருக்கிறது 
என் நம்பிக்கை 
முணுமுணுக்கும் 
பாடல் வரிகள்