Sunday, November 13, 2011

*மகளின் கட்டளைகள்

விடுமுறைக்கு
ஊருக்கு வந்த மகள்
அப்பாவை போனில் கூப்பிட்டு
உரக்கச் சொன்னாள்

அப்பா நான் வர்ற வரைக்கும்
மீன் தொட்டி மீன்கள
கவனமாப் பாத்துக்குங்க
அதுங்ககிட்ட
அடிக்கடி பேச்சுக்குடுங்க

பால்கனிச் செடிக்குத்
தண்ணி ஊத்துங்க

படிக்கட்டு பக்கம்
வர்ற அணிலுக்கு
தானியம் போடுங்க

மாடியில வந்து
உட்கார்ற காக்காவுக்கு
சோறு வைங்க
பாக்காம விட்றாதிங்க

நாய்க்குட்டிய
வாக்கிங் கூட்டிட்டுப் போங்க
கொஞ்சம் தூரமாப்பா
சின்னதா சுத்திட்டு வரவேணாம்

அப்புறம் ஜன்னலோரத்துல
வந்து உட்கார்ற புறா
அதுவா பறந்து போயிடும்
விரட்டி விட்றாதிங்க

என் டேபிள் மேல
ஒரு யானை
வரைஞ்சி வச்சிருக்கேன்
அத எடுத்து
பத்திரமா உள்ள வைங்க
யானைக்கு ஒரு பேரும்
யோசிச்சு வைங்க

எல்லாவற்றையும்
பொறுமையாகக்
கேட்டுக்கொண்ட அப்பா
மெல்ல
மகளின் வனத்திற்கு
காவலாளியாக
மாறத் தொடங்கினார்

*கல்கி இதழில் (20.11.2011) வெளியான கவிதை

Monday, November 07, 2011

அவர்கள்

யார் யாரையோ
புனிதர்களாக்கி விட்டோம்
அவர்கள் தங்களைக்
கடவுளாக்கிக் கொண்டார்கள்

போய்க் கேள்

கோபப்பட்டு
என்ன ஆகப்போகிறது என்று
ஒதுங்கிப்போகும் நண்பனே
கேள்
கோபப்படாமலும்
ஒன்றும் ஆகப்போவதில்லை
போய்க் கேள்

Friday, November 04, 2011

திரும்பவில்லை

எல்லோரும்
அவரவர் இடத்திற்குத்
திரும்பி விட்டார்கள்
கடவுள் மட்டும் இன்னும்
கோயிலுக்குத்
திரும்பவில்லை

யாரோ தொலைத்த குழந்தை

யாரோ தொலைத்த குழந்தை
என்னிடம் கிடைத்த
கொஞ்ச நேரத்தில்
அன்பாகி இருந்தது

கதை கேட்டது
கைதட்டிச் சிரித்தது
பலூன் உடைத்தது
பெயர் சொன்னது
கட்டிப் பிடித்துக் கொண்டது
என்னையும்
குழந்தையாக்கியது

தொலைத்தவர்களை
கண்டுபிடித்து
குழந்தையைத் தர
நிம்மதியும் சந்தோஷமும் சேர
கையெடுத்துக் கும்பிட்டுப் போயினர்

மறுபடி
குழந்தை தொலைந்து போனது
என்னிடமிருந்து

Thursday, November 03, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

733-

உடல் நடுங்க
பார்க்கிறது யானை
மதம் பிடித்த பாகனை

734-

அனுமதி பெற்று
உள்ளே வரவும்

அனுமதி பெறாமல்
வெளியேறினேன்

735-

அடித்து திருத்தி
எழுதிய கடிதம்

அடித்தலில்
போயிருந்தன உண்மைகள்

திருத்தலில்
மேலெழுப்பின பொய்கள்

வினாடிகள்

புணர்தலின் நிமித்தம்
ஒரு பெண்ணோடு
பேச விரும்புகிறவனின் நட்பு
விந்துக்கான வினாடிகளோடு
முடிந்து விடுகிறது

Tuesday, November 01, 2011

யாருக்கும் தெரியாமல்

விளை நிலங்களில் எல்லாம்
கட்டிடம் முளைப்பதைப்
பார்த்த விவசாயி
கலங்கிப் போனான்

யாருமற்றப் பயிரைப் போல
வாடிப் போனான்

கட்டிடங்கள்
நிமிர்த்தி அடுக்கி வைக்கப்பட்ட
சவப்பெட்டிகளாக
அவனுக்குத் தோன்றின

பேச்சற்று எல்லோரும்
வேடிக்கைப் பார்ப்பது ஏன்

எதுவும் கேட்காமல்
போவது ஏன் என

ஆயிரம் கேள்விகள் கேட்டு
தனக்குள் அறுந்து போனான்

இளைஞர் சந்ததிக்கு
எச்சரிக்கை கடிதமும்

கையாலாக சமூகத்திற்கு
கண்டனக் கடிதமும்
ஒன்றாய் எழுதி வைத்துவிட்டு
தூக்கில் தொங்கினான்

அதிகாலை பிஞ்சு ஒளியில்
உண்மை போல ஆடியது
அவன் உடல்

யாருக்கும் தெரியாமல்
அவன் கடிதம்
களவாடப்பட்டது

அவன் மரணம்
புதைக்கப்பட்டது

Monday, October 31, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

730-

நான் வளர்க்கும்
பெருங்கனவு
எனை
வளர்த்தெடுக்கும்
உலகளவு

731-

சிறு கல்
எறி

பெரு மலை
பிடி

732-

ஆத்மாவைத்
தொலைக்காதவனை
பிரபஞ்சம்
தொலைப்பதில்லை

*குட்டி தேவதைகள்

மருத்துவர் அழைப்புக்காகக் காத்திருக்கிறேன்

என் எண் வரவில்லை
அதனால் இன்னும் கூப்பிடவில்லை

வலியை ஆறுதல்படுத்தியபடி
நினைவால் தடவிக்கொடுத்தபடி
அமர்ந்திருக்கிறேன்

மருந்து நெடி கூடிய அந்த ஹாலில்
ஆடி ஓடிக் கொண்டிருக்கிறாள் ஒரு சிறுமி

அம்மாவிடம் ஓடுவதும்
அவள் கையிலிருக்கும் குழந்தையை
முத்தமிடுவதுமாய்

அந்த பட்டாம் பூச்சியின் அசைவுகள்
வலியை மறக்கச் செய்கின்றன

பரவும் மணம் போல
அவள் வாசனையை
எல்லாக் கண்களும் முகர்கின்றன

அவள் பெயர் கேட்கத் தோன்றுகிறது

குட்டி தேவதைகளுக்குப் பெயர் எதற்கு
மனம் ஒரு பதிலையும் தருகிறது

ஒருவர் அவளைப் பிடித்து பெயர் கேட்கிறார்

சம்பிரதாயக் கேள்விகளை நிராகரிப்பவள் போல
சொல்ல முடியாது எனச் சிரித்தபடியே ஓடுகிறாள்

அந்த சிரிப்பில் சிதறி விழுகின்றன
சில பெயர்களும் கொஞ்சம் இசையும்

என் கையிருக்கும் புத்தகத்தைப் பார்த்து ஓடி வருகிறாள்

இதில் பொம்மைகள் இல்லையே என்கிறாள்

உள்ளே பொம்மைக் கதைகள் இருக்கின்றன என்கிறேன்

ஒரு கதை சொல்லச் சொல்லிக் கேட்கிறாள்

என் பொய்கள் ஏதோ ஒரு கதையை
அழைத்து வரத் தொடங்கினேன்

ஒரு தேசத்துல ஒரு குட்டி இளவரசி இருந்தா
அவ பேரு…பேரு…ம்….சின்ட்ரலா…

அம்மா இந்த மாமா என் பேரச் சொல்றாரு
எனச் சொல்லியபடியே ஓடினாள்

உண்மையான என் பொய்க்கு
நன்றி சொல்லியபடியே
கண் துளியைத் துடைக்க
என் எண்ணை சொல்லிக் கூப்பிட்டார்கள்

முழுதுமாய் நீங்கிய வலியுடன்
நுழைந்தேன் மருத்துவர் அறைக்குள்

*தினகரன் தீபாவளி(2011)மலரில் வெளியானது

*அதனதன் இடத்தில்

கோயிலுக்கு வந்த எல்லோரும்
பிரார்த்தனை செய்து கொண்டார்கள்

பிரசாதம்
பகிர்ந்து கொண்ட நேரத்தில்
மகளிடம் தந்தைக் கேட்டார்

நீ என்ன
பிரார்த்தனை செய்து கொண்டாய்

அதிக மார்க் எடுக்க வேண்டும் என்றா

டாக்டர் ஆக வேண்டும் என்றா

வெளிநாடு போக வேண்டும் என்றா

எல்லாவற்றிற்கும்
இல்லை என்று தலையாட்டிவிட்டு
பிறகு சொன்னாள்

இந்த கோயில் யானையை
உடனே கொண்டுபோய்
காட்டில் விட்டுவிட வேண்டும் என்று
வேண்டிக் கொண்டதாக

மனிதர்கள் அதை செய்ய மாட்டார்கள்
கடவுளையும் செய்ய விட மாட்டார்கள்

சிரித்தபடி சொன்னாள்
சோகம் இழையோட

அசை போட்ட எல்லோரும்
அவளைப் பார்க்க
அவள் தூரத்திலிருந்த
யானையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்

அது தும்பிக்கை நீட்டி
அவளை அழைப்பது போலிருந்தது

வா இருவரும்
காட்டுக்கு ஓடி விடலாம் என
கூப்பிடுவது போலவும் இருந்தது

*ஆனந்த விகடன் தீபாவளி மலரில்(2011)வெளியானது

Sunday, October 30, 2011

சந்தை

இந்தச் சந்தை
அபாயகரமானது

உங்களுக்குத் தெரியாமல்
நீங்கள் விற்கப்படுவதற்குமுன்
விற்க வந்ததை
விற்றுவிட்டு
வெளியேறி விடுங்கள்

இந்த சந்தை
மிகவும் அபாயகரமானது

Saturday, October 29, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

728-

வெளியைத் தொட்டு
வெள்ளைத் தாளில் வைத்தேன்
பிரபஞ்சத்தின் நிறம்

729-

நீங்கள்
எழுதிய வரிகளில்
கடந்து போயிருக்கிறீர்களா

யானை

யானையை
வரைகிறாள் குழந்தை

குழந்தையைப் போல யானை
அவள் விரல்கள்
சொல்வதைக் கேட்கிறது

முடியும்

நீண்டுகொண்டே போகிறது
உங்கள் கதை
நிற்காமல்
எப்போது முடியும்

நீண்டு கொண்டே
போனபோதுதான் தெரிந்தது
இது பயணம் என்று

பயணம் முடியும்போது
நிச்சயம் கதையும் முடியும்

குறுஞ்செய்தி

காதல் கொல்கிறது
என்று வரும்
குறுஞ்செய்தியை
எல்லோரும் எல்லோருக்கும்
அனுப்பிக்கொண்டிருக்கிறோம்
அழிக்காமல்
காதல் வாழ்கிறது

Friday, October 28, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

717-

மழை மீதேறிப்
போன மெளனம்
பெய்தது சத்தமாக

718-

கண் மூட
நீந்தும்
மரணம் கண்டேன்

கண் மூடி
நானும்
மரணம் கொண்டேன்

719-

என்னை அழித்தும்
நான் இருந்தது

நான் அழித்தும்
நான் இருந்தது

720-

வசிக்க
நிறைய சத்தம்

வாழ
கொஞ்சம் இசை

721-

பழைய ஆறு
குளித்தெழ
புதிய நான்

722-

நீச்சல் தெரியாது
நீந்துகிறேன்
யோசனைகளில்

723-

மீன் தொட்டியிலிருந்து
தாவி
பறந்துபோய்
கடலில் குதித்தது
மீன்

724-

நகர்த்தும்
வார்த்தைகளுக்குள் ஓடும்
படைப்பின்
உந்து சக்தி

725-

கணக்கு போட்டுப்
பேசுகிறீர்கள்
எண்களாகிறது
உங்கள் மொழி

726-

ஒளி என்பது
வேறல்ல
நாம்தான்

727-

தருணங்களின் தவமே
பாய்ச்சல்
அதுவே
மின்னல் நொடி
நிகழ்வாகவும்

Wednesday, October 26, 2011

சேகுவாராவின் செருப்பு

சேகுவாராவின் செருப்பை
யாரோ திருடிவிட்டார்கள்

கல் போட்டது போல்
வந்து கலைத்தது
மீண்டும் தள்ளியது
இந்த வரி

வரியைத்
தொடர்ந்து சென்றால்
சேகுவாராவை அடையலாம்
அல்லது
செருப்புக் கிடைக்கலாம்

Sunday, October 23, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

713-

நான் அணிந்திருக்கும் உயிர்
என்னுடையதல்ல
பிரபஞ்சத்தினுடையது
வேண்டும் போது
எடுத்துக் கொள்ளும்

714-

நான் உதிர்ந்தேன்
நீ
மலர

715-

புத்தகங்களின் வனத்தில்
நானோர்
விலங்கு

716-

என் முகமூடியைப் போட்டுப்
பார்க்காதீர்கள்
கழற்றும் போது
என் முகம்
படிந்து போயிருக்கும்

Saturday, October 22, 2011

எனது பொய்கள்

இத்துடன்
எனது பொய்கள்
முடிவடைகின்றன
எனச் சொல்கிறவன்
வேறு சில
பிரமாண்டமான பொய்களுக்குத்
தயாராகிறான்

Friday, October 21, 2011

வழிப்போக்கன்

மழைக்கு
ஒதுங்குவதில்லை
வழிப்போக்கன்

கிடைத்தது

வானவில்லை வைத்து
அனுப்பிய வானம்
கிடைத்ததா

வானவில்லை
ரசித்த போது மழையும்
கிடைத்தது

ஓடும் ரயிலில்

ஓடும் ரயிலில்
கதவருகில் அமர்ந்திருந்த
பெரியவருக்கு
கொஞ்சம் தேநீரைப்
பரிமாறி கொண்டபின்
கேட்டேன்
சொன்னார்

உடம்பு சரியில்ல சார்
வாயில புண் வேற
இன்னைய பொழப்பு போச்சு
இவனுக்கு நல்ல ஓய்வு

ரயிலின்
சத்தத்தைக் கேட்டபடி
அவர் மடியில்
குழந்தை போல் கிடந்தது
புல்லாங்குழல்

Thursday, October 20, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

710-

மிச்சமிருக்கிறேன்
நான்
இது போதும்

711-

அனுமதி மறுப்பதில்லை
நிலங்கள்
நமது வாசகங்களில்
அனுமதி மறுக்கப்பட்ட
இடங்கள்

712-

பசிக்கத் தேடு
பசிக்கு
பசியே உணவு

தண்டனை

உங்கள் வியூகத்தில்
அகப்பட்டுக் கொண்டவர்களுக்கு
நீங்கள் தண்டனை கொடுத்தீர்கள்
தப்பித்துப் போனவர்கள்
உங்களுக்கு தண்டனைக் கொடுப்பார்கள்

வெளியில்

எதுவும் எழுதவில்லை
குளிர் காய்கிறேன்
மொழிக்கு வெளியில்
அமர்ந்து

Wednesday, October 19, 2011

புல் சொன்னது

புல்லிடம்
மலை பேசியது

எனக்கு கீழேதானே
நீ இருக்கிறாய்

என் உச்சியைப் பார்க்க
உனக்குத் தோன்றவில்லையா

புன்னகைத்து
புல் சொன்னது

நான் வானத்தையே
பார்க்கிறேனே

அதற்கு கீழேதானே
நீ இருக்கிறாய்

Monday, October 17, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

705-

உள் நீந்த
மீனானேன்
மீன் நீந்த
நானானேன்

706-

ஒற்றை வரி
அழைக்கும்
மற்ற வரி
மற்ற வரி
இணைக்கும்
மொத்த வரி

707-

தயக்கம்
அடியெடுத்து வைக்கும்
குழந்தையைப் போல

அடிசாய்த்து விடும்
பிசாசைப் போல

708-

என் மேல்
நின்று பார்க்க
தெரிந்தது
என் உயரம்

709-

என்ன என்று
அறியும் முன்
வழிந்தது கனவு
கண்ணீரில்

Saturday, October 15, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

700-

எனது தொப்பியின் மேல்
வானத்தை
ஒரு சிறகாக
சூடியுள்ளேன்

701-

மலையை விழுங்கிய
கனவின் உச்சியில்
நிற்கிறேன் நான்

702-

வழி
பயணச் சீட்டு
புறப்பட வேண்டும்

703-

எனது ரயில்
போய் விட்டது

எனது தண்டவாளங்கள்
இருக்கிறது

704-

அழுவதைத் தவிர
வழியில்லை

அழுகைக்கும்
வேறு வழியில்லை

Friday, October 14, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

695-

அறியேன் எனினும்
அறிவேன்

அறிவேன் எனினும்
அறியேன்

696-

குட்டி குட்டியாய்
நீந்தின கேள்விகள்
திமிங்கலப் பசியுடன்

697-

நீளும் பாதை
முடிவற்று

698-

நன்றியை
சொன்ன நேரம்
சொல்லியது
கண்ணீரும்

699-

எளிமையான கோடுகள்
ஓவியத்திற்கு
அழைத்துச் செல்லும்
நம்பிக்கை இருக்கிறது

மின்னும் வரி

நள்ளிரவில்
மின்னிய வரியை
நள்ளிரவுகளில்
தேடுகிறேன்

கிடைக்கக் காணோம்

இருளில் என்னைத்
தள்ளி விட்டு
விளையாடுகிறது
ஒளிந்து கொண்டு

Wednesday, October 12, 2011

இருக்கக் கூடும்

ஒயின் ஷாப் பாரில்
கிளாஸ் பொறுக்கி
டேபிள் துடைக்கும்
சிறுவனைப் போன்று
குடித்துக் கொண்டிருக்கும்
யாரேனும் சிலருக்கு
இருக்கக் கூடும்
படிக்கும் மகன்கள்

Tuesday, October 11, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

690-

பெருமூச்சுடன்
முடிகிறது
ஏக்கம்

691-

கனவின் பிசுபிசுப்பை
இமைகளின் இடையில்
ஒட்டிக்கொண்டு
தூங்கப் பார்க்கிறேன்

692-

ரகசிய விளக்குகள்
இருளை விட
பயமுறுத்துகின்றன

693-

ஒன்றை கவனிக்க
இன்னொன்று
கவனிக்க வைக்கும்

694-

சிறிதாய் அடிக்கடி
வரும் கேள்வி
எது பெரிது

இருந்தது

தொலைந்தது வரி
கிடைத்தன வார்த்தைகள்

பொருத்திப் பார்க்க
இருந்தது

அதே போலவும்
புதிதாகவும்

Sunday, October 09, 2011

அனுபவ சித்தனின் குறிப்புக்கள்

685-

எளிமையான
வரியின் மேல்
நான் ஊர்ந்து போகும்
சிறு எறும்பு
வேறொன்றுமில்லை

686-

காடு எரிகிறது என்று
எழுதிய வரியை
உடனே அழித்தேன்
வார்த்தைகளுக்குள்
வனம் அழிவதை
விரும்பவில்லை

687-

பெயரை
திரும்ப திரும்ப
அழிக்கிறேன்
புதிய பெயர்கள்
முளைக்க

688-

துளியை
மாபெரும்
துளியென
உடை
திரும்ப திரும்ப
உண்

689-

பூ
உடைந்தது
மணம்
உடையவில்லை

Saturday, October 08, 2011

படிகள்

படிகளை வரைந்தாள் குழந்தை
எப்போது இதில்
ஏறிப்போவாய் என்றேன்
சிரித்தபடியே சொன்னாள்
நான் இறங்கி வந்த
படிகளைத்தான்
வரைந்து கொண்டிருக்கிறேன்

Wednesday, October 05, 2011

சொல்லாமல்...பேசாமல்

ஒரு கல்லைத்
தூக்கி எறிவது போல

ஒரு கதவை
சாற்றுவது போல

சிலரை
புறக்கணித்து விடுகிறோம்

விழும் கல்
வலி சொல்வதில்லை

சாற்றப்படும் கதவு
பதில் பேசுவதில்லை

அவர்களும் அப்படிதான்
போய்க் கொண்டிருக்கிறார்கள்

வலி சொல்லாமல்
பதில் பேசாமல்

கற்றுத் தரும் வார்த்தைகள்

எதுவும் பெற்றுத் தராத
இந்த வார்த்தைகளை
வைத்துக்கொண்டு
என்ன செய்யப் போகிறீர்கள்

உங்களுக்கு வேண்டுமானால்
இது பெற்றுத் தராத
வார்த்தைகளாக இருக்கலாம்

எப்போதுமே எனக்கு இது
கற்றுத் தரும் வார்த்தைகள்

Tuesday, October 04, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

682-

சொல்லில்
சுடர் அசைந்தது
சுடரை
ஊதி அணைத்தேன்
ஆனாலும்
சொல் ஒளிர்ந்தது

683-

நடந்து விடுவேன்
நம்பிக்கை இருக்கிறது

கடந்து விடுவேன்
நம்பிக்கை நடக்கிறது

684-

வரிகள்
கண்டெடுக்கும்
என்னை

Tuesday, September 27, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

672-

அசையும் கல் நான்
தூக்கி எறியலாம்

அசையா மலை நான்
பார்த்துப் போகலாம்

673-

காத்திருக்கிறேன்
கிடைக்கவில்லை
என்றாலும்
காத்திருப்பேன்
கிடைக்கும்

674-

முறிந்து கிடக்கும்
சொற்கள்
ஒட்டப் பார்க்கும்
மழை

675-

குளிருக்கு பயந்து
நிறைய போர்வைகள்
போர்வைகளின் அடியில்
நசுங்கிய தூக்கம்

676-

தாகத்தை
விதைத்தேன்
கிணறு
முளைத்தது

677-

பறந்து பறந்து
என்ன அடைந்தாய்
பறவையிடம் கேட்டேன்

கேட்டு கேட்டு
என்ன சாதித்தாய்
பறவைக் கேட்டது

678-

வழிகள் நண்பர்கள்
வழிப்போக்கன்
நான்

679-

எந்த நீர்குமிழியும்
உடையவில்லை
உடைந்ததெல்லாம்
நான்தான்

680-

இரு பார்வைகள்

என் தியானம்
மெளனத்தில் தொடங்குகிறது

என் தியானம்
மெளனத்தில் முடிகிறது

681-

மரணம்
ஒரு பெரும் கதவாகி
மூடும்போது
நான் அதன்
சிறு துவாரம் வழியே
வெளியேறி விடுவேன்

Thursday, September 22, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

669-

தாகம் நிரம்பிய குளம்
தண்ணீராகவும்
தெரிகிறது

670-

வழிகள் அடைக்கப்பட்டுவிட்டன
அதனாலென்ன
பூமி திறந்திருக்கிறது

671-

குப்பி நிறைந்திருக்கும் நேரம்
குடித்துக்கொண்டிருக்கிறேன்
நிகழ்காலத்தை மாற்றாமல்

சொல்

சொல் திறக்க
வழி

வழி திறக்க
மொழி

மொழி திறக்க
நான்

நான் திறக்க
உலகம்

உலகம் திறக்க
சொல்

Tuesday, September 20, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

665-

வெளியில்
தொலைந்தேன்

வெளியில்
நிறைந்தேன்

666-

சுமந்ததை
இறக்கிய பின்னும்
சுமக்கும் நினைவு

667-

தியானம் முடித்து
கண் திறக்கும்
எழுத்து

668-

பெரிதினும் பெரிதென
பெரிதினும் பெரிதென
பெரிதாகி
சிறிதானேன்

அழகாக இருக்கிறது

மது
நிரம்பி வழியும் கோப்பை
அழகாக இருக்கிறது

இரவு
நிரம்பி வழியும் கனவு
அழகாக இருக்கிறது

நான்
நிரம்பி வழியும் நான்
அழகாக இருக்கிறது

அழகு
நிரம்பி வழியும் அழகு
அழகாக இருக்கிறது

ஒவ்வொரு...

ஒவ்வொரு பிரிவையும்
நம் சந்திப்பில்
உடைத்தோம்

ஒவ்வொரு சந்திப்பையும்
நம் அன்பில்
இணைத்தோம்

முதல் மணி

தன்னை எழுப்ப
முதல் மணியை அடிக்கிறான்
தேவாலய ஊழியன்
பிறகு அடிப்பது
மற்றவர்களுக்காகிறது

Saturday, September 17, 2011

தள்ளி தள்ளி

தள்ளி தள்ளி
கண்ணீரின் அருகில்
கொண்டுபோய்
நிறுத்துகிறீர்கள்

புன்னகைத்தபடியே
பார்க்கிறேன்
துளிகளைத்
துடைத்தபடி

Thursday, September 15, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

660-

கையளவு காற்றை
ஊதி அசைத்தேன்
இசை வீசிப்போனது

661-

வார்த்தைகளுக்கிடையில்
புதைந்து போனதை
எந்த வார்த்தைகள் கொண்டு
எழுத இயலும்

662-

என்ன முடிவு
செய்திருக்கிறீகள்

எதையும் முடிவு
செய்யக்கூடாதென்று

663-

இந்த நள்ளிரவில்
இந்த ஒற்றைத்துளி கண்ணீர்
போதுமானதாக இருக்கிறது

664-

பொய்களின் பாசியில்
வழுக்கி விழுகிறேன்
தாங்கிப் பிடிக்கும்
உண்மை கை தேடி

Tuesday, September 13, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

654-

நான் சினம்
அணிந்த சிவம்
சினம் உதிர்ந்தால்
எதுவுமற்ற சவம்

655-

புள்ளியில்
வந்து நின்றேன்
இனி புள்ளியை
நகர்த்த வேண்டும்

656-

மழை பெய்கிறது
தனிமையின்
மீதும்

657-

கண் மூட
அழைத்துப் போனது
இருள்
கண் திறக்க
வரவேற்றது
வெளிச்சம்

658-

பெரு மூச்சில்
இறங்கி விழும்
ஏக்கம்

659-

தன் நடையில்
பாய்ச்சல் உண்டு என்றவர்
உடனே வந்து சேர்ந்தார்

தன் நடையில்
ஓட்டம் உண்டு என்றவர்
அடுத்து வந்து சேர்ந்தார்

தன் நடையில்
நடை உண்டு என்றவர்
தொடர்ந்து வந்து சேர்ந்தார்

தன் நடையில்
என்ன உண்டு என்றவர்
வந்து சேரவே இல்லை

இன்னொரு மையத்தில்

நான் கொல்லப்படுவேன் என்று
படிக்கிறீர்கள்
பதட்டத்துடன்

சரியாகப் பாருங்கள்

நீங்கள் கொல்லப்படுவீர்கள்
என்று எழுதி இருக்கிறது

அது யார் எவர் ஏன் என்ற
கேள்விகளுக்குள் போய்
உடைந்து வந்து
மேலும் ஒரு முறை
அப்படியேப் படிக்கிறீர்கள்

நான் கொல்லப்படுவேன்


செய்து குவித்த குற்றங்களும்
தவிக்க விட்ட ரணங்களும்
ஒன்றின் மீது
ஒன்று மோதி
வெடித்துச் சிதறுவது
மேலும் உங்களை
பதட்டமடைய வைக்கிறது

இப்போது
மனதைக் கூர்மையாக்கி
மையம் இழக்காமல்
படிக்கிறீர்கள்
மிகச் சரியாக

நீங்கள் கொல்லப்படுவீர்கள்

அப்போது உணர்கிறீர்கள்
அதே மனது
இன்னொரு மையத்தில்
நான் கொல்லப்படுவேன் என்று
படித்திருப்பதை

அறையின் வரைபடம்

நகர மூலையில் உள்ள
எனது சிறு அறையில்
மாட்டப்பட்டிருக்கிறது
அறையின் வரைபடம்

வண்ணங்களின் வீச்சில்
அறை இன்னொரு
அறையாகி விடுகிறது

பார்க்கும் போதெல்லாம்
வரைந்தவனின் கையை
தொட்டுப் பார்க்கத்
தோன்றுகிறது

மஞ்சள் வண்ணத்தில்
ஒளி பாய்ச்சுகிறது சூரியன்
இரவிலும்

வண்ணங்களை திறந்துதான்
ஓவியக்காரன் இந்த
அறைக்குள் நுழைந்திருக்க வேண்டும்

எனது சிறு அறையில்
மாட்டப்பட்டிருக்கிறது
அறையின் வரைபடம்

எனது அறைக்குள் நுழைந்து
அந்த அறைக்குள்
போய் வசிப்பது
இடக்குறையை
நிவர்த்தி செய்து விடுகிறது

சுதந்திரம் ததும்பும்
உணர்வையும் தருகிறது

Thursday, September 08, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

649-

இல்லாத வரியை
உற்றுப் பார்க்கிறேன்
இது வரை

650-

விரும்பி தொலைந்த ஆடு `
விலகி ஓடுகிறது
மந்தையிலிருந்து

651-

நினைவள்ளிப்
போட்டு போட்டு
கனவெல்லாம்
நெறைஞ்சிப் போச்சு

652-

சொல்லிக் கொள்ள
சொந்தம் உண்டு
சொல்லிச் செல்ல இல்லை

653-

வரிகளுக்கிடையில்
நகரும் மேகம்
எங்கே பெய்யும்

Tuesday, September 06, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

646-

நினைவின் மேலேறி
நினைவை எடுத்துக்கொண்டு
போனது நினைவு

647-

கனவை திறக்க
வெளி ஓடின
கனவுகள்

648-

ஜோராய் நடக்கிறது
வியாபாரம்
நீயும் நானும்
விற்கப்படுகிறோம்

வியர்வைகள்

உள்ளங்கையில்
நட்சத்திரங்கள் இல்லை
கை திறந்ததும்
மின்னித் தெறிப்பதற்கு

வியர்வைகள் உண்டு
நீந்தி உழைப்பதற்கு

நீட்சியில்

முற்றுப் புள்ளியை
அனுமதிக்க விரும்பாமல்
நீளமாகிக் கொண்டே
போகிறது வரி

எங்கு முடியும்
எப்படி முடிவை
சென்றடையும்
தெரியவில்லை

நீளும் வரி
தன் நீட்சியில்
அர்த்தங்கள் கரை புரண்டோடும்
நதியாகவும் தெரிகிறது

Sunday, September 04, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

639-

தொலைவான வனம்
தூரம் நிரப்பும்
பறவை ஓலி

640--

புல்லாங்குழலிலிருந்து
மழை பெய்கிறது

கேட்கிறது
மழை பெய்வது

641-

நானே தூசி
என்னை எதற்கு
தூசி தட்ட

642-

எனக்குள் மூழ்க
கண்டேன்
ஓர் கடல்

643-

சொல்
உதிரும்
அழுகையில்

644-

இருந்த இடத்தில் இல்லை
வேறு இடத்தில்
வலி

645-

பெயரின் மையத்தில்
பெயரற்ற
ஒற்றர்கள்





Saturday, September 03, 2011

வேண்டாம்

கண்களில்
நிராகரிப்பின் கசப்பு

உதட்டில்
புன்னகையின் இனிப்பு

உங்கள் முரணில்
எனக்கு உடன்பாடில்லை

பிறகு
எதற்கு சந்திக்க

வேண்டாம்

கூழாங்கல்

இந்தக் கணத்தில்
உள்ளங்கையில் இருக்கும்
இந்தக் கூழாங்கல்
இதமான குளிர்ச்சியைத்
தந்து கொண்டிருக்கிறது

ரகசியமாய்
உனக்கு நானிருக்கிறேன்
என்று சொல்லவும் செய்கிறது

விட்டெறிய விரும்பாத
குட்டிக்கல் இப்போது
என் மேஜையில்

ஒளிப்பட மின்னுகிறது
தன் வசீகரத்துடன்

Thursday, September 01, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

631-

பசி
கனவுத் தேடும்
தாய் முலை

632-

சிரித்தபடியே
குரு சொன்னார்

பிறப்பு
தற்காலிக சொத்து

மரணம்
பூர்வீக சொத்து

633-

ஒன்றிலிருந்து ஒன்று
கிடைக்கும்
அந்த ஒன்று
எப்படி கிடைக்கும்

634-

வரிகளில்
நடந்து சென்றேன்
களைப்பே இல்லை

635-

முள்ளேறும் எறும்பு
முனை அடையாமல்
திரும்புகிறது

636-

பெருவெளியில்
நின்று அழுதேன்
உலகை சுட்டது
என் துளி

637-

படுக்க இடம்
தேடியவன் சொன்னான்
வானம் என் கட்டில்

638-

நிற்க நேரமில்லாமல்
ஓடிக் கொண்டிருக்கிறது
காலம்

Wednesday, August 31, 2011

ஆதி முதல்

ஆதி முதல்
இன்று வரை
நாம் நிறையவே
கற்றுக் கொண்டோம்

சாதாரணத்தை
அசாதாரணமாக மாற்ற
கற்றுக் கொண்டோம்

உதாரணமாய்
ஒன்றைச் சொல்லலாம்

கயிறைத்
தூக்குக் கயிறாக்கக்
கற்றுக் கொண்டோம்






Sunday, August 21, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

629-

நீர்க் கோடு வரைந்தேன்
மறைந்தது நீர்
இருந்தது கோடு

630-

திசைப் பார்த்து
பறக்காது
புகை








நண்பன்

ஒரு நண்பனைப் போல்
பார்த்து நடக்கிறேன்
என் நிழலை

அதோடு
பேசியும் செல்கிறேன்
யாரும் பார்க்காத போது

Saturday, August 20, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

619-

இயலாமையை மறைக்க
திரைகள் இடுகிறோம்
திரைகளின்
ஓட்டைகள் வழியே
இயலாமையைப் பார்க்கிறோம்

620-

கடிகாரத்தின் பெண்டுலத்தில்
ஆடுகிறது
காலம்

621-

சிரித்து விடுங்கள்
அழுகையின் பக்கத்தில்
நமக்கென்ன வேலை

622-

அசைவற்று இருப்பதிலும்
இருக்கிறது
அசைவு

623-

யாரும் சொல்லாததை
நான் சொல்லவில்லை

எல்லோரும் சொல்லி விட்டதால்
நான் சொல்லாமலில்லை

624-

நட
கால்கள் செய்யும்
வழி

625-

உள்ளிருக்கும் மிருகங்களை
எழுப்பி விடுகிறது
காமம்

626-

நான்
தேநீர்
இந்தத் தருணம்
வேறென்ன வேண்டும்

627-

மொழியில் தொலைந்தேன்
கண்டெடுத்துத் திரும்புவேன்
எனக்கான வார்த்தைகளோடு

628-

வேறு வழியில்லை
வென்றாக வேண்டும்





Thursday, August 18, 2011

பார்த்தேன்

முதல் மின்னலில்
உன்னைப் பார்த்தேன்

இரண்டாம் மின்னலில்
உன் கண்களைப் பார்த்தேன்

மூன்றாம் மின்னலில்
உன் கண்ணீரைப் பார்த்தேன்

நான்காம் மின்னலில்
உன்னைக் காணவில்லை

ஐந்தாம் மின்னலில்
இருளைப் பார்த்தேன்

வெறும் இருளையேப் பார்த்தேன்

வெளியேற்றுதல்

தள்ளித் தள்ளி
உங்களுக்குள்ளிருக்கும்
குழந்தையை
வெளியேற்றுகிறீர்கள்

பின் அது
சைத்தானுக்குரிய
இடமாகி விடுகிறது

வளர்தல்

சொல்லிடம் அனுமதி கேட்டு
தங்க வந்த முள்
நாளாக நாளாக
சொல்லைக் குத்த ஆரம்பித்தது

நன்றி இழந்த முள்
ஒரு நாள்
முனையையும் இழந்தது

பின் இறந்தது

முள்ளை
அடக்கம் செய்துவிட்டு
அதன் மேல்
பூவை வைத்த சொல்
வானம் பார்த்தது

அப்போது பெய்த
மழையின் துளி
வசிக்கிறது சொல்லில்

வளர்கிறது சொல்
கவிதையில்

Tuesday, August 16, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

614-

முறிந்து போன `
புன்னகை
ஒட்டப் பார்க்கிறது
கண்ணீர்

615-

இருளில்
நெய்த வழியில் நடந்தேன்
இருளின்
துணைகொண்டு

616-

என்ன செய்ய
அபத்தமான வரிகளுக்கிடையில்
அகப்பட்டுக் கொள்கிறோம்
சில நேரம்

617-

போதும் என்று
சொல்லக் கற்றுக்கொள்
வானம் சொன்னது

சொல்லிப் பார்த்தேன்

வானத்தின் விசாலம்
போதும் என்ற வார்த்தைக்குள்
வந்திருந்தது

618-

இரண்டாவது நாக்காலும்
பேசுவேன்
சில நேரம்
அது தெரியாது
உங்களுக்கும்
முதல் நாக்குக்கும்



Wednesday, August 10, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

613-

நைந்து கிழிந்து போயிருந்தது துணி

இதை அணியவும் முடியாது
இது எதற்கும் பயன்படாது என்றேன்

எதுவும் எதற்கும் பயன்படும்
எனச் சொல்லியபடியே
வந்த அனுபவ சித்தன்
அதை மேலும் கிழித்து
ஒரு மெல்லிய திரியாக்கி
விளக்கேற்றிக் காட்டினான்

அசைந்த சுடரில்
காணமல் போயிருந்தன
நைந்து கிழிந்த இருள்கள்

நழுவுதல்

வண்ணங்களிலிருந்து
நழுவி விடும் ஓவியத்தை
யார் வரையப் போகிறார்கள்

Tuesday, August 09, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

609-

சொல் திறக்கும்
மொழி

610-

இரவை
மடித்தபடி நடந்தேன்
பகல் வந்தது

பகலை
விரித்தபடி நடந்தேன்
இரவு வந்தது

611-

கடைசி வரை
அழவில்லை
செய்த உறுதியின்
அடியிலிருந்தது
மறைக்கப்பட்ட கண்ணீர்

612-

மரணம் போதும்
எனக்கு
வாழ்வதற்கு

என்று

அரை நிர்வாணமாகி
காந்தியானேன்

என்று மனம் நிர்வாணமாக
முழு காந்தியாவேன்

நீந்தும் வார்த்தைகள்

படுக்கை அறை
மீன் தொட்டியானது

மீன்களோடு
நீந்தத் தொடங்கினேன்
உறக்கம் கலையாமல்

கடித்து எழுப்பின மீன்கள்
காதருகே வந்த ஒன்று சொன்னது

நீந்தியபடியே தூங்கு
தூங்கியபடியே நீந்தாதே

உடன் எழ
மீன் தொட்டி மறைய

காதில் நீந்தியபடி
இருந்தன வார்த்தைகள்

இன்னும் சொல்லியபடி

Sunday, August 07, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

600-

பாய்வது போல்
பாவனை செய்யுங்கள்
பாயாதீர்கள்

601-

எல்லாவற்றிற்கும்
நேரம் இருக்கிறது
என்பவர்களுக்கு
எல்லாவற்றிற்கும்
நேரம் இருக்கிறது

602-

தூங்குவது நொடிகள்தான்
ஆனாலும்
மணிகளாக
பாவிக்க முடியும்

603-

நல்ல நாள்
கடவுள் கையொப்பம்
இட்ட தாள்

604-

அழகாய் தெரிவதில்லை
நின்றிருக்கும்
குதிரைகள்

605-

மிதக்கும்போதெல்லாம்
விழுந்து போகின்றன
பாரங்கள்

606-

எந்த வெளிச்சமும்
வெளிச்சத்திற்கு வராமல்
இருப்பதில்லை

607-

நின்று போயிற்று வலி
நின்றபாடில்லை
வலியின் அதிர்வுகள்

608-

இலையின் ஓரத்தில்
இருக்கட்டும்
கொஞ்சம் பசி

Saturday, August 06, 2011

அடையாளம்

உங்கள் வார்த்தைகள்
உங்களை அடையாளம் காட்டின

பிறகு
அதை தவறு எனச் சொல்லி
உங்கள் மொழியால்
அழிக்கப் பார்க்கிறீர்கள்

Friday, August 05, 2011

தெரியும்

அடுத்த அத்தியாயத்தில்
உன்னைக் கொல்லப் போகிறேன்
கதாபாத்திரத்திடம் சொன்னேன்

கோபம் ஏறி
கத்தியது

எனக்குத் தெரியும்
ஒரு பிணம்
என் கதையை
எழுதிக்கொண்டிருக்கிறது என்று

வசித்தல்

ஒரு சிறு வரிக்குள்
அகப்பட்டுக்கொண்டேன்
வெளிவரத் தெரியாமல்

பிறகு வசிக்கப்
பழகிக் கொண்டேன்
புத்தகத்தில்

வலிகள்

ஒரு பெரிய வலியை
ஒரு சிறிய வலியிடம்
சொன்னேன்

சிறிய வலி
காணமல் போயிருந்தது

பெரிய வலி
குறைந்திருந்தது

Wednesday, August 03, 2011

உடைத்தல்

சிறையில்
முன்பின்
நடந்து நடந்து
தன் பயணத்தை
தூரமாக்கி விடுபவன்
சிறை வடிவங்களை
உடைத்து விடுகிறான்

Tuesday, August 02, 2011

விசாரித்தல்

நீண்ட வருடங்களுக்குப் பிறகு
ஊருக்குப் போய்
எல்லோரையும்
விசாரித்துவிட்டு வந்தேன்
ஊரை விசாரிக்காமல்
வந்து விட்டேன்

Saturday, July 30, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

590-

என்னுள் நகர
கண்டேன் வானம்

என்வெளி விரிய
கொண்டேன் ஞானம்

591-

பிறகு
இரவு
அதன் பிறகு
பகல்
அவ்வளவுதான்
வேறொன்றுமில்லை

592-

மொழிக்குள் நுழைந்து
வார்த்தைகளில்
வெளியேறிவிடுவதை
எப்படி எழுத

593-

படிகளில்
இறங்கியது மழை

மழையில்
இறங்கின படிகள்

594-

சதுரத்திற்குள்
இருக்கும் சதுரங்கள்
சதுரத்திற்குத் தெரியாது

595-

பதில் கண்டெடுக்காத
கேள்விகள்
கேள்விகளே அல்ல

596-

எழுது
என்ற கட்டளையை
எழுத்தே
பிறப்பித்து விடுகிறது

597-

கண்ணீரும் மழையும்
பேசும்
புன்னகை
தள்ளி நின்று
பார்க்கும்

598-

துளிக்குள்
பதுங்கும் கடல்போல
மெளனத்திற்குள்
பதுங்குகிறது மொழி

599-

நிசப்தத்தின் கோடரி
இரவின்
மேல் விழும்
வழியும் கனவுகள்
ஒன்றிரண்டு
என் கரை வரும்

Thursday, July 28, 2011

நிகழ்தல்

மொழியில்லை
வரிகள் இல்லை
வார்த்தைகள் இல்லை
ஒரு நெல்மணி அளவு கூட
எழுத்தில்லை
ஆனாலும்
நிகழ்கிறது உரையாடல்

மலை

தன் நாவில்
மொழி அழுந்திக்கிடக்க
யார் யார் குரலையோ
எதிரொலித்துக்கொண்டே
இருக்கிறது மலை

Tuesday, July 26, 2011

கதை

உள்ளங்கை
சொற்களைக் குலுக்க
கேட்டது
புராதன கதையின்
சத்தம்

கையசைப்பு

கையசைத்து
கையசைத்து
கடைசி கையசைப்பு
ரயிலுக்கு
என்றாச்சு

Friday, July 22, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

584-

பிறகுதான் சொல்லப்பட்டது
பசியாறிய இறைச்சி
சமாதானப் புறாவின்
உயிர் என்று

585-

எல்லாம்
இறக்கி வைத்தாயிற்று
இனி எதுவும்
சுமையில்லையே

இந்த கேள்வியை
இறக்கி வைத்தால் போதும்

586-

எழுத்தின் பசி
எழுப்பும்
உறங்கும் வார்த்தைகளை

587-

முதுகை நோக்கி
எறியப்படும் ஈட்டிகள்
துரோகத்தின்
விஷம் தோய்ந்தவை

588-

ஏதோ ஒன்று
நம்மை விரட்டுகிறது

ஏதோ ஒன்றை
நாம் விரட்டுகிறோம்

589-

எப்படி சொல்வதென்று
தெரியவில்லை

என்னிடமும்
சொற்கள் இருக்கின்றன

Thursday, July 21, 2011

மழை

மழை நம்மை
குழந்தையாக்கிவிடுகிறது
சரிதானே

ஆமாம் என்கிறார் அப்பா

நனையும் மழை
இன்னும்
குழந்தையாக்கி விடுகிறது
இதுவும் சரிதானே

சொல்லி ஓடுகிறாள் குழந்தை
கூப்பிடும் மழையிடம்

Wednesday, July 20, 2011

வழியில்

உன் தடங்கள் இல்லை
ஆனாலும் நீ வந்து போன
குறிப்புகள் வழியில்

யார்

இசைக்கத் தெரியாத
இந்த மூங்கிலுக்கு
யார் இத்தனை
துளை இட்டது

Monday, July 18, 2011

தானானது

என் மேல்
பூக்கும் பனித்துளி
பிரபஞ்சம்போல்
என்னை
பெரிதாக்கி விடுகிறது

சொல்லி சிரிக்க
துளி மறைய
மீண்டும் தானானது
புல்

அறைகள்

அறை முழுதும்
அறைகள்
என எழுதியபின்
வத்திப்பெட்டி அளவு இடம்
வானமாக விரிவு கொண்டது

Saturday, July 16, 2011

நகரத்தில் சந்தித்தவன்

நகரத்தில் சந்தித்தவன்
சொன்னான்

நான் மனிதர்களை
வேட்டையாடும்
மனிதன்

கால்களில்
ஓட்டத்தை குவித்தபடி
கேட்டேன்

இப்போது
நீ என்னை
வேட்டையாடப் போகிறாயா

அது உன் மேல் கமழும்
இறைச்சி வாசனையைப்
பொறுத்தது

மூக்கை விரித்தபடி
சொன்னான்

அவனிடமிருந்து தப்பிக்க
வேகமாக ஓடுகையில்
அவனைப் போலவே
எதிர்பட்டனர்
நிறைய பேர்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

577-

கை குவித்த
சொற்களுக்குள்
நான் குவிந்து

578-

இப்போது நான்

கிடைக்காதா என்ற
படபடப்புடனும்

கிடைத்துவிடும் என்ற
நம்பிக்கையுடனும்

579-

சொல் கொண்ட
சூல் உடைத்து
பாய்ந்தது வரி

580-

என் மீது
சொருகப்பட்ட வாளை
எடுக்கிறேன்
என் யுத்தம்
பதில் சொல்லும்

581-

எல்லா வழிகளும்
அடைக்கப்பட்டிருக்கின்றன
என்ன செய்யப் போகிறீர்கள்

பறக்கப் போகிறேன்

582-

என் நாவால்
பேசும்
சபை

583-

நகரும் கதையில்
ஓடுகிறது குதிரை
எழுத்துக்களைப்
பின்னுக்குத் தள்ளி

மறைதல்

காமமாய்
மாற்ற நினைத்த
காதலொன்று
கைகுழந்தைபோல்
அழுதது

மெல்ல கீழிறக்கிவிட்டுப்
போகச் சொல்ல
பூப்படைந்த
புதுப்பெண் போல்
ஓடி மறைந்தது

Wednesday, July 13, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

572-

அழுவதைத் தவிர
வழி இல்லை
அழுதாயிற்று
இனி அழுகைக்கு
வழி இல்லை

573-

வெள்ளைத் தாளை படிப்பதற்கு
எழுத்துக்கள்
தேவையில்லை

574-

வானத்தில் விழிகள்
சதுரங்களில்
தூங்கி விடுகிறேன்

575-

பறிக்க நீளும் கரம்
பூவின் புன்னகைப் பார்த்து
தடவிவிட்டுத் திரும்புகிறது

576-

அன்பு மட்டுமே இருக்கிறது
உன்னிடம்

இதை வைத்துக்கொண்டு
என்ன செய்யப் போகிறாய்

அன்பு செய்யப் போகிறேன்

Sunday, July 10, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

568-

கதைப் புத்தகத்தில்
கலைந்து போயிருந்தது
இன்னொரு கதை

569-

நான்
கொன்று
நான் பிறந்தேன்

570-

பொருளற்ற நான்
பொருள் உள்ளவன்
சொல்லிப் பார்த்தேன்
பொருள் இருந்தது

571-

ஏதோ ஒரு விட்டில் பூச்சி
அணைத்து விடுகிறது
சுடரை

Saturday, July 09, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

560-

நானும் நீங்களும்
நானும் அவர்களும்
என்பது போலத்தான்
நானும் நானும்

561-

முறிந்து போன வார்த்தைகளை
குணப்படுத்த வேண்டும்
முதலில்

562-

யுத்தம் பழகியவன்
சத்தமில்லாமல்
கொல்வான்

563-

காற்றைத் திரித்து
கண்டேன் ஒரு வரி
அது கானம் இசைத்து
போனது பல வழி

564-

விரட்டாத பறவை
விட்டுச் சென்றது
வானத்தை

565-

இருளில்
படிக்கிறேன்
இருளை

566-

தூக்கம் கேட்கின்றன
இமைகள்

காட்சிகள் கேட்கின்றன
விழிகள்

567-

இரவும்

மதுவில் இறங்கிய
இரவும்

ஒரு இரவில்
தூங்கினேன்

ஒரு இரவில்
விழித்திருந்தேன்

Tuesday, July 05, 2011

மகளின் வரிகள்

மரங்களே
விதையிலேயே இருங்கள்
நீங்கள் வளர்ந்தால்
வெட்டித் தள்ளிவிடுவார்கள்

தான் எழுதிய வரிகளை
எடுத்து வந்து காட்டினாள் மகள்

படித்து
அவள் தலை தடவ
வெட்டப்படாத
மரங்களின் காற்று
என் மேல் வீசிச் சென்றது

Saturday, July 02, 2011

காத்திருத்தல்

என்னைப் போலவே காத்திருப்பவர்
யாருக்காக காத்திருக்கிறார்
என்று தெரியாது

என்னைப் போலவே காத்திருப்பவர்கள்
எதற்காக காத்திருக்கிறார்கள்
என்று தெரியாது

காத்திருக்கிறேன்

காத்திருக்கிறார்

காத்திருக்கிறோம்

Friday, July 01, 2011

செய்தியில்...

காலை செய்தியில்
வாகனம் ஏறி
இறந்த குழந்தை

அன்று முழுதும்
அந்த குழந்தையைக் காப்பாற்ற
மருத்துவமனைகளுக்கு
ஓடிக்கொண்டிருந்தேன் நான்

இதற்கு மேல்

இதற்கு மேல்
எழுத எதுவுமில்லை என்று
முடித்திருக்கிறாய்

உனக்குத் தெரியாது
அதற்கு மேல்
தொடர்ந்துகொண்டிருந்ததை
நான் படித்துக்கொண்டிருந்தது