ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Monday, November 18, 2013
மறு முறை
தலைகீழாய்
தொங்குகிறேனா
நேராய்
நிற்கிறேனா
கேள்விகளுக்கிடையில்
ஒரு முறை
வெளவாலாய் பறந்தேன்
மறு முறை
நானாய் நடந்தேன்
Tuesday, November 12, 2013
இரு வேறு ஓவியங்கள்
இதுதான் நான் என்று
நான் வரைவதும்
இதுதான் நீங்கள் என்று
நீங்கள் வரைவதும்
ஒரே வண்ணத்தில்
வரையப்பட்ட
இரு வேறு ஓவியங்கள்
Sunday, November 10, 2013
இந்தக் கதையில்
எழுதிக் கொண்டிருக்கும்
இந்தக் கதையில்
எவ்வளவோ கதாபாத்திரங்கள்
நான் அவர்களுக்குப்
புதியவனாகத் தெரிகிறேன்
அவர்கள் எனக்கு
புதியவர்களாகத் தெரிகிறார்கள்
பக்கங்கள்
கடந்து போகையில்
எல்லோரும் பழகி விடுவோம்
Friday, November 08, 2013
வாழ்க்கைக்கு வாருங்கள்
பார்க்க கனவைப் போல இருந்தார் நண்பர் சவப்பெட்டியில் எழுப்பி வாழ்க்கைக்கு வாருங்கள் என்று சொல்லத் தோன்றியது
சாயல்
மிதந்த யானை
பட்டாம்பூச்சியின் சாயல்
கொண்டிருந்தது
பதில்
உங்கள் வேட்டையை
சுவையாக்கியது
மான் கறி
தாய் தேடும் குட்டிக்கு
என்ன பதில்
வைத்திருக்கிறீர்கள்
Sunday, November 03, 2013
யாரும் கேட்கவில்லை
யாரும் கேட்கவில்லை
அவனுக்குத் தெரியும்
ஆனாலும் வாசிக்கிறான்
அவன் புல்லாங்குழலில்
ரயில் போகிறது
ரயிலில்
அவன் போகிறான்
என் ஒப்பனை
உங்கள் கண்களைப் பார்த்து
என் ஒப்பனையை
சரி செய்து கொண்டேன்
இப்போதும் உங்களால்
கண்டுபிடிக்க முடியவில்லை
Saturday, November 02, 2013
தப்பித்தலின் வியூகம்
அவன் தப்பித்து
வந்து விட்டான்
பிடியுங்கள் என்றான்
தப்பித்து வந்தவன்
யாரைப் பிடிப்பது
என்ற குழப்பத்தில்
தப்பித்து ஓடினேன்
என்னை விரட்டியவனிடமிருந்து
என் தாழ்வாரத்தில்
என் சுயநலச் சுவரில்
காகம் எச்சமிட்டுப் போனது
காகத்திற்கு நன்றி சொல்லி
சுவரை இடித்து விட்டேன்
இப்போது என் தாழ்வாரத்தில்
பறவைகள் தானியங்கள்
எடுத்துப் போகின்றன
Friday, November 01, 2013
ஒளி வட்டம்
தன் தலைக்குப்
பின்னால் இருந்த
ஒளி வட்டத்தை
யாரோ திருடிவிட்டார்கள்
என்றார் நண்பர்
உங்கள் அறிவின் வெளிச்சத்தால்
கண்டுபிடிக்க முடியாதா
என்றேன்
இருளடைந்த கண்களால்
பார்த்தபடி
எதுவும் சொல்லாமல்
நடந்து போனார்
Saturday, October 26, 2013
தண்டவாளங்களின் பிரியம்
இந்தக் காத்திருப்பில்
தண்டவாளங்களின் பிரியம்
மினுமினுக்கிறது
ரயில் தாமதம்
பெரிதாகத் தெரியவில்லை
Thursday, October 24, 2013
அனுபவ சித்தனின் குறிப்புகள்
1047-
கசங்கிய சொல் ஒன்றை
மெல்லப் பிரிக்கிறேன்
வெளி வரும் காற்றில்
பாடல் கேட்கிறேன்
1048-
புல்லென அசையும்
அமைதியின் அடியில்
நான் உதிர்ந்து கிடக்கும்
பனித்துளி
1049-
கால்களின் புழுதியில்
பாதை முகம்
பார்க்கிறது
1050-
மீட்டெடுக்க
தொலைந்தாக வேண்டும்
1051-
கனவில் மிதந்த சொற்கள்
அந்திக் கருக்கலில்
பறவைகளாயின
1052-
எப்படித்தான்
கலைத்துப் போட்டாலும்
இதுதான் நான்
1053-
இந்த ரொட்டி
பசியை
அழகாக்குகிறது
1054-
ஊதிய பனித்துளி
நதியாகி
என்னை மூடியது
1055-
வழி அனுப்பி
வைத்த கண்ணீர்
வழி சொல்லிப் போனது
Monday, October 21, 2013
நீந்துகிறது
தூண்டிலில்
சிக்கிய மீன்
மரணத்தில்
நீந்துகிறது
காலம் வைத்திருக்கும் பதில்
நாம் சந்திக்கப்போகும்
அந்த நாள்
எங்கிருக்கிறது
கேட்கிறாய்
கேட்கிறேன்
கேட்கிறோம்
காலம் வைத்திருக்கும் பதில்
விரைவில்
நம் கைக்கு
கிடைக்கக்கூடும்
Sunday, October 20, 2013
மெளனத்தின் கேள்வி
இந்த உரையாடலை
எப்படி முடிக்கப் போகிறோம்
இந்த உரையாடலை
எப்படி தொடங்கப் போகிறோம்
நமக்கிடையில்
மெளனம் வைத்திருக்கும்
கேள்வி இது
வாருங்கள்
தொடங்குவோம்
மெளனத்திலிருந்தும்
கேள்வியிலிருந்தும்
Saturday, October 19, 2013
மிதக்கும் சொற்கள்
மிதக்கும் சொற்களைத்
தொட்டுத் திரும்புகிறேன்
விரல்களில் ஒட்டி இருக்கிறது
சொர்க்கத்தின் வண்ணம்
விரிந்த புத்தகம்
விரிந்த புத்தகத்தின்
எழுத்துக்களை
காற்று இழுத்துக் கொண்டு
போகிறது
வெள்ளைத் தாளாக
மாறி விட்டப் புத்தகம்
காது கொடுத்துக் கேட்கிறது
காற்றின் பாடலை
Friday, October 11, 2013
வேறு முகம்
இந்த முகம்
என் முகம் என்று
வரைகிறீர்கள்
உங்கள் வண்ணங்களில்
ஒளிந்திருக்கிறது
என் வேறு முகம்
என்னைக் கொல்வதற்கு முன்
என்னைக் கொல்வதற்கு முன்
ஒரு எளிய விண்ணப்பம்
இந்தச் சவப்பெட்டி
எனக்குச் சரியாக இருக்கும்
என் மரணம் உங்களுக்கு
சரியாக இருக்குமா பாருங்கள்
Tuesday, October 08, 2013
அனுபவ சித்தனின் குறிப்புகள்
1036-
பஞ்சு போன்ற
சொற்களை வைத்து
மிதக்கப் பார்க்கிறேன்
ஆனாலும்
அழுத்துகிறது கனம்
1037-
மனதில் புகுந்த தூசி
ஊதித் தள்ள
ஒளியும் வேறிடம்
1038-
மெளனம் எளிதில்
வரைந்து விடுகிறது
சொற்களுக்குத்தான்
வண்ணங்கள் போதவில்லை
1039-
எப்போது வேண்டுமானாலும்
எதை வேண்டுமானாலும்
மனம் மாற்றி மாற்றி
வைத்துப் பார்க்கும்
வெற்றுச் சதுரம்
எனக்குப் பிடிக்கும்
1040-
குழந்தை வரைந்த
கோடுகளில்
கடவுள் நடந்து போகிறார்
1041-
பறவை இல்லாத
வானம்
துயரம் படிந்த
கானம்
1042-
போதையிடம் கேட்டேன்
நான் எங்கிருக்கிறேன்
விழுந்தால்
உடையும் உயரத்தில்
போதை சொன்னது
1043-
துளி துளியாய்
மனம் மேல்
விழும் அமைதி
சத்தம் எழுப்புகிறது
1044-
வலிகள் எனக்காக
பிரார்த்தனை
செய்கின்றன
1045-
விரல் நுனி
பனித்துளி
முழு உடல்
வனமாக்கும்
1046-
சொல்ல என்னிடம்
சொற்கள் இல்லை
கனவுகள் உண்டு
Friday, October 04, 2013
முன் வரி வரை
கூடுதலாக எழுதப்பட்ட
வரியில்தான்
நான் உன்னைக்
கொன்று விட்டேன்
அதற்கு முன் வரி வரை
உயிரோடு இருந்தாய்
மிதந்தபடி
உதிர்ந்து கொண்டிருக்கும் இதழ்
உதிர்ந்து கொண்டிருக்கும் நான்
பார்த்துக் கொண்டிருந்தோம்
மிதந்தபடி
Saturday, September 28, 2013
திரைக்கதைக் கலை
இல்லாததை இருப்பதாக்கும்
திரைக்கதைக் கலை
நம் எல்லோரிடமும் இருக்கிறது
என்றார் நண்பர்
என்னிடம் இல்லையே என்றேன்
உடல் அதிர
சிரித்து முடித்தார்
போல்
நதியைப் போல்
நீந்துகிறது மீன்
மீனைப் போல்
நீந்துகிறேன் நான்
Friday, September 27, 2013
கணக்கும் வழக்கும்
இருளிடம் கேட்டேன்
உன்னிடம் எத்தனைக்
கோடிப் பொய்கள் இருக்கும்
கண் சிமிட்டிச் சொன்னது
போட்டுவிட்டுப் போகும்
உங்களிடம்தானே இருக்கும்
கணக்கும் வழக்கும்
பொய்கள்
நான் பொய்களால் ஆனவன்
எனக்கு உங்கள்
சவப்பெட்டிப் போதும்
என் பொய்களுக்கு
நீங்கள் நிறைய
மரங்களை வெட்ட வேண்டும்
Thursday, September 26, 2013
மிதந்த கனவு
கண்ணீரில்
மிதந்த கனவு
விழுந்து உடையாமல்
பறந்து போனது
ஒற்றைச் சிறகில்
கிளை அசைத்துப்
போகிறது பறவை
ஒற்றைச் சிறகில்
பறப்பது போல்
உணர்கிறது மரம்
Tuesday, September 24, 2013
பலூன்
வெடிக்கவே இல்லை
இந்த பலூனை
இன்னும்
ஊதிக் கொண்டிருப்பது
சோர்வைத் தருகிறது
உள்ளிருந்த சிலை
தவம் செய்த கல்லைத்
தள்ளி விட்டேன்
உள்ளிருந்த சிலை
வெளி வந்து
நடந்து போனது
அனுபவ சித்தனின் குறிப்புகள்
1028-
வேறு குரலில்
பேசுகிறீர்கள்
உங்கள் உதட்டசைவில்
பொய் வழிகிறது
1029-
இந்த வனத்தில்
நான் தொலைந்து
சில காலம் ஆகிறது
முளைத்து
பல காலம் ஆகிறது
1030-
இருள் பெய்கிறது
நனையாமல்
நடக்கிறேன்
1031-
என்னைத் தொலைத்து
பிரபஞ்சத்தைக்
கண்டெடுத்தேன்
1032-
காத்திருந்த போது
உறங்கிப் போனேன்
எழுந்த போது
மறந்து போனேன்
1033-
நான் ஆடு
நீங்கள் இரக்கம் வாங்க
வந்திருக்கிறீர்கள்
1034-
இது உனக்கு
நான் தரும் வரிகள்
எடுத்து சுவரில்
மாட்டி விடாதே
கால்களில்
போட்டுக் கொண்டு நட
1035-
அவ்வளவு எளிதில்
நீங்கள் என்னைக்
கடந்து போய் விட
முடியாது.
நான் சாலையின் வேர்.
Friday, September 20, 2013
வரியின் அடியில்
இந்த வரியின் அடியில்
எதுவுமில்லை
இந்த வரியின்
நிழல்தான் இருக்கிறது
வேறு ஒரு
வரியின் வடிவில்
Monday, September 16, 2013
வந்து சேரவில்லை
கண்ணீரால் கப்பல் செய்து
நதியில் மிதக்க விட்டு
மறு கரைக்கு
ஓடிப் போய் நின்று
வருமா என்று பார்க்கிறாள்
வெகு நேரமாக
நதி வந்தது
கண்ணீர் வந்தது
கப்பல் மட்டும்
வந்து சேரவில்லை
மதம் பிடித்த பசி
ஒற்றை பருக்கையில்
முழு யானையை
அடைத்தேன்
பிறகு உண்டேன்
மதம் பிடித்த பசி
மறைந்து போனது
Sunday, September 15, 2013
கல்லின் பெயர்
நீங்கள் எறிந்த கல்லில்
உங்கள் பெயர்
எழுதி இருக்கிறது
ஏன் இல்லை
என்கிறீர்கள்
மன்னிக்கவும்
அது என் பெயர் அல்ல
கல்லின் பெயர்
Tuesday, September 10, 2013
நன்றியின் வண்ணங்கள்
பேருந்தில்
நின்றிருக்கும் முதியவருக்கு
ஒரு இருக்கை வரைந்து
அமரச் சொல்கிறாள் மான்யா
இறங்கும் இடம் வர
எழும் பெரியவர்
நாற்காலியின் வண்ணத்தால்
குழந்தையின் உள்ளங்கையில்
நன்றி என்று
எழுதி விட்டுப் போகிறார்
Thursday, September 05, 2013
வந்து சேர்ந்த பின்
எங்கோ போகிறது
என் நிழல்
எதுவும் கேளாமல்
காத்திருக்கிறேன்
வந்து சேர்ந்த பின்
புறப்பட வேண்டும்
உச்சியிலிருந்து
உச்சியிலிருந்து
உங்களைத் தள்ளி விட்டேனே
எப்படி உயிருடன்
இருக்கிறீர்கள்
தள்ளியபோது
நகர்ந்து கொண்டேன்
விழுந்து இறந்த
நீங்கள்தான் என்னுடன்
பேசிக் கொண்டிருக்கிறீர்கள்
தேடுகிறாய்
உதிரம் மழையெனப்
பெய்கிறது
உன் ஆயுதத்திலிருந்து
நீ தலைத் துவட்டிக் கொள்ள
உயிர்கள் தேடுகிறாய்
Tuesday, September 03, 2013
அனுபவ சித்தனின் குறிப்புகள்
1020-
தட்டினால் திறக்கத்
தயாராக இருக்கிறது கதவு
நீங்கள் காத்துக்
கொண்டிருக்கிறீர்கள்
கதவு பார்த்துக்
கொண்டிருக்கிறது
1021-
இரவைத் தொட்டு
உண்ணும் கனவுக்கு
என் பசித் தெரியுமா
1022-
இந்த மனதைக்
கடந்து விடுவதுதான்
வாழ்நாள் முழுமைக்குமான
போராட்டம்
1023-
இரவைத் தொட்டு
உண்ணும் கனவுக்கு
என் பசித் தெரியுமா
1024-
இந்த இருளைக்
கடந்து வந்தது
இருளின் ஆசிகளால்தான்
1025-
என் தற்கொலைதான்
என் வாழ்வின் செய்தி
என்ற வரியிலேயே அவன்
தூக்கிட்டுக் கொண்டான்
1026-
ஊதி நகர்த்திய மலை
என்ற வரியை
மலைகளுக்குச் சமர்ப்பிக்கிறேன்
1027-
கவனமாக
என் பெயரைத்
தவிர்க்கிறீர்கள்
மனதிற்குள்
உச்சரித்துப்
பார்க்கிறீர்கள்.
Sunday, September 01, 2013
மீதிக் கேள்விகள்
கையிலிருந்த ரப்பரால்
ஒவ்வொரு கேள்வியாக
அழித்துக் கொண்டே வந்தேன்
ரப்பர் முடிந்திருந்தது
மீதிக் கேள்விகளில்
இருந்த உயிர்
என்னைக்
கொன்று விடுவது போல்
பார்த்துக் கொண்டிருந்தது
Friday, August 30, 2013
பாடம்
பறக்கும் பாடத்தைப்
பறவைக்குச்
சொல்லித் தருகிறீர்கள்
அதைச் சிறகை வெட்டும்
முன் செய்திருக்கலாம்
அனுபவ சித்தனின் குறிப்புகள்
1016-
மறந்து போன
இடத்தில்
பழைய கனவொன்று
புதிதாக
என்னைப் பார்க்கிறது
மறந்து விடாமல்
1017-
நின்று இளைப்பாற
நிழலில்லை
இந்த வெயில்
எனக்காக
வேறு ஏதோ
செய்தியை
வைத்திருக்கக்கூடும்
1018-
வட்டம் எங்கே
என்று தேடினேன்
மையத்தில்
ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது
1019-
வண்ணங்களைக்
கொட்டிவிட்டு
ஓவியங்களை
எடுத்துக் கொண்டேன்
Monday, August 26, 2013
மன்னித்துக்கொள்
மனதில் சொருகப்பட்ட
கத்திகளை எடுக்கும் போது
நினைவில்
உன் பெயரும்
வந்து போகிறது
மன்னித்துக்கொள்
எதிரில் சந்தித்தேன்
மழையில் நனைந்து
சென்ற கனவை
எதிரில் சந்தித்தேன்
தொலைவில்
போன பின்புதான்
தெரிந்தது
அது என்
கனவு என்று
Saturday, August 24, 2013
எது சரி
மிருகங்களுக்கு மத்தியில்
வாழ்கிறோம்
மிருகங்களாக
வாழ்கிறோம்
எது சரி
கேட்கிறார் நண்பர்
எது சரி
கேட்கிறேன் நான்
எது சரி
சொல்லுங்கள் நீங்கள்
Friday, August 23, 2013
தொங்கும் சொல்
பிரபஞ்சத்தைப் பிடித்து
தொங்கும் சொல்
ஊஞ்சலாகி விடுகிறது
உடைத்த எனக்கு
உடைந்த வார்த்தைகள்
வலிகளைத்
தருவதென்னவோ
உடைத்த எனக்குதான்
வத்திப்பெட்டி அறையில்
வானம்
உள்ளங்கையில்
இனி இந்த
வத்திப்பெட்டி அறையில்
வருத்தங்களின்றி
உறங்கலாம்
எதை எப்போது
நாவின் அடியில்
கத்திகள்
நாவின் மேல்
பூக்கள்
பேசிடும் நாவுக்குதான்
தெரியும்
எதை எப்போது
எடுக்கும் என்று
Thursday, August 22, 2013
எனக்குள்ளிருந்த யானை
மதம் பிடித்த
திமிரை அடக்க
பாகனானேன்
எனக்குள்ளிருந்த யானை
வெளியேறியது
Monday, August 19, 2013
மற்ற சொற்கள்
ஒற்றைச் சொல்லை
மீன் தொட்டியாக்கினேன்
மற்ற சொற்கள்
வந்து நீந்த
அந்தரங்கத்தில்
அந்தரங்கத்தில்
தொங்குகிறது
என் நிர்வாணம்
ஈ மொய்க்கும்
இறைச்சி என
Sunday, August 18, 2013
அனுபவ சித்தனின் குறிப்புகள்
1009-
ஒளிந்து கொண்ட
கனவுக்குள்
வனம் இருந்தது
என்னை ஒரு
சிங்கமாக்கி
வெளி அனுப்பியது
1010
நினைவில்
தவமிருக்கும்
கண்ணீர்த்துளி
1011-
கனவில்
தொலையுங்கள்
கனவைத்
தொலைக்காதீர்கள்
1012-
உன் மௌனத்தில்
நீந்தும் மீன்தான்
என்னைப் பார்த்து
சொற்களைத் துப்புகிறது
1013-
வந்து சேர்ந்த வரியில்
யாரோ இருந்து
போன தடம்
1014-
மன்னிக்கப்
பழகிக் கொண்டீர்கள்
குற்றவாளிகள்
அதிகமாகி விட்டார்கள்
1015-
அழித்த வரி கேட்டது
என் ஆயுள்
அவ்வளவுதானா என்
று
Saturday, August 17, 2013
தெரியவில்லை
பக்தனுக்கு
கடவுள் தெரிந்தார்
கடவுளுக்கு
பக்தன் தெரிந்தான்
பூசாரிக்கு
இருவருமே தெரியவில்லை
Sunday, August 11, 2013
விடிகையில்
நள்ளிரவில்
மிதந்து மிதந்து
வானத்தில் போய்
ஒட்டிக் கொண்டேன்
விடிகையில்
துளியாய்
வந்து விழிந்தேன்
Tuesday, July 30, 2013
போகும் போது
மலை உச்சியில்
ஓய்வெடுத்துக் கொண்டிருந்த
மேகத்துடன்
பேசிக் கொண்டிருந்தேன்
போகும் போது
மழையைப்
பரிசளித்துவிட்டுச் சென்றது
Friday, July 26, 2013
கனவு முடிந்திருந்தது
மரணத்தின் மேல்
மரணத்தை
அடுக்கி வைத்தேன்
என் உயரம்
வந்த போது
எழுந்து விட்டேன்
கனவு முடிந்திருந்தது
Sunday, July 21, 2013
என்னைக் கேட்காதே
முன் சொல்லிடம் கேட்டேன்
அடுத்த சொல்
என்ன என்று
அது உன் வாக்கியத்தின்
சூட்சமத்தில் இருக்கிறது
என்னைக் கேட்காதே என்றது
Saturday, July 20, 2013
குறிப்புகள்
ஒரு குறையுமின்றி
எல்லாம் தந்து
பறக்க வேண்டாம்
எனச் சொல்லி
ஒரு பறவையை
அடைத்து வைத்திருந்தேன்
என்னை புதைக்காதே
வானத்தை நோக்கி
வீசி விடு என்ற
குறிப்புகளுடன்
இறந்து போயிருந்தது
Friday, July 05, 2013
இவ்வளவு தூரம்
சுவடின்றி
வெளியேறுகிறாய்
இதற்கு நீ
இவ்வளவு தூரம்
வந்திருக்க வேண்டாம்
Wednesday, June 26, 2013
கதைக்காரன்
நீங்கள் யார்
கதைக்காரன்
சொல்வீர்களா
அதெல்லாம் முடியாது
வேண்டுமானால்
என் கண்களைப் பார்த்து
படித்துப் போ
Wednesday, June 19, 2013
சுடரிடம் கேட்டேன்
மனதால் உன்னை
ஊதி அணைத்து விட்டேன்
இன்னும் ஏன்
அசைகிறாய்
சுடரிடம் கேட்டேன்
அசைவது
உன் மனம்தான்
சுடரல்ல
இருள் சொன்னது
Sunday, May 19, 2013
சுழலும் கேள்விகளும் பதில்களும்
நீங்கள் யார்
நான் யாரோ
யாரோ என்றால்
யாரோ என்றால்
யாரோதான்
சரிதான்
தெரியாத ஒன்று
உங்களுக்கு
எப்படித் தெரியும்
தெரிந்தால் வந்து
சொல்கிறேன்
ஆமாம்
நீங்கள் யார்
நான் யாரோ
யாரோ என்றால்
யாரோ என்றால்
யாரோதான்
சரிதான்
தெரியாத ஒன்று
உங்களுக்கு
எப்படித் தெரியும்
தெரிந்தால் வந்து
சொல்கிறேன்
Monday, May 13, 2013
கடைசிச் சொல்
1-
இந்த வரியை
எப்படி நெய்தீர்கள்
என்
நிர்வாணத்தால்
2-
ஒவ்வொரு சொல்லும்
உதிர்ந்து கொண்டே வர
கடைசிச் சொல்
பறந்துவிட்டது
3-
வெறுமையை
கையேந்தி நிற்கிறேன்
நீ அன்பை
நிரப்பும் போது
அது பாத்திரமாகி விடுகிறது
4-
பொய் சொல்கிறாள்
கண்ணீர்த்துளியை
வரைந்து விட்டு
மழைத்துளி என்று
எழுதிக் கொண்டிருந்தேன்
நள்ளிரவில்
மழை பெய்யும் போது
என்ன செய்து கொண்டிருந்தீர்கள்
எழுதிக் கொண்டிருந்தேன்
அது மழைக்குத் தெரியுமா
ஒன்றைப் பற்றி எழுதுவது
ஒன்றுக்கு எப்படித்
தெரியாமல் இருக்கும்
Sunday, May 12, 2013
எனக்குப் பசிக்கிறது
எனக்குப் பசிக்கிறது
ரொட்டித்துண்டைத்
தருகிறீர்களா
எனக்கும் பசிக்கிறது
அப்படியா வாருங்கள்
நம் பசியை
பகிர்ந்து சாப்பிடுவோம்
வேட்டையாடும் எழுத்து
பாய்ந்து கவ்வி
வேட்டையாடும் எழுத்து
கவனிக்க
மறந்து விடுகிறது
பூவின் விரிதலையும்
அதன் உள் மனச்
சொற்களையும்
Saturday, May 11, 2013
ஒரே நேரம்
ஒரே நேரம்
நம் இருவர் கண்ணிலும்
கண்ணீர்
பார்த்தபடியே
புன்னகைக்கிறோம்
இந்த உரையாடலை
இதை விட நாம்
சிறப்பாக
முடித்திருக்க முடியாது
Monday, May 06, 2013
விளிம்புக்குப் போகும் வரை
1-
பல்லக்கை
பல காலமாக
சுமந்து செல்கிறோம்
உள்ளே இருப்பது
சாத்தான் என்று
உணராமல்
2-
ஒன்றும் தெரியாத என்னை
மைதானத்தின் விளிம்பில்
நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்
விளிம்புக்குப்
போகும் வரை
விளையாடித்தான்
ஆக வேண்டும்
Saturday, May 04, 2013
முகச்சாயல்
கடந்து போன நபர்
இறந்து போன நண்பனின்
முகச்சாயலில் இருந்தார்
ஒரு கணம் கலங்கி
கண் துடைத்து
அவரைப் பார்த்து
புன்னகைக்க
புன்னகைத்தார்
அதுவும் அச்சு அசலாய்
நண்பனைப் போலிருந்தது
மாதவா என்று
மனதிற்குள்
ஒரு சத்தம்
துள்ளி எழுந்து
அடங்கியது
நண்பன் போய்விட்டான்
அவர் போய்விட்டார்
நான் போய்க் கொண்டிருக்கிறேன்
Friday, May 03, 2013
சீட்டு விளையாட்டு
சாத்தானுடன்
சீட்டு விளையாடியது
தப்பாய் போயிற்று
அது என்
தோல்விகளை வைத்து
விளையாடிக் கொண்டிருந்தது
பதில் இல்லை
சவப்பெட்டிக்கு
வண்ணம் பூசினேன்
மரணம் அழகானதா
சவப்பெட்டிக் கேட்டது
பதில் இல்லை
கண்ணீர்த் துளி
சவப்பெட்டியின் மேல்
விழுந்தது
Thursday, May 02, 2013
நமக்குள் சுழலும் இசை
இசை நாற்காலி விளையாட்டில்
இறுதிச் சுற்றில்
நாம் இருவர் மட்டுமே
ஓடிக் கொண்டிருக்கிறோம்
எல்லோரும் வெளியேறி விட்டனர்
இசைத்தட்டு சுழல்வதை நிறுத்தி
நீண்ட காலமாகிறது
நீ அமர்ந்துவிட வேண்டும்
என்று நானும்
நான் அமர்ந்து விட நீயும்
ஓடிக்கொண்டிருக்கிறோம்
நமக்குள் சுழலும் இசை
நிற்கவே இல்லை
Monday, April 29, 2013
ஒரு பறவை
என் விரலை
கிளை என நினைத்து
வந்தமர்ந்து
உள்ளங்கை நீரைக்
குடித்துப் போகிறது
ஒரு பறவை
பறந்து போகையில்
மரமாகவும்
நினைத்திருக்கக் கூடும்
உங்களுக்குத் தெரியாது
கடைசிக் காட்சியை மட்டும்
பார்க்க அனுமதிக்கிறீர்கள்
இதுவரை நான்
உங்கள் கதாபாத்திரங்களோடு
பேசிக்கொண்டிருந்தது
உங்களுக்குத் தெரியாது
Wednesday, April 24, 2013
நினைவின் அடுக்குகளில்
நினைவின் அடுக்குகளில்
எந்த அடுக்கில்
இருக்கிறாய் என்று
தேடித் தேடி
களைத்துப் போய்
உறங்கி விட்டேன்
உறக்கத்தின் அடுக்குகளில்
விளையாடத் தொடங்குகிறாய்
ஓடுபவர்கள்
எனது கனவில்
ஓடும் குதிரையும்
குதிரையின் கனவில்
ஓடும் நானும்
வேகத்தில்
வித்தியாசப்படலாம்
ஆனால் ஓடுபவர்கள்
Tuesday, April 16, 2013
கல் சுவர்
கல் சுவரில் மோதி
கண்ணாடிப் பட்டாம்பூச்சி
உடைந்து போனது
சில சில்லுகள் கிடந்தன
பல சில்லுகள் பறந்தன
Friday, April 12, 2013
என்ன யோசனை
சட்டென நிறுத்திய நண்பர்
என்ன யோசனை என்றார்
தெரியவில்லை
என்றேன்
யோசனையா
என்னையா
கேட்டார்
சிரித்தேன்
சிரிப்பின் காரணம் கேட்டார்
தெரியவில்லை
என்றேன்
வேகமாகப் போய்விட்டார்
நடந்தேன்
என் கவலை எல்லாம்
திடீரென்று
இன்னொரு நண்பரை
இது போல்
சந்தித்து விடக்கூடாது
என்பதுதான்
தடுத்தது குரல்
கேசவா
என்ன யோசனை
Thursday, April 11, 2013
அழிந்து கொண்டே வரும் வரி
முயலைப் பார்த்தபோது
குழந்தை இல்லை
குழந்தையைப் பார்த்தபோது
முயல் இல்லை
முயல்குட்டியைப் போல்
ஓடுகிறாள் குழந்தை
என்ற வரி
அழிந்து கொண்டே வந்தது
மான்யாவின் கடல்
கடல் பாத்து முடிச்சாச்சா
போகலாமா
கேட்கிறேன் மான்யாவிடம்
சிரித்துச் சொல்கிறாள்
அய்யோ அப்பா
கடலப் பாத்துக்கிட்டே இருக்கணும்
அது முடியவே முடியாது
Tuesday, April 09, 2013
கண்ணில்
யுத்தம் பற்றி
எழுதிய கவிதையை
சமாதானப் புறாவிடம்
படித்துக் காட்டினேன்
குருதியின் வலியை
குறைத்திருக்கலாமே என்றது
அப்போது
அதன் கண்ணில்
நீர் வடிந்தது
Monday, April 08, 2013
காணவில்லை
நீல நிறப் பூனை
பக்கத்தில்
பச்சை நிற எலி
வரைந்தாள் மான்யா
நிறங்கள் சிதறிக் கிடக்க
இரண்டையும் காணவில்லை
திரை
திரை விழுந்து விட்டது
நாடகம் முடிந்து விட்டது
எல்லோரும்
வெளியேறி விட்டனர்
நான் இன்னும்
கதாபாத்திரத்தை விட்டு
வெளியேறவில்லை
Wednesday, April 03, 2013
விளையாடு
இப்படித்தான் காய்
நகர்த்துவார்கள்
வியூகம் குறித்து
விவாதிக்காதே
விளையாடு
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)