Saturday, May 21, 2011

கைவிடப்பட்ட குழந்தை

கைவிடப்பட்ட குழந்தை
ஒரு கனவிலிருந்து துண்டிக்கப்படுகிறது
ஒரு கதையில் இடம் தேடுகிறது
வாகனங்களை பொம்மைகளைப்போல ரசிக்கிறது
அதன் சத்தங்களை தன் வாயால் எழுப்ப முயற்சிக்கிறது
விரட்டுபவரின் நிழலை மிதித்துச் செல்கிறது

கைவிடப்பட்ட குழந்தை
ஒரு பட்டத்தை நோக்கி ஓடுகிறது
கொஞ்சம் அழுகையை நிறுத்துகிறது
சுண்டல் விற்பவனிடம் கை நீட்டுகிறது
அம்மாவின் இடுப்பில் ஆடும் குழந்தையைத் தொடுகிறது

கைவிடப்பட்ட குழந்தை
மணல் அள்ளிப் போடுகிறது
தன் பெயரைத் தேடுகிறது
பொம்மையைப்போல் கிடக்கிறது
கால் பரவும் சிறுநீரைத் துடைத்துவிடுகிறது

கைவிடப்பட்ட குழந்தை
தன் மழலை வழியே மேலேறுகிறது
கைகளால் வானவில்லை அசைக்கிறது
விழும் நிறங்களை அள்ளுகிறது
கடலில் தூக்கி எறிகிறது

கைவிடப்பட்ட குழந்தை
காணமல் போனவரின் போஸ்டர் அருகில் நிற்கிறது
அதிலிருக்கும் முகத்தைத் தடவுகிறது
மேல் ஊரும் எறும்பை மெல்ல எடுத்து விடுகிறது

கைவிடப்பட்ட குழந்தை
தாய்களைப் பார்க்கிறது
தந்தைகளைப் பார்க்கிறது
மனிதர்களைப் பார்க்கிறது
யாரும் தன்னைப் பார்க்கவில்லை எனினும்
ஆழ்ந்து உற்று அருகில்போய்
அதிகமாகப் பார்க்கிறது

கைவிடப்பட்ட குழந்தை
தான் கைவிடப்பட்டது தெரியாமல்
தேடிச்செல்கிறது இன்னொரு குழந்தையை
தன் கைபிடித்து அழைத்துச் செல்ல


நன்றி- ஆனந்த விகடன்

*ஆனந்த விகடன் இதழில்(25.5.11)
வெளியான கவிதை.

2 comments:

  1. உங்கள் கவிதையை என் கூகிள் பஸ்ஸில் ஷேர் செய்கிறேன். நன்றி.

    ReplyDelete
  2. kanneer thulirkkavum vaikkirathu...

    inthak kaividap patta kuzhanthai

    :(

    ReplyDelete