Thursday, June 28, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

915-

பல வருடங்களாக
இந்த கல் மேல்
உட்கார்ந்திருக்கிறேன்
நான் சோம்பேறியா?

இல்லை
இன்னொரு கல்

916-

அப்படியே 
நிற்க வைத்திருக்கிறேன் 
கண்ணீர்த் துளிகளை 

கல்லாக்கி 
எறியலாம் 

விழவும் 
வைக்கலாம்

917-

என்னிடம் ஒன்றுமில்லை 
என்பதில் கூட 
ஏதோ இருக்கிறது
ஒன்றுமே இல்லை 
என்பதில்தான் 
எதுவுமே 
இல்லாமல் இருக்கிறது

918-

கடல்மனம் கொண்ட
மீன் நீந்தும்
மீன் தொட்டிக்கு
வெளியிலும்

919-

உன் பிரமிப்பைக் கண்டு
வியக்கச் சொல்கிறாய்
புள்ளி அளவு கூட
உண்மை இல்லாத
உன் வரி 
உதிர்ந்து போனது
தெரியாமல்

920-

எப்போதும் எனக்குத் 
தோல்வி தேவைப்படுகிறது
எப்போதாவது 
வெற்றியும் தேவைப்படுகிறது

921-

தராசில் வைத்துப் 
பார்க்கப்படும் மனிதம் 
எடைக்கல்லாகி விடுகிறது

922-

உறைந்து போன
கேள்விகளை
உடைக்கிறேன்
பதில்கள் சிதற


உதிர்ந்து போனது


உன் பிரமிப்பைக் கண்டு 
வியக்கச் சொல்கிறாய்
புள்ளி அளவு கூட 
உண்மை இல்லாத 
உன் வரி 
உதிர்ந்து போனது 
தெரியாமல்

Wednesday, June 20, 2012

அனுவப சித்தனின் குறிப்புகள்

 906-

பின்னிரவை
நிரப்புகிறேன்
முற்பகல்
நினைவுகளால்

907-

வரிகளில்
இறக்கி வைத்த பின்னும்
கனக்கிறது சுமை

908-

உயிரின்
மேலேறி நின்று
மரணத்தைத்
தள்ளி விட்டேன்

909-

எல்லோருக்குமான கனவு 
பிரபஞ்சத்திடம் 
இருக்கிறது

910-

ஒளித்து வைத்தக் 
கண்ணீரை
ஒருபோதும்
சிந்தியதே இல்லை

911-

கரை ஒதுங்கும் நினைவுகள் 
கால் நனைக்கும்
வழிப்போக்கன்
பயணம் அதைக் கடக்கும்

912-

தூங்கும் இறைவனை
எழுப்பவில்லை
அவர் கனவில் போய்
கோரிக்கை வைத்து விட்டு
வந்து விட்டேன் 

913-

உறங்கப் போகும் 
போதெல்லாம் 
விடிந்து விடிகிறது

914-

என்னிடம் சொல்வதற்கு 
ஒன்றுமில்லை
என் மெளனத்தின் மீது 
கிரீடம் 
வைத்து விடாதீர்கள்.


Saturday, June 09, 2012

899-

எதற்கு 
இறந்த காலத்தை 
மென்று கொண்டிருக்கிறீர்கள்
துப்பிவிட்டு 
நிகழ் காலத்தை 
சுவைக்கப் பாருங்கள்


900-


நான் என்னத் 
தெரிந்து கொள்ளவில்லை 
என்பதிலும் 
அடங்கி இருக்கிறது 
நான் என்னத் 
தெரிந்துகொண்டேன் என்பது


901-


புரியவைப்பது 
என் வேலையல்ல
புரிந்து கொள்ளாதது 
உங்கள் குற்றமுமல்ல


902-


புள்ளியில் 
பூக்கும் சொல் 
புள்ளியை 
பூமியாக்கி


903-


என் மேல் 
ஏறி நின்று பார்த்தேன்
எல்லாம் தெரிந்தது


904-


யார் உன்னை
கண்ணீரைப் 
பூசிக் கொள்ளச் சொன்னது 
போய் 
முகம் கழுவி வா


905-


மேஜை மேல்
வைத்திருந்த பூஜ்யம்
உருண்டோடிப் போய் 
விழுந்து உடைய
உள்ளிருந்து
சிதறிக் கொண்டிருந்தன
எண்கள்




Saturday, June 02, 2012

கையெட்டும் தூரத்தில்

மறதியாய் 
தொலைதூரத்தில் 
வைத்துவிட்டு 
வந்த கனவை 
எடுக்கத் திரும்பினேன் 
அதுவாய் வந்து 
நின்றிருந்தது 
கையெட்டும் தூரத்தில்

Sunday, May 20, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

886-
தொடாத வானம்
தொடச் சொல்லும்
ஞானம்
887-
மனது
கலப்படமானது.
கலப்படம் 
பழகிப் போனது
888-
உதிர்ந்த இலையின் 
ஞாபகத்தில் மரத்தின் 
ஒன்றிரண்டு சொற்கள்
889-
குருவே நான் அமைதியாக 
யோசித்துக் கொண்டிருக்கிறேன் 
நீங்கள் 

அமைதியை 
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
890-
நன்றியால் 
நெய்த அன்பில் 
நானும் 
ஓர் இழை
891-
இருள் வனத்தில்
ஒளிக்கோலம்
மின்மினிப்பூச்சி
892-
வழி அடைக்கப்பட்டிருக்கிறது 
என்றவன் 
நின்று கொண்டிருந்தான்

பிரபஞ்சம் திறந்திருக்கிறது 
என்றவன் 
நடந்து கொண்டிருந்தான்
893-
நாடக கண்ணீர
புரிஞ்சிக்கிட்டேன்
அது வேஷம்
கலைச்சப்ப
விழிச்சிக்கிட்டேன்
894-
எதற்கு நின்றுகொண்டிருக்கிறாய் 

ஓடி வந்ததை 
அசை போடுகிறேன் 

அதை ஓடியபடியே செய் 
ஓடு
895-
பசியை இலையாய் 
விரித்து வைத்திருக்கிறேன் 
நீங்கள் என்ன 
பரிமாறினாலும் 
எனக்கு சம்மதம்
896-
என் மீதி நான்கள் 
உங்களுக்குள் 
இருக்கிறார்கள்
897-
தவமிருந்தவன் 
தூங்கிப்போனான் 
அவன் வரத்தை 
யாரோ ஒருவன் 
வாங்கிப்போனான்
898-
நினைவின்
பெரும் குகை
உள்ளிருள்
அழகு




மீனின் பொய்கள்


நீரில் தற்கொலை 
செய்து கொண்டேன் 
என்று சொன்ன 
மீனை எடுத்துக்
கரையில் போட்டேன்
இறந்து போயிருந்தது
மீனின் பொய்யும்

Friday, May 18, 2012

காகிதப் புலி

நான் எழுத்தில்
சிக்கிக்கொண்ட 
காகிதப் புலி 

என்னைக் கொண்டுபோய் 
வனத்தில் விடுவாயா

செய்வதறியாது 
திகைத்து 
ஒரு நாள் வனம் 
போய் நின்று 
தூக்கி எறிந்தேன் 
புத்தகத்தை 

எழுத்திலிருந்து 
தானே விடுதலைப் பெற்று 
புலிப்போகக்கூடும் 
கானகத்திற்கு 

திரும்ப எனக்கு 
புத்தகம் கிடைக்கக்கூடும் 
படிப்பதற்கு

Wednesday, May 16, 2012

அன்புள்ள கடவுளுக்கு

அன்புள்ள கடவுளுக்கு
என்று நான் 
எழுதத் தொடங்கிய கடிதத்தை
என்னுடன் சேர்ந்து
கடவுளும்
எழுதிக் கொண்டிருந்தார்

Friday, April 27, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

881-

நகராத மனிதர்களைப் பார்த்து 
சொன்னது தேர் 
இந்த ஊரில் 
என்னையும் சேர்த்து 
எத்தனைத் தேர்கள்

882-

நான் மீனானது 
தெரியாமல் 
என்னைத் தூக்கி 
கடலில் எறிகிறீர்கள்
கரை ஒதுங்கி 
மிதப்பது 
உங்கள் ஏமாற்றம்தான்

883-

நீங்கள் துப்பிய 
எச்சியைத் துடைக்கிறேன் 
உங்கள் மேலிருந்து

884-

என் நான் 
தொலைந்து போயிற்று
இனி நான் 
நானின்றி இருக்கலாம்

885-

எதைஎதையோ 
செய்து கொண்டிருக்கிறேன்
எதை செய்ய வந்தேன் என்று 
மறந்து போயிற்று




Sunday, April 22, 2012

காலத்தின் பாசி

அழவைத்து 
துடைக்க 
கை நீட்டுகிறீர்கள் 

உங்கள் 
விரல் நுனியில் 
ஒட்டிக்கிடக்கிறது 
காலத்தின் 
சாபம் பெற்ற 
பாசி

Thursday, April 19, 2012

குரல்


கேட்க முடிகிறது
சைகையில்
உதிரும் குரல்

நான்


நான் சுமந்து
நான் சுமந்து
நான் சுமந்து
பாரமானேன்
நான் இறக்கி
நான் இறக்கி
நான் இழந்து
இலேசானேன்

Monday, April 09, 2012

எதோ ஒரு கணத்தில்

எதோ ஒரு கணத்தில் 
பூனையின் கண்களில் 
கருணையை 
அறியும் எலி
அந்தக் கணத்தைத் 
தன் தப்பித்தலுக்குரிய 
தருணமாக்கி விடுகிறது

Sunday, April 08, 2012

பெயர்கள் வழியே

என் புனைப்பெயர்கள் வழியே 
நீங்கள் என்னை 
வந்தடைய முடியாது 
திசை சிக்கலாகும் 
என் பெயர் வழியே 
நீங்கள் வந்தடைந்தால் 
திரும்பிப் போக முடியாது 
வழி மறந்து போகும்

வனம்

வனம் கட்டிப் போடும்
புல்லாங்குழலை
என்னிடம்
விட்டுச் சென்றான் வழிபோக்கன்
வாசிக்க
கட்டவிழ்ந்தது என்னுள்
இருந்த வனம்


Tuesday, April 03, 2012

நீங்கள் யார்


நீங்கள் யார் 
நான் 
உங்கள் கேள்வியில் 
முடியும் பதில் 

உங்கள் பதிலில் 
தொடங்கும் கேள்வி

Friday, March 30, 2012

மாயப்பல் சக்கரம்


மாயப்பல் சக்கரம் 
நசுக்கும்
புகுந்து மீள 
வாழ்க்கைக் 
கொஞ்சம் இருக்கும்

Thursday, March 22, 2012

பிகாஸோவுடன் உணவருந்துதல்

பிகாஸோவுடன்
உணவருந்திக் கொண்டிருந்தேன்

உனக்கு வரையத் தெரியுமா என்றார்

பதட்டத்துடன்
தெரியாது ஆனாலும்
நான் உங்கள் ரசிகன் என்றேன்

பரவாயில்லை
ஏதாவது வரைந்து காட்டு என்றார்

நீரை
நடுங்கிய விரலால் தொட்டு
சமனற்ற ஒரு கோடு
வரைந்து சொன்னேன்
என் சக்தி இவ்வளவுதான் என்று

சிரித்தார்

கோடு மறைந்து போயிருந்தது

அவர் மறைந்து போனார்

நானும் மறைந்து கொண்டிருந்தேன்
நினைவில் படிந்து போயிருந்த
அவர் ஓவியத்திற்குள்

Wednesday, March 21, 2012

ஒரு பாடல்

உனக்காக ஒரு பாடலை
சுமந்து வந்தேன்
நீ இறக்கி வைத்துவிட்டுச் சொன்னாய்

நீ ஊதி என் மேல் செலுத்தும்
காற்றுப் போதும்
என் உயிரில் கலந்த
இசையாய் மாறும்