Monday, April 14, 2014

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1095-
 அது மலையல்ல 
நீங்கள் 
நகர்த்தி சேர்த்த 
பொய்கள்
 1096-
 தூது வந்த புறா 
ஆயுதத்தின் மேல் 
அமர்ந்திருக்கிறது

 1097-

மேல் நீந்தும் 
மீனானேன் 
ஆழம் போய் 
நீரானேன்

1098-

சாவி துவாரத்தின் வழியே 
பார்க்கும் போது 
சாவிதுவாரமும் 
சேர்ந்து பார்க்கிறது

1099-

கனவுகளில் 
அறைந்து கொள்கிறேன் 
வேண்டாம் சிலுவை

1100-


நினைவுகளே 
பரமபதம் 
பாம்பு 
ஏணி 
எல்லாம் 
ஆடத்தான் வேண்டும்


யாராவது ஒருவர்

யாராவது ஒருவர் 
உண்மை பேசுவார்கள் 
என்ற எதிர்பார்ப்பில் 
அறையிலிருந்த எல்லோரும் 
பொய் பேசிக் கொண்டிருந்தார்கள் 

இசை

கொஞ்சம் காற்றும் 
துளைகளை 
மூடித் திறக்கும் 
விரல்களும்தான் 
என்னுடையது 
இசை பிரபஞ்சத்தினுடையது 
புல்லாங்குழல் வாசித்த 
கலைஞன் சொன்னான்

Sunday, April 13, 2014

ஒவ்வொரு முறையும்

நீ இவ்வளவு
பொய் சொல்வாய்
என்று தெரிந்திருந்தால்
நான் பேசி இருக்க மாட்டேன்
நாக்கு சொன்னது

ஒவ்வொரு முறையும்
இதையே சொல்கிறாய்
தோற்றுப் போகிறாய்
மனம் சொன்னது

Friday, April 11, 2014

உச்சியிலிருந்து

மலை உச்சியிலிருந்து 
விசிலடித்தபடி 
இறங்கி வருவதைப் போல 
கற்பனை  செய்து கொள்கிறேன் 
அது இப்போது
ஏறுவதை 
இலேசாக்கிக் கொண்டிருக்கிறது 

வெளிச்சம்

தாளில் வெளிச்சம் 
எழுதுவதைப் போல 
வெளிச்சத்தை என்னால் 
எழுத முடிவதில்லை 

Thursday, April 10, 2014

பாம்பைப் பற்றிய கவிதை

பாம்பைப் பற்றி
எழுதிய கவிதையில்
விஷம் இருந்தது
அது பாம்பின் விஷமா
என் விஷமா
தெரியவில்லை

Wednesday, April 09, 2014

பனித்துளிக் கண்கள்

புல் தன்
பனித்துளிக் கண்களால் 
மொத்த வனத்தையும்
பார்க்க நினைத்தது 
அதற்குள் காட்சி 
மறைந்து போனது 

Monday, April 07, 2014

நேரம்

பழுதடைந்த கடிகாரத்தில்
நேரம் பார்க்கிறான்
அவனுக்கு சரியாய் காட்டுகிறது
மற்றவர்களுக்கு
அவனை தப்பாய் காட்டுகிறது 

Sunday, March 30, 2014

நீங்கள் அங்கேயேதான் இருக்கிறீர்கள்

நீங்கள் அங்கேயேதான் இருக்கிறீர்கள்
உங்கள் கண்களிலிருந்து 
சைத்தான் வெளியே வந்து 
எட்டிப் பார்த்து 
வெறுப்பைத் துப்பி 
கதவடைத்துப் போகிறது 
நீங்கள் அங்கேயேதான் இருக்கிறீர்கள் 
இப்போது இன்னும் கொஞ்சம் 
சுகமாய் சாய்ந்து 
காது குடைந்தபடி

Wednesday, March 26, 2014

இடையில் இருக்கும் கதை

நான் சொன்ன கதைக்கும் 
நீங்கள் கேட்ட கதைக்கும் 
இடையில் இருக்கும் கதை 
நம் இருவருக்கும் 
தெரியாத கதை 

Tuesday, March 25, 2014

நதியில்

நதியில் 
மிதந்து போகும் நதியை 
எவ்வளவு பேர் 
பார்த்திருக்கக்கூடும் 

இறந்து கிடந்தேன்

எல்லா கனவுகளையும் 
வரிசையாய் 
நிற்க வைத்து 
ஒவ்வொன்றாய் 
சுட்டுக் கொன்றேன் 
கடைசியில் நானும் 
இறந்து கிடந்தேன் 

விளிம்பு நோக்கி

இந்த முறையும் விழவில்லை விளிம்பிலிருந்து திரும்புகிறேன் என்றாலும் மீண்டும் விளிம்பு நோக்கிப் போகிறேன்

Friday, March 21, 2014

வரும் வழியில்

வரும் வழியில்
யானையையும் பாகனையும் 
பார்த்தேன்
பாகனை என் பக்கத்தில் வந்து 
நிற்கச் சொன்னேன்
யானையைச் சுற்றி 
ஒரு காடு வரைந்தேன்
யானை தும்பிக்கை நீட்டி 
என்னைத் தொட்டு விட்டு 
காட்டில் ஓடி மறைந்தது
பாகனை ஒரு கடையில் 
வேலைக்கு சேர்த்து விட்டேன்
அங்கு அவன்சந்தோஷமாய் 
யானை பொம்மைகள் 
விற்றுக் கொண்டிருக்கிறான்

Tuesday, March 18, 2014

இரண்டும் சரி

அலைகள் குழந்தையுடன் 
விளையாடுகின்றன 
என்கிறார் அப்பா 

குழந்தை அலைகளுடன் 
விளையாடுகிறது 
என்கிறாள் அம்மா 

இரண்டும் சரி 
என்கிறது கடல்

குருதியை மட்டும்

எல்லா வண்ணங்களையும் 
உடனே எடுத்துக்கொண்டு 
தூரிகை வரைகிறது 
குருதியை மட்டும் 
கொஞ்சம் உணவாக 
உட்கொள்கிறது

ஓடுகிறீர்கள்

அழகாக வருடிக் கொடுக்கிறீர்கள் 
அந்த சுகத்தில் லயித்தபடியே 
குற்றவாளி தப்பித்து விடுகிறான் 
பிறகு பதறி அடித்துக்கொண்டு 
காவல் நிலையம் ஓடுகிறீர்கள் 
புகார் கொடுக்க

Sunday, March 16, 2014

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1089-
இப்படித்தான் 
புதைந்து போயின 
எத்தனையோ சொற்கள் 
முளைக்குமென்று 
காத்திருக்கிறேன் 
நீரூற்றி

1090-
என்னைத் தேடி 
வந்தேன் 
வருகிறேன் 
வந்துகொண்டிருப்பேன் 

1091-
கண்ணீரில் 
வழிவது 
தப்பித்த கனவா

1092-
ஆசை மறந்தால் 
நிம்மதியாக வாழலாம் 
என்றார் குரு 

நிம்மதிதான் 
என் ஆசை 
என்றான் அவன் 

1093-
குழந்தை எறிந்த பந்து 
முடிவிலி நோக்கிப் போகிறது 
எடுக்க ஓடுகிறாள் 
வளர்ந்து கொண்டே

1094-
தந்திரம் பழக
அன்பு 
வெளியேறும்



Saturday, March 15, 2014

இரண்டு குழி

இந்த கோபத்தை 
வைத்துக்கொண்டு 
ஒன்றும் செய்ய முடியாது 
ஆழக்குழி பறித்து 
அதில் போட்டு மூடு என்று 
நண்பனிடம் சொன்னேன் 

வா இரண்டு குழி 
வெட்டலாம் என்று 
என்னையும் கூப்பிட்டான் 

Friday, March 14, 2014

இருக்கிறது

இந்த குகைக்குள் பயணிப்பது 
எளிமையாக இருக்கிறது

இந்த இருளுக்குள் பயணிப்பது
கடினமாக இருக்கிறது

இந்த குகைக்குள் பயணிப்பது 
கடினமாக இருக்கிறது

இந்த இருளுக்குள் பயணிப்பது
எளிமையாக இருக்கிறது

எதுவும் செய்யாமல்

மதம் பிடித்த 
யானையானது 
என் நிழல் 
ஒன்றும் செய்யாமல் 
பார்த்துக் கொண்டிருந்தேன் 
அதுவும் எதுவும் செய்யாமல் 
நிழலாகி விட்டது

Tuesday, March 11, 2014

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1083-
சமாதியின் மீது
விழுந்த பூக்கள் 
நகர்ந்து நகர்ந்து
இடம் மாறுகின்றன

1084-
என்னை வெல்ல 
நான் 
தோற்க வேண்டும்

1085-
விரட்டிய கையில்   
இருந்தது 
பறவைக்கான சோறு

1086-
என் கதையில் 
பெரிதாக 
எதுவும் இல்லை 
சிறிதாக 
நானிருக்கிறேன்

1087-
பசித்திருப்பவர்கள் 
வயிற்றிலிருந்தே 
ஆயுதம் எடுப்பார்கள்

1088-
உறைந்து போயிருக்கிறேன்
மீண்டு வர
உத்தேசமில்லை










Sunday, March 09, 2014

இரண்டு மெழுகுவத்திகள்

இரண்டு மெழுகுவத்திகள்
தம் சுடரில் அசையும் 
அழகு பற்றி பேசின
தம் நிழல்கள் தாளலயத்துடன் 
நடனமிடுவதை ரசித்தன
உரையாடல் 
வெளிச்சம் சார்ந்தே நீண்டது
இரண்டும் 
கடைசி வரை 
தாம் உருகுவது பற்றி 
பேசிக் கொள்ளவே இல்லை

Saturday, March 08, 2014

வேறு பொருட்கள்

வேறு பொருட்கள் இல்லை 
இந்த அறையில் 
நான்தான் இருக்கிறேன் 
ஒரே ஒரு 
பொருளைப் போல

Friday, March 07, 2014

ஒற்றைத் தீக்குச்சி

1-

உரசினால் 
இழந்து விடுவேன் 
அப்படியே இருக்கட்டும் 
ஒற்றைத் தீக்குச்சி

2-

அடுக்கி வைத்த 
கேள்விகளைத் 
தள்ளி விட்டேன் 
கலைந்து கிடந்தன 
பதில்கள்

Wednesday, March 05, 2014

முடிப்பதற்குள்

சொல்லி முடிப்பதற்குள் 
மறைந்து போனது 
பனித்துளி 
மீதிச் சொற்களை 
புல்லின் அடியில் 
கொட்டிவிட்டு வந்தேன் 

Sunday, March 02, 2014

கண்ணாடிப் பெட்டி

கண்ணாடிப் பெட்டிக்குள் 
படுத்திருக்கும் அப்பாவை 
சத்தம் போட்டு 
எழுப்புகிறது குழந்தை 
அப்பாவுக்கு கேட்கிறது 
ஆனாலும் 
அப்படியே இருக்கிறார்

Saturday, March 01, 2014

அழைத்துப் போனது

அலை வந்து 
இழுத்துப் போனது
என்று சொல்கிறார்கள் 
எல்லோரும் 
அவள் இருந்திருந்தால் 
சொல்லி இருப்பாள் 
அலை வந்து 
அழைத்துப் போனது என்று

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1076-
வெகு ஆழத்தில்
தியானம் செய்யும்
கனவின் ஆழத்தில்
இருக்கிறேன் நான்

1077-
பயம் 
துரத்திக்கொண்டே இருக்கிறது 

நல்லது 
ஓடிக்கொண்டே இரு

1078-
என் பிரார்த்தனை தட்டில் 
பாவங்கள்
ஆனாலும் 
கடவுள் முன் நிற்கிறேன்

1079-
நாளை நான் 
கிடைக்கக் கூடும் 
அதற்கு இன்று 
தொலைய வேண்டும்

1080-
இந்த வாக்கியம் 
உண்மையாக எளிமையாக 
இருந்தது
அழகாக்கியபோதுதான் 
பொய்யும் பூதமும் 
சேர்ந்து விட்டது

1081-
தட்டி எழுப்புகிறது 
கேள்வி
நானே பதிலாகிறேன்

1082-
நிராயுதபாணி 
நெஞ்சில் ஒலிக்கிறது 
நானே ஆயுதம்





Thursday, February 27, 2014

வேட்டை நாய்கள்

எல்லோரையும்
வேட்டை நாய்களாக்கி விட்டோம்
மனம் வருந்திச்
சொன்னார் பெரியவர்
என் கண்களிலிருந்த
வேட்டை நாய்
வெளியே வந்து
அவர் கால்களை
நக்கிக் கொண்டிருந்தது

சாவி துவாரத்தில்

சாவி துவாரத்தில்
இறந்து கிடக்கிறது
ஒரு கண்
அதன் இமைகள்
துடித்தபடி

Friday, February 21, 2014

நகரும் கதை

1-
அதர்மம் 
நடிக்கிறது
தர்மம் 
பார்க்கிறது

2-
நீ எப்போது 
சைத்தான் ஆனாய் 

இரக்க மனதை 
இறக்கி வைத்தபோது 

3-
எழுத்தில் 
ஓய்வெடுக்கிறேன்
என்றாலும் எழுதுகிறேன்

4-
கதை நகர்வதைப் 
பார்த்துக்கொண்டிருந்தேன்
நகர்வின் 
அழகில் மயங்கி 
எழுதுவதை 
மறந்து விட்டேன்

5-
பேராசையை 
மனதிற்கு ஊட்டிவிட்டு 
அதை பசியுடனேயே இருக்க 
பழகி வைத்திருக்கிறோம்



Thursday, February 20, 2014

இழு

இழுக்க முடியுமா 
இந்த தேரை 

முடியும் 
இழு 
தேரே சொன்னது

Tuesday, February 18, 2014

கேட்டுத் துளைக்கிறாள் மான்யா

காட்டில் கொண்டு போய் 
விட்டுவிடலாமா 
சர்க்கஸ் சிங்கத்தை 
பார்க்க விடாமல் 
கேட்டுத் துளைக்கிறாள் மான்யா

மறுநாள் 
அவள் வரைந்த வனத்தில் 
அந்த சிங்கம் 
உலவிக்கொண்டிருந்தது

Sunday, February 16, 2014

கொம்பு

எனக்குத் தலையில் 
கொம்பு முளைத்திருக்கிறது 
என்கிறீர்கள் நீங்கள் 

உங்களுக்குத் தலையில் 
கொம்பு முளைத்திருக்கிறது 
என்கிறேன் நான் 

இருவரும் இல்லை 
என்கிறோம் 

கண்ணாடியில் 
பார்க்கிறோம் 

கண்ணாடியில் 
கொம்பு முளைத்திருக்கிறது 

உணர்வின் மையம்

எழுதினேன் 
சித்திரம் கிடைத்தது 

வரைந்தேன் 
சித்திரம் கிடைத்தது 

ஒன்று போலில்லை 
மற்றொன்று 

ஆனாலும் 
உணர்வின் மையம் ஒன்று

Wednesday, January 29, 2014

ஒரு பகல் நேரத்தில்

1-

முழு கடலையும்
மறைக்கிறான்
சுண்டல் விற்கும் சிறுவன்

2-

நதி கண்களில்
வழிகிறது
மணல் லாரிகளில்
நீந்துகின்றன மீனகள்

3-

எனது காட்சி
இன்னும் வரவில்லை
திரை இறக்குபவனை
பதட்டத்துடன் பார்க்கிறேன்

4-

இது ஒரிஜினல் ரத்த்த்தில்
வரைந்த ஓவியம்
இதற்கு ரத்தம் தந்தவர்
பக்கத்தில்
இறந்து கிடக்கிறார் பாருங்கள்
அவரை அடக்கம் செய்யவாவது
இந்த ஓவியத்தை
நீங்கள் வாங்கித்தான்
ஆக வேண்டும்

5-

காட்சிகள் இல்லாத
ஒரு பகல் நேரத்தில்
மிகத்தனியே
குலுங்கி குலுங்கி அழுகிறான்
சர்க்கஸ் கோமாளி
தன் கைகளைத் தட்டியபடி

6-

நூலகம்
பசி மறக்க
புத்தகம்

7-

பாலின் ஏடென
படிந்து கிடக்கிறது மெளனம்
நீக்கி
பருகப் பார்க்கிறேன்
உள் உறைந்த சொற்களை


பார்க்கிறது

சொல்லில் நீந்திய 
மீனை எடுத்து 
வாக்கியத்தில் போட்டேன் 
அது நீந்தி நீந்தி 
மொழியின் பரப்புக்குப் 
போகப் பார்க்கிறது

Thursday, January 23, 2014

விடுதலை அடைந்தேன்

தற்கொலை செய்து கொள்ள 
கயிறை வரைந்தேன் 
கயிறை அழித்து 
விடுதலை அடைந்தேன்

Monday, January 20, 2014

கதை சொன்ன போது

கனவு விழித்தபடி 
கதை சொன்ன போது 
நான் உறங்கிக்கொண்டிருந்தேன் 
கனவு உறங்கியபடி 
கதை சொன்ன போது 
நான் விழித்துக்கொண்டிருந்தேன் 

நீளம்

வாக்கியத்தின் நீளத்திற்கு 
போய் வருகிறது ஊஞ்சல் 
ஒவ்வொரு முறை 
போய் வரும் போதும் 
புது புது வாக்கியங்களை 
உருவாக்கிக் கொள்கிறது 

Sunday, January 19, 2014

உங்களுக்குத் தெரிகிறதா

1-
அன்பின் சுடர் அசைகிறது
என்று எழுதிய வரியை
நீங்கள் உடனே
அழித்து விடலாம்
உங்களால் ஊதி
அணைக்க முடியாது
2-
வெறும் கண்களை வரைந்து 
கடவுள் பிறந்து விட்டார் 
என்கிறாள் மான்யா
ஒரு கணப் பார்வையில் 
இமைகள் அசைவது 
அவளுக்குத் தெரிகிறது 
எனக்குத் தெரிகிறது 
உங்களுக்குத் தெரிகிறதா 
3-
நெடிதுயர்ந்து
நிற்கிறது மலை
உச்சியில்
என் முகச்சாயல் உள்ள
ஒருவன் நிற்கிறான்
பறவையின் பிரமிப்புடன்
அவனை அடைய வேண்டும்
ஏறிக்கொண்டிருக்கிறேன்
4-
குழந்தை போலிருந்த அவனை
பைத்தியக்காரன் எனச்சொல்லி
கைவிலங்கிட்டு
அழைத்துச் சென்றார்கள்
அவன் சத்தம்போட்டு
சிரித்தபடி சொன்னான்
விலங்குக்கு வெளியே
அவர்கள் பத்திரமாக
இருக்கிறார்கள்
உள்ளே நான்
சுதந்திரமாக இருக்கிறேன்
5-
வழிகாட்டி பலகை
காற்றில் ஆடி ஆடி
திசைகளை
மாற்றிக்கொண்டிருக்கிறது
பயணி நடக்கிறான்
பாடலை முணுமுணுத்தபடி
கண்களால்
வழிகளைத் தொட்டபடி
6-
பெரிதாகப் பேசுகிறீர்களே
கடலின் சேறு
ஒட்டியதுண்டா
உங்கள் மனதில்
7-
பொய்களில்
மறைத்து வைத்திருக்கும்
கத்திகளில்
உண்மையான வன்மம்
இருக்கிறது
8-
வெட்டப்பட்ட கனவிலிருந்து
கசியும் குருதியைத்
துடைக்கிறான் அவன்
இரவின் விரல்களிலும்
துளிகள் ஒட்டிக்கொண்டு
உதிர்ந்து விடாமல்
பேசுகின்றன
வலியின் கதைகளை
9-
உங்கள் மேல்தான்
ஊர்ந்துகொண்டிருக்கிறேன்
காற்றென
ஏதேனும்
தொந்திரவு நிகழுமெனில்
மாறுவேன்
பாம்பென
10-
என்னிடம்
மிச்சமிருப்பதும்
நான்தான்

(குங்குமம் பொங்கல் சிறப்பிதழில்-(20.01.2014) வெளியான கவிதைகள்)


Tuesday, January 14, 2014

இருளின் வண்ணம்

இரவை அழகாக 
வரைந்து காட்டுகிறது கனவு 
அதற்கு இந்த 
இருளின் வண்ணம் 
இன்னும் பொருந்துகிறது

Monday, January 13, 2014

அழுவதை நிறுத்து

வலியை வரையும்
வண்ணமா கண்ணீர்
அழுவதை நிறுத்து
உன் முகம்
சித்திரமானது போதும் 

தவளைகள் சத்தம்

தவளைகள் சத்தம் 
இரவின் மேல் 
சொற்களை அடுக்குகிறது 

சொற்கள் 
ஒரு  கனவாகி 
சிறகு விரித்து 
பறந்து வந்து 
மனதில் அமர்ந்து 
இளைப்பாறுகிறது 

உணர்ந்தபடி 
உறங்கிக் கொண்டிருக்கிறேன் 

விடிய இன்னும் 
நேரமிருக்கிறது 

Sunday, January 12, 2014

என்ன செய்ய

பாரமாகவே உணர்கிறேன் 
என்ன செய்ய 

முதலில் 
மனதில் சுமந்து செல்லும் 
சவப்பெட்டியை 
இறக்கி வையுங்கள்