Thursday, February 10, 2011

நுழைவாயில்

அந்த கவிதையை
அழித்து விடுங்கள்

மெல்ல

ரப்பருக்கு எதுவும்
தீங்கு நேராமல்

இல்லை
எரித்து விடுங்கள்
ஒரு தீக்குச்சியில்
எல்லாம் முடித்துவிடும்

அந்த கவிதை
இன்னும் உங்களில்
கனக்குமெனில்
மறுபடி
எழுதிப் பாருங்கள்

வேறு ஆழத்திலிருந்து
வேறு தளத்திலிருந்து
வேறு ஒன்றிலிருந்து

வாந்தி எடுப்பதுபோல்
அதுவே
வந்து சேருமெனில்
தயங்காதீர்கள்

அதையும்
முன்சொன்னதுப்போல்
செய்துவிடுங்கள்

அழிக்க வேண்டியதை
ஆக்கிக்கொண்டிருப்பதால்
எந்த பலனும் இல்லை

பேசாமல்
வார்த்தைகளற்ற
வெளியில் பயணித்துத்
தேடுங்கள்

உடனே
திரும்பி விடாதீர்கள்

ஓடோடி வந்து
தாளில் அப்பிவிடுவதால்
ஒன்றும் நிகழ்ந்துவிடாது

சரியான சமிக்ஞை
கிடைக்குமெனில்
அப்போது எழுதுங்கள்

சிக்கி இருப்பதே
வருமெனில்
நீங்கள்
அடைபட்ட கூண்டிலிருந்து
இன்னும் வெளிவரவில்லை
என்று பொருளாகும்

காத்திருங்கள்
மெளனம் பழகுங்கள்
வார்த்தைகள் ஊடாக
உயிர் நுழைத்துப் பாருங்கள்

பிறகு எழுதுங்கள்

இந்த தொடர்ந்த
செயல்பாடுகளில்
ஒன்று நீங்கள்
முடிந்துபோய்விடுவீர்கள்

அல்லது

கவிதையின்
ஒரு புதிய நுழைவாயிலை
கண்டடைவீர்கள்

1 comment: