Saturday, August 23, 2008

பென்சில் நதி

நதி பற்றிய கவிதையை
நான் எழுதியபோது
அருகில் வந்த மகள்
வரைந்த நதியைக் காட்டினாள்
தாளில் ஓடியது
பென்சில் நதி
என் கவிதையை
அதில் கரைத்துவிட்டு
மறுபடி பார்க்க
இன்னும் முடியவில்லை
எனச் சொல்லியபடியே
ஓடிய அவள்
கண்களில் மீதி நதி

(26.10.08 கல்கி
இதழில் பிரசுரமானது)
----------------------

யாரும் படித்து
முடிக்கவில்லை
மழைபுத்தகம்
-----------------

Thursday, August 21, 2008

பெருவழி

அருகில் போய்
மிக ரகசியமாய்
பனித்துளியிடம்
சின்ன கவிதையை
சொன்னேன்
கேட்டு
புன்னகைத்தது
கவிதையில்
பனித்துளி பூத்தது
----------------
கையிருக்கும்
முகவரியிலிருந்து
நீள்கிறது பெருவழி
கால்கள் கடக்க
வழி நெடுகிலும்
சிறுசிறு முகவரிகள்
-----------------

Tuesday, August 12, 2008

வழிக்குறிப்புகள்

வந்து பார்க்காத
கடிதம் போடாத
மகனுக்கு
தந்தை எழுதினார்
ஊர் பக்கத்தில்
இருக்கிறது
நீதான் தொலைவாக
இருக்கிறாய்

(26.10.08 கல்கி
இதழில் பிரசுரமானது)

------------------

பார்த்த வானவில்
அடுப்புக் கறியில்
வரையும் சிறுமி

(26.10.08 கல்கி
இதழில் பிரசுரமானது)

------------------
தவறவிட்ட ரயில்
வழி அனுப்புகிறேன்
கையசைத்து
------------------
வெயிலில் நனைந்து செல்கிறேன்
என்று கதை மனோபாவத்துடன்
யோசித்தபடி
வெயிலில் காய்ந்து சொல்வது
கடினமாக இருக்கிறது
-------------------

Saturday, August 09, 2008

இரு வார்த்தைகள்

சற்று வயது கூடிய
வேலைக்காரன்
தன் நுட்பம் கலையா
விரல் பாவங்களுடன்
மிக மெதுவாய்
மரம் அறுத்து
சரி பார்த்து
தக்கபடி பொறுத்தி
வடிவம் அளந்து
ஆணிகள் அடித்து
வருடிக் கொடுத்து
தன்னையே
ஒரு முறை பெயர்த்து
கிடத்தி
பின் எடுத்து
கண்ணோரம் வந்த
ஒரு சொட்டை
போட்டுபோல் வைத்து
துக்க வண்ணம் பூசி
மரத்துகள்களை
அப்புறப்படுத்தி
மஞ்சள் வெயில் பட
உருவாக்கிய சவப்பெட்டியை
பார்த்தபடி
இருக்கும்போது
அவன் உதடு
சத்தமின்றி சொல்கிற
இரு வார்த்தைகள்
உயிர் வந்திடுச்சி

Monday, August 04, 2008

மழையின் கணங்கள்

மழையைப் பற்றி
எவ்வளவோ பேசினாய்
மழை விட்டப் பிறகும்
ஒரு மழையைப்போல

இப்போதெல்லாம்
பெய்யும்
ஒவ்வொரு மழையும்
பேசுகிறது
உன்னைப் பற்றி

Tuesday, July 15, 2008

கல் நதி

வார்த்தைகளை
மாற்றிப்பாடுகிறது குழந்தை
குழந்தையின் பாடலில்
தன்னைப் புதிது
செய்து கொள்கிறது கவிதை
----------

பிரசாதம் வாங்கிய
சிறுவனிடம்
கும்பிட்ட சாமியின்
பெயர் தெரியுமா கேட்டேன்
எனக்கு பசிக்குது சாமி
சொல்லியபடியே ஓடினான்

(26.10.08 கல்கி
இதழில் பிரசுரமானது)

-----------

உள் உளி
பாய
நகர்கிறது
கல் நதி
------------
தான் வரைந்த கடலில்
நேற்றுப் பார்த்த கடல்
இருக்கிறதா
கேட்டாள் சிறுமி
அவள் நீலக் கோடுகளிலிருந்து
எம்பிக் குதித்த வண்ணமீன்
ஆம் என்று
சொல்லச்சொல்லி
உள் ஓடி
மறைந்து போனது
--------------

Sunday, June 29, 2008

அன்பின் கையெழுத்து

ஒரு மழை நாளில்
ஓர் குடைகீழ்
நாம் நிற்க
என் கையெழுத்திட்டு
நான் உனக்கு
வழங்கிய புத்தகம்
இதோ இத்தனை
வருடங்கள் கழித்து
ஒரு பழைய
புத்தகக் கடையில்

வாங்கிச் செல்கிறேன்

புத்தகத்தில் அழிந்திருக்கிறது
என் பெயரும்
நம் அன்பும்

(1.10.08 ஆனந்த விகடன்
இதழில் பிரசுரமானது)

Wednesday, June 25, 2008

நீங்களும் ஒரு பறவையும்

நீங்கள் ஒரு பறவையை
சுடும்போது
கவனத்துடன் குறிவைக்க வேண்டும்

தோட்டா பட்டதும்
செத்து விழ வேண்டும் பறவை

மீதி உயிர் இருந்து
மண்ணில் புரண்டு
மெதுவாய் போகும்படி ஆகக்கூடாது

சுடப்பட்ட பறவை
விழுந்த பிறகு
சில நொடிகள் முடிந்தால்
அஞ்சலி செய்யலாம்

பறவையின் இன்ன பிற
உறவுகளுக்காக
ஒரு வருத்தச்சொட்டு சிந்தலாம்

பின் பறவையை
எப்படி சமைப்பது
என்னென்ன செய்வது
என்பது பற்றி பேசலாம்

மதுக் கோப்பைகளின் நடுவே
மேசை மீது
நிரப்பப்பட்டிருக்கும் கறி

நீங்கள் சுவைக்கிறீர்கள்
பற்களில் நசுங்கும்
பறவையின் சத்தம் கேட்டபடி

அப்போது உங்கள்
கண்களை கலைத்துப்
போகிறது ஒரு பறவை

உங்கள் துப்பாக்கியை
முகம் திருப்பி வைத்து
காற்றில் நீந்தி
வானத்தில் அதன் சிறகுகள்
நடனமிடுவதைப் பாருங்கள்
முடிந்தால் ரசித்து

Thursday, June 19, 2008

பார்த்தபடி படிக்கட்டுகள்

லிப்ட் வாய்க்கப் பெறாத
மூன்றாவது மாடி

மூச்சு இறைப்பதைப்
பார்த்தபடி படிக்கட்டுகள்

காலெடுத்து வைக்க
முடியும் அப்பார்ட்மெண்ட்

இருந்து பார்த்து
ஊருக்குப் போய்விட்டார் அப்பா

அவர் விட்டுச் சென்ற
வார்த்தைகளில்
விதிக்கப்பட்ட இந்த வீடெங்கும்
பரவிக் கிடக்கும்
எங்கள் கிராமம்

Wednesday, June 18, 2008

பொம்மைகள்

குழந்தை உடைத்த
பொம்மையிலிருந்து
குழந்தைக்கு கிடைத்தன
மூன்று பொம்மைகள்

கூண்டிலிருந்து...

தொழில் மாற்ற
உத்தேசித்து
கூண்டைத் திறந்து
போகச் சொல்கிறான்
ஜோஸ்யக்காரன்

அவன் காலை
சுற்றி சுற்றி வருகிறது
சுதந்திரம் மறந்த கிளி

கூர்காவின் கடிதம்

ஒருவன் கடிதம் படிக்க
மற்றவன் கேட்க
இசைக் கச்சேரி போலிருந்தது
கூர்காக்களின் மொழி

கேட்டுக் கொண்டே வந்தவன்
குழந்தையை கைகளில்
கொஞ்சுவது போல்
பாவனை செய்து
ஆட ஆரம்பித்து சிரித்தான்

தான் அப்பா ஆனதாக
மார் தட்டி
சத்தம் போட்டான்

ஓடிப்போய்
மிட்டாய் வாங்கி வந்து
எனக்கும் தந்ததில்
நினைத்தது சரி என்று
தெரிந்தது

தூர உணர்வுகளை
கொட்டிக் கொண்டிருந்தது
கடிதம்

என் நடை முடிந்து
வருகையில்
போயிருந்தான்
கடிதம் படித்தவன்

கடிதத்தின் எழுத்துக்களில்
விளையாடியபடியே இருந்தன
அமர்ந்திருந்த
கூர்காவின் கணகள்

(1.10.08 ஆனந்த விகடன்
இதழில் பிரசுரமானது)

Tuesday, May 06, 2008

பாதையின் கருணை

கை நீட்டிக் கேட்பவனை
ஏற்றிச் செல்ல
நிற்கவில்லை
எந்த வாகனமும்

வேகமாய்க் கடக்கின்றன

நடப்பவன் ஏற்றிச் செல்கிறான்
நிலவின் புன்னகையை
மழைத் தூறல்களை
நிற்காமல் போகச் சொல்லும்
பாதையின் கருணையை

பாட்டியின் கதை

கதைச் சொல்லிக்கொண்டே
வந்த பாட்டி
தூங்கிப்போனாள்

விழித்திருக்கிறது குழந்தை
கதாபாத்திரங்களுடன்

Sunday, April 20, 2008

மான்யா

காலையை அழகுபடுத்தி
சென்றுகொண்டிருந்தன
பள்ளிக்குழந்தைகள்

என்னை கவர்ந்த
ஒரு குழந்தைக்குப்
பெயரிட்டேன்

மான்யா

பள்ளிக் கடக்கும்போதெல்லாம்
என் மான்யாவைப் பார்ப்பது
வழக்கமாயிற்று

அவள் நடைஅசைவும்
கண்களிலிருந்து
கொட்டும் கனவுகளும்
சுகமானவை

பள்ளிவிடுமுறை நாட்களில்
பார்க்க முடியாமல் போகும்
மான்யாவை

சந்திக்க வாய்ப்புக்கிடைத்த
ஒரு தருணத்தில்
அவளிடம் கேட்டேன்

உன் பெயரென்ன

சிரித்தபடி பார்த்தவள்
பேசினாள்

உங்களுக்கு என்ன
பிடிச்சிருந்தா
உங்களுக்கு பிடிச்ச பேர்ல
கூப்பிடுங்க

மான்யா

கேட்டு
நாக்கில் சுவையூறும்படி
சொல்லிப்பார்த்தாள்

பள்ளிமணி அழைக்க
கை அசைத்தபடி ஓடி
தன் தோழியோடு
சேர்ந்துகொண்டு சொன்னாள்

என்னோட
இன்னோரு பேரு
மான்யா

Thursday, April 17, 2008

...என்றொரு மருத்துவர்

என் நோய்கள் குறித்து
அக்கறையோடு விசாரித்தார்
மருத்துவர்

தெரியாத பலவும்
தெரிவித்தார்

மருந்துகளின் வரிசை
நீண்டது

மதுக்கடைப்பக்கம்
போகக்கூடாது
கட்டளையிட்டார்

வயது கூட
அது நோய்களுக்குக்
கதவுகளைத் திறந்து விடுகிறது
மறக்காதே என்றார்

கடைசியாய்க் கேட்டார்

என்ன தொழில்
செய்கிறீர்கள்

எழுத்தாளன்
கதை கவிதை
எனது தொழில்

புன்னகைத்தார்

உங்கள் எழுத்து
வாழ்க்கையை நகர்த்துகிறதா

அறை மின்விசிறி
நின்று போக
வெளிக் காற்றில்
தாள்கள் படபடக்க
முகம் துடைத்தபடிப்
பார்த்தேன்

வயது கூட
அது நோய்களுக்குக்
கதவுகளைத் திறந்து விடுகிறது
ஆரம்பித்திருந்த
என் கதையின் வரி
அங்கேயே நின்றிருந்தது

Tuesday, April 15, 2008

அணைந்தது விளக்கு
தெரிந்தது
இருளின் ஒளி

Friday, April 11, 2008

வெளவால் மண்டபம்

இருளில்
பசியில்
ஏதுமில்லாமல்
கிடந்த
பிச்சைக்காரியைப்
புணர்ந்தவர்கள்
விலகிப்போனார்கள்
வேகமாய்

அவள் அழுகை
அங்குமிங்குமாய் அலைந்து
வழி அறியாமல்
திரும்புகிறது
அவளிடமே

நடுங்கும்
வெளவால் மண்டபம்
அவளோடு சேர்ந்து

உதவிக்கு வர இயலாமல்
புரண்டு படுக்கிறான்
கல்லறைக்குள் இருப்பவன்

அவள் ரத்தம் கலைக்கப்
பெய்கிறது மழை

துன்பம் பார்த்து
நகர்கிறது பெளர்ணமி

மண் அள்ளி வீசி
உலகை சபிக்கிறது
ஒரு பைத்தியத்தின் குரல்

(புதிய பார்வை ஏப்ரல்16-30,08இதழில்
பிரசுரமானது)

சொற்களில் பெய்த மழை

நின்றவுடன் போகலாம்
இருக்கச் சொன்னேன்
வேலை இருப்பதாகப்
புன்னகைத்தபடியே
போனார் நண்பர்

அடுத்த முறை
வந்தபோது
அவர் சொற்களில்
பெய்து கொண்டிருந்தது
நனைந்து சென்ற மழை

(புதிய பார்வை ஏப்ரல்16-30,08இதழில்
பிரசுரமானது)

Saturday, March 08, 2008

ஒவ்வொரு முறையும்

ஒரு தேநீர் நேரத்தில்
கசாப்புக் கடைக்கார நண்பர்
மௌனமாய் சொன்னார்
ஒவ்வொரு முறை
வெட்டும் போதும்
என் மரணத்தையும்
பார்க்கிறேன்