ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Monday, May 19, 2014
விழித்திருப்பவன்
விழித்திருப்பவன்
இரவை ஒரு
சிகிரெட்டைப் போல
பிடித்துக் கொண்டிருக்கிறான்
என்ற வரியை
நள்ளிரவில் தொடங்குகிறேன்
விடியலைக் கீறி
வெளிவரப் பார்க்கின்றன
மற்ற வரிகள்
Thursday, May 15, 2014
உள்ளே என்ன நடக்கிறது
உள்ளே என்ன நடக்கிறது
என்ற வரியை
வைத்துக் கொண்டு
நீண்ட நேரமாக
வெளியில் இருக்கிறேன்
உள்ளே செல்ல முடியாமல்
மலையின் கருணை
மலை உச்சி
சொன்னது
உன் தற்கொலையின்
ஆழத்திற்கு
என்னைக் கொண்டு போகப்
பார்க்கிறாயே
மலையின் கருணைக்கு
நன்றி சொல்லி விட்டு
இறங்கிப் போனான்
Wednesday, May 14, 2014
சரியான நதிகள்
மீன் தொட்டியிலிருந்து
கடலுக்குப்
போகும் வழியில்
சரியான நதிகள்
இருக்க வேண்டும் என்று
வேண்டிக் கொள்கின்றன மீன்கள்
Tuesday, May 13, 2014
புகை
நான் புகை
சித்திர தரிசனம்
எனக்கில்லை
கதையிலிருந்த பாறை
கதையிலிருந்த பாறையை
எல்லோரும்
தள்ளிக் கொண்டிருந்தார்கள்
பக்கங்களில்
பறந்து கொண்டிருந்த
பட்டாம் பூச்சி
தூக்கிக் கொண்டு
போய் விட்டது
Saturday, May 10, 2014
கல் புத்தகம்
எனக்குள் சிலைகள்
எதுவுமில்லை
நான் கல் புத்தகம்
வேண்டுமானல்
நீங்கள் படிக்கலாம்
என்றது பாறை
எப்படி புரட்டிப் படிப்பது
என்று யோசித்தபடி
பார்த்துக் கொண்டிருந்தேன்
Tuesday, May 06, 2014
பறந்து கொண்டிருக்கிறேன்
என்னிடம்
அதிகமான ஆச்சரியக் குறிகள்
இருக்கின்றன
உங்களிடம்
அதிகமான கேள்விக் குறிகள்
இருக்கின்றன
நான் பறந்து கொண்டிருக்கிறேன்
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்
Saturday, May 03, 2014
நேற்றைய புன்னகை
நேற்றைய
என் புன்னகை
இன்றும் கிடைக்குமென்று
வந்திருக்கிறீர்கள்
என் உதட்டில்
கம்பளிப் பூச்சி
ஊர்ந்து கொண்டிருப்பதைப்
பார்க்கிறீர்கள்
என்ன சொல்வதென்று
தெரியாமல்
அவஸ்தையுடன் புன்னகைத்துப்
போகிறீர்கள்
Tuesday, April 29, 2014
அவர்களுக்குத் தெரியாமல்
நமக்குத் தெரிந்தே
நாம் திருடினோம்
அதை அவர்களுக்குத் தெரியாமல்
பார்த்துக் கொண்டோம்
Monday, April 28, 2014
ஒரே கிரீடம்
நாம் எல்லோரும்
ராஜாக்கள்
ஒரே கிரீடத்தை
மாறி மாறி
அணிந்து கொள்கிறோம்
என்றார் நண்பர்
ராஜ புன்னகையுடன்
அப்போது கிரீடம்
அவர் தலையில் இருந்தது
ஆராதனை மனது
உங்களுக்கு
ஆராதனை மனது
சரிதான்
அதற்காக
கற்பூரமாக மாறியது
தவறு
தட்டில் எரிந்து கொண்டிருக்கிறீர்கள்
Friday, April 25, 2014
என் முகமூடி
என் முகமூடியை
நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்
வெறும் முகத்துடன்
பேசுவது
எனக்கு கடினமாக இருக்கிறது
உடலெங்கும் அம்புகள்
உடலெங்கும் அம்புகள்
தைத்துக் கிடக்கின்றன
ஒவ்வொன்றாய்
எடுத்துப் போடுகிறேன்
உதிரம் பாய்ந்த நிழல்
நிமிர்ந்து நிற்கப் பார்க்கிறது
Tuesday, April 22, 2014
சொற்கள்
துள்ளிக் குதிக்கும்
மீன்கள் சொல்கின்றன
நாங்கள்
கடலின் சொற்கள்
சேதி கேட்ட கண்ணீர்
இறந்தவனை
தொலைந்து போனதாக
அறிவிக்கிறார்கள்
தொலைந்தவனை
இறந்து போனதாக
அறிவிக்கிறார்கள்
செய்வதறியாது நிற்கிறது
சேதி கேட்ட கண்ணீர்
Monday, April 21, 2014
அனுபவ சித்தனின் குறிப்புகள்
1101-
அவரவர் கோணத்தில்
சரியாக இருந்தது
மொத்தத்தில் எங்கோ
தவறு இருந்தது
1102-
வாடகைக்கு
வார்த்தைகள் கிடைக்கும்
என்ற குறிப்பு
அவர் கண்களில் இருந்தது
அருகில் போய் பேச
தயக்கமாக இருந்தது
1103-
வாடகைக்கு
வார்த்தைகள் கிடைக்கும்
என்ற குறிப்பு
அவர் கண்களில் இருந்தது
அருகில் போய் பேச
தயக்கமாக இருந்தது
1104-
புரண்டு படுக்கிறீர்கள்
வாய்ப்பு
கை மாறிச் செல்கிறது
1105-
வண்ணங்களை
வீசுகிறது கனவு
வழியும் நிறங்களில்
ஒன்றிரண்டு
ஓவியமாகக் கூடும்
1106-
நான் பிழைகளால்
உருவானவன்
நீங்கள் என்னை
திருத்தினால்
நான் சிதைந்து விடலாம்
1107-
கதைப்படி
இந்த காட்சியில்
நீங்கள் இறந்து போக வேண்டும்
கதையைக் கொன்று
நீங்கள் வாழப் பார்க்கிறீர்கள்
1108-
பயணத் தனிமை
எனக்கில்லை
சொற்கள் இருக்கின்றன
1109-
புறக்கண்ணுக்கும்
புலப்படவில்லை
அகக்கண்ணுக்கும்
அகப்படவில்லை
எங்கிருக்கிறேன்
தெரியவில்லை
1110-
பயத்தைப் புகட்டுகிறார்கள்
தைரியமாய்
துப்பி விடுங்கள்
Sunday, April 20, 2014
முடிந்து விட்டது
தற்கொலையை
காட்சியைப் போல
நடத்த
திட்டமிட்டான்
திரை விழுவது போல
முடிந்து விட்டது
Friday, April 18, 2014
சொல்லிக்கொண்டே இருந்தான்
மதுக்கோப்பையில்
கண்ணீர்துளிகள்
மிதந்து கொண்டிருப்பதை
அவன் எதேச்சையாக கண்டான்
அது பிரமை என்று
குடித்து முடிக்கும் வரை
தனக்குச்
சொல்லிக்கொண்டே இருந்தான்
அதற்கு முன்பே
என் குரல் வளை இறுக்கி
என்னை கொன்றீர்கள்
அதற்கு முன்பே
என் சொற்கள்
வெளியேறி இருந்தன
Monday, April 14, 2014
அனுபவ சித்தனின் குறிப்புகள்
1095-
அது மலையல்ல
நீங்கள்
நகர்த்தி சேர்த்த
பொய்கள்
1096-
தூது வந்த புறா
ஆயுதத்தின் மேல்
அமர்ந்திருக்கிறது
1097-
மேல் நீந்தும்
மீனானேன்
ஆழம் போய்
நீரானேன்
1098-
சாவி துவாரத்தின் வழியே
பார்க்கும் போது
சாவிதுவாரமும்
சேர்ந்து பார்க்கிறது
1099-
கனவுகளில்
அறைந்து கொள்கிறேன்
வேண்டாம் சிலுவை
1100-
நினைவுகளே
பரமபதம்
பாம்பு
ஏணி
எல்லாம்
ஆடத்தான் வேண்டும்
யாராவது ஒருவர்
யாராவது ஒருவர்
உண்மை பேசுவார்கள்
என்ற எதிர்பார்ப்பில்
அறையிலிருந்த எல்லோரும்
பொய் பேசிக் கொண்டிருந்தார்கள்
இசை
கொஞ்சம் காற்றும்
துளைகளை
மூடித் திறக்கும்
விரல்களும்தான்
என்னுடையது
இசை பிரபஞ்சத்தினுடையது
புல்லாங்குழல் வாசித்த
கலைஞன் சொன்னான்
Sunday, April 13, 2014
ஒவ்வொரு முறையும்
நீ இவ்வளவு
பொய் சொல்வாய்
என்று தெரிந்திருந்தால்
நான் பேசி இருக்க மாட்டேன்
நாக்கு சொன்னது
ஒவ்வொரு முறையும்
இதையே சொல்கிறாய்
தோற்றுப் போகிறாய்
மனம் சொன்னது
Friday, April 11, 2014
உச்சியிலிருந்து
மலை உச்சியிலிருந்து
விசிலடித்தபடி
இறங்கி வருவதைப் போல
கற்பனை செய்து கொள்கிறேன்
அது இப்போது
ஏறுவதை
இலேசாக்கிக் கொண்டிருக்கிறது
வெளிச்சம்
தாளில் வெளிச்சம்
எழுதுவதைப் போல
வெளிச்சத்தை என்னால்
எழுத முடிவதில்லை
Thursday, April 10, 2014
பாம்பைப் பற்றிய கவிதை
பாம்பைப் பற்றி
எழுதிய கவிதையில்
விஷம் இருந்தது
அது பாம்பின் விஷமா
என் விஷமா
தெரியவில்லை
Wednesday, April 09, 2014
பனித்துளிக் கண்கள்
புல் தன்
பனித்துளிக் கண்களால்
மொத்த வனத்தையும்
பார்க்க நினைத்தது
அதற்குள் காட்சி
மறைந்து போனது
Monday, April 07, 2014
நேரம்
பழுதடைந்த கடிகாரத்தில்
நேரம் பார்க்கிறான்
அவனுக்கு சரியாய் காட்டுகிறது
மற்றவர்களுக்கு
அவனை தப்பாய் காட்டுகிறது
Sunday, March 30, 2014
நீங்கள் அங்கேயேதான் இருக்கிறீர்கள்
நீங்கள் அங்கேயேதான் இருக்கிறீர்கள்
உங்கள் கண்களிலிருந்து
சைத்தான் வெளியே வந்து
எட்டிப் பார்த்து
வெறுப்பைத் துப்பி
கதவடைத்துப் போகிறது
நீங்கள் அங்கேயேதான் இருக்கிறீர்கள்
இப்போது இன்னும் கொஞ்சம்
சுகமாய் சாய்ந்து
காது குடைந்தபடி
Wednesday, March 26, 2014
இடையில் இருக்கும் கதை
நான் சொன்ன கதைக்கும்
நீங்கள் கேட்ட கதைக்கும்
இடையில் இருக்கும் கதை
நம் இருவருக்கும்
தெரியாத கதை
Tuesday, March 25, 2014
நதியில்
நதியில்
மிதந்து போகும் நதியை
எவ்வளவு பேர்
பார்த்திருக்கக்கூடும்
இறந்து கிடந்தேன்
எல்லா கனவுகளையும்
வரிசையாய்
நிற்க வைத்து
ஒவ்வொன்றாய்
சுட்டுக் கொன்றேன்
கடைசியில் நானும்
இறந்து கிடந்தேன்
விளிம்பு நோக்கி
இந்த முறையும் விழவில்லை விளிம்பிலிருந்து திரும்புகிறேன் என்றாலும் மீண்டும் விளிம்பு நோக்கிப் போகிறேன்
Friday, March 21, 2014
வரும் வழியில்
வரும் வழியில்
யானையையும் பாகனையும்
பார்த்தேன்
பாகனை என் பக்கத்தில் வந்து
நிற்கச் சொன்னேன்
யானையைச் சுற்றி
ஒரு காடு வரைந்தேன்
யானை தும்பிக்கை நீட்டி
என்னைத் தொட்டு விட்டு
காட்டில் ஓடி மறைந்தது
பாகனை ஒரு கடையில்
வேலைக்கு சேர்த்து விட்டேன்
அங்கு அவன்சந்தோஷமாய்
யானை பொம்மைகள்
விற்றுக் கொண்டிருக்கிறான்
Tuesday, March 18, 2014
இரண்டும் சரி
அலைகள்
குழந்தையுடன்
விளையாடுகின்றன
என்கிறார் அப்பா
குழந்தை அலைகளுடன்
விளையாடுகிறது
என்கிறாள் அம்மா
இரண்டும் சரி
என்கிறது கடல்
குருதியை மட்டும்
எல்லா வண்ணங்களையும்
உடனே எடுத்துக்கொண்டு
தூரிகை வரைகிறது
குருதியை மட்டும்
கொஞ்சம் உணவாக
உட்கொள்கிறது
ஓடுகிறீர்கள்
அழகாக வருடிக் கொடுக்கிறீர்கள்
அந்த சுகத்தில் லயித்தபடியே
குற்றவாளி தப்பித்து விடுகிறான்
பிறகு பதறி அடித்துக்கொண்டு
காவல் நிலையம் ஓடுகிறீர்கள்
புகார் கொடுக்க
Sunday, March 16, 2014
அனுபவ சித்தனின் குறிப்புகள்
1089-
இப்படித்தான்
புதைந்து போயின
எத்தனையோ சொற்கள்
முளைக்குமென்று
காத்திருக்கிறேன்
நீரூற்றி
1090-
என்னைத் தேடி
வந்தேன்
வருகிறேன்
வந்துகொண்டிருப்பேன்
1091-
கண்ணீரில்
வழிவது
தப்பித்த கனவா
1092-
ஆசை மறந்தால்
நிம்மதியாக வாழலாம்
என்றார் குரு
நிம்மதிதான்
என் ஆசை
என்றான் அவன்
1093-
குழந்தை எறிந்த பந்து
முடிவிலி நோக்கிப் போகிறது
எடுக்க ஓடுகிறாள்
வளர்ந்து கொண்டே
1094-
தந்திரம் பழக
அன்பு
வெளியேறும்
Saturday, March 15, 2014
இரண்டு குழி
இந்த கோபத்தை
வைத்துக்கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது
ஆழக்குழி பறித்து
அதில் போட்டு மூடு என்று
நண்பனிடம் சொன்னேன்
வா இரண்டு குழி
வெட்டலாம் என்று
என்னையும் கூப்பிட்டான்
Friday, March 14, 2014
இருக்கிறது
இந்த குகைக்குள் பயணிப்பது
எளிமையாக இருக்கிறது
இந்த இருளுக்குள் பயணிப்பது
கடினமாக இருக்கிறது
இந்த குகைக்குள் பயணிப்பது
கடினமாக இருக்கிறது
இந்த இருளுக்குள் பயணிப்பது
எளிமையாக இருக்கிறது
எதுவும் செய்யாமல்
மதம் பிடித்த
யானையானது
என் நிழல்
ஒன்றும் செய்யாமல்
பார்த்துக் கொண்டிருந்தேன்
அதுவும் எதுவும் செய்யாமல்
நிழலாகி விட்டது
Tuesday, March 11, 2014
அனுபவ சித்தனின் குறிப்புகள்
1083-
சமாதியின் மீது
விழுந்த பூக்கள்
நகர்ந்து நகர்ந்து
இடம் மாறுகின்றன
1084-
என்னை வெல்ல
நான்
தோற்க வேண்டும்
1085-
விரட்டிய கையில்
இருந்தது
பறவைக்கான சோறு
1086-
என் கதையில்
பெரிதாக
எதுவும் இல்லை
சிறிதாக
நானிருக்கிறேன்
1087-
பசித்திருப்பவர்கள்
வயிற்றிலிருந்தே
ஆயுதம் எடுப்பார்கள்
1088-
உறைந்து போயிருக்கிறேன்
மீண்டு வர
உத்தேசமில்லை
Sunday, March 09, 2014
இரண்டு மெழுகுவத்திகள்
இரண்டு மெழுகுவத்திகள்
தம் சுடரில் அசையும்
அழகு பற்றி பேசின
தம் நிழல்கள் தாளலயத்துடன்
நடனமிடுவதை ரசித்தன
உரையாடல்
வெளிச்சம் சார்ந்தே நீண்டது
இரண்டும்
கடைசி வரை
தாம் உருகுவது பற்றி
பேசிக் கொள்ளவே இல்லை
Saturday, March 08, 2014
வேறு பொருட்கள்
வேறு பொருட்கள் இல்லை
இந்த அறையில்
நான்தான் இருக்கிறேன்
ஒரே ஒரு
பொருளைப் போல
Friday, March 07, 2014
ஒற்றைத் தீக்குச்சி
1-
உரசினால்
இழந்து விடுவேன்
அப்படியே இருக்கட்டும்
ஒற்றைத் தீக்குச்சி
2-
அடுக்கி வைத்த
கேள்விகளைத்
தள்ளி விட்டேன்
கலைந்து கிடந்தன
பதில்கள்
Wednesday, March 05, 2014
முடிப்பதற்குள்
சொல்லி முடிப்பதற்குள்
மறைந்து போனது
பனித்துளி
மீதிச் சொற்களை
புல்லின் அடியில்
கொட்டிவிட்டு வந்தேன்
Sunday, March 02, 2014
கண்ணாடிப் பெட்டி
கண்ணாடிப் பெட்டிக்குள்
படுத்திருக்கும் அப்பாவை
சத்தம் போட்டு
எழுப்புகிறது குழந்தை
அப்பாவுக்கு கேட்கிறது
ஆனாலும்
அப்படியே இருக்கிறார்
Saturday, March 01, 2014
அழைத்துப் போனது
அலை வந்து
இழுத்துப் போனது
என்று சொல்கிறார்கள்
எல்லோரும்
அவள் இருந்திருந்தால்
சொல்லி இருப்பாள்
அலை வந்து
அழைத்துப் போனது என்று
அனுபவ சித்தனின் குறிப்புகள்
1076-
வெகு ஆழத்தில்
தியானம் செய்யும்
கனவின் ஆழத்தில்
இருக்கிறேன் நான்
1077-
பயம்
துரத்திக்கொண்டே இருக்கிறது
நல்லது
ஓடிக்கொண்டே இரு
1078-
என் பிரார்த்தனை தட்டில்
பாவங்கள்
ஆனாலும்
கடவுள் முன் நிற்கிறேன்
1079-
நாளை நான்
கிடைக்கக் கூடும்
அதற்கு இன்று
தொலைய வேண்டும்
1080-
இந்த வாக்கியம்
உண்மையாக எளிமையாக
இருந்தது
அழகாக்கியபோதுதான்
பொய்யும் பூதமும்
சேர்ந்து விட்டது
1081-
தட்டி எழுப்புகிறது
கேள்வி
நானே பதிலாகிறேன்
1082-
நிராயுதபாணி
நெஞ்சில் ஒலிக்கிறது
நானே ஆயுதம்
Thursday, February 27, 2014
வேட்டை நாய்கள்
எல்லோரையும்
வேட்டை நாய்களாக்கி விட்டோம்
மனம் வருந்திச்
சொன்னார் பெரியவர்
என் கண்களிலிருந்த
வேட்டை நாய்
வெளியே வந்து
அவர் கால்களை
நக்கிக் கொண்டிருந்தது
சாவி துவாரத்தில்
சாவி துவாரத்தில்
இறந்து கிடக்கிறது
ஒரு கண்
அதன் இமைகள்
துடித்தபடி
Friday, February 21, 2014
நகரும் கதை
1-
அதர்மம்
நடிக்கிறது
தர்மம்
பார்க்கிறது
2-
நீ எப்போது
சைத்தான் ஆனாய்
இரக்க மனதை
இறக்கி வைத்தபோது
3-
எழுத்தில்
ஓய்வெடுக்கிறேன்
என்றாலும் எழுதுகிறேன்
4-
கதை நகர்வதைப்
பார்த்துக்கொண்டிருந்தேன்
நகர்
வின்
அழகில் மயங்கி
எழுதுவதை
மறந்து விட்டேன்
5-
பேராசையை
மனதிற்கு ஊட்டிவிட்டு
அதை பசியுடனேயே இருக்க
பழகி வைத்திருக்கிறோம்
Thursday, February 20, 2014
இழு
இழுக்க முடியுமா
இந்த தேரை
முடியும்
இழு
தேரே சொன்னது
Tuesday, February 18, 2014
கேட்டுத் துளைக்கிறாள் மான்யா
காட்டில் கொண்டு போய்
விட்டுவிடலாமா
சர்க்கஸ் சிங்கத்தை
பார்க்க விடாமல்
கேட்டுத் துளைக்கிறாள் மான்யா
மறுநாள்
அவள் வரைந்த வனத்தில்
அந்த சிங்கம்
உலவிக்கொண்டிருந்தது
Sunday, February 16, 2014
கொம்பு
எனக்குத் தலையில்
கொம்பு முளைத்திருக்கிறது
என்கிறீர்கள் நீங்கள்
உங்களுக்குத் தலையில்
கொம்பு முளைத்திருக்கிறது
என்கிறேன் நான்
இருவரும் இல்லை
என்கிறோம்
கண்ணாடியில்
பார்க்கிறோம்
கண்ணாடியில்
கொம்பு முளைத்திருக்கிறது
உணர்வின் மையம்
எழுதினேன்
சித்திரம் கிடைத்தது
வரைந்தேன்
சித்திரம் கிடைத்தது
ஒன்று போலில்லை
மற்றொன்று
ஆனாலும்
உணர்வின் மையம் ஒன்று
Wednesday, January 29, 2014
ஒரு பகல் நேரத்தில்
1-
முழு
கடலையும்
மறைக்கிறான்
சுண்டல்
விற்கும்
சிறுவன்
2-
நதி
கண்களில்
வழிகிறது
மணல்
லாரிகளில்
நீந்துகின்றன
மீனகள்
3-
எனது
காட்சி
இன்னும்
வரவில்லை
திரை
இறக்குபவனை
பதட்டத்துடன்
பார்க்கிறேன்
4-
இது
ஒரிஜினல்
ரத்த்த்தில்
வரைந்த
ஓவியம்
இதற்கு
ரத்தம்
தந்தவர்
பக்கத்தில்
இறந்து
கிடக்கிறார்
பாருங்கள்
அவரை
அடக்கம்
செய்யவாவது
இந்த
ஓவியத்தை
நீங்கள்
வாங்கித்தான்
ஆக
வேண்டும்
5-
காட்சிகள்
இல்லாத
ஒரு
பகல்
நேரத்தில்
மிகத்தனியே
குலுங்கி
குலுங்கி
அழுகிறான்
சர்க்கஸ்
கோமாளி
தன்
கைகளைத்
தட்டியபடி
6-
நூலகம்
பசி
மறக்க
புத்தகம்
7-
பாலின் ஏடென
படிந்து கிடக்கிறது மெளனம்
நீக்கி
பருகப் பார்க்கிறேன்
உள் உறைந்த சொற்களை
பார்க்கிறது
சொல்லில் நீந்திய
மீனை எடுத்து
வாக்கியத்தில் போட்டேன்
அது நீந்தி நீந்தி
மொழியின் பரப்புக்குப்
போகப் பார்க்கிறது
Thursday, January 23, 2014
விடுதலை அடைந்தேன்
தற்கொலை செய்து கொள்ள
கயிறை வரைந்தேன்
கயிறை அழித்து
விடுதலை அடைந்தேன்
Monday, January 20, 2014
கதை சொன்ன போது
கனவு விழித்தபடி
கதை சொன்ன போது
நான் உறங்கிக்கொண்டிருந்தேன்
கனவு உறங்கியபடி
கதை சொன்ன போது
நான் விழித்துக்கொண்டிருந்தேன்
நீளம்
வாக்கியத்தின் நீளத்திற்கு
போய் வருகிறது ஊஞ்சல்
ஒவ்வொரு முறை
போய் வரும் போதும்
புது புது வாக்கியங்களை
உருவாக்கிக் கொள்கிறது
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)