Saturday, March 01, 2014

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1076-
வெகு ஆழத்தில்
தியானம் செய்யும்
கனவின் ஆழத்தில்
இருக்கிறேன் நான்

1077-
பயம் 
துரத்திக்கொண்டே இருக்கிறது 

நல்லது 
ஓடிக்கொண்டே இரு

1078-
என் பிரார்த்தனை தட்டில் 
பாவங்கள்
ஆனாலும் 
கடவுள் முன் நிற்கிறேன்

1079-
நாளை நான் 
கிடைக்கக் கூடும் 
அதற்கு இன்று 
தொலைய வேண்டும்

1080-
இந்த வாக்கியம் 
உண்மையாக எளிமையாக 
இருந்தது
அழகாக்கியபோதுதான் 
பொய்யும் பூதமும் 
சேர்ந்து விட்டது

1081-
தட்டி எழுப்புகிறது 
கேள்வி
நானே பதிலாகிறேன்

1082-
நிராயுதபாணி 
நெஞ்சில் ஒலிக்கிறது 
நானே ஆயுதம்





Thursday, February 27, 2014

வேட்டை நாய்கள்

எல்லோரையும்
வேட்டை நாய்களாக்கி விட்டோம்
மனம் வருந்திச்
சொன்னார் பெரியவர்
என் கண்களிலிருந்த
வேட்டை நாய்
வெளியே வந்து
அவர் கால்களை
நக்கிக் கொண்டிருந்தது

சாவி துவாரத்தில்

சாவி துவாரத்தில்
இறந்து கிடக்கிறது
ஒரு கண்
அதன் இமைகள்
துடித்தபடி

Friday, February 21, 2014

நகரும் கதை

1-
அதர்மம் 
நடிக்கிறது
தர்மம் 
பார்க்கிறது

2-
நீ எப்போது 
சைத்தான் ஆனாய் 

இரக்க மனதை 
இறக்கி வைத்தபோது 

3-
எழுத்தில் 
ஓய்வெடுக்கிறேன்
என்றாலும் எழுதுகிறேன்

4-
கதை நகர்வதைப் 
பார்த்துக்கொண்டிருந்தேன்
நகர்வின் 
அழகில் மயங்கி 
எழுதுவதை 
மறந்து விட்டேன்

5-
பேராசையை 
மனதிற்கு ஊட்டிவிட்டு 
அதை பசியுடனேயே இருக்க 
பழகி வைத்திருக்கிறோம்



Thursday, February 20, 2014

இழு

இழுக்க முடியுமா 
இந்த தேரை 

முடியும் 
இழு 
தேரே சொன்னது

Tuesday, February 18, 2014

கேட்டுத் துளைக்கிறாள் மான்யா

காட்டில் கொண்டு போய் 
விட்டுவிடலாமா 
சர்க்கஸ் சிங்கத்தை 
பார்க்க விடாமல் 
கேட்டுத் துளைக்கிறாள் மான்யா

மறுநாள் 
அவள் வரைந்த வனத்தில் 
அந்த சிங்கம் 
உலவிக்கொண்டிருந்தது

Sunday, February 16, 2014

கொம்பு

எனக்குத் தலையில் 
கொம்பு முளைத்திருக்கிறது 
என்கிறீர்கள் நீங்கள் 

உங்களுக்குத் தலையில் 
கொம்பு முளைத்திருக்கிறது 
என்கிறேன் நான் 

இருவரும் இல்லை 
என்கிறோம் 

கண்ணாடியில் 
பார்க்கிறோம் 

கண்ணாடியில் 
கொம்பு முளைத்திருக்கிறது 

உணர்வின் மையம்

எழுதினேன் 
சித்திரம் கிடைத்தது 

வரைந்தேன் 
சித்திரம் கிடைத்தது 

ஒன்று போலில்லை 
மற்றொன்று 

ஆனாலும் 
உணர்வின் மையம் ஒன்று

Wednesday, January 29, 2014

ஒரு பகல் நேரத்தில்

1-

முழு கடலையும்
மறைக்கிறான்
சுண்டல் விற்கும் சிறுவன்

2-

நதி கண்களில்
வழிகிறது
மணல் லாரிகளில்
நீந்துகின்றன மீனகள்

3-

எனது காட்சி
இன்னும் வரவில்லை
திரை இறக்குபவனை
பதட்டத்துடன் பார்க்கிறேன்

4-

இது ஒரிஜினல் ரத்த்த்தில்
வரைந்த ஓவியம்
இதற்கு ரத்தம் தந்தவர்
பக்கத்தில்
இறந்து கிடக்கிறார் பாருங்கள்
அவரை அடக்கம் செய்யவாவது
இந்த ஓவியத்தை
நீங்கள் வாங்கித்தான்
ஆக வேண்டும்

5-

காட்சிகள் இல்லாத
ஒரு பகல் நேரத்தில்
மிகத்தனியே
குலுங்கி குலுங்கி அழுகிறான்
சர்க்கஸ் கோமாளி
தன் கைகளைத் தட்டியபடி

6-

நூலகம்
பசி மறக்க
புத்தகம்

7-

பாலின் ஏடென
படிந்து கிடக்கிறது மெளனம்
நீக்கி
பருகப் பார்க்கிறேன்
உள் உறைந்த சொற்களை


பார்க்கிறது

சொல்லில் நீந்திய 
மீனை எடுத்து 
வாக்கியத்தில் போட்டேன் 
அது நீந்தி நீந்தி 
மொழியின் பரப்புக்குப் 
போகப் பார்க்கிறது

Thursday, January 23, 2014

விடுதலை அடைந்தேன்

தற்கொலை செய்து கொள்ள 
கயிறை வரைந்தேன் 
கயிறை அழித்து 
விடுதலை அடைந்தேன்

Monday, January 20, 2014

கதை சொன்ன போது

கனவு விழித்தபடி 
கதை சொன்ன போது 
நான் உறங்கிக்கொண்டிருந்தேன் 
கனவு உறங்கியபடி 
கதை சொன்ன போது 
நான் விழித்துக்கொண்டிருந்தேன் 

நீளம்

வாக்கியத்தின் நீளத்திற்கு 
போய் வருகிறது ஊஞ்சல் 
ஒவ்வொரு முறை 
போய் வரும் போதும் 
புது புது வாக்கியங்களை 
உருவாக்கிக் கொள்கிறது 

Sunday, January 19, 2014

உங்களுக்குத் தெரிகிறதா

1-
அன்பின் சுடர் அசைகிறது
என்று எழுதிய வரியை
நீங்கள் உடனே
அழித்து விடலாம்
உங்களால் ஊதி
அணைக்க முடியாது
2-
வெறும் கண்களை வரைந்து 
கடவுள் பிறந்து விட்டார் 
என்கிறாள் மான்யா
ஒரு கணப் பார்வையில் 
இமைகள் அசைவது 
அவளுக்குத் தெரிகிறது 
எனக்குத் தெரிகிறது 
உங்களுக்குத் தெரிகிறதா 
3-
நெடிதுயர்ந்து
நிற்கிறது மலை
உச்சியில்
என் முகச்சாயல் உள்ள
ஒருவன் நிற்கிறான்
பறவையின் பிரமிப்புடன்
அவனை அடைய வேண்டும்
ஏறிக்கொண்டிருக்கிறேன்
4-
குழந்தை போலிருந்த அவனை
பைத்தியக்காரன் எனச்சொல்லி
கைவிலங்கிட்டு
அழைத்துச் சென்றார்கள்
அவன் சத்தம்போட்டு
சிரித்தபடி சொன்னான்
விலங்குக்கு வெளியே
அவர்கள் பத்திரமாக
இருக்கிறார்கள்
உள்ளே நான்
சுதந்திரமாக இருக்கிறேன்
5-
வழிகாட்டி பலகை
காற்றில் ஆடி ஆடி
திசைகளை
மாற்றிக்கொண்டிருக்கிறது
பயணி நடக்கிறான்
பாடலை முணுமுணுத்தபடி
கண்களால்
வழிகளைத் தொட்டபடி
6-
பெரிதாகப் பேசுகிறீர்களே
கடலின் சேறு
ஒட்டியதுண்டா
உங்கள் மனதில்
7-
பொய்களில்
மறைத்து வைத்திருக்கும்
கத்திகளில்
உண்மையான வன்மம்
இருக்கிறது
8-
வெட்டப்பட்ட கனவிலிருந்து
கசியும் குருதியைத்
துடைக்கிறான் அவன்
இரவின் விரல்களிலும்
துளிகள் ஒட்டிக்கொண்டு
உதிர்ந்து விடாமல்
பேசுகின்றன
வலியின் கதைகளை
9-
உங்கள் மேல்தான்
ஊர்ந்துகொண்டிருக்கிறேன்
காற்றென
ஏதேனும்
தொந்திரவு நிகழுமெனில்
மாறுவேன்
பாம்பென
10-
என்னிடம்
மிச்சமிருப்பதும்
நான்தான்

(குங்குமம் பொங்கல் சிறப்பிதழில்-(20.01.2014) வெளியான கவிதைகள்)


Tuesday, January 14, 2014

இருளின் வண்ணம்

இரவை அழகாக 
வரைந்து காட்டுகிறது கனவு 
அதற்கு இந்த 
இருளின் வண்ணம் 
இன்னும் பொருந்துகிறது

Monday, January 13, 2014

அழுவதை நிறுத்து

வலியை வரையும்
வண்ணமா கண்ணீர்
அழுவதை நிறுத்து
உன் முகம்
சித்திரமானது போதும் 

தவளைகள் சத்தம்

தவளைகள் சத்தம் 
இரவின் மேல் 
சொற்களை அடுக்குகிறது 

சொற்கள் 
ஒரு  கனவாகி 
சிறகு விரித்து 
பறந்து வந்து 
மனதில் அமர்ந்து 
இளைப்பாறுகிறது 

உணர்ந்தபடி 
உறங்கிக் கொண்டிருக்கிறேன் 

விடிய இன்னும் 
நேரமிருக்கிறது 

Sunday, January 12, 2014

என்ன செய்ய

பாரமாகவே உணர்கிறேன் 
என்ன செய்ய 

முதலில் 
மனதில் சுமந்து செல்லும் 
சவப்பெட்டியை 
இறக்கி வையுங்கள்

Thursday, January 09, 2014

ஏன் கொன்றீர்கள்

அதுவாக
அமைதியாக
போய்க் கொண்டிருந்தது
அதை ஏன் கொன்றீர்கள்

என்ன கேள்வி இது
விஷப்பாம்பு
விட்டால் கடித்து விடும்
பிறகு மரணம்தான்

அவ்வளவு பயமா
உங்களுக்கு

ஆமாம்

அப்படி என்றால்
முதலில் நீங்கள்
உங்கள் பயத்தைதான்
கொன்றிருக்க வேண்டும்

பாம்பை அல்ல

சித்திரத்திலிருந்து

பழுதடைந்த சித்திரத்திலிருந்து 
கோடுகள் உதிர்கின்றன 
எந்தக் கோட்டிற்கும் 
வரைந்தவரின் பெயர் 
நினைவில் இல்லை

Saturday, January 04, 2014

எல்லோரும்

உடையவில்லை 
மிதந்து கொண்டிருக்கிறது 
நீர்க்குமிழி 
பார்க்கும் எல்லோரும் 
உடைந்து கொண்டிருக்கிறார்கள் 

Friday, January 03, 2014

புள்ளியில்

நீ கவனம்
குவித்த புள்ளியில்
மௌனம் பூத்திருந்தது
பறித்துக்கொண்டு
திரும்பி விட்டேன் 

ஒரு மழை நாளில்

ஒரு மழை நாளில்
அழுவது
இதமாக இருக்கிறது.
அது மழை போலவே
நிம்மதி தருவதாகவும்
இருக்கிறது.

மற்றவர்

பொய் பேச வராது
அதனால்
அமைதியாகி விடுவேன்
என்றார் ஒருவர்

என் அமைதி
அப்படி அல்ல
அதுதான் பொய்கள்
தயாரித்து கொடுக்கும்
பின் பேசுவேன்
என்றார் மற்றவர் 

Thursday, January 02, 2014

தேநீர் வேளை

தேநீர் வேளையில்
கண்ணீரின் அகதி நான் 
என்ற வரி வந்தது 
தேநீரும் 
உப்புக் கரித்தது
போலிருந்தது

ஆழ்மனதில்

ஆழ்மனதில் 
குத்தி இருந்த 
முள் ஒன்றை 
எடுத்து விட்டேன் 
சொட்டிக் கொண்டிருக்கும் 
குருதியைத்தான் 
நிறுத்த முடியவில்லை 

Tuesday, December 31, 2013

புல்லின் காதில்

புல்லின் காதில் 
ரகசியமாய் 
அன்பை சொன்னேன் 
அமைதியாக
கேட்டுக் கொண்டது 
அமைதியில் 
அன்பிருந்தது

Sunday, December 29, 2013

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1070-

வேடத்தைக் 
கலைத்து விட்டேன்
வண்ணங்கள் 
தங்கி விட்டன

1071-

சொல்லப்படுகிற கதைகளில் 
சொல்லப்படாத கதை 
பயணிக்கவே செய்கிறது

1072-

பெயரைக் குலுக்கினேன்
பெயர்கள் 
உதிர்ந்தன

1073-

மனதின் 
மெளன வெளிகளில் 
மிதந்து போக வேண்டும்

1074-

கூண்டோடு 
பறக்குமா பறவை 
வந்த வரி 
பறந்து போனது 
கூண்டை விட்டு 

1075-

மனதின் அடியில் 
மறைத்து வைத்தேன் 
மனதை வெளியில் 
திறந்து வைத்தேன்

கதவுகள்

சில கதவுகள் 
பூட்டியே இருக்கின்றன 

நாம் காத்துக்கொண்டே 
இருக்கிறோம் 

அவர்கள் வேறு வழிகளில் 
போய் வந்துகொண்டிருக்கிறார்கள்

முடியாது

வீங்கிப் பெருத்த 
உங்கள் கேள்விக்கு 
என்னால் 
சிகிச்சை செய்யவும் 
முடியாது 
பதில் தரவும் 
முடியாது

தற்கொலை செய்து கொள்ளப்போகும் ஒருவன்

தற்கொலை செய்து கொள்ளப்போகும்
ஒருவனை
வரைந்து முடித்தேன்
மீதி இருந்த வண்ணத்தில்
அவன் முடிவை மாற்றிக்கொண்டு
திரும்ப வேண்டும் என்ற
பிரார்த்தனை கவிதையை
எழுதி வைத்தேன் 

Saturday, December 28, 2013

இரு முனைகள்

கேள்வியின் 
இரு முனைகளிலும் 
நான்தான் 
கடந்து வருகையில் 
யாரேனும் ஒருவர் 
கண்டெடுக்கலாம் 
பதில்களை 

Friday, December 27, 2013

முதலில்/இப்போது

முதலில்
நான் இல்லை

இப்போது
நான் இருக்கிறேன்

இப்போது
நான் இல்லை

முதலில்
நான் இருந்தேன் 

Sunday, December 15, 2013

நான் மட்டுமே உள்ள அறை

நான் மட்டுமே 
உள்ள அறையில் 
என்ற வரியை 
மனதால் மட்டுமே 
வாசியுங்கள் 
நீங்கள் சத்தம் போட்டு 
வாசிக்கையில் 
வேறு சிலரும் இருப்பது 
போன்ற தொனியை 
அது தந்து விடக் கூடும்

Wednesday, December 11, 2013

நடை நுட்பம்

சந்திக்க விரும்பாமல் 
வேறு வழியில் 
திரும்பி விட்டீர்கள் 
நேற்று அந்த வழியில் 
இதே நடை நுட்பத்தைத்தான் 
பயன்படுத்தினீர்கள்

Tuesday, December 10, 2013

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1061-

சற்றே ஓய்வெடு
சொற்கள்
தியானம் செய்கின்றன

1062-

என் பெயரில் 
இப்போது நானில்லை 
புனைப்பெயரில் 
ஒளிந்திருக்கிறேன்

1063-

குதிரைகள் நிற்கவில்லை 
கனவில் ஓடுகின்றன 
வரிகளுடன் 
நானும் ஓடுகிறேன்

1064-

அரச வேடம் 
அழகாக இருக்கிறது 
அதற்காக 
வாடகை கிரீடத்தை 
வைத்துக் கொண்டே 
இருக்க முடியாது

1065-

ஆழ்மனதில் 
வீசிய கல் 
மிதந்து மிதந்து 
எதையோ தேடும்

1066-

ஒட்டக மனநிலை 
எனக்குண்டு
பாலைவனம் கடப்பது 
கடினமன்று

1067-

நான் மட்டுமே 
வந்திருக்கிறேன் 
எதற்கு என்னை 
சுற்றிப் பார்த்துக் கொண்டே 
இருக்கிறீர்கள் 

1068-

இருளும் மழையுமாக 
இருக்கிறதே 
எப்படிப் போவீர்கள் 

பிரபஞ்சத்தின் 
கருணை கொண்டு 

1069-

கிளை உலுக்க 
உதிர்கின்றன சொற்கள் 
ஒவ்வொன்றும் 
வரியின் ருசியோடு 
இனிக்கிறது









Wednesday, December 04, 2013

தியானம்

அம்மணத்தில் அமர்ந்து 
தியானம் செய்கிறேன் 
ஆடைகளின் பாரம் 
கணக்கவே செய்கிறது

Sunday, December 01, 2013

என்ன செய்யலாம்

கொலைகாரர்கள் எல்லோரும் 
தப்பித்து விட்டார்கள் 
என்ன செய்யலாம் 

வா போய் 
மது அருந்தலாம்

Saturday, November 30, 2013

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1056-

இன்னும் சொல்ல வேண்டும் 
சொற்கள் இல்லை 
நானிருக்கிறேன்

1057-

பெய்யாத மழையும் 
நனைத்தது

1058-

நினைவுகளில் தற்கொலை 
செய்துகொண்டிருந்த போதே 
அவனை நீங்கள் 
காப்பாற்றி இருக்கலாம்

1059-

குருதியில் வரைந்த 
ஓவியத்தைப் பற்றிய 
குறிப்புகள் 
அதன் கோடுகளிலேயே 
இருந்தன


1060-

ஊதி 
அணைக்கப் பார்த்து 
தோற்கிறீர்கள் 
கனவுகளில் 
அசைகிறது சுடர்


Thursday, November 28, 2013

உடைதல்

உடைந்து கொண்டிருக்கிறேன் 
நீங்கள் துண்டுகளை 
எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் 
நான் என்னை 
எண்ணிக் கொண்டிருக்கிறேன் 

Monday, November 18, 2013

மறு முறை

தலைகீழாய் 
தொங்குகிறேனா
 
நேராய் 
நிற்கிறேனா 

கேள்விகளுக்கிடையில் 
ஒரு முறை 
வெளவாலாய் பறந்தேன் 

மறு முறை 
நானாய் நடந்தேன்

Tuesday, November 12, 2013

இரு வேறு ஓவியங்கள்

இதுதான் நான் என்று
நான் வரைவதும்
இதுதான் நீங்கள் என்று
நீங்கள் வரைவதும்
ஒரே வண்ணத்தில்
வரையப்பட்ட
இரு வேறு ஓவியங்கள்

Sunday, November 10, 2013

இந்தக் கதையில்

எழுதிக் கொண்டிருக்கும் 
இந்தக் கதையில் 
எவ்வளவோ கதாபாத்திரங்கள் 

நான் அவர்களுக்குப் 
புதியவனாகத் தெரிகிறேன் 

அவர்கள் எனக்கு 
புதியவர்களாகத் தெரிகிறார்கள் 

பக்கங்கள் 
கடந்து போகையில் 
எல்லோரும் பழகி விடுவோம்

Friday, November 08, 2013

வாழ்க்கைக்கு வாருங்கள்

பார்க்க கனவைப் போல இருந்தார் நண்பர் சவப்பெட்டியில் எழுப்பி வாழ்க்கைக்கு வாருங்கள் என்று சொல்லத் தோன்றியது

சாயல்

மிதந்த யானை 
பட்டாம்பூச்சியின் சாயல் 
கொண்டிருந்தது

பதில்

உங்கள் வேட்டையை 
சுவையாக்கியது 
மான் கறி 
தாய் தேடும் குட்டிக்கு 
என்ன பதில் 
வைத்திருக்கிறீர்கள்

Sunday, November 03, 2013

யாரும் கேட்கவில்லை

யாரும் கேட்கவில்லை 
அவனுக்குத் தெரியும் 
ஆனாலும் வாசிக்கிறான் 
அவன் புல்லாங்குழலில் 
ரயில் போகிறது 
ரயிலில் 
அவன் போகிறான்

என் ஒப்பனை

உங்கள் கண்களைப் பார்த்து 
என் ஒப்பனையை 
சரி செய்து கொண்டேன் 
இப்போதும் உங்களால்
கண்டுபிடிக்க முடியவில்லை

Saturday, November 02, 2013

தப்பித்தலின் வியூகம்

அவன் தப்பித்து 
வந்து விட்டான் 
பிடியுங்கள் என்றான் 
தப்பித்து வந்தவன் 
யாரைப் பிடிப்பது 
என்ற குழப்பத்தில் 
தப்பித்து ஓடினேன் 
என்னை விரட்டியவனிடமிருந்து

என் தாழ்வாரத்தில்

என் சுயநலச் சுவரில் 
காகம் எச்சமிட்டுப் போனது 
காகத்திற்கு நன்றி சொல்லி 
சுவரை இடித்து விட்டேன் 
இப்போது என் தாழ்வாரத்தில் 
பறவைகள் தானியங்கள் 
எடுத்துப் போகின்றன   

Friday, November 01, 2013

ஒளி வட்டம்

தன் தலைக்குப் 
பின்னால் இருந்த 
ஒளி வட்டத்தை 
யாரோ திருடிவிட்டார்கள் 
என்றார் நண்பர்

உங்கள் அறிவின் வெளிச்சத்தால் 
கண்டுபிடிக்க முடியாதா 
என்றேன்

இருளடைந்த கண்களால் 
பார்த்தபடி 
எதுவும் சொல்லாமல் 
நடந்து போனார்