Friday, July 31, 2009

கால்பந்து ஆடிய தேவதை

நீருக்குள்
கால்பந்து ஆடிய தேவதை
விளையாட வரச் சொன்னாள்

நீச்சல் தெரியாது என்றேன்
வருத்தத்துடன்

ஆடத் தெரியுமா என்றாள்
இல்லை என்றேன்

ஒன்றைக் கற்றுக் கொள்
அது இன்னொன்றை
சொல்லித் தரும் என்றபடி
பந்தை உதைத்து
மறைந்து போனாள்

நதிக்கரை சிலையாய் அமர்ந்திருந்த
என்னை கலைத்தது
குளித்துக் கரையேறிய
சிறுமியின் சிரிப்பு

அவள் கண்களில்
தேவதையின் புன்னகை

Thursday, July 30, 2009

பிறகு பேசுவோம்

பயன்பாடு பற்றி
பிறகு பேசுவோம்
துப்பாக்கியின்
விசை மீதும்
திசை மீதும்
இருக்கட்டும் கவனம்

இரண்டு எறும்புகள்

நான் இளைப்பாறிய
நிழலின் அருகில்
கவலையுடன் பேசிக்கொண்டிருந்தன
இரண்டு எறும்புகள்
நாளை வெட்டப்போகும்
இந்த மரம் பற்றி

சொற்கள்

அருகில் உள்ள சொற்கள்
உற்றுப் பார்க்கின்றன
எனக்குத் தெரியாத கவிதையை

Tuesday, July 28, 2009

குதிரை

கனவில் அமர்ந்து
குதிரை வரைந்து கொண்டிருந்தேன்
முடியும் வரை காத்திருந்து
ஓடிப்போனது குதிரை
கனவை எடுத்துக்கொண்டு
என்னைப் போட்டுவிட்டு

(ஆனந்த விகடன்,2.09.09 இதழில்
பிரசுரமானது)

Sunday, July 26, 2009

மழை வாசம்

செல்லமாய் கோபித்து
குழந்தை மேல்
படிந்துள்ள மழையை
துடைத்தெடுத்து
வேறு உடை எடுக்கப்
போகிறாள் அம்மா
ஈர துணி முகர்ந்து
மழை வாசம்
பிடிக்கிறது குழந்தை

Thursday, July 23, 2009

ஒரு வரி

யாரும் பக்கத்தில் இல்லை
வண்ணதாசனின் இந்த வரியை
நான் பார்த்துக் கொண்டிருந்தபோது
அவரும் பார்த்துக்கொண்டிருந்தார் என்னை

தனிமை நட்பாகிறது

தனிமை நட்பாகிறது என்ற
இந்த கவிதையை
நீங்கள் வாசிக்கும்போது
நட்பாகி விடுகிறீர்கள்
கவிதைக்கும் எனக்கும்

ஒன்றுதான்

உங்கள் புன்னகையில்
இருக்கும் ஒப்பனையும்
என் ஒப்பனையில்
இருக்கும் பொய்யும்
ஒன்றுதான்

Tuesday, July 21, 2009

வெற்றிடத்தில் ஒரு குறிப்பு

அந்தக் கதையில்
நிறைய அறைகள் இருந்தன
ஒவ்வொருவராகப் புகுந்து
வெளியேறிக் கொண்டிருந்தனர்

அந்தக் கதையில்
நிறைய ஜன்னல்கள் இருந்தன
காற்றும் இசையும்
உள் நிறைந்து
வெளி வந்தது

அந்தக் கதையில்
நிறைய மரங்கள் இருந்தன
அணிலும் பறவைகளும் விளையாடின

அந்தக் கதையில்
விதைகள் நடப்பட்டிருந்தது
படிக்கப் படிக்க
பூத்துக் குலுங்கியது

அந்தக் கதையில்
மழை பெய்தது
வானவில் தென்பட்டது
கடவுள் குழந்தைகளோடு
பேசிக்கொண்டிருந்தார்

அந்தக் கதையில்
வாசிப்புத் தன்மை
கடைசி பக்கத்திலிருந்தும்
படிப்பதுபோல் அமைந்திருந்தது

முன்னிருந்தும் பின்னிருந்தும்
படித்துக் கொண்டே வந்தவர்கள்
சந்தித்துக் கொண்டார்கள்

வெற்றிடமான பக்கங்களில்
அமைதியாக உங்களைப் படியுங்கள்
என்ற குறிப்பு மட்டும்
காணப்பட்டது

Saturday, July 11, 2009

பெய்யும் கணங்களில்...

ஜன்னலோரம்
கவனிப்பாரற்று ஹார்மோனியம்

பெய்யும் கணங்களில்
ஹார்மோனியம் கேட்கிறது
மழையின் ஓசை

மழை கேட்கிறது
ஹார்மோனியத்தின் இசை

Tuesday, July 07, 2009

குழந்தை அருவி

தான் வரைந்ததைக் காட்டி
கேட்கிறாள் சிறுமி

அருவி என்கிறார் அப்பா

ஓவியத்தை மேல்கீழாக்கி
என்ன என்கிறாள்

இது தப்பு என்கிறார்

தலைகீழாய் யோகா
செய்யும் அருவி என்கிறாள்
சிரித்தபடி

தூக்கி கொஞ்சுகிறார் தந்தை
குழந்தை அருவியை

(ஜெஸிக்காவுக்கு)

*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது

நட்பும் வரிகளும்

அவசரமாய்ப் போகிறேன்
அப்புறம் பேசுவோம்
என்றார் ஒரு நண்பர்
இம்முறையும்

பிறகு பார்க்கலாம் என
அலைபேசியை அணைத்தாள்
ஒரு தோழி

கடிதப் போக்குவரத்தை
நிறுத்திவிட்ட நண்பர்
ஈமெயிலில் தென்படுவதும்
குறைந்து போயிற்று

கோயிலில் பழக்கமான புது நண்பர்
பக்தி பரவசத்தில்
சில வார்த்தைகளோடு
சென்று விடுகிறார்

தொலைகாட்சியில் செய்தி வாசிக்கும்
நண்பனின் புன்னகையை
செய்தி முடியும் நேரத்தில்
அரிதாகப் பார்க்க முடிகிறது

குவிந்து கிடக்கின்றன மனதில்
நட்பும் வரிகளும்

தனிமையோடு நடக்கிறது
கபடி விளையாட்டு

யார் மீதும்
வருத்தம் வைக்க
விரும்பவில்லை

எப்போதும் போல்
நிதானமாய்ப் பார்த்து
தலை அசைத்து
நலம் விசாரிக்கிறது
பால்கனி செடி

இப்போது அதில்
புதிதாய்
ஒற்றைப்பூ

Saturday, July 04, 2009

நா...ம்

நாம் பிரிந்ததற்கு
பெரிய காரணம்
எதுவுமில்லை

சேரலாம் எனும்போது
அதிகமாகி இருந்தது
காரணங்களின் கூட்டுத்தொகை

கதை சொல்லி

பாட்டியை எல்லோருக்கும்
கதை சொல்லியாகத்தான் தெரியும்

வாயைத் திறந்தால்
கதைகளாகக் கொட்டும்

ஒவ்வொரு முறையும்
விடுபடும் புதுக்கதை

ஊரில் பெரியவர் முதல்
சிறியவர் வரை
பாட்டி கதைக்குள் அடக்கம்

படிப்பறிவில்லாத பாட்டியிடமிருந்து
எப்படி வருகின்றன கதைகள்
என்ற பிரமிப்பு ஊருக்குள் உண்டு

திரும்ப நினைக்கையில்
பாட்டி சொன்ன கதை
அட்சரம் பிசகாமல் கண்முன் விரியும்

பாட்டியின் கதைகளில்
மழை பெய்யும்

கதையில் வந்த விலங்குகள்
குழந்தைகளுக்கு நட்பாயின்

ஒரு மழைநாளில்
கதை சொல்லி பாட்டி
படுத்த படுக்கையானாள்

ஊரை நிசப்தமாக்கிவிட்டு
முடங்கிப்போனாள்

பாட்டியின் கண்களில்
தேங்கி நின்றது
சொல்ல முடியாத கதை

ஊர்ப் பெரியவரை
அருகே வரச் சொல்லி
பாட்டி முணுமுணுத்ததை
பிறகு அவர்
எல்லோரிடமும் சொன்னார்

எனக்கு எமன்
கதை சொல்லிக்கிட்டிருக்கான்
போங்க பிறகு பாப்போம்

Friday, July 03, 2009

ஒரே தூரம்

நீங்கள் அதிகப்படுத்திக் கொண்டாலும்
நான் குறைத்துக் கொண்டாலும்
உங்களுக்கும் எனக்கும்
இடையில் இருப்பது
ஒரே தூரம்தான்

கதவு

மூடித்திறக்கும்
போதெல்லாம்
காற்றைக் குடிக்கிறது கதவு

கூடு

கால் தட்டிவிட்டுப் போன
குச்சியை எடுத்து
பறவை செய்தது கூடு

தனிமைக் குளம்

நடந்து நடந்து வந்து
என்னைச் சேர்ந்தாயிற்று
காலடியில்
அலை எழுப்புகிறது
தனிமைக் குளம்