Saturday, May 13, 2017

வழிப்போக்கன்

நான் வழிப்போக்கன்
வழிகள்
என் முகவரிகள்
*
மழையில்
நனைவது
எப்போதும் இருக்கும்
மழை நீர்
அருந்துவது
எனக்குப் பிடிக்கும்
*
இளைப்பாறும் போதெல்லாம்
நான் நிழலுடன்
பேசுகிறேன்
மனம் மரத்துடன்
பேசுகிறது
*
என் பயணம்
அடைதலில் இல்லை
தொடர்தலில் இருக்கிறது
*
வெகுதூரம்
வந்த பின்னும்
வெகு தூரம்
இருக்கு இன்னும்
இந்த வரி
அதிகம்
உறங்க விடுவதில்லை
*
வேகமான நடையில்
இமை மூடித் திறக்க
முடிகிறது தூக்கம்
*
கால்களுக்கிடையில்
முடிகின்றன‌
நெடும் பயணத்தின்
சிறு பயணங்கள்
*
காதுகளை நிரப்புகிறது
காற்றின் பாடல்
அதில் நான்
கலந்து போன
ஒரு சொல்
*
கை வீசி நடக்கிறேன்
பிரபஞ்சத்தை
பின்னுக்குத் தள்ளி
பிரபஞ்சத்தோடு
கை கோர்த்து
பிரபஞ்சத்தை
எதிர்கொண்டு
*
'தி இந்து'வில்(மே 10,2017) தேநீர் கவிதை பகுதியில் வெளியானது.

Sunday, April 16, 2017

பேருந்து

மறந்து போய்
இறங்கி விட்டார்

கிளம்புகிறது பேருந்து

அங்கிள் நீங்க அவருக்கு
மீதி சில்லரைக் கொடுக்கல
ஞாபகப்படுத்துகிறது குழந்தை

விசிலடிக்கிறார்

நிற்கிறது பேருந்து

இறங்கியவர் ஓடி வருகிறார்

நடத்துனர்
சில்லரைக் கொடுத்து
நன்றியை வாங்கிக்கொள்கிறார்

குழந்தை புன்னகை
தாய் புன்னகை
நடத்துனர் புன்னகை
ஒரு புன்னகைச் சித்திரமாய் விரிய
போகிறது பேருந்து      







Thursday, April 06, 2017

மன்னிக்கவும்

நீங்கள் குறிபார்த்து
சுடக் கற்று தந்தபடி
துப்பாக்கி குறிபார்க்கிறது
துல்லியம் பிசகாமல்

இப்போது
குறி நீங்களாகப்
போய் விட்டீர்கள்

மன்னிக்கவும்

Thursday, March 30, 2017

கொலை செய்த ரயில்

தற்கொலை செய்து கொண்டவனை
சுற்றி வந்து
தண்டவாளத்தை
பல முறை உதைத்து
கத்திக்கொண்டிருந்தான்
பைத்தியக்காரன்
இவனை
கொலை செய்த ரயில்
தப்பித்துப் போய் விட்டது

Saturday, March 18, 2017

அருகில் போய்

அழும் பெண்ணின்
அருகில் போய்
கண்ணீரைத் துடைத்துக்கொள்
என்று சொல்வதற்கு
கருணை வேண்டும்
இதற்கு
யார் காரணம்
என்று கேட்க‌
துணிவு வேண்டும்
அருகில் போய்
துணிந்து கேட்டேன்
சொன்னாள்
உன்னைப் போல்
ஒருவன்தான் என்று

Thursday, March 16, 2017

மனதில் அசைகிறது

மனதில் அசைகிறது
மறந்து போகாத‌
வாக்கியம் ஒன்று

அதிலிருந்து
குதித்தோடும் சொற்கள்
திரும்ப வந்து
வேறு வேறு
இடங்களில் அமர்ந்து
புதுப்புது வாக்கியங்களை
உருவாக்குகின்றன‌

இப்போது
மனதில் அசைகிறது
மறந்து போகாத‌
பாடல் ஒன்று

Wednesday, February 15, 2017

நாமும் காதலும்

          
1
நான் மூங்கில்
நீ தொடு
புல்லாங்குழலாகிறேன்

2
மனதில்
தோட்டம் இருக்கிறது
மெளனம் பறிக்கலாம் வா

3
நம்மை அழைத்துச் செல்லும்
பாதைகளா இவைகள்
கேட்கிறாய் நீ 
நம் கேள்விகளுக்கான 
பதில்களும்தான்
சொல்கிறேன் நான் 

4
ஒரு முறை
உன்னைப் பார்த்துவிட்டுப் 
போக வேண்டும் என்று
காத்திருக்கிறேன்
நீயோ
நான் போனபின்தான்
வரவேண்டும் என்று
காத்திருக்கிறாய்

5
குறைவான சொற்களை
வைத்துக்கொண்டு
நெடுங்கவிதை
எழுத முடியாது
என்கிறேன் நான்
நெடும் பயணம் 
போக முடியும்
என்கிறாய் நீ

6
சந்திப்பும்
வலிதான்
பிரிவும் 
வலிதான்
வலிகளைப் 
பழகலாம் வா

7
மின்னல் வெட்டிய நேரத்தில்
அணைத்துக்கொண்டோம்
நமக்குள் இருந்த மின்னல்களைக்
கண்டுகொண்டோம்

8

உன் உள்ளிருக்கும்
கண்ணீரில்
கரைய விரும்புகிறது
என் பிரார்த்தனை

9
ரூமியின் 
கவிதைப் போல
புன்னகைக்கிறாய்
எளிமையின்
கனவுப் போல்
பார்க்கிறேன்

- குங்குமம்(17.2.2017) இதழில் வெளியானது -

Saturday, February 11, 2017

மனசாட்சிய பேசவுடுங்கடா

தேநீர் குடித்துவிட்டு
கை நடுங்க‌
எட்டு ரூபாய் நாணயங்களாக‌
எண்ணிக்கொடுத்துவிட்டு
சத்தம் போட்டுச் சொல்லியபடியே
போனார் பெரியவர்

நீங்களே கத்திக்கிட்டு இருக்காதீங்க‌
உங்க மனசாட்சிய பேசவுடுங்கடா



Tuesday, August 02, 2016

பளபளக்கும் கத்தி

பளபளக்கும் கத்தியை
காலில் வைத்துவிட்டுப் போகிறார்
அப்படியே விட்டிருக்கலாம்
கூப்பிட்டு
கையில் கொடுத்தது
தப்பாய்ப் போயிற்று
குத்திவிட்டுப் போகிறார்

Thursday, July 21, 2016

சட்டை

ஸ்டூலில்
ஏறி நின்று
அப்பாவின் சட்டைக்கு
பொத்தான்கள் போடுகிறது குழந்தை
ஒரு பொத்தான்
மாறி விட
சமநிலை மாறுகிறது சட்டை
சரி செய்துகொள்ளச் சொல்கிறாள் அம்மா
சரி என்கிறது குழந்தை
அப்படியே போகிறார் அப்பா

Monday, July 18, 2016

என்னிடம் சொற்கள் இருக்கின்றன

என்னிடம் சொற்கள் இருக்கின்றன
நான் பணக்காரன் என்று
சொன்ன நண்பர் ஒரு தேநீர்
வாங்கித் தரச் சொன்னார்
குடித்து முடித்து
நன்றியுடன் சொன்னார்
என்னிடம் சொற்கள் இருக்கின்றன
நான் ஏழையல்ல என்று




Thursday, June 30, 2016

கருப்பு வெள்ளைப் படம்

கருப்பு வெள்ளைப் படம் போலிருந்தது
சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த சைக்கிள்
அதற்கு வண்ணம் தீட்டிப் பார்ப்பதற்குள்
வந்து எடுத்துப் போய்விட்டார்









பந்து

மைதானத்தில்
கவனிப்பாறற்று
கிடக்கும் பந்தை
தொலைவாக அமர்ந்திருக்கும் பெரியவர்
கண் அசையாமல் பார்க்கிறார்
தன் பார்வையால்
பந்தைத் தள்ளித்தள்ளி
கொண்டு போய்
கோலில் போட்டுவிட்டு
மெல்ல எழுந்து போகிறார்

Sunday, June 12, 2016

வானமும் தனிமையும்

நான் இருக்கும் 
இந்தச் சின்ன அறையை 
உங்கள் கையில் இருக்கும் 
மிகச் சிறிய பென்சிலால் 
மிக மிகக் குறைந்த நேரத்தில் 
நீங்கள் வரைந்து விடலாம்
அது குறித்து 
நீங்கள் பெருமைப்படத் 
தேவையில்லை 
இந்த அறையிலிருக்கும் 
வானமும் தனிமையும்
ஒருபோதும் 
உங்கள் கண்களுக்குத் 
தென்படப் போவதில்லை 


Sunday, May 22, 2016

ரயிலில் பாடிய சிறுவன்

ரயிலில் பாடிய சிறுவனை
தம்பி எனக்கூப்பிட்டு
பத்து ரூபாய் கொடுத்தேன்
தம்பி என்று
இன்னொரு முறை
சொல்லச் சொல்லி
கேட்டு விட்டு
பணத்தைக் கொடுத்துப்
போய் விட்டான்

Tuesday, May 17, 2016

வேறொரு கதை

கதை முடிந்து விட்டதா
நீங்கள் முடித்து விட்டீர்களா
கேட்டார்
அவர் கேள்வியில் தொடங்கிய
வேறொரு கதையை
முடித்த கதையில்
இணைக்கலாமா என
யோசித்துக்கொண்டிருந்தேன்


Saturday, May 14, 2016

எங்களுக்குத் தேவை

யாரோ ஒரு பெரியவர்
என் கைப் பிடித்து
அழைத்துப் போகச் சொல்கிறார்
நடுக்கத்துடன்

வழித் தெரியாமல்
தடுமாறி நிற்கும் நான்
அவரிடம்
இதை எப்படிச் சொல்வது

செய்வதறியாது
அவர் கையைப்
பற்றிக் கொள்கிறேன்

இப்போது
எங்களுக்குத் தேவை

சிறு அன்பு
சின்னப் புன்னகை
கொஞ்சம் உணவு
நிறைய நம்பிக்கை
ஒரு பாதை

Saturday, April 23, 2016

ஒரே அறையில்தான் இருந்தார்கள்

உண்மை மங்கலாகத் தெரிகிறது
பொய் தெளிவாகத் தெரிகிறது
என்றவரும்

உண்மை தெளிவாகத் தெரிகிறது
பொய் மங்கலாகத் தெரிகிறது
என்றவரும்

உண்மை உண்மையாகத் தெரிகிறது
பொய் பொய்யாகத் தெரிகிறது
என்றவரும்

ஒரே அறையில்தான்
இருந்தார்கள்






Monday, April 18, 2016

நந்தினியின் பொய்கள்

நந்தினியிடம்
ஒரு நாளைக்கு
எத்தனை பொய்கள் சொல்வாய்
என்றேன்

கணக்கில் வைத்துக்கொள்வதில்லை என்றாள்
புன்னகைத்தபடி

புன்னகையும் பொய்யா
என்றேன்

உதட்டைச் சுருக்கி
உற்றுப் பார்த்தாள்

Thursday, April 14, 2016

கண்களிலிருக்கும் ஆப்பிள்

கடைக்காரர்
துடைத்து வைத்த ஆப்பிளை
நீண்ட நேரமாகப்
பார்த்த குழந்தை
மெல்லப் போகிறாள்
அவள் கண்களிலிருக்கும் ஆப்பிள்
சுவையாக
நெஞ்சில் இறங்கிக் கொண்டிருக்கிறது

Monday, March 07, 2016

பொம்மையும் குழந்தையும்

குழந்தைக் கேட்ட
பொம்மை வாங்க
காசு இல்லை

பொம்மை மறக்க
வழி நெடுக
கதை சொல்லிக்கொண்டே
வருகிறார் அப்பா

உம் கொட்டுகிறது குழந்தை

கதை முடிந்து
நிம்மதி பெருமூச்சு விட்டு
அப்பா கேட்கிறார்

எப்பிடிம்மா கதை இருந்துது

குழந்தை சொல்கிறது

அப்பா இந்த கதைய
அந்த பொம்மைக்குச் சொல்ல்லாமா
போய் வாங்கிட்டு வரலாமா

Saturday, March 05, 2016

பாக்கியவான்கள்

தாளமிட்டு
வானம் பார்த்து
கை குவித்து
ஆடியபடியே
பெரு மழையில் நனையும்
பைத்தியக்காரன்
தன்னை நிறுத்தி
மூச்சிறைக்க
வேடிக்கைப் பார்ப்பவர்களைப்
பார்த்துச் சொன்னான்
என் கண்ணீரைப் பார்ப்பவர்கள்
பாக்கியவான்கள்

Thursday, February 04, 2016

பூ விற்கும் சிறுமி

ரயிலில்
பூ விற்கும் சிறுமியிடம்
இந்த ரயில் நீளத்திற்கு
பூ தர முடியுமா
எனக் கேட்டேன்

கால்களுக்கிடையில்
கூடையை
ஆடாமல் வைத்துவிட்டு
கைகளை அகல விரித்து
இவ்வளவு நீளமாவா

எனக் கேட்கிறாள்

Tuesday, January 26, 2016

அடுத்த நிகழ்ச்சியில்

தற்கொலைகளுக்கு
வருத்தம் தெரிவித்தார்கள்
இனியாவது
வரும்முன் காப்போம் என்று
விவாதத்தை முடித்தார்கள்
அடுத்த நிகழ்ச்சியில்
தொடங்கியது
ஆடல் பாடல்

Tuesday, December 22, 2015

தெரியவில்லை

வட்டத்தை 
ஏன் சதுரம் போல் 
வரைகிறீர்கள் என்றவரும்
சதுரத்தை 
ஏன் வட்டம் போல் 
பார்க்கிறீர்கள் என்றவரும் 
வடிவச் சிக்கலில் 
இருந்தார்களா 
மனச் சிக்கலில் 
இருந்தார்களா 

என்று தெரியவில்லை 

Thursday, December 10, 2015

இந்தக் காத்திருப்பில்

இந்தக் காத்திருப்பில்
பொறாமை உதிர்ந்தது
வன்மம் உதிர்ந்தது
தேவையில்லாமல்
அதுவாய் சேர்ந்து போன
அத்தனையும் உதிர்ந்தன
நானும் உதிர்ந்தேன்
புதிதானேன்

Wednesday, December 09, 2015

நினைவின் ஆழத்தில்

நினைவின் ஆழத்தில்
இந்தச் சொற்கள்
என்ன செய்யும்

தவம் செய்யும்

Sunday, November 22, 2015

பழுதான கடிகாரம்

அரசு பழுதாகி விட்டதா
அரசு இயந்திரம்
பழுதாகி விட்டதா
கேட்கிறார் ஒருவர்

அது அவர்களுக்குத்
தெரியுமா தெரியாதா
கேட்கிறார் இன்னொருவர்

கேட்டபடியே
நடக்கிறேன் நான்
பழுதான கடிகாரத்தில்
மணி பார்க்க முடியாமல்

Friday, November 06, 2015

உரையாடல்

பேசுவதில் தொடங்கி
மெளனத்தில் முடிகிறது
நல்ல உரையாடல்
என்றார் ஒருவர்

மெளனத்தில் தொடங்கி
பேச்சில் முடிகிறது
சிறந்த உரையாடல்
என்றார் இன்னொருவர்

மெளனத்தில் தொடங்கி
மெளனத்தில் முடிகிறது
அழகான உரையாடல்

என்றார் மற்றொருவர்

Tuesday, November 03, 2015

உங்களை யார் சொல்லச் சொன்னது

லாவகத்துடன்
விசிலடித்தபடி
புன்னகைச் சித்திரமாய்
சைக்கிள் ஓட்டிச் செல்லும் அவரை
நான் ரசித்துக் கொண்டிருக்கும் போது
அந்த முதியவருக்கு
வயது எண்பது என்று
உங்களை யார்
என்னிடம் வந்து

சொல்லச் சொன்னது

Saturday, October 31, 2015

சாத்தானிடம் வாங்கிய கடன்

சாத்தானிடம்
கடன் வாங்கியது
தப்பாய்ப் போயிற்று
கூட்டுத் தொகையை
மாற்றி மாற்றி
இன்னும்
கேட்டுக்கொண்டே இருக்கிறது

Thursday, September 24, 2015

முதலில் மீன் தொட்டி இறந்து போனது

உங்கள் வன்மம்
கேட்டுக்கொண்டதற்கிணங்க
யாருக்கும் தெரியாதது போல்
சமயோஜிதமாக
தள்ளி உடைத்தீர்கள்
முதலில் மீன் தொட்டி
இறந்து போனது
இப்போது மீன்கள்
இறந்து கொண்டிருக்கின்றன

Tuesday, September 01, 2015

கனவில் வந்த வரிகள்

கனவில் வந்த வரிகளில்
பாடல் செய்தேன்
பாடியபடியே
உறங்கி விட்டேன்
விடிந்து எழுந்த பின்
சொற்கள் எதுவும்
நினைவில் இல்லை
இசை வடிவம் மட்டும்
அங்குமிங்குமாய்
கேட்டுக்கொண்டிருந்தது

Saturday, August 29, 2015

கருத்து

நீங்கள் முதலில்
சொன்னக் கருத்தும்
இப்போது
சொன்னக் கருத்தும்
முரண்படுகிறதே
கவனித்தீர்களா

கவலைப்படாதே
அடுத்துச் சொல்லப்போவதில்
அதைச் சரி செய்து விடலாம்

Monday, August 10, 2015

விரிந்து கிடக்கிறது கேள்வி

பறவையை விட்டு
ஏன் பிரிந்தாய்
சிறகிடம் கேட்டேன்
நீந்திப் பழக என
பதில் வந்தது
-------
கால்களின் கீழே
விரிந்து கிடக்கிறது கேள்வி
கடந்து போனால்
கண்டடையலாம்
பதிலையும் என்னையும்
--------
இந்தப் பூச்செடி
தலை அசைத்து
ஏதோ சொல்கிறது
என்ன என்றுதான்
தெரியவில்லை
-----
உன்னைப்
பார்க்க விரும்பவில்லை
உணர விரும்புகிறேன்
----
பிறந்த பூனைக்குட்டி
கண் விழிப்பதைப் போல
என் சொற்கள்
உன்னைப் பார்க்கின்றன
------
ரயில் போய்விட்டது
தண்டவாளத்தில்
ரத்தம் மின்னுகிறது
தூரத்திலிருந்து
ஆடு மேய்க்கும் சிறுமி
சத்தமிட்டபடியே
வேகமாக
ஓடி வந்துகொண்டிருக்கிறாள்
-------
வனமே
உன்னைப் பாட
ஒரு புல்லாங்குழல்
கொடு
போதும்
------
வளைந்து செல்லும்
நீண்ட கோட்டை
வரைந்து
நதி என்கிறாள் குழந்தை
இல்லை என்பது போல் பார்க்க
அதிலிருந்து நீரள்ளி
முகத்தில் தெளிக்கிறாள்
------
கிரீடம்
நசுங்கிப் போய்
துருபிடித்து விட்டது
ஆனாலும்
ராஜ ரோஷம்
குறையவில்லை
-------
கம்பியை
கிளையாக்கியது
அமர்ந்து போன பறவை
------
நான் ஓய்வெடுக்க விரும்பும்
நாற்காலியை
உங்களை யார்
இப்போதே
செய்யச் சொன்னது

-குங்குமம் இதழில் (10.8.2015) வெளியானது-

Sunday, July 19, 2015

எனது பிரார்த்தனை

கதை படிக்கும் முதியவரை
வரைந்து காட்டுகிறாள் குழந்தை
எனது பிரார்த்தனை எல்லாம்
அவர் இறந்து போவதற்குள்
அந்தப் புத்தகத்தை
படித்து விட வேண்டும்
என்பதுதான்

அம்மணமாக ஓடுகிறான்

அம்மணமாக ஓடுகிறான்
பைத்தியக்காரன் என்றவர்கள்
வேடிக்கைப் பார்த்தார்கள்
அம்மணமாக ஓடுகிறான்
மனிதன் என்றவர்
ஆடை கொடுக்க
ஓடிக்கொண்டிருந்தார்

Wednesday, July 15, 2015

அருகில்...

அருகில் போய்
விலக்கி இருக்கலாம்
காப்பாற்றி இருக்கலாம்
ஏதேனும் செய்திருக்கலாம்
வன்மம் மோதி
மனிதம் சாய்ந்தது
என்ற வரியுடன்
தன் கடமையை
முடித்துக் கொண்டார்

Tuesday, July 14, 2015

தற்கொலைக் கவிதை

தண்டவாளத்தில்
தலை வைத்து
அவன் தற்கொலைக் கவிதையை
யோசித்துக்கொண்டிருந்தான்

Sunday, May 31, 2015

வியூகங்கள்

பாதைகளை
மாற்றி வைக்கிறீர்கள்
வியூகங்களால்
வந்தடைகிறேன் 

Saturday, May 16, 2015

ரயில்

ரயில்
ஓட்டுபவரின் கண்களால் பார்க்கிறது
என்றாள் குழந்தை
அப்போது ரயில்
ஒரு பாலத்தின் மீது
போய்க் கொண்டிருந்தது
அதை நான்
குழந்தையின் கண்களால்
பார்த்துக் கொண்டிருந்தேன்

Monday, April 27, 2015

என்னைப் பார்த்து

என்னைப் பார்த்து
கருணையோடு
புன்னகைக்கும் பெண்ணுக்கு
பார்வை இல்லை என்று
நீங்கள் சொல்வதை
என்னால் ஒப்புக்கொள்ள முடியாது

Tuesday, April 21, 2015

எப்படி கிடைத்தாய்?

ஒரு முறை
தான் தொலைந்து போனதை
சொன்னாள் சிறுமி மன்யா

எப்படி கிடைத்தாய்?
கேட்டேன்

நானே கண்டுபிடித்து
வந்து விட்டேன்
என்று சொன்னாள்
ஆச்சரியமாக

Wednesday, April 15, 2015

நள்ளிரவில்

நள்ளிரவில்
பீடி புகைத்தபடி
போஸ்டர் ஒட்டியவரிடம்
கேட்டேன்
படம் நல்லா இருக்குமா
பசையை பிசைந்தபடி சொன்னார்
படம் ஓடனா
அவுங்களுக்கு நல்லா இருக்கும்
வாழ்க்கை ஓடன
நமக்கு நல்லா இருக்கும்

Tuesday, April 14, 2015

உணராமல் போனோம்

பேசத்தான் வந்தோம்
பேசினோம்
பிரிந்துப் போனோம்
மீதி இருக்கும்
இந்தச் சொற்களில்தான்
உண்மையான உரையாடல்
இருந்தது என்பதை
ஒருவரும்
உணராமல் போனோம்

Friday, April 03, 2015

மூன்று பொம்மைகள்

மிகப்பெரிய பொம்மையை
கேட்கிறாள் குழந்தை
மிகச்சிறிய பொம்மையை
எடுக்கிறார் அப்பா
இரண்டுக்கும் நடுவில்
இருக்கும் பொம்மையை
பார்க்கிறாள் அம்மா

Thursday, March 26, 2015

வண்ணங்கள் களைப்படையும் போது


வரைந்து முடித்து 
விழித்திருக்கும் சிங்கம் 
என்று பெயர் வைத்தாள் மான்யா

உன் சிங்கம் 
எப்போது உறங்கும் 
கேட்டேன் 

உடனே சொன்னாள் 
வண்ணங்கள் 
களைப்படையும் போது

Sunday, March 22, 2015

சுவர்

நீ ஒரு 
கல் வைத்தாய் 
நான் ஒரு 
கல் வைத்தேன் 
நமக்கிடையே 
ஒரு சுவரை 
உருவாக்கிக் கொண்டோம்

Wednesday, March 18, 2015

இருந்தது

என் ஸ்வெட்டரைப் பார்த்த
பெரியவரின் கண்களில்
நடுக்கம் இருந்தது

நடந்தேன்

இப்போது என்னிடம்
நடுக்கம் இருந்தது

பெரியவரிடம்
ஸ்வெட்டர் இருந்தது

Tuesday, March 10, 2015

கதாபாத்திரங்கள்

மது அருந்திக்கொண்டிருந்தனர் 
கதாபாத்திரங்கள் 
எனக்குக் கொஞ்சம் 
கிடைக்குமா 
கேட்டேன் 
எழுத்தின் போதை 
போதும் உனக்கு 
எனச் சொல்லி 
கதவடைத்துக் கொண்டனர்

Saturday, March 07, 2015

கூடு

கூடு விட்டு
கூடு பாயும்
ஒருவரை சந்தித்தேன்
இப்போது
எந்த கூடு என்றேன்
இதற்கு பதில்
சொல்வதற்குள்
மாறி இருக்கலாம்
கேள்வியைத்
தவிர்த்து விடலாமே என்றார்











Thursday, March 05, 2015

பூங்கொத்து

பூங்கொத்து வாங்கிக்கொண்டு புறப்பட்டேன்
வழியில் குழந்தை வாங்கிக்கொண்டது
வெறும் கையுடன் உன்னைச் சந்தித்து
விஷயத்தைச் சொன்னேன்
குழந்தை போலச் சிரித்தாய்
அப்போது
நான் தந்தப் பூங்கொத்தை
அந்தக் குழந்தை
உன் கையில்
தந்து கொண்டிருந்தது

Wednesday, March 04, 2015

பிரியமும் விஷமும்

வேறு வழியின்றி
உன்னைக் கொல்ல
வந்திருக்கிறேன்
தேநீர் தருகிறாய்
உன் கண்களைப் பார்த்தபடி
அருந்துகிறேன்
உன்னைப் காப்பாற்ற
நீ தந்த
பிரியமும் விஷமும் கலந்த
இந்த தேநீரை
நான் அருந்திதான் ஆகவேண்டும்