Wednesday, August 16, 2006

மணல் பூங்கா

சிறுவர்கள் விளையாடுவார்கள்

ஓங்கி அடிக்கும் பந்தை
பார்த்தபடி இருக்கும்
மைதானம்

இந்த இடத்தில்
எங்கும் உட்காரலாம்

மூச்சை இழுத்து
விடும்போது
மைதானம் உள்போய்
வருவது போலிருக்கும்

மணல் பூங்கா என்று
அதற்கு செல்லமாய்
ஒரு பெயர் வைத்தேன்

அங்கு சினிமா தியேட்டர்
வந்தது

எதாவது ஒரு பெண்
போஸ்டரில்
சிரித்துக்கொண்டிருப்பாள்

மைதானம்
ஒரு பிரிந்து போன
தோழனைப்போல
ஞாபகத்திற்கு வரும்

பிறகு திருமண மண்டபமாயிற்று
ஊர்வலம் போகும்
பாட்டு வரும்
சாலைகள் திணறிவிடும்

கல்யான மண்டபம்
காணமல் போனது

இப்போது
அடுக்கு மாடி குடியிருப்புகள்

எல்லாம் விலைபோனதாகப்
பேசிக்கொண்டார்கள்

ஏதாவது ஒருகுடியிருப்புச் சிறுவன்
பந்து விளையாடுவான்
வீட்டின் எல்லைகளை
மனதில் வைத்து

பழைய மைதானத்து
சிறுவர்கள் அளவிற்கு
வீச்சு இருக்காது

குடியிருப்பின் சிறைகள்
கட்டிப்போடும்
பலவற்றை

பிரிந்து போன நண்பனின்
நினைவுகளைப்போல
மங்கி வருகிறது
மணல் பூங்கா

3 comments:

  1. எல்லாமே வசீகரிக்கும் கவிதைகள்!
    பொய்களும், வர்ணனைகளும், அதீத உவமைகளுமற்ற நேர்மையான, காட்சித்தெளிவான கவிதைகள்.
    சொல்லவந்ததை நேராய், நேர்மையாய் சொல்லும் கவிதைகள்!
    ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. கட்டிட காட்டுக்குள் தொலைந்து போன நட்பு வலி தருகிறது.

    ReplyDelete