Thursday, October 30, 2014

நான் பார்க்க வந்தவர்

தாமதமாகவே கிளம்பினேன்
நேரே
இடுகாடு வந்துவிட்டேன்
அங்கும் தாமதமாகிவிட்டது
மின் தகனச் சடங்கு
முடிந்திருந்தது
எல்லோரும் போயிருந்தார்கள்
தனியாய்
ஒற்றை ஆளாய்
நின்றிருந்தேன்
சார் யாரப் பாக்கணும்
நான் பார்க்க வந்தவர்
போய் விட்டார்
சொல்லிவிட்டு நடந்தேன்

Wednesday, October 29, 2014

நாங்கள் எங்களுடன்

நான் தனிமையுடன்
பேசினேன்

தனிமை இரவுடன்
பேசியது

இரவு என்னுடன்
பேசியது

நாங்கள் எங்களுடன்
பேசினோம்

Monday, October 20, 2014

சாலை

கலைந்து கிடக்கிறது சாலை 
எவ்வழிப் போவது 
என்ற வரியை 
அழிக்கிறேன் 

Friday, October 10, 2014

மழை நாளில்

கவிதை எழுதுவாள் கௌரி 
ஒரு மழை நாளில் 
அவளுக்குக் குழந்தைப் பிறந்தது 
கண்களில் நீர்த் துள்ள 
இப்படி எழுதினாள் 
மழை நாளில் 
மழையைப் பெற்றெடுத்தேன் 
(கௌரிக்கு)

Wednesday, October 08, 2014

உளி

என்னை உளியாக்கி 
தன் கையில் எடுத்து 
கனவை உடைக்கப் 
பார்க்கிறது இரவு 
கனவு உளியைக் கைப்பற்ற 
எதுவுமற்று 
விழிக்கிறது இரவு 
புரண்டு படுக்கிறேன்
இன்னொரு கனவுடன் 

Friday, October 03, 2014

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1111-

வாசிக்காத புல்லாங்குழல் 
வனத்தில் எறிந்த போது 
இசைத்தபடியே விழுந்தது

1112-

நீண்ட நேரமாக 
நடந்து கொண்டிருக்கிறேன் 
எங்கு போக வேண்டும் என்று 
மறந்து போய் விட்டது

1113-

ஆறுதல் பரிசை 
ஆகாயம் போல் 
வாங்கிக் கொள்கிறீர்கள் 
அந்த நேரத்தில் 
இறந்து போகிறது 
உங்கள் சிறகு




கண்ணீருக்கும் பசிக்கும்

கண்ணீருக்கும் பசிக்கும்
இந்த இரண்டு
சொற்களுக்குள்
கவிதை இருக்கிறதா
தெரியாது
சொன்னவள் இருக்கிறாள்

Wednesday, October 01, 2014

வரும் சத்தம்

வரும் சத்தம் 
நெருங்கி வர 
ரயிலில் 
பயணம் செய்வதாக 
நினைத்தபடியே அவன் 
தண்டவாளங்களுக்கிடையில் 
நடந்து கொண்டிருந்தான்

சிறகைத் தருவாயா

உன் சிறகைத் தருவாயா
நான் அணிந்துப் பறக்க
வானம் கேட்டது
இல்லை
வானம் கேட்பது போல்
பறவை நினைத்தது
மழைத்துளி அதன்
நினைவின்
மேல் விழ
வேகம் கொண்டு போனது

Saturday, September 13, 2014

எப்படிச் சொல்லலாம்

எதிரில் இருந்தவர் 
நாளை மற்றொரு நாளே என்றார் 
பக்கத்தில் இருந்தவர் 
இன்று இன்னொரு நாளே என்றார் 
நேற்றை எப்படிச் சொல்லலாம் 
என்ற யோசனையில் 
நான் இருந்தேன் 

Thursday, August 28, 2014

இப்படித்தான்

இப்படித்தான்
இந்தக் கவிதையை
உடைத்தேன்
இத்தனை கவிதைகளாகும்
என்று தெரிந்திருந்தால்
எழுதியே இருக்க மாட்டேன்

இரண்டும்தான்

உங்கள் சொற்களில் 
விளையாடுவது 
பொய்யா சாதுர்யமா 
இரண்டும்தான் 
பொய்யின் சாதுர்யம் 
சாதுர்யத்தின் பொய் 

Friday, August 22, 2014

இறந்தும் போகிறான்

நஞ்சைக் கொடுத்து 
நகைச்சுவை உணர்வுடன் 
குடிக்கச் சொல்கிறீர்கள் 
குடிக்கிறான் 
சிரித்துச் சிரித்தே 
இறந்தும் போகிறான் 
உருக்கமாக வருகிறது 
உங்கள் கண்ணீர் 
குழந்தை அறைக்குள்ளிருந்து 
வெளி வருவதைப் போல 

Monday, August 11, 2014

உரக்கச் சொல்லுங்கள்

நான் சொற்களை 
அடுக்கிக் கொண்டிருக்கிறேன்
படித்து உங்களுக்கு 
ஏதேனும் கிடைத்தால் 
எனக்கும் உரக்கச் சொல்லுங்கள் 

உன்னால் மறுக்க முடியாது

உன் எல்லாச் சிறகுகளையும் 
வெட்டிவிட்டேன் 
நீ பறக்க முடியாது 

அதனாலென்ன 
நான் பறவை இல்லை என்று 
உன்னால் மறுக்க முடியாது 

Saturday, August 09, 2014

நடிக்க முடியாது

என்னைப் போல்
உங்களால்
நடிக்க முடியாது
உங்களைப் போல்
என்னால்
நடிக்க முடியாது
நம்மைப் போல்
யாராலும்
நடிக்க முடியாது

Tuesday, August 05, 2014

தெரிந்தார்

வலையோடு 
ஒரு மீனவரைப் 
புகைப்படம் எடுத்தேன் 
ஒரு கணம் 
நின்று புன்னகைக்கும் 
மீன் போல் தெரிந்தார்

Monday, August 04, 2014

எழுதியபடி

கதவைத் தட்டும் 
கனவுக்கும் 
கனவைத் திறந்து 
உள்ளே வரும் 
கனவுக்கும் 
இடையில் நான் 
என்ன செய்வது 
என்று தெரியாமல் 
இந்த வரிகளை 
எழுதியபடி 

சொல்

மடித்து வைக்கப்பட்ட
ஒரு சொல்லை
விரித்தேன்
வாக்கியங்களாக
நீண்டுகொண்டே போகிறது

மலைமுகட்டில்

இன்று எதையும் 
எழுதப் போவதில்லை 
இந்த மலைமுகட்டில் 
நின்றுகொண்டு 
வெள்ளைக் காகிதங்களைக் 
காற்றில் 
பறக்க விடப் போகிறேன்