Monday, February 09, 2015

அழைத்து வருகிறேன்

கிளை போல்
கிழித்தக் கோட்டில்
ஒரு பறவை வந்தமர்ந்த்து

கண் துளிர்க்கப்
பார்த்துக்கொண்டிருந்தேன்

மரம் வரை
மற்ற நண்பர்களை
அழைத்து வருகிறேன் என்று
சொல்லிவிட்டுப் போனது

Monday, February 02, 2015

பயணித்தல்

பயணிப்பது 
சுகமானதாக இருக்கிறது 
என்ற வரி 
என்னிடமிருந்தது 

நின்றுகொண்டே பயணிப்பது 
கடுமையானதாக இருக்கிறது 
என்ற வரி 
அவரிடமிருந்தது

ஒரு சீட் காலியாக 
அவரை அமரச் சொன்னேன்

இப்போது 
என் வரிக்கு 
அவர் மாறக்கூடும்

Tuesday, January 27, 2015

சாலை ஓவியக்காரன்

நேரங்களும் 
வண்ணமாய் கரைய 
சாலை ஓவியக்காரன் 
வரைந்து முடித்தான் 
அவன் முடித்த கணம் 
மழை பெய்தது 
எல்லோரும் ஓடிப்போய் 
ஒதுங்கி நின்றார்கள் 
ஓவியத்தை 
எடுத்துச் செல்ல முடியாமல் 
நனைந்தபடியே 
அவன் பார்த்துக் கொண்டிருந்தான்

Thursday, January 15, 2015

சந்திக்கும் புள்ளியில்

அறியாமையும் அறிவும் 
சந்திக்கும் புள்ளியில் 
நீங்கள் என்னையும் சந்திக்கலாம் 
உங்களையும் சந்திக்கலாம்

ஒற்றைச் செருப்பு

ஒற்றைச் செருப்பை
கையில் மாட்டியபடி
சிரித்துப் போகும் அவனை
பைத்தியக்காரன் என்றார்கள்
நான் இன்னொரு செருப்பைத்
தேடிப்போகும்
மனிதன் என்றேன்

Tuesday, January 13, 2015

மலைப் பிரசங்கம்

1-
உன் மலைப் பிரசங்கம் கேட்க 
ஓடி வரும் நான் 
மந்தையிலிருந்து 
பிரிந்த ஆடு

2-
மேஜையின் மேல் 
நீ வைத்துவிட்டுப் போன 
கண்ணீர்த்துளி 
இன்னும் காயாமல் 
என் பதிலுக்காக 
காத்திருக்கிறது

3-
என் கையிலிருந்த 
சுடரை 
அணைத்து விட்டீர்கள் 
என்னை அணைக்கப் 
போராடுகிறீர்கள்

4-
ஆண்டாண்டு காலமாய் 
முரசை அறைகிறீர்கள் 
ஆனாலும் உங்களுக்கு 
சத்தம் எழுப்பத் தெரியவில்லை

5-
நீங்கள் திருத்திய கதை 
நான் யோசித்த 
கதை அல்ல

6-
வரிசையில் 
காத்திருக்கிறேன் 
வரிசையும் 
காத்திருக்கிறது 

Tuesday, January 06, 2015

மூன்று கவிதைகள்

1-
முடிந்த மழை 
தூறலில் 
முகம் காட்டும்

2-
நகர்ந்து நகர்ந்து 
ஓவியமாகப் பார்க்கிறது புகை 
ஓவியமாகப் பார்க்கிறேன் நான்

3-
இருளில் 
என்னைக் கண்டெடுத்தேன் 
வெளிச்சத்தில் 
தொலைத்து விட்டேன்

Monday, January 05, 2015

அழைத்துப் போகிறேன்

சொற்கள் உன்னை 
அழைத்துப் போகிறதா 
வாக்கியங்கள் உன்னை 
அழைத்துப் போகிறதா 
எதுவுமில்லை 
நான்தான் என்னை 
அழைத்துப் போகிறேன்

Sunday, January 04, 2015

உறங்கும் வட்டம்

உடல் குவித்து
மையத்தில்
உறங்கிக் கொண்டிருந்தது வட்டம்
மறுபடி வந்து
பார்த்துக் கொள்ளலாம் என்று
எழுப்பாமல் வந்து விட்டேன்

Thursday, January 01, 2015

நிசப்த தவம்

சொற்களை கற்பூரமாக்கி 
நாவின் மேல் வைத்து 
ஏற்றுகிறேன் 
அசைந்து முடிகிறது 
சுடர் 
இனி நான் 
போகலாம் 

சரியாக கேட்கவில்லை

நன்றாக காற்று வரும்படி
மின்விசிறி உள்ள அறை
வேண்டும் என்று
அவன் சொன்னதை
அவர்கள் அப்போது
சரியாக கேட்கவில்லை
காலையில்தான்
புரிந்து கொண்டார்கள் 

Monday, December 29, 2014

எனக்கும்

இறந்து போன 
தாயின் மடியிலேயே 
நீணட நேரமாக 
அழுது கொண்டிருக்கிறது குழந்தை 
யாராவது போய் 
குழந்தையைத் தூக்குங்கள் 
அப்படியே வந்து 
எழுதிய எனக்கும் 
ஆறுதல் சொல்லுங்கள்

Thursday, December 25, 2014

ஒற்றை வரி

எழுதிய ஒற்றை வரியை 
ஊதி 
நூலாக்கி விட்டேன் 
இந்த முனையை 
நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன் 
எதிர் முனை 
வானத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது

Wednesday, December 24, 2014

ஏழு நிமிடங்கள்

ஏழு நிமிடங்கள் 
அந்தக் கயிறுடன் 
அவன் பேசிக் கொண்டிருந்தான் 

எட்டு 
ஒன்பது 
பத்து 

இந்த நிமிடத்தில் 
அந்தக் கயிறு பற்றிய தகவலை 
உங்களுக்குச் சொல்ல வேண்டியது 
அவசியமாகிறது 

அது 
தற்கொலைக் கயிறு 

Sunday, December 21, 2014

பழைய நண்பர்

பார்க்காமல் போகிறார் 
பழைய நண்பர்
அவர் கால்களில் இருப்பது 
தவிர்க்க நினைத்த வேகமா 
எதையோ தேடிய ஓட்டமா 
தெரியவில்லை
நின்றிருக்கிறேன்
நினைவின் வடுவைத்
தடவியபடி

Saturday, December 20, 2014

அவருடன்

கைத்தட்டிக் கூப்பிட்டவர்
அவரை என்றார்
உங்கள் கைத்தட்டலில்
என் பெயர் இருந்ததால்
திரும்பி விட்டேன் என்றேன்
சிரித்தபடி கடந்து போனார்
அவருடன் 

குரூரத்தின் குருதி

நீங்கள் சுட்டப் பறவை 
என் கையில் 
விழுந்திருக்கிறது 
வழிகிறது 
பறவையின் குருதி 
என்று என்னால் எளிதாக 
சொல்ல முடியவில்லை 
உங்கள் குரூரத்தின் குருதி 
என்று சொல்லாமல் 
இருக்கவும் முடியவில்லை

Tuesday, December 16, 2014

எப்போதும் போல்

துயரம் போல் 
பெய்கிறது மழை
என்றவரும் 
சந்தோஷம் போல் 
பெய்கிறது மழை 
என்றவரும் 
எதிரெதிர் மாடியிலிருந்து 
பார்த்துக் கொண்டிருந்தார்கள் 
எப்போதும் போல்
பெய்து கொண்டிருந்தது மழை

Saturday, December 13, 2014

உங்களால் முடியுமா

கைகோர்த்து வந்தவன் 
உன் கழுத்தை 
நெரிக்கப் போகிறேன் என்றான் 

உங்களால் முடியுமா 
என்றேன் 

என் பிரேதத்தைத் தாண்டி 
இன்னொருவன் கைகோர்த்தபடி 
போய்க்கொண்டிருந்தான் 

Thursday, December 11, 2014

குழந்தைச் சொன்னக் கதை

அப்பா சொன்னக் கதையில்
பாகன் யானையுடன்
நகரில் திரிந்து கொண்டிருந்தான்
குழந்தைச் சொன்னக் கதையில்
பாகன் டீ குடித்துக் கொண்டிருந்தான்
யானைக் காட்டிற்குப் போய் விட்டது