Monday, August 19, 2013

மற்ற சொற்கள்

ஒற்றைச் சொல்லை 
மீன் தொட்டியாக்கினேன் 
மற்ற சொற்கள் 
வந்து நீந்த

அந்தரங்கத்தில்

அந்தரங்கத்தில் 
தொங்குகிறது 
என் நிர்வாணம் 
ஈ மொய்க்கும் 
இறைச்சி என

Sunday, August 18, 2013

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1009-

ஒளிந்து கொண்ட
கனவுக்குள்
வனம் இருந்தது
என்னை ஒரு
சிங்கமாக்கி
வெளி அனுப்பியது

1010
நினைவில் 
தவமிருக்கும் 
கண்ணீர்த்துளி

1011-
கனவில்
தொலையுங்கள்
கனவைத்
தொலைக்காதீர்கள்

1012-
உன் மௌனத்தில்
நீந்தும் மீன்தான்
என்னைப் பார்த்து 
சொற்களைத் துப்புகிறது 

1013-

வந்து சேர்ந்த வரியில்
யாரோ இருந்து
போன தடம்

1014-

மன்னிக்கப்
பழகிக் கொண்டீர்கள்
குற்றவாளிகள் 
அதிகமாகி விட்டார்கள்

1015-

அழித்த வரி கேட்டது
என் ஆயுள்
அவ்வளவுதானா என்று












Saturday, August 17, 2013

தெரியவில்லை

பக்தனுக்கு 
கடவுள் தெரிந்தார் 

கடவுளுக்கு 
பக்தன் தெரிந்தான் 

பூசாரிக்கு 
இருவருமே தெரியவில்லை

Sunday, August 11, 2013

விடிகையில்

நள்ளிரவில் 
மிதந்து மிதந்து 
வானத்தில் போய் 
ஒட்டிக் கொண்டேன் 
விடிகையில் 
துளியாய் 
வந்து விழிந்தேன்

Tuesday, July 30, 2013

போகும் போது

மலை உச்சியில் 
ஓய்வெடுத்துக் கொண்டிருந்த 
மேகத்துடன் 
பேசிக் கொண்டிருந்தேன் 
போகும் போது 
மழையைப் 
பரிசளித்துவிட்டுச் சென்றது 

Friday, July 26, 2013

கனவு முடிந்திருந்தது

மரணத்தின் மேல் 
மரணத்தை 
அடுக்கி வைத்தேன் 
என் உயரம் 
வந்த போது 
எழுந்து விட்டேன் 
கனவு முடிந்திருந்தது

Sunday, July 21, 2013

என்னைக் கேட்காதே

முன் சொல்லிடம் கேட்டேன்
அடுத்த சொல்
என்ன என்று
அது உன் வாக்கியத்தின்
சூட்சமத்தில் இருக்கிறது
என்னைக் கேட்காதே என்றது 

Saturday, July 20, 2013

குறிப்புகள்

ஒரு குறையுமின்றி
எல்லாம் தந்து
பறக்க வேண்டாம்
எனச் சொல்லி
ஒரு பறவையை
அடைத்து வைத்திருந்தேன்

என்னை புதைக்காதே
வானத்தை நோக்கி
வீசி விடு என்ற
குறிப்புகளுடன்
இறந்து போயிருந்தது 

Friday, July 05, 2013

இவ்வளவு தூரம்

சுவடின்றி 
வெளியேறுகிறாய் 
இதற்கு நீ 
இவ்வளவு தூரம் 
வந்திருக்க வேண்டாம்

Wednesday, June 26, 2013

கதைக்காரன்

நீங்கள் யார்

கதைக்காரன்

சொல்வீர்களா

அதெல்லாம் முடியாது
வேண்டுமானால்
என் கண்களைப் பார்த்து
படித்துப் போ

Wednesday, June 19, 2013

சுடரிடம் கேட்டேன்

மனதால் உன்னை 
ஊதி அணைத்து விட்டேன் 
இன்னும் ஏன் 
அசைகிறாய் 
சுடரிடம் கேட்டேன்

அசைவது 
உன் மனம்தான் 
சுடரல்ல 
இருள் சொன்னது

Sunday, May 19, 2013

சுழலும் கேள்விகளும் பதில்களும்


நீங்கள் யார் 

நான் யாரோ 

யாரோ என்றால் 

யாரோ என்றால் 
யாரோதான் 

சரிதான் 
தெரியாத ஒன்று 
உங்களுக்கு 
எப்படித் தெரியும் 

தெரிந்தால் வந்து 
சொல்கிறேன் 

ஆமாம் 
நீங்கள் யார்

நான் யாரோ 

யாரோ என்றால் 

யாரோ என்றால் 
யாரோதான் 

சரிதான் 
தெரியாத ஒன்று 
உங்களுக்கு 
எப்படித் தெரியும் 

தெரிந்தால் வந்து 
சொல்கிறேன் 

Monday, May 13, 2013

கடைசிச் சொல்

1-

இந்த வரியை 
எப்படி நெய்தீர்கள் 

என் 
நிர்வாணத்தால்

2-

ஒவ்வொரு சொல்லும் 
உதிர்ந்து கொண்டே வர
கடைசிச் சொல் 
பறந்துவிட்டது

3-

வெறுமையை 
கையேந்தி நிற்கிறேன்
நீ அன்பை 
நிரப்பும் போது 
அது பாத்திரமாகி விடுகிறது

4-

பொய் சொல்கிறாள் 
கண்ணீர்த்துளியை 
வரைந்து விட்டு 
மழைத்துளி என்று



எழுதிக் கொண்டிருந்தேன்


நள்ளிரவில் 
மழை பெய்யும் போது 
என்ன செய்து கொண்டிருந்தீர்கள் 

எழுதிக் கொண்டிருந்தேன் 

அது மழைக்குத் தெரியுமா 

ஒன்றைப் பற்றி எழுதுவது 
ஒன்றுக்கு எப்படித் 
தெரியாமல் இருக்கும்

Sunday, May 12, 2013

எனக்குப் பசிக்கிறது


எனக்குப் பசிக்கிறது 
ரொட்டித்துண்டைத் 
தருகிறீர்களா

எனக்கும் பசிக்கிறது

அப்படியா வாருங்கள் 
நம் பசியை 
பகிர்ந்து சாப்பிடுவோம் 

வேட்டையாடும் எழுத்து


பாய்ந்து கவ்வி 
வேட்டையாடும் எழுத்து 
கவனிக்க 
மறந்து விடுகிறது 
பூவின் விரிதலையும் 
அதன் உள் மனச் 
சொற்களையும்

Saturday, May 11, 2013

ஒரே நேரம்


ஒரே நேரம் 
நம் இருவர் கண்ணிலும் 
கண்ணீர் 
பார்த்தபடியே 
புன்னகைக்கிறோம் 
இந்த உரையாடலை 
இதை விட நாம் 
சிறப்பாக 
முடித்திருக்க முடியாது 

Monday, May 06, 2013

விளிம்புக்குப் போகும் வரை

1-

பல்லக்கை 
பல காலமாக 
சுமந்து செல்கிறோம் 
உள்ளே இருப்பது 
சாத்தான் என்று 
உணராமல்

2-

ஒன்றும் தெரியாத என்னை 
மைதானத்தின் விளிம்பில் 
நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் 
விளிம்புக்குப் 
போகும் வரை  
விளையாடித்தான் 
ஆக வேண்டும்

Saturday, May 04, 2013

முகச்சாயல்

கடந்து போன நபர் 
இறந்து போன நண்பனின் 
முகச்சாயலில் இருந்தார்

ஒரு கணம் கலங்கி 
கண் துடைத்து 
அவரைப் பார்த்து 
புன்னகைக்க 
புன்னகைத்தார்

அதுவும் அச்சு அசலாய் 
நண்பனைப் போலிருந்தது

மாதவா என்று 
மனதிற்குள் 
ஒரு சத்தம் 
துள்ளி எழுந்து 
அடங்கியது

நண்பன் போய்விட்டான் 
அவர் போய்விட்டார் 
நான் போய்க் கொண்டிருக்கிறேன்