ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Monday, August 19, 2013
மற்ற சொற்கள்
ஒற்றைச் சொல்லை
மீன் தொட்டியாக்கினேன்
மற்ற சொற்கள்
வந்து நீந்த
அந்தரங்கத்தில்
அந்தரங்கத்தில்
தொங்குகிறது
என் நிர்வாணம்
ஈ மொய்க்கும்
இறைச்சி என
Sunday, August 18, 2013
அனுபவ சித்தனின் குறிப்புகள்
1009-
ஒளிந்து கொண்ட
கனவுக்குள்
வனம் இருந்தது
என்னை ஒரு
சிங்கமாக்கி
வெளி அனுப்பியது
1010
நினைவில்
தவமிருக்கும்
கண்ணீர்த்துளி
1011-
கனவில்
தொலையுங்கள்
கனவைத்
தொலைக்காதீர்கள்
1012-
உன் மௌனத்தில்
நீந்தும் மீன்தான்
என்னைப் பார்த்து
சொற்களைத் துப்புகிறது
1013-
வந்து சேர்ந்த வரியில்
யாரோ இருந்து
போன தடம்
1014-
மன்னிக்கப்
பழகிக் கொண்டீர்கள்
குற்றவாளிகள்
அதிகமாகி விட்டார்கள்
1015-
அழித்த வரி கேட்டது
என் ஆயுள்
அவ்வளவுதானா என்
று
Saturday, August 17, 2013
தெரியவில்லை
பக்தனுக்கு
கடவுள் தெரிந்தார்
கடவுளுக்கு
பக்தன் தெரிந்தான்
பூசாரிக்கு
இருவருமே தெரியவில்லை
Sunday, August 11, 2013
விடிகையில்
நள்ளிரவில்
மிதந்து மிதந்து
வானத்தில் போய்
ஒட்டிக் கொண்டேன்
விடிகையில்
துளியாய்
வந்து விழிந்தேன்
Tuesday, July 30, 2013
போகும் போது
மலை உச்சியில்
ஓய்வெடுத்துக் கொண்டிருந்த
மேகத்துடன்
பேசிக் கொண்டிருந்தேன்
போகும் போது
மழையைப்
பரிசளித்துவிட்டுச் சென்றது
Friday, July 26, 2013
கனவு முடிந்திருந்தது
மரணத்தின் மேல்
மரணத்தை
அடுக்கி வைத்தேன்
என் உயரம்
வந்த போது
எழுந்து விட்டேன்
கனவு முடிந்திருந்தது
Sunday, July 21, 2013
என்னைக் கேட்காதே
முன் சொல்லிடம் கேட்டேன்
அடுத்த சொல்
என்ன என்று
அது உன் வாக்கியத்தின்
சூட்சமத்தில் இருக்கிறது
என்னைக் கேட்காதே என்றது
Saturday, July 20, 2013
குறிப்புகள்
ஒரு குறையுமின்றி
எல்லாம் தந்து
பறக்க வேண்டாம்
எனச் சொல்லி
ஒரு பறவையை
அடைத்து வைத்திருந்தேன்
என்னை புதைக்காதே
வானத்தை நோக்கி
வீசி விடு என்ற
குறிப்புகளுடன்
இறந்து போயிருந்தது
Friday, July 05, 2013
இவ்வளவு தூரம்
சுவடின்றி
வெளியேறுகிறாய்
இதற்கு நீ
இவ்வளவு தூரம்
வந்திருக்க வேண்டாம்
Wednesday, June 26, 2013
கதைக்காரன்
நீங்கள் யார்
கதைக்காரன்
சொல்வீர்களா
அதெல்லாம் முடியாது
வேண்டுமானால்
என் கண்களைப் பார்த்து
படித்துப் போ
Wednesday, June 19, 2013
சுடரிடம் கேட்டேன்
மனதால் உன்னை
ஊதி அணைத்து விட்டேன்
இன்னும் ஏன்
அசைகிறாய்
சுடரிடம் கேட்டேன்
அசைவது
உன் மனம்தான்
சுடரல்ல
இருள் சொன்னது
Sunday, May 19, 2013
சுழலும் கேள்விகளும் பதில்களும்
நீங்கள் யார்
நான் யாரோ
யாரோ என்றால்
யாரோ என்றால்
யாரோதான்
சரிதான்
தெரியாத ஒன்று
உங்களுக்கு
எப்படித் தெரியும்
தெரிந்தால் வந்து
சொல்கிறேன்
ஆமாம்
நீங்கள் யார்
நான் யாரோ
யாரோ என்றால்
யாரோ என்றால்
யாரோதான்
சரிதான்
தெரியாத ஒன்று
உங்களுக்கு
எப்படித் தெரியும்
தெரிந்தால் வந்து
சொல்கிறேன்
Monday, May 13, 2013
கடைசிச் சொல்
1-
இந்த வரியை
எப்படி நெய்தீர்கள்
என்
நிர்வாணத்தால்
2-
ஒவ்வொரு சொல்லும்
உதிர்ந்து கொண்டே வர
கடைசிச் சொல்
பறந்துவிட்டது
3-
வெறுமையை
கையேந்தி நிற்கிறேன்
நீ அன்பை
நிரப்பும் போது
அது பாத்திரமாகி விடுகிறது
4-
பொய் சொல்கிறாள்
கண்ணீர்த்துளியை
வரைந்து விட்டு
மழைத்துளி என்று
எழுதிக் கொண்டிருந்தேன்
நள்ளிரவில்
மழை பெய்யும் போது
என்ன செய்து கொண்டிருந்தீர்கள்
எழுதிக் கொண்டிருந்தேன்
அது மழைக்குத் தெரியுமா
ஒன்றைப் பற்றி எழுதுவது
ஒன்றுக்கு எப்படித்
தெரியாமல் இருக்கும்
Sunday, May 12, 2013
எனக்குப் பசிக்கிறது
எனக்குப் பசிக்கிறது
ரொட்டித்துண்டைத்
தருகிறீர்களா
எனக்கும் பசிக்கிறது
அப்படியா வாருங்கள்
நம் பசியை
பகிர்ந்து சாப்பிடுவோம்
வேட்டையாடும் எழுத்து
பாய்ந்து கவ்வி
வேட்டையாடும் எழுத்து
கவனிக்க
மறந்து விடுகிறது
பூவின் விரிதலையும்
அதன் உள் மனச்
சொற்களையும்
Saturday, May 11, 2013
ஒரே நேரம்
ஒரே நேரம்
நம் இருவர் கண்ணிலும்
கண்ணீர்
பார்த்தபடியே
புன்னகைக்கிறோம்
இந்த உரையாடலை
இதை விட நாம்
சிறப்பாக
முடித்திருக்க முடியாது
Monday, May 06, 2013
விளிம்புக்குப் போகும் வரை
1-
பல்லக்கை
பல காலமாக
சுமந்து செல்கிறோம்
உள்ளே இருப்பது
சாத்தான் என்று
உணராமல்
2-
ஒன்றும் தெரியாத என்னை
மைதானத்தின் விளிம்பில்
நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்
விளிம்புக்குப்
போகும் வரை
விளையாடித்தான்
ஆக வேண்டும்
Saturday, May 04, 2013
முகச்சாயல்
கடந்து போன நபர்
இறந்து போன நண்பனின்
முகச்சாயலில் இருந்தார்
ஒரு கணம் கலங்கி
கண் துடைத்து
அவரைப் பார்த்து
புன்னகைக்க
புன்னகைத்தார்
அதுவும் அச்சு அசலாய்
நண்பனைப் போலிருந்தது
மாதவா என்று
மனதிற்குள்
ஒரு சத்தம்
துள்ளி எழுந்து
அடங்கியது
நண்பன் போய்விட்டான்
அவர் போய்விட்டார்
நான் போய்க் கொண்டிருக்கிறேன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)