Wednesday, November 26, 2014

வனம்

தன் வனத்திற்கு 
வரச் சொல்கிறது 
வரைந்த பட்டாம்பூச்சி 
தன் அறைக்கு 
வரச் சொல்கிறாள் 
வரைந்த குழந்தை

Sunday, November 23, 2014

தண்டவாளம் பக்கத்தில்

அவளே கேள்விக் கேட்டு
அவளே பதிலும் சொன்னாள்

பட்டாம்பூச்சியின் மேல்
ரயில் மோதினால்
என்னாகும்

உயிர் பறந்துப் போகும்

மறுநாள் காலை
தண்டவாளம் பக்கத்தில்
அவள் சடலம் கிடந்தது

அவளைச் சுற்றி
பறந்துக் கொண்டிருந்தன
பட்டாம்பூச்சிகள்

Saturday, November 15, 2014

குட்டிப் பூனை

குட்டிப் பூனை 
உன்னைப் பார்க்க வந்துது 
நீ சத்தம் போட்டதால் 
ஓடிப் போனது 
கீழ்வீட்டுக் குழந்தையிடம் 
விளையாட்டாகச் சொன்னேன் 
பூனைக்காகக் காத்திருக்கிறாள் 
அமைதியாக

Thursday, November 13, 2014

ஒளி வட்டம்

தலைக்குப் பின்னால்
அடிக்கடித் திரும்பிப்
பார்த்துக் கொண்டார்
அவருக்குத் தெரிந்த
ஒளி வட்டம்
மற்றவர்களுக்குத் தெரியவில்லை

Wednesday, November 12, 2014

சொல்/வாக்கியம்

நிற்கும் போது நான் 
சொல் 
சொல்லிப் பாருங்கள் 
நடக்கும் போது நான் 
வாக்கியம் 
படித்துப் பாருங்கள்

மறந்துப் போய் விட்டது

காத்திருப்பது மட்டுமே
மனதில் உள்ளது
எதற்கு
காத்திருக்கிறேன் என்பது
மறந்துப் போய் விட்டது

கதையில் எரிந்த மெழுகுவத்தி

கதையில் எரிந்த 
மெழுகுவத்தியை 
ஊதி அணைத்தேன் 
வார்த்தைகளில் வழிந்து 
பக்கங்களைப் 
படிக்க முடியாமல் 
செய்து விட்டது

Thursday, November 06, 2014

காயத்தின் நிழலில்

காயத்தின் நிழலில் 
வலி இளைப்பாறும் 
என்று எழுதிய வரியை 
மருந்தாக்கப் பார்க்கிறேன் 
ஆனாலும் 
வலிக்கவே செய்கிறது 

பைத்தியக்காரனின் பிரியம்

மழையில்
ஒரு தேநீர் கேட்டு
என்னைத் தொட்டு
முத்தமிட்ட
பைத்தியக்காரனின் பிரியம்
நெகிழச் செய்தது
ஆனாலும்
எல்லோரும் அவனை
விரட்டிய போது
பேசாமல்
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்

Saturday, November 01, 2014

யாரேனும் சொல்லுங்கள்

தற்கொலைக்கு ஓடுபவனை
எதற்குக் கொலை செய்ய
ஓடுகிறீர்கள்
என்ற வரியில் இருப்பவன்
என்ன ஆவான்
யாரேனும் சொல்லுங்கள்

Thursday, October 30, 2014

நான் பார்க்க வந்தவர்

தாமதமாகவே கிளம்பினேன்
நேரே
இடுகாடு வந்துவிட்டேன்
அங்கும் தாமதமாகிவிட்டது
மின் தகனச் சடங்கு
முடிந்திருந்தது
எல்லோரும் போயிருந்தார்கள்
தனியாய்
ஒற்றை ஆளாய்
நின்றிருந்தேன்
சார் யாரப் பாக்கணும்
நான் பார்க்க வந்தவர்
போய் விட்டார்
சொல்லிவிட்டு நடந்தேன்

Wednesday, October 29, 2014

நாங்கள் எங்களுடன்

நான் தனிமையுடன்
பேசினேன்

தனிமை இரவுடன்
பேசியது

இரவு என்னுடன்
பேசியது

நாங்கள் எங்களுடன்
பேசினோம்

Monday, October 20, 2014

சாலை

கலைந்து கிடக்கிறது சாலை 
எவ்வழிப் போவது 
என்ற வரியை 
அழிக்கிறேன் 

Friday, October 10, 2014

மழை நாளில்

கவிதை எழுதுவாள் கௌரி 
ஒரு மழை நாளில் 
அவளுக்குக் குழந்தைப் பிறந்தது 
கண்களில் நீர்த் துள்ள 
இப்படி எழுதினாள் 
மழை நாளில் 
மழையைப் பெற்றெடுத்தேன் 
(கௌரிக்கு)

Wednesday, October 08, 2014

உளி

என்னை உளியாக்கி 
தன் கையில் எடுத்து 
கனவை உடைக்கப் 
பார்க்கிறது இரவு 
கனவு உளியைக் கைப்பற்ற 
எதுவுமற்று 
விழிக்கிறது இரவு 
புரண்டு படுக்கிறேன்
இன்னொரு கனவுடன் 

Friday, October 03, 2014

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1111-

வாசிக்காத புல்லாங்குழல் 
வனத்தில் எறிந்த போது 
இசைத்தபடியே விழுந்தது

1112-

நீண்ட நேரமாக 
நடந்து கொண்டிருக்கிறேன் 
எங்கு போக வேண்டும் என்று 
மறந்து போய் விட்டது

1113-

ஆறுதல் பரிசை 
ஆகாயம் போல் 
வாங்கிக் கொள்கிறீர்கள் 
அந்த நேரத்தில் 
இறந்து போகிறது 
உங்கள் சிறகு




கண்ணீருக்கும் பசிக்கும்

கண்ணீருக்கும் பசிக்கும்
இந்த இரண்டு
சொற்களுக்குள்
கவிதை இருக்கிறதா
தெரியாது
சொன்னவள் இருக்கிறாள்

Wednesday, October 01, 2014

வரும் சத்தம்

வரும் சத்தம் 
நெருங்கி வர 
ரயிலில் 
பயணம் செய்வதாக 
நினைத்தபடியே அவன் 
தண்டவாளங்களுக்கிடையில் 
நடந்து கொண்டிருந்தான்

சிறகைத் தருவாயா

உன் சிறகைத் தருவாயா
நான் அணிந்துப் பறக்க
வானம் கேட்டது
இல்லை
வானம் கேட்பது போல்
பறவை நினைத்தது
மழைத்துளி அதன்
நினைவின்
மேல் விழ
வேகம் கொண்டு போனது

Saturday, September 13, 2014

எப்படிச் சொல்லலாம்

எதிரில் இருந்தவர் 
நாளை மற்றொரு நாளே என்றார் 
பக்கத்தில் இருந்தவர் 
இன்று இன்னொரு நாளே என்றார் 
நேற்றை எப்படிச் சொல்லலாம் 
என்ற யோசனையில் 
நான் இருந்தேன்