Thursday, October 24, 2013

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1047-

கசங்கிய சொல் ஒன்றை 
மெல்லப் பிரிக்கிறேன் 
வெளி வரும் காற்றில் 
பாடல் கேட்கிறேன்

1048-

புல்லென அசையும் 
அமைதியின் அடியில் 
நான் உதிர்ந்து கிடக்கும் 
பனித்துளி

1049-

கால்களின் புழுதியில் 
பாதை முகம் 
பார்க்கிறது 

1050-

மீட்டெடுக்க 
தொலைந்தாக வேண்டும்

1051-

கனவில் மிதந்த சொற்கள் 
அந்திக் கருக்கலில் 
பறவைகளாயின

1052-

எப்படித்தான் 
கலைத்துப் போட்டாலும் 
இதுதான் நான்

1053-

இந்த ரொட்டி 
பசியை 
அழகாக்குகிறது

1054-

ஊதிய பனித்துளி 
நதியாகி 
என்னை மூடியது 

1055-

வழி அனுப்பி 
வைத்த கண்ணீர் 
வழி சொல்லிப் போனது





Monday, October 21, 2013

நீந்துகிறது

தூண்டிலில் 
சிக்கிய மீன் 
மரணத்தில் 
நீந்துகிறது

காலம் வைத்திருக்கும் பதில்

நாம் சந்திக்கப்போகும்
அந்த நாள்
எங்கிருக்கிறது
கேட்கிறாய்
கேட்கிறேன்
கேட்கிறோம்
காலம் வைத்திருக்கும் பதில்
விரைவில்
நம் கைக்கு
கிடைக்கக்கூடும் 

Sunday, October 20, 2013

மெளனத்தின் கேள்வி

இந்த உரையாடலை 
எப்படி முடிக்கப் போகிறோம் 

இந்த உரையாடலை 
எப்படி தொடங்கப் போகிறோம் 

நமக்கிடையில் 
மெளனம் வைத்திருக்கும் 
கேள்வி இது 

வாருங்கள் 
தொடங்குவோம் 

மெளனத்திலிருந்தும் 
கேள்வியிலிருந்தும்

Saturday, October 19, 2013

மிதக்கும் சொற்கள்

மிதக்கும் சொற்களைத்
தொட்டுத் திரும்புகிறேன்
விரல்களில் ஒட்டி இருக்கிறது
சொர்க்கத்தின் வண்ணம்

விரிந்த புத்தகம்

விரிந்த புத்தகத்தின் 
எழுத்துக்களை 
காற்று இழுத்துக் கொண்டு 
போகிறது
வெள்ளைத் தாளாக 
மாறி விட்டப் புத்தகம் 
காது கொடுத்துக் கேட்கிறது
காற்றின் பாடலை

Friday, October 11, 2013

வேறு முகம்

இந்த முகம் 
என் முகம் என்று 
வரைகிறீர்கள் 
உங்கள் வண்ணங்களில் 
ஒளிந்திருக்கிறது 
என் வேறு முகம்

என்னைக் கொல்வதற்கு முன்

என்னைக் கொல்வதற்கு முன் 
ஒரு எளிய விண்ணப்பம் 
இந்தச் சவப்பெட்டி 
எனக்குச் சரியாக இருக்கும் 
என் மரணம் உங்களுக்கு 
சரியாக இருக்குமா பாருங்கள்

Tuesday, October 08, 2013

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1036-

பஞ்சு போன்ற 
சொற்களை வைத்து 
மிதக்கப் பார்க்கிறேன் 
ஆனாலும் 
அழுத்துகிறது கனம்

1037-

மனதில் புகுந்த தூசி 
ஊதித் தள்ள
ஒளியும் வேறிடம்

1038-

மெளனம் எளிதில் 
வரைந்து விடுகிறது
சொற்களுக்குத்தான் 
வண்ணங்கள் போதவில்லை

1039-

எப்போது வேண்டுமானாலும் 
எதை வேண்டுமானாலும் 
மனம் மாற்றி மாற்றி 
வைத்துப் பார்க்கும் 
வெற்றுச் சதுரம் 
எனக்குப் பிடிக்கும்

1040-

குழந்தை வரைந்த 
கோடுகளில் 
கடவுள் நடந்து போகிறார்

1041-

பறவை இல்லாத
வானம்
துயரம் படிந்த 
கானம்

1042-

போதையிடம் கேட்டேன் 
நான் எங்கிருக்கிறேன் 

விழுந்தால் 
உடையும் உயரத்தில் 
போதை சொன்னது

1043-

துளி துளியாய் 
மனம் மேல் 
விழும் அமைதி 
சத்தம் எழுப்புகிறது

1044-

வலிகள் எனக்காக 
பிரார்த்தனை 
செய்கின்றன

1045-

விரல் நுனி 
பனித்துளி 
முழு உடல் 
வனமாக்கும்

1046-

சொல்ல என்னிடம் 
சொற்கள் இல்லை
கனவுகள் உண்டு













Friday, October 04, 2013

முன் வரி வரை

கூடுதலாக எழுதப்பட்ட 
வரியில்தான் 
நான் உன்னைக் 
கொன்று விட்டேன் 
அதற்கு முன் வரி வரை 
உயிரோடு இருந்தாய்

மிதந்தபடி

உதிர்ந்து கொண்டிருக்கும் இதழ் 
உதிர்ந்து கொண்டிருக்கும் நான் 
பார்த்துக் கொண்டிருந்தோம் 
மிதந்தபடி

Saturday, September 28, 2013

திரைக்கதைக் கலை

இல்லாததை இருப்பதாக்கும் 
திரைக்கதைக் கலை 
நம் எல்லோரிடமும் இருக்கிறது
என்றார் நண்பர்

என்னிடம் இல்லையே என்றேன் 

உடல் அதிர 
சிரித்து முடித்தார்

போல்

நதியைப் போல் 
நீந்துகிறது மீன்
மீனைப் போல் 
நீந்துகிறேன் நான்

Friday, September 27, 2013

கணக்கும் வழக்கும்

இருளிடம் கேட்டேன் 
உன்னிடம் எத்தனைக் 
கோடிப் பொய்கள் இருக்கும் 

கண் சிமிட்டிச் சொன்னது 
போட்டுவிட்டுப் போகும் 
உங்களிடம்தானே இருக்கும் 
கணக்கும் வழக்கும்

பொய்கள்

நான் பொய்களால் ஆனவன் 
எனக்கு உங்கள் 
சவப்பெட்டிப் போதும் 
என் பொய்களுக்கு 
நீங்கள் நிறைய 
மரங்களை வெட்ட வேண்டும்

Thursday, September 26, 2013

மிதந்த கனவு

கண்ணீரில் 
மிதந்த கனவு 
விழுந்து உடையாமல் 
பறந்து போனது

ஒற்றைச் சிறகில்

கிளை அசைத்துப் 
போகிறது பறவை 
ஒற்றைச் சிறகில் 
பறப்பது போல் 
உணர்கிறது மரம்

Tuesday, September 24, 2013

பலூன்

வெடிக்கவே இல்லை 
இந்த பலூனை 
இன்னும் 
ஊதிக் கொண்டிருப்பது 
சோர்வைத் தருகிறது

உள்ளிருந்த சிலை

தவம் செய்த கல்லைத் 
தள்ளி விட்டேன் 
உள்ளிருந்த சிலை 
வெளி வந்து 
நடந்து போனது

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1028-

வேறு குரலில் 
பேசுகிறீர்கள் 
உங்கள் உதட்டசைவில் 
பொய் வழிகிறது

1029-

இந்த வனத்தில் 
நான் தொலைந்து 
சில காலம் ஆகிறது 
முளைத்து 
பல காலம் ஆகிறது

1030-

இருள் பெய்கிறது
நனையாமல் 
நடக்கிறேன்

1031-

என்னைத் தொலைத்து 
பிரபஞ்சத்தைக் 
கண்டெடுத்தேன்

1032-

காத்திருந்த போது 
உறங்கிப் போனேன்
எழுந்த போது 
மறந்து போனேன்

1033-

நான் ஆடு
நீங்கள் இரக்கம் வாங்க 
வந்திருக்கிறீர்கள்

1034-

இது உனக்கு 
நான் தரும் வரிகள் 
எடுத்து சுவரில் 
மாட்டி விடாதே 
கால்களில் 
போட்டுக் கொண்டு நட

1035-

அவ்வளவு எளிதில் 
நீங்கள் என்னைக்
கடந்து போய் விட 
முடியாது.
நான் சாலையின் வேர்.