ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Friday, September 20, 2013
வரியின் அடியில்
இந்த வரியின் அடியில்
எதுவுமில்லை
இந்த வரியின்
நிழல்தான் இருக்கிறது
வேறு ஒரு
வரியின் வடிவில்
Monday, September 16, 2013
வந்து சேரவில்லை
கண்ணீரால் கப்பல் செய்து
நதியில் மிதக்க விட்டு
மறு கரைக்கு
ஓடிப் போய் நின்று
வருமா என்று பார்க்கிறாள்
வெகு நேரமாக
நதி வந்தது
கண்ணீர் வந்தது
கப்பல் மட்டும்
வந்து சேரவில்லை
மதம் பிடித்த பசி
ஒற்றை பருக்கையில்
முழு யானையை
அடைத்தேன்
பிறகு உண்டேன்
மதம் பிடித்த பசி
மறைந்து போனது
Sunday, September 15, 2013
கல்லின் பெயர்
நீங்கள் எறிந்த கல்லில்
உங்கள் பெயர்
எழுதி இருக்கிறது
ஏன் இல்லை
என்கிறீர்கள்
மன்னிக்கவும்
அது என் பெயர் அல்ல
கல்லின் பெயர்
Tuesday, September 10, 2013
நன்றியின் வண்ணங்கள்
பேருந்தில்
நின்றிருக்கும் முதியவருக்கு
ஒரு இருக்கை வரைந்து
அமரச் சொல்கிறாள் மான்யா
இறங்கும் இடம் வர
எழும் பெரியவர்
நாற்காலியின் வண்ணத்தால்
குழந்தையின் உள்ளங்கையில்
நன்றி என்று
எழுதி விட்டுப் போகிறார்
Thursday, September 05, 2013
வந்து சேர்ந்த பின்
எங்கோ போகிறது
என் நிழல்
எதுவும் கேளாமல்
காத்திருக்கிறேன்
வந்து சேர்ந்த பின்
புறப்பட வேண்டும்
உச்சியிலிருந்து
உச்சியிலிருந்து
உங்களைத் தள்ளி விட்டேனே
எப்படி உயிருடன்
இருக்கிறீர்கள்
தள்ளியபோது
நகர்ந்து கொண்டேன்
விழுந்து இறந்த
நீங்கள்தான் என்னுடன்
பேசிக் கொண்டிருக்கிறீர்கள்
தேடுகிறாய்
உதிரம் மழையெனப்
பெய்கிறது
உன் ஆயுதத்திலிருந்து
நீ தலைத் துவட்டிக் கொள்ள
உயிர்கள் தேடுகிறாய்
Tuesday, September 03, 2013
அனுபவ சித்தனின் குறிப்புகள்
1020-
தட்டினால் திறக்கத்
தயாராக இருக்கிறது கதவு
நீங்கள் காத்துக்
கொண்டிருக்கிறீர்கள்
கதவு பார்த்துக்
கொண்டிருக்கிறது
1021-
இரவைத் தொட்டு
உண்ணும் கனவுக்கு
என் பசித் தெரியுமா
1022-
இந்த மனதைக்
கடந்து விடுவதுதான்
வாழ்நாள் முழுமைக்குமான
போராட்டம்
1023-
இரவைத் தொட்டு
உண்ணும் கனவுக்கு
என் பசித் தெரியுமா
1024-
இந்த இருளைக்
கடந்து வந்தது
இருளின் ஆசிகளால்தான்
1025-
என் தற்கொலைதான்
என் வாழ்வின் செய்தி
என்ற வரியிலேயே அவன்
தூக்கிட்டுக் கொண்டான்
1026-
ஊதி நகர்த்திய மலை
என்ற வரியை
மலைகளுக்குச் சமர்ப்பிக்கிறேன்
1027-
கவனமாக
என் பெயரைத்
தவிர்க்கிறீர்கள்
மனதிற்குள்
உச்சரித்துப்
பார்க்கிறீர்கள்.
Sunday, September 01, 2013
மீதிக் கேள்விகள்
கையிலிருந்த ரப்பரால்
ஒவ்வொரு கேள்வியாக
அழித்துக் கொண்டே வந்தேன்
ரப்பர் முடிந்திருந்தது
மீதிக் கேள்விகளில்
இருந்த உயிர்
என்னைக்
கொன்று விடுவது போல்
பார்த்துக் கொண்டிருந்தது
Friday, August 30, 2013
பாடம்
பறக்கும் பாடத்தைப்
பறவைக்குச்
சொல்லித் தருகிறீர்கள்
அதைச் சிறகை வெட்டும்
முன் செய்திருக்கலாம்
அனுபவ சித்தனின் குறிப்புகள்
1016-
மறந்து போன
இடத்தில்
பழைய கனவொன்று
புதிதாக
என்னைப் பார்க்கிறது
மறந்து விடாமல்
1017-
நின்று இளைப்பாற
நிழலில்லை
இந்த வெயில்
எனக்காக
வேறு ஏதோ
செய்தியை
வைத்திருக்கக்கூடும்
1018-
வட்டம் எங்கே
என்று தேடினேன்
மையத்தில்
ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது
1019-
வண்ணங்களைக்
கொட்டிவிட்டு
ஓவியங்களை
எடுத்துக் கொண்டேன்
Monday, August 26, 2013
மன்னித்துக்கொள்
மனதில் சொருகப்பட்ட
கத்திகளை எடுக்கும் போது
நினைவில்
உன் பெயரும்
வந்து போகிறது
மன்னித்துக்கொள்
எதிரில் சந்தித்தேன்
மழையில் நனைந்து
சென்ற கனவை
எதிரில் சந்தித்தேன்
தொலைவில்
போன பின்புதான்
தெரிந்தது
அது என்
கனவு என்று
Saturday, August 24, 2013
எது சரி
மிருகங்களுக்கு மத்தியில்
வாழ்கிறோம்
மிருகங்களாக
வாழ்கிறோம்
எது சரி
கேட்கிறார் நண்பர்
எது சரி
கேட்கிறேன் நான்
எது சரி
சொல்லுங்கள் நீங்கள்
Friday, August 23, 2013
தொங்கும் சொல்
பிரபஞ்சத்தைப் பிடித்து
தொங்கும் சொல்
ஊஞ்சலாகி விடுகிறது
உடைத்த எனக்கு
உடைந்த வார்த்தைகள்
வலிகளைத்
தருவதென்னவோ
உடைத்த எனக்குதான்
வத்திப்பெட்டி அறையில்
வானம்
உள்ளங்கையில்
இனி இந்த
வத்திப்பெட்டி அறையில்
வருத்தங்களின்றி
உறங்கலாம்
எதை எப்போது
நாவின் அடியில்
கத்திகள்
நாவின் மேல்
பூக்கள்
பேசிடும் நாவுக்குதான்
தெரியும்
எதை எப்போது
எடுக்கும் என்று
Thursday, August 22, 2013
எனக்குள்ளிருந்த யானை
மதம் பிடித்த
திமிரை அடக்க
பாகனானேன்
எனக்குள்ளிருந்த யானை
வெளியேறியது
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)