Friday, May 03, 2013

சீட்டு விளையாட்டு

சாத்தானுடன் 
சீட்டு விளையாடியது 
தப்பாய் போயிற்று 
அது என் 
தோல்விகளை வைத்து 
விளையாடிக் கொண்டிருந்தது

பதில் இல்லை

சவப்பெட்டிக்கு
வண்ணம் பூசினேன்
மரணம் அழகானதா
சவப்பெட்டிக் கேட்டது
பதில் இல்லை
கண்ணீர்த் துளி
சவப்பெட்டியின் மேல்
விழுந்தது

Thursday, May 02, 2013

நமக்குள் சுழலும் இசை

இசை நாற்காலி விளையாட்டில் 
இறுதிச் சுற்றில் 
நாம் இருவர் மட்டுமே 
ஓடிக் கொண்டிருக்கிறோம் 
எல்லோரும் வெளியேறி விட்டனர் 
இசைத்தட்டு சுழல்வதை நிறுத்தி 
நீண்ட காலமாகிறது 
நீ அமர்ந்துவிட வேண்டும் 
என்று நானும் 
நான் அமர்ந்து விட நீயும் 
ஓடிக்கொண்டிருக்கிறோம்
நமக்குள் சுழலும் இசை 
நிற்கவே இல்லை 

Monday, April 29, 2013

ஒரு பறவை

என் விரலை 
கிளை என நினைத்து 
வந்தமர்ந்து 
உள்ளங்கை நீரைக் 
குடித்துப் போகிறது 
ஒரு பறவை 
பறந்து போகையில் 
மரமாகவும் 
நினைத்திருக்கக் கூடும் 

உங்களுக்குத் தெரியாது

கடைசிக் காட்சியை மட்டும் 
பார்க்க அனுமதிக்கிறீர்கள் 
இதுவரை நான் 
உங்கள் கதாபாத்திரங்களோடு 
பேசிக்கொண்டிருந்தது 
உங்களுக்குத் தெரியாது

Wednesday, April 24, 2013

நினைவின் அடுக்குகளில்


நினைவின் அடுக்குகளில் 
எந்த அடுக்கில் 
இருக்கிறாய் என்று 
தேடித் தேடி 
களைத்துப் போய் 
உறங்கி விட்டேன் 
உறக்கத்தின் அடுக்குகளில் 
விளையாடத் தொடங்குகிறாய்

ஓடுபவர்கள்


எனது கனவில் 
ஓடும் குதிரையும் 
குதிரையின் கனவில் 
ஓடும் நானும் 
வேகத்தில் 
வித்தியாசப்படலாம் 
ஆனால் ஓடுபவர்கள்

Tuesday, April 16, 2013

கல் சுவர்

கல் சுவரில் மோதி 
கண்ணாடிப் பட்டாம்பூச்சி 
உடைந்து போனது 
சில சில்லுகள் கிடந்தன 
பல சில்லுகள் பறந்தன

Friday, April 12, 2013

என்ன யோசனை


சட்டென நிறுத்திய நண்பர்
என்ன யோசனை என்றார்

தெரியவில்லை 
என்றேன்

யோசனையா
என்னையா
கேட்டார்

சிரித்தேன்

சிரிப்பின் காரணம் கேட்டார்

தெரியவில்லை 
என்றேன்

வேகமாகப் போய்விட்டார்

நடந்தேன்

என் கவலை எல்லாம்
திடீரென்று
இன்னொரு நண்பரை
இது போல்
சந்தித்து விடக்கூடாது
என்பதுதான்

தடுத்தது குரல்

கேசவா
என்ன யோசனை


Thursday, April 11, 2013

அழிந்து கொண்டே வரும் வரி


முயலைப் பார்த்தபோது 
குழந்தை இல்லை 
குழந்தையைப் பார்த்தபோது 
முயல் இல்லை 
முயல்குட்டியைப் போல் 
ஓடுகிறாள் குழந்தை 
என்ற வரி 
அழிந்து கொண்டே வந்தது 

மான்யாவின் கடல்


கடல் பாத்து முடிச்சாச்சா 
போகலாமா 
கேட்கிறேன் மான்யாவிடம்
சிரித்துச் சொல்கிறாள்
அய்யோ அப்பா 
கடலப் பாத்துக்கிட்டே இருக்கணும் 
அது முடியவே முடியாது

Tuesday, April 09, 2013

கண்ணில்

யுத்தம் பற்றி 
எழுதிய கவிதையை 
சமாதானப் புறாவிடம் 
படித்துக் காட்டினேன் 
குருதியின் வலியை 
குறைத்திருக்கலாமே என்றது 
அப்போது 
அதன் கண்ணில் 
நீர் வடிந்தது 

Monday, April 08, 2013

காணவில்லை


நீல நிறப் பூனை
பக்கத்தில் 
பச்சை நிற எலி 
வரைந்தாள் மான்யா
நிறங்கள் சிதறிக் கிடக்க 
இரண்டையும் காணவில்லை

திரை


திரை விழுந்து விட்டது 
நாடகம் முடிந்து விட்டது 
எல்லோரும் 
வெளியேறி விட்டனர் 
நான் இன்னும் 
கதாபாத்திரத்தை விட்டு 
வெளியேறவில்லை

Wednesday, April 03, 2013

விளையாடு

இப்படித்தான் காய் 
நகர்த்துவார்கள் 
வியூகம் குறித்து 
விவாதிக்காதே 
விளையாடு 

Saturday, March 30, 2013

ஒரு பூ

சிதறிக் கிடந்த 
உதிரிப்பூக்களை 
மிதிக்காமல் 
கடந்து போனதில் 
பூத்துப் போனது 
மனதில் 
ஒரு பூ

Friday, March 29, 2013

கடிதத்தின் வரிகள்

பெரியவர் சொல்ல சொல்ல 
கடிதம் எழுதுகிறேன் 

நன்றி சொல்லி 
வாங்கிப் போகிறார் 
போட

கடிதத்தின் வரிகள் 
மையாகி 
என் விரலில் 
பிசுபிசுத்துக் கொண்டே 
இருக்கிறது

Tuesday, March 26, 2013

நாவின் அடுக்கில்


நாவின் மேலடுக்கில் 
பொய்களும் 
கீழடுக்கில் 
உண்மைகளும்
நாவின் அடுக்கில் 
இரண்டும்

Monday, March 25, 2013

எழுத்து


உங்கள் எழுத்தில் 
தூசி ஒட்டிக் கிடக்கிறது 
துடைக்கப் போகிறீர்களா 
அழிக்கப் போகிறீர்களா

Sunday, March 24, 2013

இல்லாத ஒன்று


இல்லாத ஒன்றில் 
இல்லாத ஒன்றை 
நிரம்பும் 
இல்லாத நான்