சாலையோரம்
படுத்துக்கிடப்பவன்
கொசுக்களோடு போராடுகிறான்
பதில் சொல்ல முடியாமல்
தவிக்கிறான்
யாருமே இல்லயா
குரல் உள்ளிருந்து வருகிறது
எனச்சொல்லி
கண்ணீர் வழிகிறது
எழுகிறான்
பாதி பீடியைப்
பற்ற வைக்கிறான்
பீடியின் புகையோடு
கலக்கிறது
துயரப் புன்னகை
போலீஸ் ஜீப்
அருகில் வந்து
நிற்கிறது
அவனைக் கேள்விகளால்
குடைகிறார்கள்
பசியின் குரலில் சொல்கிறான்
அய்யா என்ன
இப்படியே விட்டுட்டுப்
போனா போங்க
இல்ல கூப்பிட்டுப்போயி
உள்ளப் போடுங்க
வேலத் தேடி
பட்டணம் வந்தேன்
நான் தொலையறதுக்குள்ள
கிடைச்சிடும் நம்பறேன்
நாளைக்கு ஒரு எடத்துல
வரச்சொல்லி இருக்காங்கா
இன்னும் சில நாட்களில்
ஓய்வு பெறப்போகிற போலீஸ்காரர்
குறுக்கும் நெடுக்கும்
சிந்தனைகள் ஓட
போகலாம் என
டிரைவரிடம்
சொல்கிறார்
ஜீப்பைப் பார்த்து
எதிர் திசையில் நடக்கிறான்
யாருமே இல்லையா
சத்தம் போட்டுச் சொல்கிறான்
இப்போது
கண்ணீர் இல்லை
அவன் குரல் அசைக்கிறது
No comments:
Post a Comment