Thursday, May 29, 2014

ஒரு சித்திரம்

அந்த மின்விசிறி
அவளுக்கு மிகவும் பிடிக்கும்

அதை ஒரு
தொங்கும் கவிதையைப் போல ரசிப்பாள்

சுழலும் ஓவியம் போல பார்ப்பாள்

அது தரும் காற்று
தன்னோடு பேசுவது போல உணர்வாள்

பெஞ்ச் மேல் ஏறி நின்று
குதிகால் தூக்கி
எட்டிப் பிடிக்கும் குழந்தையைப் போல
அதை அழகாய் துடைப்பாள்

அப்போது ஒரு பாடலை முணுமுணுப்பாள்

குளிர் காலத்தில்
மின் விசிறி ஓய்வெடுக்கும்

ஓடாத அதன் மெளனம்
அவளை நிம்மதி
இழக்கச் செய்யும்

ஒரு முறை பழுதடைய
உடனே போன் செய்து
எலக்ட்ரீஷியனை
வர வைத்து
சரி செய்து
ஓடியவுடன்
முகம் துடைத்து
பெருமூச்சு விட்டாள்

கனவில் வரும் அம்மாவின்
கை விசிறி போல
இதன் மீதும்
அவளுக்குப் பிரியம் அதிகம்

மின்விசிறிப் பற்றி
சின்ன சின்ன கவிதைகளை
எழுதி வைத்திருக்கிறாள்

உன் காற்றைப் போல
நானும் மறைந்து போவேன்
என்ற வரியை
ஆழமாய் முணுமுணுத்தபடியே
ஒரு மழை இரவில்
அந்த மின்விசிறியில்
தொங்கிப் போனாள்



No comments:

Post a Comment