Friday, August 30, 2013

பாடம்

பறக்கும் பாடத்தைப்
பறவைக்குச்
சொல்லித் தருகிறீர்கள்
அதைச் சிறகை வெட்டும்
முன் செய்திருக்கலாம்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1016-

மறந்து போன 
இடத்தில் 
பழைய கனவொன்று 
புதிதாக 
என்னைப் பார்க்கிறது 
மறந்து விடாமல்

1017-


நின்று இளைப்பாற 
நிழலில்லை 

இந்த வெயில் 
எனக்காக 
வேறு ஏதோ 
செய்தியை 
வைத்திருக்கக்கூடும்

1018-

வட்டம் எங்கே 
என்று தேடினேன் 
மையத்தில் 
ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது 

1019-

வண்ணங்களைக் 
கொட்டிவிட்டு 
ஓவியங்களை 
எடுத்துக் கொண்டேன்



Monday, August 26, 2013

மன்னித்துக்கொள்

மனதில் சொருகப்பட்ட 
கத்திகளை எடுக்கும் போது 
நினைவில் 
உன் பெயரும் 
வந்து போகிறது 
மன்னித்துக்கொள் 

எதிரில் சந்தித்தேன்

மழையில் நனைந்து 
சென்ற கனவை 
எதிரில் சந்தித்தேன் 

தொலைவில் 
போன பின்புதான் 
தெரிந்தது 
அது என் 
கனவு என்று

Saturday, August 24, 2013

எது சரி

மிருகங்களுக்கு மத்தியில்
வாழ்கிறோம்

மிருகங்களாக
வாழ்கிறோம்

எது சரி
கேட்கிறார் நண்பர்

எது சரி
கேட்கிறேன் நான்

எது சரி
சொல்லுங்கள் நீங்கள் 

Friday, August 23, 2013

தொங்கும் சொல்

பிரபஞ்சத்தைப் பிடித்து
தொங்கும் சொல்
ஊஞ்சலாகி விடுகிறது

உடைத்த எனக்கு

உடைந்த வார்த்தைகள்
வலிகளைத்
தருவதென்னவோ
உடைத்த எனக்குதான் 

வத்திப்பெட்டி அறையில்

வானம் 
உள்ளங்கையில்
இனி இந்த 
வத்திப்பெட்டி அறையில் 
வருத்தங்களின்றி 
உறங்கலாம் 

எதை எப்போது

நாவின் அடியில் 
கத்திகள் 

நாவின் மேல் 
பூக்கள் 

பேசிடும் நாவுக்குதான் 
தெரியும் 

எதை எப்போது 
எடுக்கும் என்று

Thursday, August 22, 2013

எனக்குள்ளிருந்த யானை

மதம் பிடித்த 
திமிரை அடக்க 
பாகனானேன் 
எனக்குள்ளிருந்த யானை
வெளியேறியது

Monday, August 19, 2013

மற்ற சொற்கள்

ஒற்றைச் சொல்லை 
மீன் தொட்டியாக்கினேன் 
மற்ற சொற்கள் 
வந்து நீந்த

அந்தரங்கத்தில்

அந்தரங்கத்தில் 
தொங்குகிறது 
என் நிர்வாணம் 
ஈ மொய்க்கும் 
இறைச்சி என

Sunday, August 18, 2013

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1009-

ஒளிந்து கொண்ட
கனவுக்குள்
வனம் இருந்தது
என்னை ஒரு
சிங்கமாக்கி
வெளி அனுப்பியது

1010
நினைவில் 
தவமிருக்கும் 
கண்ணீர்த்துளி

1011-
கனவில்
தொலையுங்கள்
கனவைத்
தொலைக்காதீர்கள்

1012-
உன் மௌனத்தில்
நீந்தும் மீன்தான்
என்னைப் பார்த்து 
சொற்களைத் துப்புகிறது 

1013-

வந்து சேர்ந்த வரியில்
யாரோ இருந்து
போன தடம்

1014-

மன்னிக்கப்
பழகிக் கொண்டீர்கள்
குற்றவாளிகள் 
அதிகமாகி விட்டார்கள்

1015-

அழித்த வரி கேட்டது
என் ஆயுள்
அவ்வளவுதானா என்று












Saturday, August 17, 2013

தெரியவில்லை

பக்தனுக்கு 
கடவுள் தெரிந்தார் 

கடவுளுக்கு 
பக்தன் தெரிந்தான் 

பூசாரிக்கு 
இருவருமே தெரியவில்லை

Sunday, August 11, 2013

விடிகையில்

நள்ளிரவில் 
மிதந்து மிதந்து 
வானத்தில் போய் 
ஒட்டிக் கொண்டேன் 
விடிகையில் 
துளியாய் 
வந்து விழிந்தேன்