Sunday, July 19, 2015

எனது பிரார்த்தனை

கதை படிக்கும் முதியவரை
வரைந்து காட்டுகிறாள் குழந்தை
எனது பிரார்த்தனை எல்லாம்
அவர் இறந்து போவதற்குள்
அந்தப் புத்தகத்தை
படித்து விட வேண்டும்
என்பதுதான்

அம்மணமாக ஓடுகிறான்

அம்மணமாக ஓடுகிறான்
பைத்தியக்காரன் என்றவர்கள்
வேடிக்கைப் பார்த்தார்கள்
அம்மணமாக ஓடுகிறான்
மனிதன் என்றவர்
ஆடை கொடுக்க
ஓடிக்கொண்டிருந்தார்

Wednesday, July 15, 2015

அருகில்...

அருகில் போய்
விலக்கி இருக்கலாம்
காப்பாற்றி இருக்கலாம்
ஏதேனும் செய்திருக்கலாம்
வன்மம் மோதி
மனிதம் சாய்ந்தது
என்ற வரியுடன்
தன் கடமையை
முடித்துக் கொண்டார்

Tuesday, July 14, 2015

தற்கொலைக் கவிதை

தண்டவாளத்தில்
தலை வைத்து
அவன் தற்கொலைக் கவிதையை
யோசித்துக்கொண்டிருந்தான்

Sunday, May 31, 2015

வியூகங்கள்

பாதைகளை
மாற்றி வைக்கிறீர்கள்
வியூகங்களால்
வந்தடைகிறேன் 

Saturday, May 16, 2015

ரயில்

ரயில்
ஓட்டுபவரின் கண்களால் பார்க்கிறது
என்றாள் குழந்தை
அப்போது ரயில்
ஒரு பாலத்தின் மீது
போய்க் கொண்டிருந்தது
அதை நான்
குழந்தையின் கண்களால்
பார்த்துக் கொண்டிருந்தேன்

Monday, April 27, 2015

என்னைப் பார்த்து

என்னைப் பார்த்து
கருணையோடு
புன்னகைக்கும் பெண்ணுக்கு
பார்வை இல்லை என்று
நீங்கள் சொல்வதை
என்னால் ஒப்புக்கொள்ள முடியாது

Tuesday, April 21, 2015

எப்படி கிடைத்தாய்?

ஒரு முறை
தான் தொலைந்து போனதை
சொன்னாள் சிறுமி மன்யா

எப்படி கிடைத்தாய்?
கேட்டேன்

நானே கண்டுபிடித்து
வந்து விட்டேன்
என்று சொன்னாள்
ஆச்சரியமாக

Wednesday, April 15, 2015

நள்ளிரவில்

நள்ளிரவில்
பீடி புகைத்தபடி
போஸ்டர் ஒட்டியவரிடம்
கேட்டேன்
படம் நல்லா இருக்குமா
பசையை பிசைந்தபடி சொன்னார்
படம் ஓடனா
அவுங்களுக்கு நல்லா இருக்கும்
வாழ்க்கை ஓடன
நமக்கு நல்லா இருக்கும்

Tuesday, April 14, 2015

உணராமல் போனோம்

பேசத்தான் வந்தோம்
பேசினோம்
பிரிந்துப் போனோம்
மீதி இருக்கும்
இந்தச் சொற்களில்தான்
உண்மையான உரையாடல்
இருந்தது என்பதை
ஒருவரும்
உணராமல் போனோம்

Friday, April 03, 2015

மூன்று பொம்மைகள்

மிகப்பெரிய பொம்மையை
கேட்கிறாள் குழந்தை
மிகச்சிறிய பொம்மையை
எடுக்கிறார் அப்பா
இரண்டுக்கும் நடுவில்
இருக்கும் பொம்மையை
பார்க்கிறாள் அம்மா

Thursday, March 26, 2015

வண்ணங்கள் களைப்படையும் போது


வரைந்து முடித்து 
விழித்திருக்கும் சிங்கம் 
என்று பெயர் வைத்தாள் மான்யா

உன் சிங்கம் 
எப்போது உறங்கும் 
கேட்டேன் 

உடனே சொன்னாள் 
வண்ணங்கள் 
களைப்படையும் போது

Sunday, March 22, 2015

சுவர்

நீ ஒரு 
கல் வைத்தாய் 
நான் ஒரு 
கல் வைத்தேன் 
நமக்கிடையே 
ஒரு சுவரை 
உருவாக்கிக் கொண்டோம்

Wednesday, March 18, 2015

இருந்தது

என் ஸ்வெட்டரைப் பார்த்த
பெரியவரின் கண்களில்
நடுக்கம் இருந்தது

நடந்தேன்

இப்போது என்னிடம்
நடுக்கம் இருந்தது

பெரியவரிடம்
ஸ்வெட்டர் இருந்தது

Tuesday, March 10, 2015

கதாபாத்திரங்கள்

மது அருந்திக்கொண்டிருந்தனர் 
கதாபாத்திரங்கள் 
எனக்குக் கொஞ்சம் 
கிடைக்குமா 
கேட்டேன் 
எழுத்தின் போதை 
போதும் உனக்கு 
எனச் சொல்லி 
கதவடைத்துக் கொண்டனர்

Saturday, March 07, 2015

கூடு

கூடு விட்டு
கூடு பாயும்
ஒருவரை சந்தித்தேன்
இப்போது
எந்த கூடு என்றேன்
இதற்கு பதில்
சொல்வதற்குள்
மாறி இருக்கலாம்
கேள்வியைத்
தவிர்த்து விடலாமே என்றார்











Thursday, March 05, 2015

பூங்கொத்து

பூங்கொத்து வாங்கிக்கொண்டு புறப்பட்டேன்
வழியில் குழந்தை வாங்கிக்கொண்டது
வெறும் கையுடன் உன்னைச் சந்தித்து
விஷயத்தைச் சொன்னேன்
குழந்தை போலச் சிரித்தாய்
அப்போது
நான் தந்தப் பூங்கொத்தை
அந்தக் குழந்தை
உன் கையில்
தந்து கொண்டிருந்தது

Wednesday, March 04, 2015

பிரியமும் விஷமும்

வேறு வழியின்றி
உன்னைக் கொல்ல
வந்திருக்கிறேன்
தேநீர் தருகிறாய்
உன் கண்களைப் பார்த்தபடி
அருந்துகிறேன்
உன்னைப் காப்பாற்ற
நீ தந்த
பிரியமும் விஷமும் கலந்த
இந்த தேநீரை
நான் அருந்திதான் ஆகவேண்டும்

Thursday, February 19, 2015

பிரபஞ்சத்திலிருந்து

பூ வரைந்தாள் மான்யா 
வாசம் 
வண்ணத்திலிருந்து வருகிறதா 
ஓவியத்திலிருந்து வருகிறதா
கேட்டேன் 
பிரபஞ்சத்திலிருந்து 
பதில் சொன்னாள்

Friday, February 13, 2015

வழியில்

வரும் வழியில்
முடிவை
மாற்றிக் கொண்டிருந்தால்
வாழ வழி இருந்திருக்கும்
விழும் வழியில்
அது தோன்றியதால்
முடியாமல் போயிற்று