Wednesday, June 26, 2013

கதைக்காரன்

நீங்கள் யார்

கதைக்காரன்

சொல்வீர்களா

அதெல்லாம் முடியாது
வேண்டுமானால்
என் கண்களைப் பார்த்து
படித்துப் போ

Wednesday, June 19, 2013

சுடரிடம் கேட்டேன்

மனதால் உன்னை 
ஊதி அணைத்து விட்டேன் 
இன்னும் ஏன் 
அசைகிறாய் 
சுடரிடம் கேட்டேன்

அசைவது 
உன் மனம்தான் 
சுடரல்ல 
இருள் சொன்னது

Sunday, May 19, 2013

சுழலும் கேள்விகளும் பதில்களும்


நீங்கள் யார் 

நான் யாரோ 

யாரோ என்றால் 

யாரோ என்றால் 
யாரோதான் 

சரிதான் 
தெரியாத ஒன்று 
உங்களுக்கு 
எப்படித் தெரியும் 

தெரிந்தால் வந்து 
சொல்கிறேன் 

ஆமாம் 
நீங்கள் யார்

நான் யாரோ 

யாரோ என்றால் 

யாரோ என்றால் 
யாரோதான் 

சரிதான் 
தெரியாத ஒன்று 
உங்களுக்கு 
எப்படித் தெரியும் 

தெரிந்தால் வந்து 
சொல்கிறேன் 

Monday, May 13, 2013

கடைசிச் சொல்

1-

இந்த வரியை 
எப்படி நெய்தீர்கள் 

என் 
நிர்வாணத்தால்

2-

ஒவ்வொரு சொல்லும் 
உதிர்ந்து கொண்டே வர
கடைசிச் சொல் 
பறந்துவிட்டது

3-

வெறுமையை 
கையேந்தி நிற்கிறேன்
நீ அன்பை 
நிரப்பும் போது 
அது பாத்திரமாகி விடுகிறது

4-

பொய் சொல்கிறாள் 
கண்ணீர்த்துளியை 
வரைந்து விட்டு 
மழைத்துளி என்று



எழுதிக் கொண்டிருந்தேன்


நள்ளிரவில் 
மழை பெய்யும் போது 
என்ன செய்து கொண்டிருந்தீர்கள் 

எழுதிக் கொண்டிருந்தேன் 

அது மழைக்குத் தெரியுமா 

ஒன்றைப் பற்றி எழுதுவது 
ஒன்றுக்கு எப்படித் 
தெரியாமல் இருக்கும்

Sunday, May 12, 2013

எனக்குப் பசிக்கிறது


எனக்குப் பசிக்கிறது 
ரொட்டித்துண்டைத் 
தருகிறீர்களா

எனக்கும் பசிக்கிறது

அப்படியா வாருங்கள் 
நம் பசியை 
பகிர்ந்து சாப்பிடுவோம் 

வேட்டையாடும் எழுத்து


பாய்ந்து கவ்வி 
வேட்டையாடும் எழுத்து 
கவனிக்க 
மறந்து விடுகிறது 
பூவின் விரிதலையும் 
அதன் உள் மனச் 
சொற்களையும்

Saturday, May 11, 2013

ஒரே நேரம்


ஒரே நேரம் 
நம் இருவர் கண்ணிலும் 
கண்ணீர் 
பார்த்தபடியே 
புன்னகைக்கிறோம் 
இந்த உரையாடலை 
இதை விட நாம் 
சிறப்பாக 
முடித்திருக்க முடியாது 

Monday, May 06, 2013

விளிம்புக்குப் போகும் வரை

1-

பல்லக்கை 
பல காலமாக 
சுமந்து செல்கிறோம் 
உள்ளே இருப்பது 
சாத்தான் என்று 
உணராமல்

2-

ஒன்றும் தெரியாத என்னை 
மைதானத்தின் விளிம்பில் 
நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் 
விளிம்புக்குப் 
போகும் வரை  
விளையாடித்தான் 
ஆக வேண்டும்

Saturday, May 04, 2013

முகச்சாயல்

கடந்து போன நபர் 
இறந்து போன நண்பனின் 
முகச்சாயலில் இருந்தார்

ஒரு கணம் கலங்கி 
கண் துடைத்து 
அவரைப் பார்த்து 
புன்னகைக்க 
புன்னகைத்தார்

அதுவும் அச்சு அசலாய் 
நண்பனைப் போலிருந்தது

மாதவா என்று 
மனதிற்குள் 
ஒரு சத்தம் 
துள்ளி எழுந்து 
அடங்கியது

நண்பன் போய்விட்டான் 
அவர் போய்விட்டார் 
நான் போய்க் கொண்டிருக்கிறேன்

Friday, May 03, 2013

சீட்டு விளையாட்டு

சாத்தானுடன் 
சீட்டு விளையாடியது 
தப்பாய் போயிற்று 
அது என் 
தோல்விகளை வைத்து 
விளையாடிக் கொண்டிருந்தது

பதில் இல்லை

சவப்பெட்டிக்கு
வண்ணம் பூசினேன்
மரணம் அழகானதா
சவப்பெட்டிக் கேட்டது
பதில் இல்லை
கண்ணீர்த் துளி
சவப்பெட்டியின் மேல்
விழுந்தது

Thursday, May 02, 2013

நமக்குள் சுழலும் இசை

இசை நாற்காலி விளையாட்டில் 
இறுதிச் சுற்றில் 
நாம் இருவர் மட்டுமே 
ஓடிக் கொண்டிருக்கிறோம் 
எல்லோரும் வெளியேறி விட்டனர் 
இசைத்தட்டு சுழல்வதை நிறுத்தி 
நீண்ட காலமாகிறது 
நீ அமர்ந்துவிட வேண்டும் 
என்று நானும் 
நான் அமர்ந்து விட நீயும் 
ஓடிக்கொண்டிருக்கிறோம்
நமக்குள் சுழலும் இசை 
நிற்கவே இல்லை 

Monday, April 29, 2013

ஒரு பறவை

என் விரலை 
கிளை என நினைத்து 
வந்தமர்ந்து 
உள்ளங்கை நீரைக் 
குடித்துப் போகிறது 
ஒரு பறவை 
பறந்து போகையில் 
மரமாகவும் 
நினைத்திருக்கக் கூடும் 

உங்களுக்குத் தெரியாது

கடைசிக் காட்சியை மட்டும் 
பார்க்க அனுமதிக்கிறீர்கள் 
இதுவரை நான் 
உங்கள் கதாபாத்திரங்களோடு 
பேசிக்கொண்டிருந்தது 
உங்களுக்குத் தெரியாது

Wednesday, April 24, 2013

நினைவின் அடுக்குகளில்


நினைவின் அடுக்குகளில் 
எந்த அடுக்கில் 
இருக்கிறாய் என்று 
தேடித் தேடி 
களைத்துப் போய் 
உறங்கி விட்டேன் 
உறக்கத்தின் அடுக்குகளில் 
விளையாடத் தொடங்குகிறாய்

ஓடுபவர்கள்


எனது கனவில் 
ஓடும் குதிரையும் 
குதிரையின் கனவில் 
ஓடும் நானும் 
வேகத்தில் 
வித்தியாசப்படலாம் 
ஆனால் ஓடுபவர்கள்

Tuesday, April 16, 2013

கல் சுவர்

கல் சுவரில் மோதி 
கண்ணாடிப் பட்டாம்பூச்சி 
உடைந்து போனது 
சில சில்லுகள் கிடந்தன 
பல சில்லுகள் பறந்தன

Friday, April 12, 2013

என்ன யோசனை


சட்டென நிறுத்திய நண்பர்
என்ன யோசனை என்றார்

தெரியவில்லை 
என்றேன்

யோசனையா
என்னையா
கேட்டார்

சிரித்தேன்

சிரிப்பின் காரணம் கேட்டார்

தெரியவில்லை 
என்றேன்

வேகமாகப் போய்விட்டார்

நடந்தேன்

என் கவலை எல்லாம்
திடீரென்று
இன்னொரு நண்பரை
இது போல்
சந்தித்து விடக்கூடாது
என்பதுதான்

தடுத்தது குரல்

கேசவா
என்ன யோசனை


Thursday, April 11, 2013

அழிந்து கொண்டே வரும் வரி


முயலைப் பார்த்தபோது 
குழந்தை இல்லை 
குழந்தையைப் பார்த்தபோது 
முயல் இல்லை 
முயல்குட்டியைப் போல் 
ஓடுகிறாள் குழந்தை 
என்ற வரி 
அழிந்து கொண்டே வந்தது