Sunday, January 20, 2013

கடலின் காது

   அலையிடம் கேட்டேன் 
நான் பேசுவதை
   கடலிடம் சொல்வாயா 

என் அறியாமையை 
நனைத்த அலை 
சொன்னது

நான் கடலின் காது 
நீ பேசுவது 
கேட்டுக் கொண்டுதான் இருக்கும்

ஒரே வரி

ஒரே வரியைப் 
படித்துக் கொண்டிருக்கிறேன்
அது வேறு வேறு வரிகளாக 
நீண்டு கொண்டிருக்க 
படிப்பது முடிந்தபாடில்லை 

Saturday, January 19, 2013

குழந்தையின் பூந்தோட்டம்


குழந்தை வரைந்தாள் 
பூந்தோட்டம் 

அசலாய் 
அப்படியே 

பட்டாம்பூச்சி வந்து 
ஏமார்ந்து போகும்படி 

உற்று கவனித்தால் 
வாசனை நாசி தட்டும்

வண்ணம் விதைத்து 
வளர்ந்த தோட்டம்

அவளிடம் மெல்லக் கேட்டேன்

உன் தோட்டத்திற்கு 
இரவு காவலிருக்கலாமா

கண்கள் மலரச் சொன்னாள் 

உங்களை வரைந்து வேண்டுமானல் 
காவலுக்கு வைக்கலாம் 
அப்படியே முடியாது




பெருமிதத்தில்


குளிரைப் போர்த்திக்கொண்டு
உறங்கும் பாட்டி 
அதிகாலையில் 
இறந்திருக்கக்கூடும் என்ற 
வரியோடு 
நடுக்கத்துடன் 
தெரு முனை அடைகிறேன் 
கைகளுக்குள் 
குழந்தையைப் போல 
தேநீரைப் பற்றிக் கொண்டு
ஊதி ஊதி குடிக்கிறாள் பாட்டி
என் வரிகளையும் எமனையும் 
எட்டி உதைத்த பெருமிதத்தில்


Monday, January 14, 2013

கனவில் பெய்த மழை

கனவில் பெய்த மழை 
கல்லறையை நனைத்தது 
கல்லறையில் 
உறங்கிய நான் 
புரண்டு படுத்தேன்

மீன்

தூண்டிலைத் தூக்கி 
எறிகிறேன்
நடந்து வந்து 
நன்றி சொல்லிவிட்டுப் 
போகிறது ஒரு மீன்

Thursday, January 10, 2013

மரக்குதிரை

மேஜை மேலிருக்கும் 
மரக்குதிரை 
நாளும் தன் இடங்களை 
மாற்றிக் கொண்டே இருக்கிறது

ஓட்டத்தின் 
குளம்படிச் சத்தம் 
வீடு முழுதும் 
எதிரொலித்து 
வெளியேயும் பறக்கிறது

மறுபடியும் 
அது மேஜை வந்து 
சேரும் போது 
மரமாக 
மாற்றி விட வேண்டும்

Tuesday, January 08, 2013

அசைவு

பால்கனியில் 
கம்பிகளுக்கிடையே
சிறைப்பட்டச் சித்திரம் போல்
அமர்ந்திருக்கும் பெரியவர் 
தன் கையசைவின் வழியே 
என்னோடு நடந்து வருகிறார் 
அசைவு மறையும் வரை 
அதை உணர முடிகிறது

Sunday, January 06, 2013

ரகசியம்

என் ரகசியம் 
அறிந்த நீ 

வேறு யாரிடமும் 
சொல்லி விடுவாயா 

உன்னை நான் 
கொன்று விடுவேனா 

பயமாக இருக்கிறது 
எனக்கு

மழை


எல்லா மழையும்
என் மழைதான் என்கிறான்
குட்டிப்பையன்
சத்தமாக

பெய்யாத மழையும்
என் மழைதான் என்கிறாள்
குட்டிப்பெண்
சந்தோஷமாக

Saturday, January 05, 2013

கடல்

நேற்று விட்டு வந்த என்னைத் 
தாலாட்டிக் கொண்டிருந்தது 
இன்று பார்த்த கடல்

அசைவு

வானத்தின் கீழே 
சிறு பறவையாகி மறைகிறது 
உன் கைக்குட்டை அசைவு

Saturday, December 22, 2012

சேர்த்து

நாவில் ஊறிய 
பொய்களைத் துப்பினேன் 
எச்சிலோடு சேர்த்து

Sunday, December 16, 2012

வரைதல்

என்னை வரைய 
வண்ணம் தேவையில்லை 
கண்ணீர் போதும் 

நான் பார்த்தது

குழந்தைக் கேட்டாள் 

நீங்கள் பார்த்த 
வானவில் போல் 
இருந்ததா 
நான் வரைந்தது

புன்னகைத்து 
அவள் கன்னம் தடவிச் 
சொன்னேன் 

நீ வரைந்த 
வானவில் போன்றிருந்தது 
நான் பார்த்தது

Tuesday, December 04, 2012

பொம்மை சிங்கம்

மேஜை மேல் 
பொம்மை சிங்கம் 
வனத்தின் வனப்புடன் 

அசைவற்று 
இருக்கும் என்னை 
கூர்ந்து பார்க்கிறது 

என் இந்தக்
கல் நிலை 
தொடருமானால் 
பெருங்கோபம் கொண்டு 
பாய்ந்து வந்து 
என்னைத் தின்று விடலாம் 
ஒரு நாள்

Sunday, December 02, 2012

அவ்வளவுதான்

யாருக்கு இதை 
சொல்ல நினைக்கிறீர்கள் 

யாருக்குமில்லை 
எனக்குமில்லை 
சொல்ல நினைக்கிறேன் 
அவ்வளவுதான்

சுடர் போல

விளக்கை 
ஊதி அணைத்த குழந்தை 
இருளில் நடக்கிறது 
சுடர் போல

Tuesday, November 27, 2012

மலர்ந்தும் உதிர்ந்தும்

மலர்தல் உண்மை 
உதிர்தல் உன்னதம்

இந்த வரிகளைத் 
தந்து விட்டுப் போனவரைத் 
தேடிக் கொண்டிருக்கிறேன் 

மலர்ந்தும்
உதிர்ந்தும்

Friday, November 23, 2012

வரியின்அடியில்

இந்த வரியின்அடியில் 
ஓடுகிறது நதி 

இந்த வரியின் மேல் 
விரிகிறது மலை 

மலை உச்சியிலிருந்து 
நதியின் ஆழத்தில் 
குதிக்கிறேன் 

வேறு வரிகளோடு 
வெளி வர