Saturday, November 04, 2023

ஓவியப் பிரபஞ்சம்

 உணரும் அமைதியை

ஓவியமாக்க முடியுமா

வேண்டாம்

சத்தமாகிவிடும்

 

**

ஓவியன் சொன்னான்

நான் கோடுகளை

ஒழுங்குபடுத்துகிறேன்

நீங்கள்

ஓவியமென்று சொல்கிறீர்கள்

 

**

வண்ணங்களுக்கும்

தூரிகைக்கும் இடையில்

வராமல் போய்விடுகின்றன

பல ஓவியங்கள்

 

**

நான் வரைந்தது

மிகப்பெரிய பூஜ்யம்

பிரபஞ்சம் என்று

கைதட்டி ரசிக்கிறீர்கள்

 

**

வண்ணங்களில் கோப்பையைத்

தட்டிவிட்டுத்

தாண்டிப்போனது பூனை

அழிக்காமல்

பார்த்துக்கொண்டிருந்தேன்

இதுபோல் என்னால்

வரைய முடியாது

 

**

கண்ணீரை

அன்பால்

வரைந்துபார்த்தேன்

புன்னகை கிடைத்தது

 

**

தூரிகையின் காதுகளுக்கு

ஓவியம் பேசுவது

கேட்கும்                                                      

  - ஆனந்த விகடன்(8.11.23)இதழில் வெளியானது -

 

No comments:

Post a Comment