Friday, February 24, 2023

சுவரில்…

சுவரில்

ஒரு ஆணி அடித்து

அதில் என்னைத்

தொங்கவிட்டேன்

 

ஒருவர்

மேலும் கீழுமாகப்

பார்த்துச் சென்றார்

 

ஒருவர்

ஆணி மனிதர் என்றார்

 

ஒருவர்

தொங்கும் விசித்திரம் என்றார்

 

ஒருவர்

பாவம் தொங்குகிறது என்றார்

 

ஒருவர்

இது இவன் தண்டனைக் காலம் என்றார்

 

ஒருவர்

இவன் நேராகத் தொங்கும் வவ்வால் என்றார்

 

 

ஒருவர்

ஆணியைப் பிடுங்க

முயற்சித்துத் தோற்றுப்போனார்

 

ஒருவர்

இது ஒருவிதமான பைத்தியக்காரத்தனம் என்றார்

 

ஒருவர்

ஐஸ்கிரீம் சாப்பிட்டு

மீதியை மேலே

தடவிவிட்டுச் சிரித்தார்

 

இப்படி

ஓவ்வொருவராகப்

பார்த்தும் கடந்தும் கலைந்தனர்

 

ஒருவர் கூட

வலிக்கிறதா என்று

கேட்கவில்லை

No comments:

Post a Comment