Friday, June 27, 2014

பிரார்த்தனை

என் பிரார்த்தனையில் 
உப்புக் கரித்தது 
என்றார் கடவுள் 
கண்ணீர் கலந்திருந்தது 
என்றேன் நான் 

Thursday, June 26, 2014

ஒரு வரி போதும்

இறந்து போக 
எத்தனையோ தருணங்கள் 
இருக்கின்றன 
உயிர்த்தெழ 
ஒரு வரி போதும்

பயம் மேயும் ஆடு

பயம் மேயும் ஆடு 
என்ற வரியை 
அடுத்த வரியில் 
வந்த சிங்கம் 
அடித்துக் கொன்றது

Saturday, June 14, 2014

தெரியவில்லை

குட்டிப்பூனைப் போல
கண்கள் மெல்ல
வெளியே வந்து
உடல் மேல் குதித்து
விளையாடுகிறது
எப்படிப் பார்க்கிறேன்
தெரியவில்லை

Friday, June 13, 2014

நான் கடவுளுடன் விளையாடுகிறேன்

நான் கடவுளுடன்
விளையாடுகிறேன்
கடவுள் பட்டாம்பூச்சியுடன்
விளையாடுகிறார்
பட்டாம்பூச்சி என்னுடன்
விளையாடுகிறது
சொல்கிறாள் மான்யா
அவள் சொற்களில் மயங்கி
கடவுளைப் பார்க்காமல்
விட்டு விட்டேன்

Tuesday, June 10, 2014

கடந்து போ

சில சொற்களை 
நகர்த்தி 
பல மைல் 
கடந்து போ என்றவர் 
தொலைதூரம் 
போயிருந்தார்

Sunday, June 08, 2014

ஒரு பறவை

அந்தரத்தில் 
மிதக்கும் என்னை 
ஒரு பறவை 
தொட்டுத் தள்ளிவிட்டுப் 
போகப் பார்க்கிறது

வைக்கோல் கன்றுக்குட்டி

கண்களில் 
ஆச்சர்யம் குவித்து 
இந்த கன்றுக்குட்டிக்கு 
அம்மா யார் 
கேட்கிறாள் குழந்தை 
குழந்தையின் குரலில் 
உயிர் பெற்ற 
வைக்கோல் கன்றுக்குட்டி 
தன் தாயைத் தேடி 
ஓடுகிறது

Monday, June 02, 2014

பொம்மை

தற்கொலை செய்துகொண்டது போல்
தண்டவாளத்திற்குப் பக்கத்தில்
கிடக்கிறது பொம்மை
ஆடு மேய்க்கும் சிறுமி
ஓடி வந்து எடுத்துப் போக
மெல்ல உயிர் வருகிறது
பொம்மைக்கு