Monday, October 27, 2008

கண் அள்ளிய மழை

கண் அள்ளிய
மழையை எதற்கு
கவிதையில் கொட்ட
அதுவாய்
வழிந்தோடுகிறது
உள் எங்கும்
ஒரு ரீங்காரத்துடன்

Sunday, October 26, 2008

குவியும் காட்சிகள்

ஒருவர்
பலர் கடக்க
சாலை சுவரில்
சிறுநீர் போகிறார்
ஒருவர்
இலவசமாக படித்த
தினசரியை
தன்னிச்சையாக
எடுத்துப் போகிறார்
ஒருவர்
துயரம் மிகுந்த
மருத்துவமனை வராண்டாவில்
தான் பார்த்த
சினிமா கதையை
சொல்லி மகிழ்கிறார்
ஒருவர்
பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல்
ஏறி இறங்கியதாக
மார் தட்டுகிறார்
ஒருவர்
சாலை நிறுத்தத்தில்
விலகிய புடவையை
பார்த்த கண் எடுக்காமல்
சிக்னல் விழ கிளம்புகிறார்
ஒருவர்
நேற்றோடு நிறுத்தியதாக
சொன்ன குடியை
நண்பனின்
இலவச விஸ்கிக்காக
தளர்த்திக் கொள்கிறார்
ஒருவர்
காசு கொடுத்தால்தான்
காரியம் நடக்கும் என்று
லஞ்சத்தை
தன் வார்த்தைகளால்
அழிக்கப் பார்க்கிறார்
இப்படி
ஒருவர் ஒருவராய்
குவியும் காட்சிகள்
சில நேரங்களில்
இந்த ஒருவர் குறிப்பேட்டில்
நானும் வந்து விடுவது
சங்கடமாக இருக்கிறது
முற்றுப்புள்ளிகளை
உடைக்கிறது
குழந்தையின் மொழி

Thursday, October 23, 2008

என்றோ விதைத்த சொல்

புல் ஒற்றி எடுக்க
விரல் வந்த பனித்துளி
மாற்றிக்கொண்டிருந்தது
என்னை ஒரு
தாவரமாய்
--------------------
என்றோ விதைத்த சொல்
பெருக்கெடுத்தோடும்
அன்பாய் இன்று
--------------------
விடுபட்ட
ஒரு கண்ணீர் துளி
குதிக்கிறது
புன்னகையில்
----------------

Monday, October 13, 2008

காடும் மரமும்

ஒரு மரத்திடம் கேட்டேன்
இந்த காட்டைப்பற்றி
உன் மொழியில் சொல்
சிரித்தது மரம்
சில பூக்கள் விழ
காடு அகராதி
நான் சிறுசொல்
எனச்சொல்லி
முடித்துக் கொண்டது

பயண வழியில்

பேருந்தில் குழந்தை
எல்லோரையும் பார்த்து
சிரிக்கிறது
பேருந்தும் சிரிக்கிறது