Saturday, August 04, 2018

பழைய நண்பர்

கடந்து போகிற
யாரோ ஒருவர்
பழைய நண்பரை
ஞாபகப்படுத்துகிறார்
காலங்களைக் குடைந்து
நினைவுகள் போகின்றன
புகைமூட்டமான முகம்
சித்திரமாக விரிகிறது
சபாஷ் எனச்சொல்லி
சத்தமாகச் சிரிப்பார்
போகும் ரயிலின்
மங்கும் ஒலி போல்
அது முடிவடையும்
கண்களைத் துடைத்தபடி
அங்கிருந்து திரும்பினேன்
கடந்து போனவர்
அருகில் வந்து நின்றார்
தேநீர் அருந்தினார்
மணிக் கேட்டுப் புன்னகைத்தார்
உற்றுப் பார்த்துச் சொன்னார்
என் சிநேகிதன் மாதிரியே
உங்களுக்கு முகஜாடை
அதான் வந்து பாத்தேன்
அவரப் போயிப் பாக்க முடியாது
இறந்துட்டாரு
நன்றி சொல்லிவிட்டுப் போனார்
சபாஷ் எனச்சொல்லி
சத்தம் போட்டு
சிரிக்க வேண்டும் போல் தோன்றியது

- கல்கி(5 ஆகஸ்ட் 2018) இதழில் வெளியான கவிதை-

No comments:

Post a Comment